கேள்வி எண்: 74. ‘ஒரு முஃமின் இன்னொரு முஃமினை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து இருக்கக்கூடாது. மூன்று நாட்கள் கழித்து ஸலாம் கூறட்டும். (ஸலாமை கேட்டு மற்றவர்) பதில் கூறிவிட்டால் இருவருமே நற்கூலியில் பங்குபெறுவர். மாறாக பதில் ஸலாம் கூறாவிட்டால் அவர் பாவத்திற்கே திரும்பி விடுகிறார். முன்னால் ஸலாம் கூறியவர் இறைவெறுப்பிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார் என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் மற்றும் இது இடம்பெற்ற நூல் எது? Continue reading
இறைவெறுப்பிலிருந்து பாதுகாப்பு பெறுதல் எவ்வாறு?
குழப்ப காலத்தில் விழிப்புணர்வுடன் இருத்தல்.
1211. மக்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘ஆம் (இருக்கிறது)” என்று பதிலளித்தார்கள். நான், ‘இந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும். என்று பதிலளிக்க நான், ‘அந்தக் கலங்கலான நிலை என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஒரு சமுதாயத்தார் என்னுடைய நேர்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழி காட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் காண்பாய்” என்று பதிலளித்தார்கள். நான், ‘அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம், நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள்; நம் மொழிகளாலேயே பேசுவார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், ‘நான் இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களின் தலைவரையும் (இறுகப்) பற்றிக் கொள்” என்று பதில் கூறினார்கள். அதற்கு நான், ‘அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்… (என்ன செய்வது)?’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு (விலகி) ஒதுங்கி விடு; ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேராமல் தனித்தே இரு)” என்று பதிலளித்தார்கள்.
1212. எதையேனும் (கண்டு அதை) வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், ஆட்சியாள(ருக்குக் கட்டுப்படாமல் அவ)ரிடமிருந்து ஒரு சாண் அளவு வெளியேறுகிறவர் அஞ்ஞான கால மரணத்தை எய்துவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” .
இவைகளை என்றாவது நீங்கள் கவனித்து, இதைப்பற்றி சிந்தித்து இருக்கிறீர்களா?
(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கிறோமா?
உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.
(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).
முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள். எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?
(பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா? Continue reading
ஆட்சித் தலைவருக்கு உறுதிப் பிரமாணம் செய்தல்.
1208. நான் அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் (மார்க்க விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக) ஐந்தாண்டுகள் (தொடர்பை ஏற்படுத்தி) அமர்ந்திருந்தேன். (ஒரு முறை) அபூ ஹுரைரா (ரலி) கூறினார். ‘பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அவர்கள் வரும்போது நாங்கள் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் உத்திரவிடுகிறீர்கள்?’ என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு, ‘அவர்களில் முதலாவதாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (செய்ய வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருபவரிடம் (அந்தக் கடமையை நிறைவேற்றுங்கள்.) அவர்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், அல்லாஹ் அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடம் கேட்கவிருக்கிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1209. (ஒரு முறை) ‘விரைவில் (அன்சாரிகளான) உங்களை விடப் பிறருக்கு (ஆட்சியதிகாரத்தில் அல்லது வெற்றி கொள்ளப்படும் நாட்டின் நிதிகளைப் பங்கிடுவதில்) முன்னுரிமை வழங்கப்படும். இன்னும் நீங்கள் வெறுக்கிற சில காரியங்கள் நடக்கும்.’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உங்களின் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்குரிய உரிமைகளை அல்லாஹ்விடம் கேளுங்கள்” என்று பதிலளித்தார்கள்.
1210. அன்சாரிகளில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! இன்னாரை நீங்கள் அதிகாரியாக நியமித்தது போல் என்னையும் அதிகாரியாக நியமிக்கமாட்டீர்களா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘எனக்குப் பிறகு (உங்களை விட) மற்றவர்களுக்கு (ஆட்சியதிகாரத்தில்) முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள். எனவே, (மறுமையில் எனக்குச் சிறப்புப் பரிசாகக் கிடைக்கும் ‘ஹவ்ளுல் கவ்ஸர்’ என்னும்) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும் வரை நீங்கள் பொறுத்திருங்கள்” என்று கூறினார்கள்.
படிப்பகத்தில் புதிய நூல்!
நூல்: “இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்”
ஒரு இயந்திர வாகனத்தை உருவாக்க எத்தனையோ பாகங்கள் தேவை! அதேபோல் இந்த உலகத்துக்கு எத்தனையோ விதமான மனிதர்கள் தேவை! மனிதர்கள் பல்வேறு வகையான சமூகத்தைச் சேர்ந்தவர்களாக, இனத்தவராக, மொழியினராக படைக்கப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அனைவரும் ஒரே விதமாக ஏன் படைக்கப்படவில்லை?
ஆம் அது ஒரு நியாயமான கேள்வியே!! Continue reading
தவறைத் தவிர மற்ற அனைத்துக் காரியங்களிலும் தலைமைத்துவத்துக்கு கட்டுப்படுதல்.
1203. ”அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பீராக! (அவ்வாறே) அவனுடைய தூருக்கும், உங்களில் பொறுப்பு உள்ளோருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீராக” எனும் (திருக்குர்ஆன் 04:59 வது) வசனம், நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா இப்னு கைஸ் இப்னி அதீ (ரலி) அவர்களை (தளபதியாக்கி) ஒரு படைப்பிரிவினருடன் அனுப்பியபோது இறங்கியது.
1204. எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறு செய்தவர் எனக்கு மாறு செய்தவராவார் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
1205. (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவது கடமையாகும். (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியேற்பதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1206. நபி (ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி, அவர்களுக்கு அன்சாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி, அவருக்குக் கட்டுப்பட்டு நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். அந்த அன்சாரி (ஒரு கட்டத்தில்) படைவீரர்களின் மீது கோபம் கொண்டு, ‘நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லையா?’ என்று கேட்டார். அவர்கள், ‘ஆம்” என்றனர். அவர், ‘விறகைச் சேகரித்து நெருப்பை மூட்டி அதில் புகுந்து விடும்படி உங்களுக்கு நான் உத்தரவிடுகிறேன்” என்றார். அவ்வாறே அவர்கள் விறகைச் சேகரித்து நெப்பை மூட்டினர். அதில் நுழைய நினைத்தபோது ஒருவரையொருவர் பார்த்தபடி நின்று கொண்டனர். அவர்களில் ஒருவர், ‘(நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே நாம் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றினோம்; அவ்வாறிருக்க, அதில் நாம் நுழைய வேண்டுமா?’ என்று கேட்டார். இதற்கிடையே நெருப்பும் அணைந்தது. அவரின் கோபமும் தணிந்தது. பிறகு நபி (ஸல்) அவர்களிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அதில் மட்டும் அவர்கள் புகுந்திருந்தால் அதிலிருந்து ஒருபோதும் வெளியேறிருக்க மாட்டார்கள்; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில் தான்” என்றார்கள்.
1207. உபாதா இப்னு அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது நாங்கள் அன்னாரிடம் (நலம் விசாரிக்கச்) சென்றோம். நாங்கள், ‘அல்லாஹ் உங்களுக்குக் குணமளிக்கட்டும். நபி (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்ட ஒரு ஹதீஸை (செய்தியை எங்களுக்கு) அறிவியுங்கள்; அதனால் அல்லாஹ் உங்களுக்கு நற்பலன் அளிப்பான்” என்று சொன்னோம். அதற்கு உபாதா இப்னு அஸ்ஸாமித் (ரலி) அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். நாங்கள் அவர்களிடம் (சென்று இஸ்லாத்தில் நிலைத்திருப்பதாக) உறுதிமொழி அளித்தோம்” என்றார்கள். ‘நாங்கள் உற்சாகமாயிருக்கும் போதும் சோர்ந்திருக்கும்போதும் வசதியாயிருக்கும் போதும் சிரமத்திலிருக்கும் போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் போதும்கூட (ஆட்சித் தலைவரின் கட்டளையை)ச் செவியேற்று (அவருக்குக்) கீழ்ப்படிந்து நடப்போம்; ஆட்சியதிகாரத்திலிருப்பவர்களுடன் நாங்கள் சண்டையிடமாட்டோம்; எந்த
விஷயம் பகிரங்கமான இறைமறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள் கண்டாலே தவிர” என்று எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.
அரசு ஊழியர்கள் அன்பளிப்பு பெறத் தடை.
1202. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (‘அஸ்த்’ எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (‘ஸகாத்’ வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தம் பணியை முடித்துக்கொண்டு நபியவர்களிடம் திரும்பி வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ‘உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதோ இல்லையா என்று பாரும்!” என்று கூறினார்கள். பிறகு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மாலை தொழுகைக்குப் பிறகு எழுந்து நின்று, ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை அவனுக்குரிய பண்புகளைக் கூறி போற்றிப் புகழ்ந்த பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: பின்னர், அந்த அதிகாரிக்கு என்ன ஆயிற்று? அவரை நாம் (ஸகாத் வசூலிக்க) அதிகாரியாக நியமித்தோம். அவரோ நம்மிடம் வந்து ‘இது உங்கள் அதிகாரத்திற்குட்பட்டது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறுகிறார். அவர் தம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! (இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த(ப் பொதுச்) சொத்திலிருந்து முறை கேடாக எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தம் பிடரியில் சுமந்து கொண்டு நிச்சயம் வருவார். அது ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது பசுவாக இருந்தால் அது கத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது ஆடாக இருந்தால் அது கத்திக்கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்” என்று கூறிவிட்டு ‘(இறைவா! உன்னுடைய செய்தியை மக்களிடம்) நான் சேர்த்துவிட்டேன்” என்று கூறினார்கள். அபூ ஹுமைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் அக்குள்களின் வெண்மையை நாங்கள் நன்கு பார்க்கும் அளவிற்குத் தம் கையை உயர்த்தினார்கள்.
போர் வெற்றிப் பொருளை திருடுதல்.
1201. நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே எழுந்து நின்று போர்ச் செல்வங்களை மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் பாவம் பெரியது என்பதையும் எடுத்துரைத்தார்கள். அப்போது, ‘மறுமை நாளில் தன் கழுத்தில், கத்திக் கொண்டிருக்கும் ஆட்டையும், கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையையும் சுமந்து வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காணவேண்டாம். (ஏனெனில்) அப்போது நான், ‘உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (இறைச் சட்டத்தை) எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன். இவ்வாறே, (மறுமை நாளில்) தன் கழுத்தில் கத்திக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைச் சுமந்து வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், ‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன். இவ்வாறே (அந்நாளில்) தன் கழுத்தில் வெள்ளியும் தங்கமும் சுமந்து வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்), அப்போது நான், ‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன். இவ்வாறே (அந்நாளில்) தன் கழுத்தில் வெள்ளியும் தங்கமும் சுமந்து வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காணவேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், ‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன். அல்லது அசைகிற எந்தப் பொருளையாவது தன் கழுத்தில் சுமந்து வந்து ‘இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறிய நிலையில் உங்களில் எவரையும் நான் காணவேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், ‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. (இறைச் சட்டத்தை) உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
பொறுப்பாளி பொறுப்பை சரியாக நிறைவேற்றுதல் பற்றி..
1199. நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1200. (நபித் தோழர்) மஅகில் இப்னு யஸார் (ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள் ‘நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்’ என்று சொல்ல கேட்டேன்” எனக் கூறினார்கள்.
அல்லாஹ்வின் சாபத்தை பெற்ற இவர்கள் யார்?
கேள்வி எண்: 73. அல்லாஹ் தன் திருமறையில் “மக்களுக்காக அருளிய தெளிவான அறிவுரைகளையும், வழிகாட்டுதலையும் மக்களுக்குத் தெரியாமல் மறைப்பவர்களை அல்லாஹ் சபிக்கிறான்” என்ற திருமறை வசனம் எது? இது குறித்த சிறுவிளக்கம் தருக. Continue reading