இனம், வர்ணம், நாடு, கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து, தென் பிலிப்பைனிலிருந்து நைஜிரியா வரை உலகின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை பல்வேறு பாகங்களிலும் ஏறக்குறைய ஒரு பில்லியன் மக்களை அவர் தம் நம்பிக்கை ஒன்றே இணைத்து வைத்திருக்கின்றது. அந்த நம்பிக்கையே இஸ்லாம்! Continue reading
குதிரைகளின் நெற்றியில்….
1226. (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரைக்கும் நன்மை உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1227. (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமைநாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது. அந்த நன்மை யாதெனில் அந்தக் குதிரையில் ஏறி அறப்போரிடுதலில் கிடைக்கும் நன்மையும், போரில் கிடைக்கும் செல்வமும் ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1228. (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் பரக்கத் (அருள்வளம்) உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
குதிரைகளைப் பயிற்றுவித்தலும் போட்டியும்.
1225. நபி (ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே போட்டி நடத்தியபோது, பயிற்சி பெற்ற குதிரைகள் ‘ஹஃப்யா’ என்ற இடத்திலிருந்து ‘ஸனிய்யதுல் வதா’ என்ற இடம் வரை ஓட வேண்டும் என்றும் பயிற்சியளிக்கப்படாத குதிரைகள் ‘ஸனியதுல் வதா’ என்ற இடத்திலிருந்து பனூ ஸுரைக் கூட்டத்தினரின் பள்ளிவாசல் வரை ஓட வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயித்தார்கள். அப்போட்டியில் நானும் பங்கெடுத்துக் கொண்டேன்.
பருவமடையும் வயது.
1223. நான் பதினான்கு வயதுடையவனாக இருக்கும்போது, உஹதுப் போர் நடந்த காலகட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள்; ஆனால், (போரில் கலந்து கொள்ள) எனக்கு அனுமதியளிக்கவில்லை. அகழ்ப் போரின் போதும் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாயிருந்தேன். அப்போது, போரில் கலந்துகொள்ள எனக்கு அனுமதியளித்தார்கள்.
அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) கூறினார்: உமர் இப்னு அப்தில் அஜீஸ் (ரஹ்) கலீஃபாவாக இருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். (இப்னு உமர் (ரலி) அவர்களின்) இந்த ஹதீஸை அவர்களுக்கு அறிவித்தேன். அவர்கள், ‘(அப்படியென்றால்) இதுதான் சிறியவருக்கும் பெரியவருக்குமிடையில் (வேறுபடுத்திக் காட்டும்) எல்லைக் கோடாகும்” என்று கூறிவிட்டு, பதினைந்து வயதை அடைந்தவர்களுக்கு (ராணுவப் பணிக்கான ஊதியத் தொகையை) நிர்ணயிக்கும்படி தம் ஆளுநர்களுக்கு எழுதினார்கள்.
அஹ்ஸாப் போரின் போது அல்லாஹ் முஸ்லிம்களை எவ்வாறு காப்பாற்றியதாக திருமறையில் கூறுகிறான்?
கேள்வி எண்: 73. அஹ்ஸாப் போரின் போது நாற்புறமும் பல்லாயிரக்காணக்கான எதிரிகள் சூழப்பட்டிருந்த முஸ்லிம்களை “எவ்வாறு” காப்பாற்றியதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்? Continue reading
தலைமைத்துவத்துக்கு முடிந்தவரையில் கட்டுப்படுதல்.
1222. நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களின் கட்டளைகளைச்) செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என உறுதிமொழி (பைஅத்) அளிக்கும்போது அவர்கள், ‘உங்களால் முடிந்த விஷயங்களில்” என்று சொல்வது வழக்கம்.
பெண்கள் எவ்வாறு பைஅத் வழங்கினர்.?
1221. ”நம்பிக்கையாளர்களே! (இறைமறுப்பாளர்களிலுள்ள) பெண்கள் நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்து) உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்” எனும் (திருக்குர்ஆன் 60:10 வது) வசனம் முழுமையாக அருளப்பெற்ற காரணத்தினால் தம்மிடம் ஹிஜ்ரத் செய்துவரும் இறைநம்பிக்கை கொண்ட பெண்களை நபி (ஸல்) அவர்கள் சோதித்துவந்தார்கள். இறைநம்பிக்கை கொண்ட அப்பெண்களில் (இணைவைக்கமாட்டோம்; திருடமாட்டோம்; விபசாரம் புரியமாட்டோம்’ என்று) இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளிக்கிறவர் சோதனை செய்யப்பட்டுவிட்டார் என்று முடிவு செய்யப்பட்டது இந்த உறுதிமொழியை அப்பெண்கள் வாய்மொழியாக ஒப்புக்கொண்டபோது அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘உங்களிடம் உறுதிப் பிரமாணம் வாங்கிவிட்டேன். நீங்கள் செல்லலாம்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (உறுதிப் பிரமாணம் வாங்கியபோது) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கை எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டதில்லை. வாய் மொழியாகவே அப்பெண்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். அல்லாஹ் ஆணையிட்ட நிபந்தனை (வாசகங்களைத்) தவிர வேறெதையும் அப்பெண்களிடமிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (உறுதிமொழியாகப்) பெறவில்லை. அவர்களிடம் உறுதிமொழி வாங்கியதும் ‘உங்களிடம் உறுதிப் பிரமாணம் பெற்றுக் கொண்டேன்’ என்று வார்த்தை மட்டுமே கூறினார்கள். (பொதுவாக ஆண்களிடம் உறுதிமொழி வாங்கியபோது கரம் பற்றியதைப் போன்று பெண்களிடம் செய்யவில்லை”)
அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய உறுதிமொழி.
1218. ஹிஜ்ரத் செய்வதற்கான உறுதிமொழியைப் பெறுவதற்காக (என் சகோதரர்) அபூ மஅபத் (முஜாஹித்) அவர்களை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஹிஜ்ரத், அதற்குரியவர்களுக்குக் கடமையாகி (நிறைவேறி) முடிந்துவிட்டது. இனி, இஸ்லாத்தின் படி நடந்திடவும் அறப்போர் புரிந்திடவும் தான் இவரிடம் நான் உறுதிமொழி பெறுவேன்” என்று கூறினார்கள்.
1219. மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள், ‘ஹிஜ்ரத் இனி கிடையாது. ஆயினும், ஜிஹாதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் (நிய்யத்) கொள்வதும் உண்டு. நீங்கள் அறப்போர் புரியப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் உடனே புறப்பட்டு விடுங்கள்” என்று கூறினார்கள்.
1220. ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ரத் பற்றிக் கேட்டதற்கு அவர்கள், ‘உமக்கு என்ன கேடு? (எனச் செல்லமாகக் கேட்டுவிட்டு) நிச்சயமாக அதன் நிலைமை மிகவும் கடுமையானது. உம்மிடம் ஒட்டகங்கள் இருக்கின்றனவா? அவற்றிக்கு ஸகாத் கொடுத்து வருகிறீரா?’ எனக் கேட்டார்கள். அவர், ‘ஆம் என்றதும் நபி (ஸல்) அவர்கள், ‘கடல்களுக்குப்பால் சென்று வேலை செய்வீராக! நிச்சயமாக அல்லாஹ் உம்முடைய உழைப்பின் ஊதியத்தைக் குறைத்துவிடமாட்டான்” எனக் கூறினார்கள்.
எது இஸ்லாம்?
இஸ்லாம்!
இது ஒரு புதிய மதமோ, தத்துவமோ அல்ல! மாறாக, ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைவன் தனது இறைத்தூதர்கள் மூலமாக அனுப்பி அருளிய சத்திய வாழ்க்கை நெறியே அது! உலகில் வாழும் ஐவரில் ஒருவருக்கு இஸ்லாம் ஒரு மார்க்கம் மட்டுமல்ல, மாறாக, அவர்களின் முழுமையான வாழ்க்கை வழிமுறையுமாகும். Continue reading
பைஅத்து ரிழ்வான் பற்றி…
1213. ஹுதைபிய்யா தினத்தன்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், ‘பூமியிலிருப்பவர்களில் நீங்களே சிறந்தவர்கள்” என்று கூறினார்கள். (அப்போது) நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். இப்போது (மட்டும்) எனக்குக் கண்பார்வை தெரியுமானால் அந்த (ரிள்வான் உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) மரத்தின் இடத்தைக் காண்பித்திருப்பேன்” என்று கூறினார்கள்.
1214. (பைஅத்துர் ரிள்வான் என்னும் உறுதிப்பிரமாணம் நடைபெற்ற) அந்த மரத்தை பார்த்திருக்கிறேன். பின்பு (ஒரு முறை) அங்கு வந்தேன். அப்போது என்னால் அதனை அறிய முடியவில்லை.
1215. நான், ஸலமா இப்னு அக்வஃ (ரலி) அவர்களிடம், ‘ஹுதைபிய்யா தினத்தன்று (நபித் தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழியளித்தீர்கள்” என்று கேட்டேன். (அதற்கு) அவர்கள், ‘மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்” என்று பதிலளித்தார்கள்.
1216. ‘ஹர்ரா’ போரின்போது என்னிடம் ஒருவர் வந்து, ‘அப்துல்லாஹ் இப்னு ஹன்ழலா (ரலி), மக்களிடம் மரணத்தைச் சந்திக்கத் தாயாராயிருக்கும் படி உறுதிமொழி வாங்குகிறார்கள்” என்று கூறினார். அதற்கு நான், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஹுதைபிய்யாவில் அளித்த உறுதிமொழிக்கு)ப் பின்னர் வேறெவரிடமும் இதற்காக நான் உறுதிமொழியளிக்க மாட்டேன்” என்று கூறினேன்.
1217. நான் (ஒருமுறை ஹிஜாஸ் மாகாண ஆளுநர்) ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபிடம் சென்றேன். அவர் ‘இப்னுல் அக்வஃ! நீங்கள் (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பின் அங்கிருந்து) உங்கள் குதிகால்களின் வழியே (கிராமத்திற்குத்) திரும்பிச் சென்றதன் மூலம் கிராமவாசியாக மாறிவிட்டீர்களா?’ என்று கேட்டார். நான், ‘இல்லை ஆயினும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கிராமத்தில் வசிக்க எனக்கு அனுமதியளித்துள்ளார்கள்” என்று சொன்னேன்.