786. நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிப் பெண்களில் ஒருவரிடம்… ‘இப்னு அப்பாஸ் (ரலி) அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள். நான் அதை மறந்துவிட்டேன்!” என அவரிடமிருந்து அறிவிக்கும் அதா (ரஹ்) கூறினார்.. ‘நீ ஏன் எங்களுடன் ஹஜ் செய்யவில்லை?’ எனக் கேட்டார்கள். அதற்கவர், ‘எங்களிடம் இருந்த, தண்ணீர் கொண்டு வருவதற்கான ஓர் ஒட்டகத்தில் இன்னாரின் தந்தையும் அவரின் மகனும் (என்னுடைய கணவரும் மகனும்) ஏறிச் சென்றுவிட்டனர்; இன்னொரு ஒட்டகத்தை விட்டுச் சென்றுள்ளனர்; அதன் மூலம் நாங்கள் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறோம்!” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ரமளான் வந்துவிட்டால் அதில் நீ உம்ரா செய்வாயாக! ஏனெனில், ரமளானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும்!’ எனக் கூறினார்கள்; அல்லது அது போன்ற கருத்தைக் கூறினார்கள்.
ரமலான் மாதத்தில் செய்யும் உம்ராவின் சிறப்பு!
நபி (ஸல்) அவர்கள் செய்த உம்ராக்கள்.
782. நபி (ஸல்) அவர்கள் முதலில், இணைவைப்போர் (ஹுதைபிய்யாவில் அவர்களைத்) தடுத்துவிட்டபோது உம்ராவுக்காக சென்றிருந்தார்கள். பிறகு, அடுத்த ஆண்டு (அதே) ஹுதைபிய்யாவிலிருந்து உம்ராவை நிறைவேற்றினார்கள்; பிறகு துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்தார்கள்; அடுத்து, ஹஜ்ஜுடன் ஓர் உம்ரா செய்தார்கள்.
783. நான் ஸைத் இப்னு அர்கம் (ரலி) அவர்களுக்கும் அருகிலிருந்தபோது, ‘நபி (ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?’ என்று அவர்களிடம் வினவப்பட்டது. ‘பத்தொன்பது” என்று அவர்கள் பதிலளித்தார்கள். ‘நபி (ஸல்) அவர்களுடன் நீங்களும் பங்கெடுத்த போர்கள் எத்தனை?’ என்று வினவப்பட்டபோது, ‘பதினேழு” என்றார்கள். ‘இவற்றில் முதல் போர் எது?’ என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘உஸைரா’ அல்லது ‘உஷைர்’ என்று பதிலளித்தார்கள்.
784. நபி (ஸல்) அவர்கள் பத்தொன்பது புனிதப் போர்களில் கலந்துகொண்டார்கள். மேலும், அவர்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்த பின்பு ஒரேயொரு ஹஜ்தான் செய்தார்கள். அந்த ஹஜ்ஜத்துல் விதாவுக்குப் பிறகு அவர்கள் வேறெந்த ஹஜ்ஜும் செய்யவில்லை. அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக் (ரஹ்) கூறினார். நபி (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத்திற்கு முன்பு) மக்காவில் இருந்தவாறு மற்றொரு ஹஜ் செய்துள்ளார்கள்.
785. நானும் உர்வா இப்னு ஸுபைரும் மஸ்ஜிது(ன் நபவீ)க்குச் சென்றோம். அங்கே ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்கருகே அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் மஸ்ஜிதில் லுஹா தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களிடம் மக்களின் இந்தத் தொழுகையைப் பற்றிக் கேட்டோம். அதற்கவர்கள், ‘இது பித்அத்!” என்றார்கள்! (காரணம் இப்னு உமர் (ரலி) நபி (ஸல்) அவர்கள் லுஹா தொழுததைப் பார்த்ததில்லை). பிறகு, ‘நபி (ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள்?’ என உர்வா (ரஹ்) கேட்டார்கள். அதற்கவர்கள் ‘நான்கு, அவற்றில் ஒன்றை ரஜப் மாதத்தில் செய்தார்கள்!” என்றார்கள். நாங்கள் அவர்களின் இக்கூற்றை மறுக்க விரும்பவில்லை. இதற்கிடையே அறையில் உம்முல் மூமினீன் ஆயிஷா (ரலி) பல்துலக்கும் சப்தத்தைக் கேட்டோம். அப்போது உர்வா (ரஹ்), ‘அன்னையே! இறை நம்பிக்கையாளர்களின் தாயே! அபூ அப்திர் ரஹ்மான் (இப்னு உமர் (ரலி)) அவர்கள் கூறுவதைச் செவியேற்றீர்களா?’ எனக் கேட்டார். ‘அவர் என்ன கூறுகிறார்?’ என ஆயிஷா (ரலி) கேட்டதும். ‘நபி(ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்கள் செய்துள்ளார்கள். அவற்றில் ஒன்று ரஜப் மாதத்தில் நடந்தது!” என்று கூறுகிறார்!” என்றார். ஆயிஷா (ரலி), ‘அபூ அப்திர் ரஹ்மானுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்யும் போதெல்லாம் அவர்களுடன் அவரும் இருந்திருக்கிறார்; (மறந்துவிட்டார் போலும்!) நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்ததே இல்லை!” எனக் கூறினார்கள்.
இஹ்ராமும் பலிப்பிராணியும்
781. யமனிலிருந்து திரும்பிய அலீ (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘எதற்காக இஹ்ராம் அணிந்தீர் (ஹஜ்ஜுடன் உம்ராவிற்கும் சேர்த்தா? உம்ராவிற்கு மட்டுமா)?’ எனக் கேட்டார்கள். அதற்கு அலீ (ரலி) ‘நீங்கள் இஹ்ராம் அணிந்தது போன்றே நானும் இஹ்ராம் அணிந்துள்ளேன்…” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடன் குர்பானிப் பிராணி இல்லையெனில் (உம்ராவை முடித்து) நான் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்” என்றார்கள்.
உம்ரா முடித்தவர் முடியை மற்றவர் குறைப்பது பற்றி…
780. நான் நபி (ஸல்) அவர்களின் முடியைக் கத்தரிக்கோலால் (கத்தரித்துக்) குறைத்துள்ளேன்.
இஹ்ராமிலிருந்து விடுபடுவது….
779. இப்னு அப்பாஸ் (ரலி), ‘உம்ரா செய்பவர் இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடுவார்” என்று சொன்னதாக அதாஉ (ரஹ்) எனக்கு அறிவித்தார்கள். நான், ‘எந்த ஆதாரத்தை வைத்து இப்னு அப்பாஸ் (ரலி) இப்படிக் கூறுகிறார்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘தியாகப் பிராணிகளை அறுத்துத் தியாகம் செய்வதற்கான இடம் தொன்மையான ஆலயத்தின் அருகில் உள்ளது” எனும் (திருக்குர்ஆன் 22:33வது) இறைவசனத்தை ஆதாரமாகக் கொண்டும், நபி (ஸல்) அவர்கள், ‘ஹஜ்த்துல் விதாவின்போது இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடும்படி தம் தோழர்களுக்கு உத்தரவிட்டதை ஆதாரமாகக் கொண்டும் தான் இப்படிக் கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், ‘இஹ்ராமிலிருந்து விடுபடுவது அரஃபாவில் (போய்த்) தங்கிய பின்புதானே?’ என்று கேட்டேன். அதற்கு அதாஉ(ரஹ்), ‘அரஃபாவில் தங்குவதற்கு முன்பும் அங்கிருந்து வந்த பின்பும் (இரண்டு நேரங்களிலுமே) இஹ்ராமிலிருந்து விடுபடுவது அனுமதிக்கப்பட்டதே என்று இப்னு அப்பாஸ் (ரலி) கருதி வந்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.
இறைவனிடத்தில் மிகப்பெரிய அநியாயம் என்பது எது?
கேள்வி எண்: 39. லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது புதல்வருக்கு அறிவுரை கூறுகையில் எந்த செயலை ‘மிகப்பெரும் அநியாயமாகும்’ என்று கூறினார்கள்? Continue reading
ஹஜ் மாதத்தில் உம்ரா செய்யலாமா?
777. நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் துலஹஜ் மாதம் நான்காம் நாள் காலையில் ஹஜ்ஜிற்கு இஹ்ராம் கட்டியவர்களாக வந்து சேர்ந்தனர். பலியிடப்படும் பிராணியைக் கொண்டு வந்திருப்பவரைத் தவிர மற்றவர்கள் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
778. நான் தமத்துஉ (ஹஜ்ஜும் உம்ராவும் தனித்தனி இஹ்ராமுடன்) செய்தேன். என்னைச் சிலர் தடுத்தார்கள். எனவே, இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் தமத்துஉ செய்யுமாறே கட்டளையிட்டார். பிறகு ஒருநாள் ஒருவர் என் கனவில் தோன்றி, ‘ஹஜ் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உம்ரா ஒப்புக் கொள்ளப்பட்டது’ எனக் கூறினார். நான் இதையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறியபோது (‘தமத்துஉவே) நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்’ என்று கூறி, ‘நீ என்னுடன் தங்கிக் கொள். என்னுடைய செல்வத்திலிருந்து ஒரு பங்கை உனக்குத் தருகிறேன்’ எனக் கூறினார். இப்னு அப்பாஸ் (ரலி) தம்முடன் தங்கச் சொன்னதன் காரணம் என்ன? என்று நஸ்ர் இப்னு இம்ரானிடம் கேட்டேன். ‘நான் கண்ட கனவே காரணம்’ என அவர் கூறினார் என்று ஷுஃபா கூறுகிறார்.
என்றும் நிலைத்து நிற்கக்கூடியது செல்வமும், பிள்ளைகளுமா இல்லை நற்கருமங்களா?
18:45. இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! “அது நாம் வானத்திலிருந்துஇறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன: ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது – மேலும், எல்லாப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். Continue reading
ஹஜ் செய்யும் எண்ணத்துடன் இஹ்ராம் அணிந்தவர்
774. ‘உம்ராவிற்காக (இஹ்ராம் அணிந்து) வந்த ஒருவர் கஅபாவைச் சுற்றி வந்தார். ஸஃபா, மர்வாவிற்கிடையில் ‘ஸயீ’ செய்யவில்லை. இவர் தன்னுடைய மனைவியிடம் உடலுறவு கொள்ளலாமா?’ என இப்னு உமர் (ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டதற்கு, ‘நபி (ஸல்) அவர்கள் மக்கா வந்தபோது ஏழு முறை கஅபாவை வலம்வந்தார்கள். மகாம் இப்ராஹீம் எனும் இடத்தில் இரண்டு ரகஅத்துகள் தொழுதார்கள். ஸஃபா, மர்வாவிற்கிடையில் ‘ஸயீ’ செய்தார்கள். உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது’ என இப்னு உமர் (ரலி) கூறினார்”
775. நான், உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் (நபி (ஸல்) அவர்களின் ஹஜ் பற்றிக்) கேட்டேன். அதற்கு உர்வா (ரலி), ‘நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்துள்ளார்கள். ஆயிஷா (ரலி) அதுபற்றி என்னிடம் கூறினார்: நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்ததும் முதன் முதலாக உளூச் செய்தார்கள்; பிறகு கஅபாவைத் வலம் வந்தார்கள்; பிறகு உம்ராவுக்காக தனித்து வலம் வரவில்லை’.மேலும் உர்வா, அபூபக்ர் (ரலி) ஹஜ் செய்தார். அவரும் முதன் முதலாகக் கஅபாவைத் வலம்தான் வந்தார். பிறகு உம்ராவுக்கென்று வலம் ஏதும் வரவில்லை. உமர் (ரலி) அவ்வாறேதான் செய்தார். பிறகு உஸ்மான் (ரலி) ஹஜ் செய்தார். அவரும் முதன் முதலாகக் கஅபாவையே வலம் வந்ததைப் பார்த்தேன். அவர் உம்ராவுக்காக வலம் ஏதும் வரவில்லை. பிறகு முஆவியா (ரலி), அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) ஆகியோரும் ஹஜ் செய்துள்ளனர். என்னுடைய தந்தை ஸுபைர் இப்னு அல்அவ்வாம் (ரலி) உடன் நான் ஹஜ் செய்திருக்கிறேன். அவரும் முதன் முதலாக கஅபாவைத் வலம்வந்தார். பிறகு உம்ராவுக்காக அவர் தனியாக வலம் ஏதும் வரவில்லை. முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் இவ்வாறே செய்வதை பார்த்திருக்கிறேன். பிறகு உம்ராவுக்காக அவர்கள் (தவாஃபு) செய்யவில்லை. நான் கடைசியாக இப்னு உமர் (ரலி) இவ்வாறு செய்ததைப் பார்த்தேன். அவர் அந்த ஹஜ்ஜை முறித்து உம்ராவாக ஆக்கவில்லை. இதோ அவர்களிடம் இப்னு உமர் (ரலி) இருக்கத்தானே செய்கிறார். அவரிடம் அவர்கள் கேட்க மாட்டார்களா? முன் சென்றவர்களில் யாரும் ஹஜ்ஜை முறித்துவிட்டு உம்ராவாக எதையும் ஆக்கவில்லை. மேலும் அவர்கள் (மக்காவில்) கால் வைத்ததும் வலம்தான் வந்தார்கள். பிறகு அவர்கள் இஹ்ராமைக் களைவதில்லை. என்னுடைய தாயாரும் என் சிறிய தாயாரும் மக்கா வந்ததும் வலம் வருவதற்கு முன்னர் எதையும் செய்வதில்லை. இஹ்ராமிலிருந்து விடுபடுவதுமில்லை’ என்று கூறினார்.
776. (அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களின் ஊழியரான) அப்துல்லாஹ் அறிவித்தார். அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) (மக்காவிலுள்ள) ஹஜூன் என்ற இடத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம்.” (தன் தூதர்) முஹம்மத் (ஸல்) அவர்களின் மீது அல்லாஹ் கருணை புரிவானாக! (ஒரு முறை) நாங்கள் அவர்களுடன் இங்கு வந்திறங்கினோம்; அப்போது எங்களிடம் (பயண) மூட்டை முடிச்சுகள் அதிகம் இருக்கவில்லை; மேலும், எங்களிடம் (பயண) உணவுகளும் வாகனப் பிராணிகளும் குறைவாகவே இருந்தன. அப்போது நானும், என்னுடைய சகோதரி ஆயிஷா (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோரும், மற்றும் இன்னாரும் இன்னாரும் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தோம்; கஅபாவை வலம்வந்து ஸயீ செய்தபின் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டோம். பிறகு மாலை நேரத்தில் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தோம்” என அஸ்மா (ரலி) கூறினார்.
இஃப்ராத் முறையில் ஹஜ்.
773. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காகவும் (சேர்த்து ஒரே) இஹ்ராம் அணிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்கு நிய்யத் செய்தபோது நாங்களும் அவர்களுடன் ஹஜ்ஜுக்கு நிய்யத் செய்தோம். நாங்கள் மக்காவுக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘எவருடன் தியாகப் பிராணி இல்லையோ அவர் தம் ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கி (நிய்யத் செய்து ஹஜ்ஜைப் பிறகு செய்து) கொள்ளட்டும்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களுடன் தியாகப் பிராணி இருந்தது. அப்போது எங்களிடம் அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) ஹஜ்செய்ய நாடியவண்ணம் யமனிலிருந்து வர, நபி (ஸல்) அவர்கள், ‘எதற்காக இஹ்ராம் அணிந்தீர்கள்? ஏனெனில், உங்கள் மனைவி(யும் என் மகளுமான ஃபாத்திமா (ரலி) நம்முடன் தான் இருக்கிறார்” என்று கேட்டார்கள். அலீ (ரலி), ‘நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்தார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் அணிந்துள்ளேன்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘உங்கள் இஹ்ராமிலேயே நீடித்திருங்கள். ஏனெனில், நம்முடன் தியாகப் பிராணி உள்ளது” என்று கூறினார்கள்.