மனிதன் தன் பிரார்த்தனையில் இன்னாரின் பொருட்டால், அவரின் உரிமையால் என்று கூறிக் கேட்கும் போது மனிதனுக்கு ஏதோ சில உரிமைகள் அல்லாஹ்விடம் இருப்பதாக நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இப்படி நினைத்தல் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் போக்கல்ல என விளங்கிக் கொள்ள வேண்டும். மாறாக இது முஃதஸிலாக்களின் கொள்கையாகும். இவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பிரிவினராவர். ‘மனிதனுக்குச் செய்ய வேண்டிய எந்த செயலுமே அல்லாஹ்வின் மீது கடமையாகவில்லை’ என்று வேறு சிலர் கூறுகின்றனர்.அவன் தன் அடியார்களுக்குச் செய்கின்ற அனுக்கிரகங்கள், நன்மைகள் அனைத்துமே அவன் அருள்கிருபை என்ற அமைப்பிலாகும். அல்லாஹ் தன்மீது அடியார்களுக்கு அருள் பாலிப்பதை ஏற்படுத்தி வைத்திருக்கிறான். மூமினான படைப்பினங்களுக்கு இத்தகைய இரக்கமான கூலிகளை அளிப்பதாக தன்மீது இறைவன் தானாகவே ஏற்படுத்தியுள்ளான். அவர்களுக்கு அநீதி இழைப்பதை தன்மீது விலக்கியிருக்கிறான் அல்லவா? சிருஷ்டிகளுக்கு எந்தச் செயலை அல்லாஹ் செய்தாலும் அது கடமை என்ற அடிப்படையிலல்ல. மாறாக அவன் தன் மீது ஏற்படுத்திக் கொண்ட இரக்கம், நேர்மை, நீதி என்பன போன்ற குணங்களுக்கு, தன்மைகளுக்கும் உட்பட்டதாகும். ஹதீஸுல் குத்ஸியிலும் இந்த உண்மையை நம்மால் பார்க்க முடிகிறது. அதில் இறைவன் குறிப்பிடுகிறான்: ‘அடியார்களே! என் மீது நான் அநீதியை விலக்கிக் கொண்டேன். இந்த அநீதியை விட்டு உங்களையும் விலக்குகிறேன். நீங்கள் யாருக்கும் அக்கிரமம், அநீதி செய்யாதீர்கள்’. Continue reading
படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா? (3)
எது சிறந்தது? உண்மையான கல்வி ஞானமா? அல்லது உலக அலங்காரமா?
28:76. நிச்சயமாக காரூன் மூஸாவின் (மோசே) சமூகத்தைச் சார்ந்தவனாக இருந்தான். எனினும்: அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்;அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் – நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன;அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்; “நீ (இதனால் பெருமைக் கொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்க மாட்டான்” என்று கூறினார்கள்.
28:77. “மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை (மறு உலக) வீட்டைத் தேடிக்கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதைச் செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே: நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்)
28:78. (அதற்கு அவன்) கூறினான்: ” எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப் பட்டிருக்கிறேன்!” இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமை உடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டர்கள்.
28:79. அப்பால், அவன் (கர்வத்துடனும் உலக) அலங்காரத்துடனும் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்; “ஆ! காரூனுக்கு கொடுக்கப் பட்டதைப் போன்று நமக்கும் இருக்கக் கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்” என்றும் கூறினார்கள்.
28:80. கல்வி ஞானம் பெற்றவர்களோ; “உங்களுக்கென்ன கேடு! ஈமான் (நம்பிக்கை) கொண்டு, நல்ல அமல்கள் செய்பவர்களுக்கு அல்லஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.
28:81. ஆகவே, காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கின்ற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.
28:82. முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், “ஆச்சர்யம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகின்றான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை (அருள்) செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்த செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் (நிராகரிப்போர்) சித்தியடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.
அல் குர்ஆன்: அல் கஸஸ் (வரலாறுகள்)
படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா? (2)
அதிய்யத்துல் ஊபி (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூ ஸயீதுல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில் வருகிறது: தொழுகைக்கு புறப்படும் ஒரு மனிதனுக்கு நபியவர்கள் கீழ்வரும் பிரார்த்தனையை சொல்ல வேண்டுமென்று கற்றுக் கொடுத்தார்கள்.
‘இறைவா! உன்னிடம் பிரார்த்திப்பவர்களுக்காக உன் மீதுள்ள பாத்யதையை (ஹக்கைப்) பொருட்டாக வைத்துக் கேட்கிறேன். இதோ நான் நடந்து செல்லும் பாதையின் பொருட்டால் கேட்கிறேன். நான் வீட்டிலிருந்து அகங்காரத்தை நாடி புறப்பட்டதில்லை. அமானிதத்திற்காகவோ, பெருமையையோ, முகஸ்துதியையோ எதிர்பார்த்து நான் புறப்படவில்லை. உன் கோபத்தை பயந்தவனாகவும், உன் திருப்பொருத்தத்தை நாடியுமே நான் கிளம்பியிருக்கிறேன்’ (அஹ்மத்,இப்னு மாஜா) Continue reading
படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா? (1)
இதுபோன்று தான் சிருஷ்டிகளைக்* கொண்டு ஆணையிட்டுத் தம் தேவையை வேண்டுவது. இதுவும் விலக்கப்பட்ட செய்கையாகும். படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்வதை எல்லா மத்ஹபுடைய இமாம்களும் வெறுத்திருக்கிறார்கள். சிருஷ்டிகளைக் கொண்டு சத்தியம் செய்து இன்னொரு சிருஷ்டியிடம் கேட்பது கூடாதெனின், அதே சிருஷ்டியைக் கொண்டு படைத்தவனிடம் ஆணையிட்டுக் கேட்க முடியுமா? அது எப்படி அனுமதிக்கப்படும்? அல்லாஹ்வுக்கு வேண்டுமானால் தம் சிருஷ்டிகளைக் கொண்டு சத்தியம் செய்யலாம். தன் சிருஷ்டிகளைக் கொண்டு ஆணையிட்டுச் சொல்வதில் தன் வல்லமையை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான். தன் ஒருமைப்பாட்டை நிரூபித்துக் காட்டுகின்ற பல திருஷ்டாந்தங்களை ஏகத்துவத்தின் தீர்க்கமான பல சைக்கினைகளை இறைவன் இந்த சத்தியத்தால் வெளிப்படுத்துகிறான். இறைவன் இரவு பகலைக் கொண்டு ஆணையிடுகிறான். ‘யாவையும் மறைத்துக் கொள்ளும் இருண்ட இரவின் மீது ஆணையாக! பிரகாசமுள்ள பகலின் மீது சத்தியமாக’ என்று கூறினான். ‘சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும், அது அஸ்தமித்ததற்குப்பின் அதைத் தொடர்ந்து உதயமாகும் சந்திரன் மீது சத்தியமாக, பாவிகளின் ஆத்மாவைப் பலமாக பறிப்பவர்கள் மீது (சத்தியமாக). இப்படியே திருமறையில் பற்பல இடங்களில் இறைவன் தன் சிருஷ்டிகளைக் கொண்டு ஆணையிட்டுத் தன் படைப்பினங்களின் மதிப்பை விளக்குகின்றான். இது இறைவனைப் பொருத்தவரையில் பொருந்துகின்ற ஒரு சத்தியமாகும். Continue reading
இறை சோதனைகள்!
7:94. நாம் நபிமார்களை (தூதர்களை) அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம்மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை.
7:95. பின்னர் நாம் (அவர்களுடைய) துன்ப நிலைக்குப் பதிலாக (வசதிகளுள்ள) நல்ல நிலைக்கு மாற்றியமைத்தோம். அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்: நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டிருந்தன” என்று (அலட்சியமாகக்) கூறினார்கள் – ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென (வேதனையைக் கொண்டு) பிடித்தோம்.
7:96. நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் (நம்பிக்கை) கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் – பரகத்துகளை – பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.
7:97. அவ்வூர்வாசிகள் இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களை வந்து அடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?
7:98. அல்லது அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது) பகலில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களையடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?
7:99. அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா? நஷ்டவாளிகளான மக்களைத் தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள்.
7:100. பூமியில் (வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால்), அதனை வாரிசாகப் பெற்ற இவர்களையும், நாம் நாடினால் இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் (அவ்வாறே) தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா? நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம்; எனவே இவர்கள் (நற்போதனைகளுக்குச்) செவிசாய்க்க மாட்டார்கள்.
7:101. (நபியே!) இவ்வூரார்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்: நிச்சயமாக அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள், எனினும் அவர்கள் முன்னால் பொய்யாக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை – இவ்வாறே அல்லாஹ் காஃபிர்களின் (நம்பிக்கை கொள்ளாதவர்களின்) இதயங்கள் மீது முத்திரையிட்டு விடுகிறான்.
7:102. அவர்களில் பெரும்பாலோருக்கு வாக்குறுதியை (நிறைவேற்றும் தன்மை இருப்பதாக) நாம் காணவில்லை – அன்றியும் அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே கண்டோம்.
அல் குர்ஆன்: அல் அஃராஃப் (சிகரங்கள்)
‘நபியைக் கொண்டு வஸீலா தேடுவது’ ஸஹாபாக்களின் கருத்து
நபித்தோழர்களான ஸஹாபிகளின் சொற்களில் காணப்படுகின்ற, மேலும் அவர்களின் பேச்சுகளில் பரிமாறப்பட்ட வஸீலா என்ற வார்த்தையின் தாத்பரியத்திற்கு வருவோம். ஸஹாபிகள் பற்பல சம்பவங்களைக் கூறும்போது நாயகத்தைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்கியதாகவும், அவர்களைக் கொண்டு அவனிடம் வஸீலா தேடியதாகவும் (உதவி கோரியதாகவும்) அல்லாஹ்வின்பால் முன்னோக்கியதாகவும் கூறுவார்கள். பற்பல இடங்களில் இப்படிக் காணப்படுகின்றன. Continue reading
தவஸ்ஸுல் வஸீலாவில் ஏற்பட்ட பிசகுதல்கள்
மேற்கூறிய விளக்கங்களெல்லாம் சரிவர நாம் புரிந்து கொண்டோம். அவ்விளக்கங்களிலிருந்து ‘தவஸ்ஸுல் வஸீலா’ என்ற வார்த்தைகளைப் பற்றி ஓரளவுக்கு விளங்க முடிந்தது. இவ்விரு வார்த்தைகளும் அடக்கியிருக்கும் சரியான கருத்துகள் யாவை என்பதுப் பற்றி மேலும் நாம் தெரிய வேண்டியிருக்கிறது. ஏனெனில் பற்பல மாறுபட்ட பிசகுதலான கருத்துகளை மக்கள் அவற்றிலிருந்து எடுத்துக் கொள்கின்றனர். ‘வஸீலா, தவஸ்ஸுல்’ என்பதின் உண்மையான கருத்துகள் யாவை? வஸீலா என்ற வார்த்தைக்குப் பொருந்தாத பொய்யான கருத்துகள் யாவை? என்பவற்றை நன்கு பகுத்துணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் நபிமொழியும், ஸஹாபிகளின் விளக்கமும் வஸீலாவுக்கு என்ன தாத்பரியத்தை அளிக்கிறதோ அந்த தாத்பரியத்தை நாமும் பின்பற்ற வேண்டும். Continue reading
வெவ்வேறு நிலைகளுக்கு மனிதன் மாற வேண்டியிருக்கிறது.
அந்தி நேரத்துச் செவ்வானத்தின் மீதும், இரவின் மீதும், மேலும், அது ஒன்று திரட்டி வைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும் மேலும், முழுமையாய் மலர்ந்து விடும் சந்திரன் மீதும் நான் சத்தியம் செய்கிறேன். திண்ணமாக, நீங்கள் படிப்படியாய் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு கடந்து செல்ல வேண்டியுள்ளது.* பிறகு, இம்மக்களுக்கு என்ன நேர்ந்தது? நம்பிக்கை கொள்ளாமல் இருக்கிறார்களே! மேலும், இவர்கள் முன்னால் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், இவர்கள் ஸஜ்தா (சிர வணக்கம்) செய்வதுமில்லையே! மாறாக, இந்த நிராகரிப்பாளர்களோ பொய்யெனத் தூற்றுகிறார்கள். உண்மையில், இவர்கள் (தம் வினைச் சுவடிகளில்) சேர்த்துக் கொண்டிருப்பவற்றை அல்லாஹ் நன்கறிகிறான்.** எனவே, இவர்களுக்கு துன்புறுத்தும் வேதனைக்கான ‘நற்செய்தியை’ அறிவித்து விடுவீராக! ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாகவும் நற்செயல்கள் செய்தவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு என்றென்றும் முடிவுறாத கூலி இருக்கிறது. அல் குர்ஆன் (84:16-25)
*அதாவது நீங்கள் ஒரே நிலையில் இருக்கப் போவதில்லை. மாறாக இளமையிலிருந்து முதுமை, முதுமையிலிருந்து மரணம், மரணத்திலிருந்து ‘பர்ஸக்’ என்னும் மண்ணறை வாழ்க்கை, பர்ஸகிலிருந்து மறுவாழ்வு, மறுவாழ்விலிருந்து ‘மஹஷர்’ (எல்லோரும் ஒரே திடலில் ஒன்று திரட்டப்படும்) மைதானம். பிறகு கேள்வி கணக்குக் கொடுப்பதும், செயலேடு பெறுவதும், பிறகு நற்கூலியோ தண்டனையோ பெறுதல் ஆகிய பல கட்டங்களை அவசியம் நீங்கள் கடந்தாக வேண்டியுள்ளது. இது தொடர்பாக மூன்று விஷயங்கள் மீது ஆணையிட்டுக் கூறப்பட்டுள்ளது. ஒன்று: சூரியன் மறைந்த பின்னால் தோன்றும் அந்தி வானத்தின் சிவப்பு; இரண்டு: பகலுக்குப் பின்னர் வருகின்ற இரவின் இருள்; பகலில் பூமியில் பரவிக் கிடக்கும் மனிதர்களும், பிராணிகளும் இரவில் ஒன்று திரண்டு வருவது; மூன்று: சந்திரன், இளம் பிறையிலிருந்து படிப்படியாக வளர்ந்து பௌர்ணமியாய்த் தோற்றமளித்தல். இந்த விஷயங்கள் ஒரு பேருண்மைக்கு பகிரங்கமாய்ச் சான்று பகர்ந்து கொண்டிருப்பதைப் போல் இருக்கின்றன. அந்தப் பேருண்மை இதுதான்: ‘மனிதன் வசிக்கின்ற இந்த பிரபஞ்சத்தில் எங்குமே தேக்கநிலை காணப்படவில்லை; தொடர்படியான மாறுதலும், படிப்படியான மாற்றமும் தான் எத்திசையிலும் காணப்படுகின்றன. எனவே மனிதன் மரணம் அடைந்தவுடன் எல்லாம் முடிவடைந்து விடுகிறது’ என்ற இறை நிராகரிப்பாளர்களின் எண்ணம் சரியானதன்று.
**இதற்கு இன்னொரு கருத்து இப்படியும் இருக்கலாம். தம் நெஞ்சங்களில் அவர்கள் நிரப்பி வைத்துள்ள மாசுகளான இறைநிராகரிப்பு, முரண்டு, சத்தியத்தைப் பகைத்தல், தீய நாட்டங்கள், கெட்ட எண்ணங்கள் ஆகிய அனைத்தையும் இறைவன் அறிகிறான்.
சன்மார்க்கம்!
மனிதர்கள் எவற்றைச் செய்ய வேண்டுமென்று நபியவர்கள் பணித்திருக்கிறார்களோ அவற்றைப் புரிவதால் சன்மார்க்கத்தை அடைய முடிகிறது நபியவர்கள் செய்ய வேண்டாமென்று எவற்றைத் தடுத்தார்களோ அவற்றைத் தவிர்ந்து நடக்க வேண்டும். அவர்கள் கூறிய சொற்களுக்கொப்ப செயல்பட்டு அச்சொற்களை நம்வாழ்வில் மெய்பித்துக் காட்ட வேண்டும். அப்படியானால் நிச்சயமாக நாம் சன்மார்க்கத்தை அடையலாம். அல்லாஹ்வின்பால் சென்றடைய இதைக் காட்டிலும் நேர்மையான ஒருவழியே இல்லை. இறைவனை நெருங்கிய நல்மக்கள் இப்பாதையைப் பின்பற்றினர். இதனால் அவர்கள் வெற்றியடைந்து ஜெயசீலர்களாகவும் திகழ்ந்தனர். இப்பாதையை கடைபிடித்தொழுகிய அல்லாஹ்வின் படைகள் அவன் பாதையில் போராடி பெரும் வெற்றிகளை ஈட்டினார்கள். இதற்கு நேர்முரணாக எவர்கள் நடப்பார்களோ அவர்களெல்லாம் வழி தவறி நெறி கெட்ட பாதையில் சென்று விடுகிறார்கள். இதனால் இம்மை, மறுமை ஆகிய ஈருலகில் வேதனைக்கும் சோதனைக்கும் ஆளாகி விடுகின்றனர். Continue reading
மகிமை மிக்கவன்!
2:255. அல்லாஹ் – அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன், அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னுள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னுள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானத்திலிருந்து எதனையும் அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்து கொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை – அவன் மிக உயர்ந்தவன் மகிமை மிக்கவன்.
அல் குர்ஆன்: அல் பகரா (பசு மாடு)
17:44. ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அ(ல்லாஹ்)வனை துதி செய்து கொண்டு இருக்கின்றனர்; இன்னும் அ(ல்லாஹ்)வன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். நிச்சயமாக அ(ல்லாஹ்)வன் பொறுமையுடையோனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
அல் குர்ஆன்: பனீ இஸ்ராயீல்.(இஸ்ராயீலின் சந்ததிகள்)