ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-33-34)

33,34. பிளேக் நோயும் தியாகியின் கூலியும்

ஹதீஸ் 33. ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்களிடம் தாவூன் எனும் உயிர்க்கொல்லி நோய் பற்றி கேட்டேன். அதற்கு என்னிடம் நபியவர்கள் சொன்னார்கள்: தாவூன் (எனும் நோய்) ஒரு தண்டனையாகும். அல்லாஹ், அதனை எந்த மக்கள் மீது அனுப்ப விரும்புகிறானோ அந்த மக்கள் மீது அனுப்புகிறான். ஆனால் முஃமின் (இறைவிசுவாசி)களுக்கு, அதனை ஓர் அருட்கொடையாக ஆக்கியுள்ளான். (இறைவிசுவாசியான) ஓர் அடியார், தாவூன் நோயில் மாட்டிக் கொள்கிறபொழுது -விதியில் அல்லாஹ் எழுதியதைத்தவிர வேறெதுவும் அவரைத் தீண்டாது என்று அறிந்தவராக, பொறுமையுடனும் அதற்கான கூலியை எதிர்பார்த்தவராகவும் தனது ஊரிலேயே தங்கியிருந்தார் எனில், இறைவழிப் போரில் உயிர் நீத்த தியாகி பெறுவதுபோன்ற கூலி நிச்சயம் அவருக்குண்டு. (புகாரி)

ஹதீஸ் 34. அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டுள்ளேன்: அல்லாஹ் கூறுகிறான்: என்னுடைய ஓர் அடியானை நான் சோதனைக்குள்ளாக்கினால் (அதாவது) அவனுக்கு விருப்பமான இரண்டைப் பறித்(து அவனைச் சோதித்)தால் அப்பொழுது அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டான் என்றால், அவ்விரண்டுக்குப் பகரமாக சுவனத்தை அவனுக்கு நான் வழங்குவேன் – அவனுக்கு விருப்பமான இரண்டை அதாவது அவனுடைய இரு கண்களை. (நூல்: புகாரி)

தெளிவுரை

இவ்விரு நபிமொழிகளும் குறிப்பிட்ட இரு துன்பங்களின் மீது பொறுமை கொள்வதன் சிறப்பை எடுத்துரைக்கின்றன. ஒன்று: உயிரையே காவு கொள்ளும் பிளேக் போன்ற கொடிய நோய்! இரண்டு: இரு கண்களையும் இழந்து பரிதவிப்பது.

ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிப்பு பிளேக் போன்ற உயிர்க்கொல்லி நோய் தொடர்பானது.

தாவூன் எனும் அரபிச்சொல்லின் பொருள், பிளேக் எனும் குறிப்பிட்டதொரு நோயாகும். அல்லது தொற்று நோய்போல் எல்லோரையும் தாக்கி மரணத்தின் பிடியில் சிக்கவைக்கும் உயிர்க்கொல்லி நோய் அனைத்தையும் அது குறிக்கும். இந்த இரண்டாவது கருத்தின்படி காலரா, பிளேக் போன்ற நோய்கள் அனைத்தையும் இந்த வார்த்தை உள்ளடக்கும். ஆக, தாவூன் என்பது அல்லாஹ் அனுப்பும் கடுமையானதொரு தண்டனையே! Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-33-34)

ஏக இறைவனின் இக்கேள்விகள் மூலம் சிந்த்தித்து, சீர்தூக்கிப் பார்ப்போரே அறிவுடையோர்!

(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?

அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கிறோமா?

உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.

(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல). Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Tagged , , , , , , , | Comments Off on ஏக இறைவனின் இக்கேள்விகள் மூலம் சிந்த்தித்து, சீர்தூக்கிப் பார்ப்போரே அறிவுடையோர்!

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-32)

32. இந்தப் பொறுமையாளருக்குச் சுவனமே கூலியாகும்!

ஹதீஸ் 32. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘உயர்வு மிக்கவனாகிய அல்லாஹ் கூறுகிறான்: விசுவாசியான என்னுடைய அடியானுக்கு என்னிடத்தில் கூலி – உலக வாழ்மக்களில் அவனுக்கு மிகப் பிரியமானவரின் உயிரை நான் கைப்பற்றினால் பிறகு அவன் (விதியைப் பொருந்திக் கொண்டு பொறுமை காத்து அதற்கான) கூலியை எதிர்பார்த்திருந்தால், (என்னிடத்தில் அவனுக்குரிய கூலி) சுவனத்தைத் தவிர வேறில்லை’ (புகாரி)

தெளிவுரை

அல்லாஹ் கூறியதாக வருகிற இவ்வகை ஹதீஸ், நபிமொழிக் கலையில் ஹதீஸுல் குத்ஸி (புனிதமான ஹதீஸ்) என அழைக்கப்படுகிறது.

மூலத்தில் அஸ்ஸஃபிய்யு – அதிகப் பிரியமானவர், உயிருக்குயிரானவர் எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் அகராதிப் பொருள், தேர்வு செய்யப்பட்டவர், உண்மையான நேசத்திற்குரியவர் என்பதாகும். Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-32)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-31)

31. பொறுமையின் இலக்கணம்

ஹதீஸ் 31. அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள், ஓர் அடக்கத்தலத்தின் அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்றபொழுது (அவளிடம்) கூறினார்கள்: அல்லாஹ்வைப் பயந்து கொள்., பொறுமையைக் கடைப்பிடி, – அதற்குப் பெண் சொன்னாள்: என்னை விட்டும் தூரவிலகிச்செல்லும். எனக்கு ஏற்பட்ட துன்பம் உமக்கு ஏற்படவில்லை, -நபியவர்களை அந்தப் பெண் அறிந்திருக்கவில்லை. பிறகு -இவர்கள்தாம் நபிகளார் என்று அவளிடம் சொல்லப்பட்டது. உடனே அவள் நபியவர்களின் வாசல் தேடி வந்தாள். அங்கு காவலாளிகள் யாரையும் அவள் காணவில்லை. அவள் சொன்னாள்: ‘உங்களை நான் அறிந்திருக்கவில்லை,- அதற்கு நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்: ‘பொறுமை என்பது துன்பத்தின் தொடக்கத்திலேயே மேற்கொள்வதுதான். (புகாரி, முஸ்லிம்)

இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது: அவள் அழுது கொண்டிருந்தது அவளது ஆண் குழந்தையின் அடக்கத்தலத்தில்,,

தெளிவுரை

குழந்தைப் பருவத்திலேயே மரணம் அடைந்த தன் மகனின் பிரிவினால் அந்தப் பெண்மணி கடும் துயரத்திற்குள்ளாகி இருந்தாள். மகனின் மீது அவளுக்கு அளவு கடந்த அன்பு! மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு வீட்டில் தங்கி பொறுமை காத்திட அவளால் இயலவில்லை. Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-31)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-30)

30. இறைநம்பிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சோதனை!

ஹதீஸ் 30. ஸுஹைப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் வாழ்ந்து சென்ற சமுதாயத்தில் ஒரு மன்னன் இருந்தான். அவனுக்கு ஒரு சூனியக்காரர் (ஆலோசகராக) இருந்தார். அவர் முதுமை அடைந்தபோது மன்னனிடம் சொன்னார்:

‘நான் முதுமை அடைந்து விட்டேன். எனவே ஒரு சிறுவனை என்னிடம் அனுப்பி வை. நான் அவனுக்குச் சூனியம் கற்றுக் கொடுக்கிறேன்.

அதன்படி சிறுவனொருவனை அவரிடம் அனுப்பி வைத்தான் மன்னன். அந்தச் சூனியக்காரர் சிறுவனுக்குச் சூனியம் கற்றுக் கொடுத்தார்.

சிறுவன் நடந்துவரும் பாதையில் ஒரு துறவி இருந்தார். சிறுவன் சூனியம் கற்க வரும்பொழுது துறவியிடம் சிறிது நேரம் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்பான். அவர் சொல்வது அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனால் சூனியக்காரரிடம் வரும்பொழுது வழியில் அந்தத் துறவியிடம் அமர்ந்து அறிவுரை கேட்பது அவனது வழக்கமானது.

ஒருதடவை சூனியக்காரரிடம் வரும்பொழுது (தாமதமானதால்) அவனை அவர் அடித்தார். அது குறித்து துறவியிடம் சிறுவன் முறையிட்டான். அவர் அவனுக்கு ஒருவழி சொன்னார்:

‘இனி சூனியக்காரர் அடிப்பாரே என்று நீ பயந்தால், என் பெற்றோர் தான் என்னைத் தடுத்துத் தாமதப்படுத்தி விட்டனர் என்று அவரிடம் சொல். தாமதமாகத் திரும்பியது பற்றி பெற்றோர் கேட்டால் சூனியக்காரர்தான் தாமதப்படுத்தி விட்டார் என்று சொல்’

இவ்வாறு அவன் செய்து வந்தபொழுது ஒருதடவை பாதையில் பெரியதொரு மிருகத்தைக் கண்டான். அது மக்களின் நடமாட்டத்தைத் தடுத்து வைத்திருந்தது. சிறுவன் (மனத்திற்குள்) சொல்லிக் கொண்டான்: சூனியக்காரர் சிறந்தவரா? துறவி சிறந்தவரா? என்பதை இன்று பார்த்து விடலாம்! -ஒருபெரிய கல்லை எடுத்தான். யா அல்லாஹ்! சூனியக்காரரைவிட துறவியின் விஷயம் உனக்குப் பிரியமானதாக இருந்தால் நான்(இந்தக் கல்லை எறிந்ததும்) மிருகத்தைக் கொன்றுவிடு., மக்கள் நடந்து செல்வதற்கு வழி ஏற்படுத்து! என்று பிரார்த்தனை செய்து கொண்டு கல்லால் அந்த மிருகத்தை அடித்தான். அதனைக் கொன்றுவிட்டான். மக்கள் நடந்து செல்ல வழிபிறந்தது!

துறவியிடம் வந்து நடந்த விஷயத்தைச் சொன்னான். அதற்கு அவர், ‘என் அன்பு மகனே! இன்று என்னை விடவும் நீ சிறந்து விட்டாய். (ஞானத்தால் – பக்தியினால்) உனது விவகாரம் உயர்ந்துள்ளது என்பதை நான் காண்கிறேன். திண்ணமாக நீ சோதனைக்குள்ளாக்கப் படுவாய். அத்தகைய சோதனைக் கட்டம் வந்தால் என்னைப் பற்றி மக்களிடம் சொல்லி (எனது ரகசியத்தை வெளிப்படுத்தி) விடாதே!’

அந்தச் சிறுவன், பிறவிக் குருடனையும் தொழு நோயாளியையும் குணப்படுத்தக் கூடியவனாக ஆனான். ஏனைய அனைத்து நோய்களில் இருந்தும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பவனாகத் திகழ்ந்தான்.

மன்னனின் அவைத் தோழர் ஒருவர் இந்தச் செய்தியைக் கேள்விப் பட்டார். அவர் கண்பார்வை இழந்திருந்தார். உடனே அவர் நிறைய அன்பளிப்புகளை எடுத்துக்கொண்டு அந்தச் சிறுவனிடம் வந்து சொன்னார்:

‘நீ எனக்கு நிவாரணம் அளித்தால் நான் கொண்டு வந்துள்ள அனைத்து அன்பளிப்புகளும் உனக்குத்தான்!’

அதற்கு சிறுவன் சொன்னான்: ‘நான் யாருக்கும் (சுயமாக) நிவாரணம் அளிப்பதில்லை. நீர் அல்லாஹ்வின் மீது ஈமான் – நம்பிக்கை கொண்டால் உமக்காக அல்லாஹ்விடம் நான் பிரார்த்தனை செய்கிறேன். அல்லாஹ் உமக்குக் குணம் அளிப்பான்’

அதன்படி அவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டார். அல்லாஹ் அவருக்கு நிவாரணம் அளித்தான்.

பின்னர் அவர் மன்னரிடம் வந்து வழக்கம் போல் அவனது அவையில் அமர்ந்தார். மன்னன் கேட்டான்:

‘உமக்கு மீண்டும் பார்வையைக் கொடுத்தது யார்?

‘என் இறைவன்’

‘என்னைத் தவிர வேறொரு இறைவன் உமக்கு உண்டா? ‘ Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-30)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்3-29)

29. ஆறுதல் சொல்வது, யாருக்கு? எப்படி?

ஹதீஸ் எண்: 29. உஸாமா(ரலி) அவர்கள், (நபியவர்களால் விடுதலை செய்யப்பட்ட ஜைத் பின் ஹாரிஸா(ரலி) அவர்களின் மகன். இவரும் இவருடைய தந்தை ஜைத் அவர்களும் நபியவர்களின் பிரத்தியேக அன்புக்குரியவர் ஆவர்.) கூறுகிறார்கள்: நபியவர்களின் மகளார்- என் மகன் உயிர் பிரியும் நெருக்கடியான நிலையில் இருக்கிறான். எனவே நீங்கள் எங்களிடம் அவசியம் வரவேண்டும் என்று நபியவர்களுக்குத் தூது அனுப்பினார்கள். அதற்கு நபியவர்கள் ஓர் ஆள் மூலம் இவ்வாறு பதில் அனுப்பினார்கள்: மகளுக்கு ஸலாம் உரைத்து இவ்வாறு சொல்லவும்: எதனை அல்லாஹ் எடுத்துக் கொண்டானோ அது அவனுக்குரியதே. எதனை வழங்கியிருக்கிறானோ அதுவும் அவனுக்கே சொந்தம்! ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத் தவணை உண்டு! எனவே என் மகள் பொறுமையுடன் இருக்கட்டும். அதற்கான கூலியை (அல்லாஹ்விடத்தில்) எதிர் பார்க்கட்டும்.

ஆனால் நபியவர்களின் மகளோ – அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு நபியவர்கள் அங்கு வரத்தான் வேண்டும் என்று மீண்டும் அவர்களுக்குத் தூது அனுப்பினார்கள்.

எனவே நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். மேலும் ஸஅத் பின் உபாதா, முஆத் பின் ஜபல், உபை இப்னு கஅப், ஜைத் பின் ஸாபித் (ரலி -அன்ஹும்) மற்றும் தோழர்கள் சிலரும் உடன் சென்றார்கள். அப்பொழுது நபியவர்களிடம் குழந்தை கொடுக்கப்பட்டது. நபியவர்கள் அதனைத் தமது மடியில் ஏந்தினார்கள். அப்போது குழந்தைக்கு மூச்சு வாங்கியது! (அதனைக் கண்ணுற்ற) நபியவர்களின் கண்களும் கண்ணீர் வடித்தன! அப்பொழுது ஸஅத் பின் உபாதா(ரலி) அவர்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! இது என்ன?, அதற்கு நபி(ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்: ‘அல்லாஹ் தன் அடியார்களின் இதயங்களில் வைத்துள்ள இரக்கமாகும் இது!’ – மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது: தன் அடியார்களில் தான் நாடுவோரின் இதயங்களில் இதனை அல்லாஹ் அமைத்துள்ளான். தன் அடியார்களில் (துன்பத்திற்குள்ளானோர் மீது) இரங்குகிறவர் யாரோ அவர்கள் மீதுதான் அல்லாஹ் இரங்குகிறான். (நூல்: புகாரி, முஸ்லிம்).

தெளிவுரை

இதன் அறிவிப்பாளராகிய உஸாமா(ரலி) மற்றும் அவர்களின் தந்தை ஜைத்(ரலி) இருவரின் சிறப்பு குறித்து இரண்டு வார்த்தைகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஒன்று: மௌலா ரஸூல்-அடிமைத் தளையில் இருந்து நபியவர்களால் விடுதலை செய்யப்பட்டவர். அதாவது, சிறு வயதில் அடிமையாய் இருந்த ஜைத்(ரலி) அவர்களை விலைக்கு வாங்கி நபியவர்களுக்கு அன்பளிப்புச் செய்தார்கள், அவர்களின் மனைவி கதீஜா(ரலி) அவர்கள்! நபியவர்களோ ஜைத்(ரலி) அவர்களுக்கு முழு விடுதலை அளித்தார்கள். இதனால்தான் ஜைத்(ரலி) அவர்களுக்கு மௌலா ரஸூல் (நபியவர்களால் விடுதலை செய்யப்பட்டவர்கள்) என்று கூறுவது நபித் தோழர்களின் வழக்கம் ஆனது! Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்3-29)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-28)

28. இப்படிச் செய்வதற்கு எப்படி மனம் வந்தது?

ஹதீஸ் 28: அனஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்)அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டபொழுது கடும் துன்பத்திற்கு உள்ளானார்கள். அப்போது ஃபாத்திமா(ரலி) அவர்கள் சொன்னார்கள்: ஆஹ்! என் அன்புத் தந்தைக்கு ஏற்பட்ட துன்பமே! – இதனைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: இந்நாளுக்குப் பிறகு உன் தந்தைக்கு துன்பம் என்பதே இல்லை, என்று! – நபியவர்கள் மரணம் அடைந்தபோது ஃபாத்திமா(ரலி) அவர்கள் சொன்னார்கள்: என் அன்புத் தந்தையே! இரட்சகன் விடுத்த அழைப்புக்குப் பதில் அளித்து விட்டீர்களோ! அன்புத்தந்தையே! ஃபிர்தௌஸ் எனும் சுவனத் தோட்டம்தான் உங்கள் தங்குமிடம் ஆனதோ! அன்புத் தந்தையே! உங்கள் மரணச் செய்தியை ஜிப்ரீலுக்கு நாங்கள் தெரிவித்து விடுகிறோம்.

நபியவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டபொழுது ஃபாத்திமா(ரலி) அவர்கள் (நபித்தோழர்களை நோக்கிக்) கேட்டார்கள்: நபி(ஸல்) அவர்களின் (உடலை அடக்கம் செய்து அவர்கள்) மீது மண்ணை அள்ளிப்போட்டது உங்கள் மனத்திற்குத் திருப்தியாக இருந்ததா?’ (நூல்: புகாரி)

தெளிவுரை

நபி(ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான துன்பம் என்பது மரணத் தருவாயின் கடும் பிணியும் காய்ச்சலுமாகும். கடுமையான காய்ச்சல் என்றால் இருமடங்கு அதாவது சாதாரணமாக இரண்டு நபர்களுக்கு ஏற்படும் காய்ச்சலை நபியவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டியதாயிற்று! Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-28)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-27)

27. இன்பமும் துன்பமும் நன்மையாய் அமைந்திட..!

ஹதீஸ் 27: ஸுஹைப் பின் ஸினான்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ‘ ஓர் இறை நம்பிக்கையாளனின் விவகாரம் குறித்து நான் ஆச்சரியம் அடைகிறேன். அவனுடைய ஒவ்வொரு விஷயமும் அவனுக்கு நன்மையாகவே அமைகிறது. இது ஒரு நம்பிக்கையாளனுக்கே அன்றி வேறெவருக்கும் வாய்க்கப் பெறவில்லை! அவனுக்கு மகிழ்வு நிலை வந்தால் நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நன்மையாக அமைகிறது. அவனுக்கு கஷ்ட நிலை வந்தால் பொறுமை காக்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாக அமைகிறது!’ (நூல்: முஸ்லிம்)

தெளிவுரை

நபி(ஸல்) அவர்கள் இறைநம்பிக்கையாளரின் நிலைமை குறித்து வியப்பை வெளிப்படுத்தியது அவரைச் சிறப்பிக்கும் வகையில்தான்! அவரது இறைநம்பிக்கையையும் அதிலிருந்து மலரும் வாழ்க்கைப் போக்கையும் திருப்பங்களையும் மெச்சிப் பாராட்டியே நபியவர்கள் கூறினார்கள். அவனது ஒவ்வொரு விஷயமும் அவனுக்கு நன்மையாகவே அமைகிறது என்று!

தொடர்ந்து அதற்கு விளக்கமும் தந்தார்கள். மனித வாழ்வில் இறைவன் நிர்ணயித்த விதி என்பது – இன்பம் துன்பம் இரண்டில் ஒன்றாகத்தான் இருக்கும். இவற்றை எதிர்கொள்ளும் விதத்தில் மனிதர்கள் இருவகையாய்ப் பிரிகின்றனர். நம்பிக்கையாளன் என்றும் நிராகரிப்பாளன் என்றும்! Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-27)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-26)

26. பொறுமையே சிறந்த செல்வம்

ஹதீஸ் 26:
அபூ ஸயீத் – அல்குத்ரி(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: அன்ஸாரிகளில் சிலபேர் நபி(ஸல்) அவர்களிடம் பொருளுதவி கேட்டார்கள். நபியவர்களும் வழங்கினார்கள். மீண்டும் கேட்டார்கள். நபியவர்கள் மீண்டும் வழங்கினார்கள். இறுதியில் நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்து விட்டன. இவ்வாறாக தங்கள் கைவசம் இருந்த அனைத்தையும் (இறைவழியில்) நபியவர்கள் செலவு செய்து விட்டபொழுது அந்த அன்ஸாரிகளிடம் சொன்னார்கள்:

ஏதேனும் செல்வம் என்னிடம் வந்தால் நான் அதை உங்களுக்குத் தராமல் சேமித்து வைக்க மாட்டேன். ஆனால் ஒருவர் ஒழுக்கத் தூய்மை மேற்கொண்டால் அவரை அல்லாஹ் அவ்வாறே ஆக்குவான். பிறரிடம் தேவைப்படாத நிலையை ஒருவர் மேற்கொண்டால் அவரை, தேவையாகாதவராகவே அல்லாஹ் ஆக்குவான். மேலும் ஒருவர் பொறுமையை உறுதியுடன் கடைப்பிடித்தால் அவரைப் பொறுமையாளராக ஆக்குவான். பொறுமையை விடவும் சிறந்த, விசாலமான கொடை எதுவும் எவருக்கும் வழங்கப்படவில்லை! – புகாரி, முஸ்லிம்

தெளிவுரை

நபி(ஸல்) அவர்களின் வள்ளல் தன்மையைப் பறைசாற்றும் பல நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று! கேட்போருக்கு ஈந்து மகிழ்வதே நபியவர்களின் உயரிய பண்பு. எவர் வந்து கேட்டாலும் இல்லை என்று அவர்கள் சொன்னதே இல்லை! வீட்டிலோ ஏழ்மைதான். கஷ்டம்தான்! எந்த அளவுக்கு எனில், சிலநேரங்களில் நபியவர்கள் தமது வயிற்றில் கூழாங் கற்களை வைத்துக் கட்டிக் கொண்டு பசியின் கடுமையைச் சமாளித்திருக்கிறார்கள் என்று வரலாறு கூறுகிறது. இப்படி ஏழ்மையுடன் வாழ்ந்த ஏந்தல் நபியவர்கள் வறுமைக்கு அஞ்சாமல் வாரிவாரி வழங்கி கைவசம் இருந்ததெல்லாம் காலியானபொழுது சொன்னார்கள்: Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-26)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-25)

25. பொறுமையின் தனிச்சிறப்பு

ஹதீஸ் 25: அபூ மாலிக் அல் அஷ்அரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: தூய்மை (ஈமான் எனும்) நம்பிக்கையின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் தராசை நிரப்புகிறது. ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்துலில்லாஹ் வானங்களுக்கும் பூமிக்கும் மத்தியிலுள்ள இடைவெளியை நிரப்புகிறது. தொழுகை ஒளியாகும். தர்மம் ஆதாரமாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உனக்குச் சாதகமான அல்லது பாதகமான ஆதாரமாகத் திகழ்கிறது!. ஒவ்வொரு மனிதரும் காலையில் (தத்தம் பணிக்காகச்) செல்கின்றனர். தமது ஆன்மா தொடர்பான வியாபாரத்தை மேற்கொள்கின்றனர். அதற்கு விடுதலை பெற்றுத் தருகின்றனர் அல்லது அதை அழிவுக்கு உள்ளாக்குகின்றனர்!’ (நூல்: முஸ்லிம்)

தெளிவுரை

பொறுமையின் சிறப்பையும் நன்மையையும் விவரித்து அதைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தக்கூடிய இறைவசனங்ளை முன்னர் பார்த்தோம். இப்பொழுது பொறுமை பற்றிப் பேசும் நபிமொழிகளைப் பார்ப்போம்.

பொறுமை வெளிச்சமாகும் எனும் வாசகத்திற்காகத்தான் இந்த நபிமொழியை இந்த அத்தியாயத்தின் கீழ் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கொண்டு வந்துள்ளார்கள்.

பொறுமை உள்ளத்தின் ஒளியாகவும் பாதையின் வெளிச்சமாகவும் பணிக்கு ஊக்கமாகவும் திகழ்கிறது! ஆம்! சூழ்ந்து வரும் துன்பங்களினாலும் இன்னல்களினாலும் வாழ்க்கைப் பாதையில் இருள்கள் அடர்ந்து தொடர்ந்து பயணிப்பது தடைபடும் பொழுது பொறுமை தான் வெளிச்சம் பாய்ச்சி இடறகற்றுகிறது. பொறுமையில் உறுதியாக இருப்பவருக்கே அப்பொழுது யதார்த்த நிலை என்ன என்பது புலப்படும்! இருள்களில் இடறி விழுந்திடாமல் ஆற்ற வேண்டிய பணிகளைத் தொடர்ந்து அவர் ஆற்றுகிறார். Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-25)