விலகாமல் செல்லும் கோள்கள்

கேள்வி எண்: 6. எந்நேரமும் சதா சுழன்று, சுற்றிக் கொண்டிருக்கும் பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் இதர கோள்களும் அதனதன் பாதைகளிலிருந்து விலகி சென்றிடாமல் தாம் தடுத்துக் கொண்டிருப்பதாக இறைவன் கூறும் திருமறை வசனம் எது?பதில்: “நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகி விடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கிறான். அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன்” (அல்குர்ஆன்: 35:42)

சிறு விளக்கம்: இப்பிரபஞ்சத்தில் (Universe) பல கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களும் (விண்ணடுக்குகள் – Galaxies) அவற்றில் எண்ணற்ற நட்சத்திரங்களும் (Stars) அந்த நட்சத்திரங்களின் கட்டுப்பாட்டில் பல கோடிக்கணக்கான கோள்களும் (Planets) இருக்கின்றன. இப்பிரபஞ்சத்தில் உள்ள கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களுள் ஒன்றுதான் நமது பூமி மற்றும் சூரியன் இருக்கும் பால்வெளி விண்ணடுக்கு (Milkyway Galaxies) ஆகும். இந்த பால்வெளி விண்ணடுக்கில் நமது சூரியக்குடும்பமும் இதைப்போன்ற இன்னும் ஏராளமான நட்சத்திரங்களும் இருக்கின்றன. நமது சூரியக்குடும்பத்தில் நாம் வசிக்கும் பூமியும் இன்னும் மெர்குரி, வீனஸ், மார்ஸ், ஜுபிடர், நெப்டியூன், புளுட்டோ, சனி போன்ற கோள்களும் அவற்றிற்கு பல சந்திரன்களும் இருக்கின்றன.இந்த சந்திரன்கள் கோள்களின் ஈர்ப்பாற்றலால் கட்டுண்டு இருக்கின்றன. கோள்கள் சூரியனின் ஈர்ப்பாற்றலால் கட்டுண்டு இருக்கின்றன. சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் விண்ணடுக்குகளில் காணப்படும் ஈர்ப்பாற்றலால் அந்த விண்ணடுக்குகளில் இருந்து விலகிச் செல்லாமல் இருக்கின்றன.நமது பூமி, சந்திரனை சூரியக்குடும்பத்திலிருந்து விலகி சென்றிடாமல் பாதுகாப்பாக தடுத்துக் கொண்டிருக்கும் இந்த ஈர்ப்பாற்றல்கள் என்றுமே மாறாத (Constant) தன்மையுடையதா என்றால் இல்லை என்றே நவீன அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஈர்ப்பாற்றல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிலைத்திருக்கக் கூடியது. பின்னர் அவைகள் நட்சத்திரங்களில் ஏற்படும் மாற்றங்களால் ஈர்ப்பாற்றலில் மாற்றம் ஏற்படும் என்றே விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால்,

  •  வானம், பூமியைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவற்றைப் படைத்த இறைவன் உருவாக்கியிருக்கும் ஈர்ப்பாற்றல் தான்.

 

  • இறைவனின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த ஈர்ப்பாற்றல், அல்லாஹ் நீக்கி விட்டால் வானங்கள், பூமி இவைகள் ஒன்றோடொன்றிலிருந்து விலகி சென்று விடும். அதை நிறுத்த வேறு யாராலும் முடியாது

 

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.