ஜோதிடம், சகுனம் பார்த்தல் குறித்த இஸ்லாமிய பார்வை

கேள்வி எண்: 32. ‘யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என நம்பியவர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்டதை (குர்ஆனை) நிராகரித்தவர் ஆவார்’ என்ற நபிமொழியை அறிவித்தவர் யார்?

பதில்: இந்த நபிமொழியை அறிவித்தவர் அபூஹுரைரா (ரலி) ஆதார நூல்: அபூதாவூத்.

சிறு விளக்கம்: மார்க்க அறிவு இல்லாமை மற்றும் சினிமா கேபிள் டி.வி.க்கள் இவற்றின் மூலமாக சிந்திக்கும் ஆற்றல் மழுங்கடிக்கப்பட்டு வரும் இவ்வேளையில் நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் ஜோதிடம், சகுனம் பார்த்தல் போன்ற இஸ்லாத்திற்கு எதிரான மூட நம்பிக்கைகளுக்கு ஆட்பட்டு அவைகளை நம்பி தமது பொருளாதாரத்தையும், பொன்னான நேரத்தையும் வீணடிக்கின்றனர். இன்று இந்த குறி பார்ப்பது, சகுனம் பார்ப்பது போன்ற தீயசெயல்கள் பிரபலமான பத்திரிக்கைகள், கேபிள் டி.வி.க்கள் போன்ற மீடியாக்கள் மூலமாக கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் நம்மை நோக்கி வருகின்றன.

மார்க்கத்தில் போதிய தெளிவில்லாத பாமர முஸ்லிம்களும் ஏன் கல்லூரிக்குச் சென்று படித்துப் பட்டம் பெற்ற முஸ்லிம் சகோதர சகோதரிகளும் கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கண்டு ஏமாந்து ஜோதிடங்களை நம்பி உயிரினும் மேலான தங்கள் ஈமானை இழந்து நிற்கின்றனர். இவ்வகையான ஜோதிடங்கள் நம்மிடையே பல்வேறு வகைகளில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவைகளில் சில:

* கைரேகை, கிளி ஜோதிடம், பிறந்த தேதி, பிறந்த வருடம் இவைகளைக் கொண்டு எதிர்காலத்தைக் கணித்துக் கூறுவது.

* திருமணம் போன்ற சுபகாரியங்களைச் செய்வதற்காக நல்லநாள், கெட்டநாள், நல்லநேரம் மற்றும் கெட்டநேரம் போன்றவற்றை ஏற்படுத்தி இறைவன் படைத்துள்ள நாட்களில் நேரங்களில் பாகுபாடு காண்பது.

* பெயரில் நியுமராலஜி என்ற பெயரில் பெற்றோர்கள் சூட்டிய நல்ல இஸ்லாமியப் பெயர்களைக்கூட நிராகரிப்பவர்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்வது.

* ‘அதிர்ஷ்டக் கல் ஜோதிடம்’ என்ற பெயரில் சாதாரண கற்களுக்குக்கூட மகத்தான சக்தியுண்டு என்றும், அவைகளை மோதிரம், நகைகள் மூலமாக நாம் அணிந்து கொண்டால் இறைவன் நம்மீது விதித்திருக்கும் விதியையும் மீறி அந்தக் கற்கள் நம்மை நோய் நொடியற்று வாழச் செய்து, பற்பல செல்வங்களை ஈட்டித் தரும் என்று நம்புவது.

* முஸ்லிம்களில் சிலர் ஜோதிடத்தின் அரபி வடிவமான பால்கிதாபு போன்றவற்றை நம்புகின்றனர்.

* வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் வீடு, மனைகள் வாங்கும்போதும் ஜோதிடம் பார்க்கப்படுகின்றது.

மேற்கூறப்பட்ட ஜோதிடத்தின் வகைகளில் எதை நம்பி செயல்பட்டாலும் அவைகள் அனைத்துமே இறைநிராகரிப்பு என்னும் குஃப்ரின் பால் மக்களை இழுத்துச் செல்லக்கூடியதே. ‘ஜோதிடக்காரன் கூறுவதை உண்மை என நம்புபவன் அல்லாஹ் இறக்கிய வேதத்தை நிராகரித்தவன் ஆவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். ஏனெனில் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

“அல்லாஹ் தான் நாடியதை நிறைவேற்றியே தீருவான்”  (அல்குர்ஆன்: 12:21)

“அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை விசாலாமாக்குகின்றான். தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவன்” (அல்குர்ஆன்: 29:62)

மேற்கண்ட வசனங்களுக்கு எதிராக அல்லாஹ் ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு செல்வத்தை நிர்ணயித்திருக்க, ஜோதிடத்தை நம்புபவர்கள், அந்தக் குறிகாரர்கள் கூறுவதுபோல் செயல்பட்டால் அல்லது அதிருஷ்டக்கற்களை மோதிரங்களில் அணிந்து கொண்டால், அந்த கற்கள் நமக்கு அல்லாஹ்வின் நாட்டத்திற்கு மாறாக நமக்கு அதிக செல்வங்களைப் பெற்றுத்தரும் என்று நம்புவதாகும். (இத்தகைய தீய எண்ணங்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!) அல்லாஹ் இறக்கி அருளியதை நிராகரித்தவன் முஸ்லிமாக இருக்க முடியாது.

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.