மாதவிடாயும், பிரசவ இரத்தமும்.
மாதவிடாயின் கால வரையறை.
பெரும்பாலும் மாதவிலக்கு வரக்கூடிய காலம் 12 வயது முதல் 50 வயது வரையாகும். சிலசமயம் பெண்ணின் நிலையைப் பொறுத்து இதற்கு முன்னரோ, பின்னரோ மாதவிடாய் ஏற்பட்டு விடலாம். மாதவிடாயின் குறைந்த கால அளவிற்கும், அதன் கூடுதலுக்கும் வரையறை கிடையாது.
கர்ப்பமுற்றவளின் உதிரப்போக்கு.
ஒரு பெண் கர்ப்பமுற்று விட்டால் பெரும்பாலும் இரத்தம் நின்று விடும். எனினும் கர்ப்பமுற்றவள் இரத்தத்தைக் கண்டு, அது குழந்தை பெறுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக இருக்குமானால் அத்துடன் பிரசவ வலியுமிருந்தால் அது பிரசவ இரத்தமாகும். குழந்தை பெறுவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்னரோ, அல்லது பிரசவ வலியின்றி குறைந்த காலத்திற்குப் பின்னரோ, இரத்தத்தை கண்டால் அது பிரசவ இரத்தமல்ல. மாத விடாயுமல்ல. எனினும் குழந்தை பெறும்வரை தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் அது மாதவிடாய் இரத்தமாகும்.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தங்கள்.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தங்கள் பல வகையாகும்.
* அதிகமாகி விடுவது அல்லது குறைந்து விடுவது. உதாரணமாக ஒரு பெண்ணுக்கு ஆறு நாட்கள் வருவது தான் வழமை. அது நீடித்து ஏழாவது நாளும் வருவது. அல்லது வழமையாக ஏழு நாட்களுக்கு வரக்கூடியவளுக்கு ஆறு நாட்களிலேயே நின்று விடுவது.
* முந்தி விடுவது அல்லது பிந்தி விடுவது. உதாரணமாக மாதவிடாய் மாதக்கடைசியில் வருவது வழக்கமாக உள்ளவள், மாத ஆரம்பத்திலேயே மாதவிடாயைக் கண்டு விடுகிறாள். அல்லது மாத ஆரம்பத்தில் வருவது வழக்கமாக உள்ளவள் மாத இறுதியில் அதைக் காண்கிறாள். எப்போது அவள் இரத்தத்தைக் காணுகிறாளோ அப்போதே அவள் மாதவிடாய்க்காரியாகி விடுகிறாள். அதிலிருந்து எப்போது சுத்தமாகி விடுகிறாளோ அப்போதே சுத்தமானவளாகி விடுகிறாள். அது வழக்கத்தை விட அதிகமானாலும் சரி. குறைவானாலும் சரி. அல்லது முந்தினாலும் பிந்தினாலும் சரியே.
* மஞ்சள் அல்லது கலங்கள் நிறமாக வருதல். அதாவது காயத்தின் தண்ணீரைப் போன்று மஞ்சளாகவோ, அல்லது மஞ்சளுக்கும் கருப்பிற்கும் இடைப்பட்ட நிலையிலோ இரத்தத்தைக் கண்டால், அது மாதவிடாய் காலத்திலோ அல்லது சுத்தமடையுமுன் அதனுடன் சேர்ந்தோ இருந்தால் அது மாதவிடாய்தான். அதற்கும் மாதவிடாய் சட்டங்கள் தான். சுத்தமடைந்த பின்னாலிருந்தால் அது மாதவிடாயல்ல.
* ஒருநாள் இரத்தத்தையும், மறுநாள் சுத்தத்தையும் அவள் காணும் விதத்தில், மாதவிடாய் நின்று நின்று வருவது இரு நிலைகளாகும்.
1. ஒரு பெண்ணுக்கு இரத்தம் எல்லா நேரத்திலும் நிரந்தரமாக இருப்பது சீக்கு இரத்தமாகும். இதை பார்ப்பவளுக்கு சீக்கு இரத்த முடையவளின் சட்டமே.
2. மாதவிடாய் விட்டு விட்டு வரும் நிலை. அதாவது நிரந்தரமாக இல்லாமல் மாதவிடாய் வந்து, பிறகு வழக்கமான சுத்த நிலை ஏற்படுதல். ஒரு நாளைவிட குறைவாக இரத்தம் வந்து நின்றுவிட்டால் அது சுத்த நிலையல்ல. ஆனால் ஒரு நாளைவிடக் குறைவாக இரத்தம் வந்து நின்று விட்டாலும் அது சுத்தமான நிலை என்பதை உறுதிபடுத்தும் அம்சங்களிருந்தால், அதாவது அவளது வழக்கமான மாதவிடாய் நாட்களின் இறுதியில் இரத்தம் நின்று சுத்தம் ஏற்பட்டால், அல்லது இரத்தம் நிற்கும்போது வெண்மையான திரவம் கர்ப்பப்பையிலிருந்து வெளியேறினால் அது சுத்தமான நிலையேயாகும்.
அல்லாஹ் நாடினால் தொடரும்.