ஆணிலிருந்தே பெண்!

கேள்வி எண்: 1. ஒரு பெண் கருத்தரிக்கும் போது அது ஆண் குழந்தையாகவோ அல்லது பெண் குழந்தையாகவோ ஆகுவதற்கு அவளுடைய கணவனின் உயிரணுவே காரணம்; மனைவி காரணமல்ல என்ற தற்கால அறிவியல் ஆராய்ச்சியின் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிய திருகுர்ஆன் வசனம் எது?

பதில்: “இன்னும் நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் – (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப்படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு” (அல்குர்ஆன்: 53:45-46)

“(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டு சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத் துளியாக அவன் இருக்கவில்லையா” (அல்குர்ஆன்: 75:37)

சிறு விளக்கம்: பொதுவாக பெண்ணின் சினை முட்டையில் X என்ற குரோமோசோம் மட்டுமே இருக்கும். ஆணின் விந்தணுவில் X அல்லது Y என்ற குரோமோசோம் இருக்கும். Y என்பது ஆணை உருவாக்கும் குரோமோசோம் என்றும் நாம் படித்திருக்கிறோம்.

இப்போது மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் இன்றைய அறிவியலுடன் எவ்வாறு ஒத்துப்போகின்றது என்பதை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

பெண்ணின் சினை முட்டை வெறும் X குரோமோசோமை மட்டுமே உடையதாக இருக்கின்றது. ஆனால், பெண்ணின் கர்ப்பப்பையில் செலுத்தப்படும் விந்தணுக்களில் X மற்றும் Y குரோமோசோம்களைக் கொண்ட உயிரணுக்கள் கோடிக்கணக்கில் உள்ளன. ஆனால் ஆணின் ஒரே ஒரு உயிரணு மட்டுமே பெண்ணின் சினை முட்டையுடன் சேர்ந்து கருவாக வளர்கின்றது. பெண்ணின் சினை முட்டையுடன் சேரக்கூடிய ஆணின் உயிரணு X குரோமோசோம் உடையதாக இருந்தால் அது பெண் குழந்தையாகவும், Y குரோமோசோம் உடையதாக இருந்தால் அது ஆண் குழந்தையாகவும் உருவாகிறது.

அதாவது கர்ப்பக் கோளறையில் செலுத்தப்படும் ஆணின் உயிரணுக்களே சினை முட்டையுடன் சேர்ந்து பெண் குழந்தையாகவோ அல்லது ஆண் குழந்தையாகவோ உருவாகின்றது.

மேற்கண்ட விளக்கங்களிலிருந்து நாம் அறிவது என்ன்வென்றால், ‘கர்ப்பக் கோளறையில் செலுத்தப்படும் ஆணின் இந்திரியத் துளியே பெண் குழந்தையாகவோ அல்லது ஆண் குழந்தையாகவோ உருவாகுவதற்கு காரணமாக அமைகின்றது. பெண்ணின் சினை முட்டையல்ல’ இன்னும் சற்று விளக்கமாக கூறுவதென்றால்; ‘ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை என்ற ஜோடிகளை உருவாக்குவது பெண்ணின் கர்ப்பக் கோளறையில் செலுத்தப்படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டே’ என்பது நன்கு புலப்படுகின்றது.

20-ம் நூற்றாண்டின் இந்த அரிய கண்டுபிடிப்பை 7-ம் நூற்றாண்டிலேயே கூறிய அல்லாஹ்வின் திருமறையின் மகிமையை உலகிற்கு எடுத்துக் கூறுவது நமது கடமையன்றோ?

இன்றும் நம்மில் சிலர் தம் மனைவி பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுக்கிறாள், ஆண் குழந்தையையே பெற்றெடுப்பதில்லை என்று குறை கூறுகிறார்கள். குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ ஆகுவதற்கு தம்முடைய உயிரணுவே காரணம் என்பதை அறியாததே இதற்குக் காரணம். இவர்கள் பின்வரும் இறைவசனங்களைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

“அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும். ஆகவே, தான் விரும்பியவற்றை அவன் படைக்கிறான். தான் விரும்புவோருக்கு பெண் மக்களை அளிக்கிறான் மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கிறான் அல்லது அவர்களுக்கு ஆண் மக்களையும் பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கிறான். அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் – நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன் பேராற்றலுடையவன்” (அல்குர்ஆன்: 42:49-50)

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.