நபி (ஸல்) அவர்களிடம் இல்லாத மூன்று விஷயங்கள் குறித்த ஆயிஷா (ரலி) அவர்களின் ஹதீஸை கூறுக.

 

கேள்வி எண்: 98. எந்த மூன்று விஷயங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தது என்று எவராவது கூறினால் அவர் பொய்யுரைத்து விட்டார் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.?

பதில்: மூன்று விஷயங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தது என்று எவராவது கூறினால் அவர் பொய்யுரைத்துவிட்டார் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.அந்த மூன்று விஷயங்களாவன: 

1) முஹம்மது (ஸல்) இறைவனைப் பார்த்தார் என்று கூறினால் அவர் பொய்யுரைத்துவிட்டார். 2) எவரேனும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நாளை நடப்பது (மறைவான விஷயம்) தெரியும் என்று கூறினால் அவர் பொய்யுரைத்துவிட்டார். 3) எவரேனும் இறைவனிடம் இருந்து வந்த வஹியில் சிலவற்றை நபி (ஸல்) அவர்கள் மறைத்து விட்டார் என்று கூறினால் அவர் பொய்யுரைத்து விட்டார். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி (பாகம்-6 : ஹதீஸ் 378)

சிறு விளக்கம்: இந்த ஹதீஸிலிருந்து நாம் முத்தான மூன்று விஷயங்களைத் தெரிந்துக் கொள்கிறோம். முதலாவது, நம்மவர்களில் சிலர் நினைத்துக் கொணடிருப்பதைப் போல் முஹம்மது (ஸல்) அவர்களோ, அல்லது வலிமார்கள் என்று சொல்லப்படக் கூடிய இறை நேசர்களோ அல்லது அபூ ஹனீபா (ரஹ்) போன்ற இமாம்களோ இறைவனைப் பார்த்ததில்லை. அவ்வாறு பார்த்ததாக சொல்லப்படும் கருத்துகள் எல்லாம் இந்த ஹதீஸிற்கும், 2:55,56 4:153 6:103 7:143 போன்ற இறைவசனத்திற்கும் மாற்றமாக இருப்பதால் அச்செய்திகள் எல்லாம் பொய்யானது என்பதை அறிய முடிகிறது.

இரண்டாவது, நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான செய்திகள் தெரியாது என்பதை விளங்கிக் கொள்ள வேணடும். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்ததைத் தவிர வேறு எதுவும் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாது. இதை அல்லாஹ்வே நபி (ஸல்) அவர்களைத் தமக்கு மறைவான விஷயங்கள் தெரியாது என்று கூறுமாறு திருமறையில் 6:50, 7:188 போன்ற வசனங்களில் கடடளையிட்டுள்ளான்.

மூன்றாவதாக, நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்த செய்திகளில் எதையாவது ஒன்றை மறைத்து விட்டார்கள், அல்லது அவர்கள் மறந்து விட்டார்கள் என்று எவரேனும் கூறினால் அவர் பொய்யராவார். இஸ்லாத்தில் ஸுஃபிகள் என்று சொல்லப்படக்கூடிய சில போலிகள் நபி (ஸல்) அவர்கள், சாதாரண மக்கள் யாருக்கும் தெரியாமல் மறைத்து, அலி (ரலி) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ்வை அடைவதற்குரிய? சில ஞான? இரகசியங்களைச் சொல்லி விடடுச் சென்றதாகவும், அந்த இரகசியங்கள் வம்சாவழி முலமாக இந்தப் போலி ஸுஃபிகளுக்கு மட்டும் வந்துக் கொண்டிருப்பதாகவும் சாதாரண பாமர மக்களை ஏமாற்றி, அவர்களின் உழைப்பில் தங்கள் வயிறுகளை வளர்த்து வருகிறார்கள்.

எனவே இந்த ஹதீஸின் முலமும் மற்றும் எராளமான ஹதீஸ்கள், குர்ஆன் வசனங்கள் மூலமும் ஸுஃபிகள், பீர்கள், செய்குமார்கள்,  ஞானிகள், குத்புமார்கள் என்று சொல்லிக் கொணடுத் திரியும் இவர்கள் எல்லாம் பொய்யர்களே என்பதை விளங்க முடியும். எல்லாம் அறிந்தவன் அல்லாஹ்வே.

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.