அல்லாஹ்வுடையவும், அவன் தூதருடையவும் சாபத்தைப் பெற்ற இவர்கள் யார்?

கேள்வி எண்: 77. ‘வட்டி வாங்கி புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்கு (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியோரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்’ என்றார்கள். ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெறும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் யார்? 

பதில்:  இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி)

சிறு விளக்கம்: இன்று நம் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் பெரும்பாவங்களில் வட்டியும் ஒன்று. நம்மில் சிலருக்கு வட்டி மட்டுமே குடும்ப வருவாயாக இருக்கும் அளவுக்கு வட்டியை சாதாரண ஒன்றாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மாதம் தவறாமல் வரும் வட்டிப்பணத்தில் குடும்பம் நடத்துபவர்களிடம் இப்படி வட்டிப்பணத்தில் சாப்பிடுகிறீர்களே இது பாவம் இல்லையா என்று நாம் கேட்போமேயானால் ‘நாங்கள் செய்த எங்களுடைய முதலீட்டுக்குக் கிடைக்கும் லாபத்தைத்தான் சாப்பிடுகிறோம்’ என்று கூறி வட்டியையும், வியாபாரத்தையும் ஒன்றாக ஆக்குகின்றனர். இவர்கள் வட்டி வாங்குவது பெரும் பாவம் என்றால் இவ்வாறு அவர்கள் கூறியது அதைவிட மிகப்பெரும் பாவமாகும். “வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறுபவர்களை அல்லாஹ் கடுமையாக குர்ஆனிலே எச்சரிக்கின்றான்.

“யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறு விதமாய்) எழமாட்டார்கள். இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான். ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்தபின் அதை விட்டும் விலகி விடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின்பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். அவர்கள் அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள்” (அல்குர்ஆன்: 2:275)

மறுமையில் சித்தம் கலங்கிய நிலையில் எழுப்ப வைத்து நிரந்தர நரகத்திற்குத் தள்ளக்கூடிய அளவிற்கு மிகக்கொடிய பாவமாகிய வட்டியை வாங்கி அதையே தன் வருமானமாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் கூறுவது என்னவென்றால், ‘நாங்கள் செய்த முதலீடு வட்டியின் மூலம் பெருகிக் கொண்டே செல்கின்றது. அதனால் எங்களுக்கு தொடர்ந்து இலாபம் கிடைத்துக் கொண்டிருக்கின்றது’ என்கின்றனர். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

“அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தானதர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை” (அல்குர்ஆன்: 2:276)

அல்லாஹ்வினால் பரக்கத் கிடைக்காத மலையளவு பொற்குவியலே இருந்து என்ன பயன்? ‘வட்டியின் மூலம் பார்ப்பதற்கு (செல்வங்கள்) அதிகரிப்பது போலத் தோன்றினாலும் முடிவில் மிகக் குறைந்து விடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அல்லாஹ்வின் பரக்கத்துடைய செல்வம் சிறிதளவு இருந்தாலும் அதன் மூலம் அபிவிருத்தியும், நிறைய பலன்களும் கிடைக்கும் அல்லவா? மேலும் ‘வட்டி வாங்குவதை வருமானமாக, தொழிலாகக் கொண்டிருப்பவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான் என்றும், அவர்களுடைய அமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்றும், (அவர்களுடைய அமல்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான் என்றும்)’ இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய அறிவிப்பின் மூலமாக எச்சரிக்கப்படுகின்றது.

“வட்டியினால் திரட்டப்படும் பொருளையும், அவ்வாறு பொருள் திரட்டுபவனையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். எனவே அப்பொருளின் அபிவிருத்தியைத் தடுத்து அதனை அழித்து விடுகிறான். அவ்வாறே அத்தொழில் புரிவோனின் தர்மத்தையும், ஹஜ்ஜையும், இதர நன்மைகளையும் அ(ல்லாஹ்)வன் ஏற்பதில்லை’ அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி).

நபி (ஸல்) அவர்கள் வட்டியில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் கடுமையாக எச்சரித்திருக்கிறார்களே.

* ‘வட்டி வாங்கி சாப்பிடுபவன்.

* வட்டி (ப் பணத்திலிருந்து மற்றவர்களை)யை சாப்பிட வைப்பவன்.

* வட்டிக்காக (கணக்கு) எழுதுபவன்.

* வட்டிக்காக சாட்சியம் கூறும் இருவர்.

ஆகிய இவர்கள் யாவரும் சபிக்கப்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் (வட்டிக்கான) குற்றத்தில் சமமானவர்கள்’ அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.

இந்த ஹதீஸ்கள் கூறும் எச்சரிக்கையைப் பற்றி நம் சகோதர, சகோதரிகள் நன்றாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள். பெரும் தொகையை “வைப்பு நிதியாக்கி” அதன் மூலம் மாதாந்திர வட்டியைப் பெற்று அதனையே தமது குடும்ப வருமானமாக்கி, தாம் அவற்றை சாப்பிடுவதோடு அல்லாமல் மற்றவர்களையும் சாப்பிட வைப்பவர்கள், தாங்கள் செய்யும் இச்செயல்களை சரிகாண்பதற்கு பல்வேறு காரணங்களைக் கூறுவர். அதில் ஒன்று எங்கள் முதலீட்டுக்கு அவர்கள் லாபம் தருகிறார்கள் என்பது. நமக்குத் தெரியாதா என்ன? அவர்கள் செய்வதே வட்டித் தொழில்தானே! நம்முடைய பணத்தை தேவையுள்ளவர்களுக்கு வட்டிக்கு கடனாகக் கொடுத்து, அவர்களிடமிருந்து வட்டியைப் பெற்றுதானே நமக்கு லாபம் தருகின்றனர். இதை வட்டி என்று கூறாமல் வேறு எப்படி கூறுவது? நம்மிடமிருந்து வைப்புத்தொகையைப் பெற்றவர்களே நமக்கு ‘வட்டி’ என்று கூறித்தானே அதிகப்படியான பணத்தைத் தருகின்றனர்.

வட்டி வாங்குவதை ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாகக் கூறிய நபி (ஸல்) அவர்கள் வட்டியின் தீமைகளைப் பற்றி விளக்கிக் கூறும்போது:

‘வட்டியின் மூலம் கிடைத்த ஒரு திர்ஹம் முப்பத்தி ஆறு விபச்சாரத்தை விட அல்லாஹ்விடம் மிகக் கொடுமையானது என்றும், ஒருவனுடைய மாமிசம், (அல்லாஹ்வால்) தடுக்கப்பட்ட ஒன்றின் (வட்டியின்) மூலம் வளர்ச்சியடைந்தால் அதற்கு நரகமே மிக ஏற்றதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி,) ஆதாரம்: தப்ரானி.

அல்லாஹ் கூறுகிறான்: “ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்” (அல்குர்ஆன்: 3:130)

“(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்” (அல்குர்ஆன்: 30:39)

“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்” (அல்குர்ஆன்: 2:278)

சகோதர, சகோதரிகளே! வட்டியைப் பற்றிய இறைவனின் தெளிவான நற்போதனைகள் வந்த பின்னரும் அதை விட்டு விலகாமல் இருப்பவர்கள் “நிரந்தரமாக நரகத்தில் இருப்பார்கள்” என்ற இறைவனின் வசனத்தை (2:275) நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.

1 Response to அல்லாஹ்வுடையவும், அவன் தூதருடையவும் சாபத்தைப் பெற்ற இவர்கள் யார்?

Comments are closed.