Feed on
Posts
Comments

3 – ஜிஹாத் ஏன்? எதற்கு?

ஆயிஷா(ரலி) அவர்களிடம் இருந்து அறிவிக்கப்படுகிறது: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் இல்லை. ஆயினும் ஜிஹாத்- இறைவழிப்போரும் நிய்யத் – தூய எண்ணமும் உண்டு. நீங்கள் புறப்பட வேண்டுமென அழைக்கப்பட்டால் புறப்படுங்கள்’ (புகாரி, முஸ்லிம்)

இமாம் நவவி(ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்: ‘இதன் பொருள் மக்கா நகரில் இருந்து ஹிஜ்ரத் செய்தல் கிடையாது என்பதே! ஏனெனில் அது இஸ்லாமிய நாடாக ஆகிவிட்டது’

தெளிவுரை

ஹிஜ்ரத் என்பது- முன்னர் குறிப்பிட்டது போன்று – இறை வழிகாட்டலுக்கு ஏற்ப வாழவும் அதன்பால் மக்களை அழைக்கவும் இடம் தராத நாட்டிலிருந்து வெளியேறி விடுவதாகும்.

நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றார்கள். எதனால்? அங்கு ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்யவும் இறை நெறியைப் பின்பற்றி வாழவும் மக்கத்து குறைஷிகள் அனுமதிக்கவில்லை. மேலும் அந்த மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட ஏழை எளிய முஸ்லிம்கள் மீது கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டார்கள்! ஒருகட்டத்தில் அது எல்லை மீறிப்போயிற்று! இதனால் நபியவர்கள் மக்காவை விட்டு வெளியேறி இஸ்லாத்தின் பாதுகாப்புக்கும் பிரச்சாரப் பணிக்கும் உத்திரவாதம் அளிக்க முன்வந்த திருமதீனாவில் குடியேறினார்கள்! நபித்தோழர்களும் சிறுகச்சிறுக மக்காவைத் துறந்து மதீனாவில் குடியேறிய வண்ணம் இருந்தார்கள்!

இந்த ஹிஜ்ரத் பயணம் பல ஆண்டுகள் தொடர்ந்தது!

மதீனா சென்ற மாநபி(ஸல்) அவர்கள் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மக்காவின் மீது போர் தொடுத்து அங்கே வெற்றிக் கொடி நாட்டினார்கள். சிலைவணக்கத்தின் ஆதிக்கத்திலிருந்த அந்நாட்டை மீட்டு ஓரிறைக் கொள்கை கோலோச்சும் புண்ணிய பூமியாய் மாற்றினார்கள். யுத்தமின்றி, ரத்தமின்றியே இந்தச் சாதனை நடந்தேறியது! இவ்வாறு புனித மக்காநகர் இஸ்லாமிய நாடாய் மலர்ந்த பிறகு அங்கிருந்து வெளியேறி வேறுநாடு செல்வதற்கு – ஹிஜ்ரத் செய்வதற்கு என்ன இருக்கிறது? எனவேதான் வெற்றிக்குப்பின் ஹிஜ்ரத் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். அதாவது, இனி யாரும் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வரவேண்டியதில்லை என்றார்கள்!

ஆகவே இது பொதுவான கட்டளை அல்ல. அதாவது, இனி எந்நச் சூழ்நிலையிலும் – எந்நாட்டிலிருந்தும் ஹிஜ்ரத் செய்ய வெண்டியதில்லை என்பதல்ல இதன் பொருள்., இமாம் நவவி (ரஹ்) அவர்கள் சென்னது போன்று-மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்தல் இல்லை என்பதே கருத்தாகும்.

தௌபா பாவமன்னிப்புக்கான அவகாசம் முடிவடையாதவரை ஹிஜ்ரத் முடிவடையாது. சூரியன் மேற்கிலிருந்து உதிக்காதவரை (அதாவது யுகமுடிவு நாள் வரையில்) பாவமன்னிப்பு முடிவடையாது என்று மற்றொரு நபிமொழி கூறுகிறது. தொடர்ந்து படிக்க »

முஸ்லிம் கணவர் தமது மனைவியுடன்

இஸ்லாமியப் பார்வையில் திருமணமும் மனைவியும்

இஸ்லாமியப் பார்வையில் திருமணம் என்பது ஆன்மாவிற்கு நிம்மதியையும், உள்ளத்திற்கு உற்சாகத்தையும், மனதிற்கு மகிழ்ச்சியையும், இதயத்திற்கு உறுதிப் பாட்டையும் ஏற்படுத்தக் கூடிய ஓர் உறவாகும். ஓர் ஆணும், பெண்ணும் அன்பு, நேசம், கருணை, ஒற்றுமை, புரிந்துணர்வு, உதவி, நலவை நாடுதல், விட்டுக் கொடுத்தல் போன்ற நற்பண்புகளுடன் இணைந்து வாழ வழி அமைப்பதாகும். இதன்மூலம் கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியான இல்லறத்தை ஏற்படுத்திக் கொள்ள சக்தி பெறுகிறார்கள். இப்படிப்பட்ட இல்லறத்தில் பிறக்கும் குழந்தைகள்தான் நிறைவு பெற்ற, பாதுகாக்கப்பட்ட இஸ்லாமியத் தலைமுறையாக உருவாகிறார்கள்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அமைந்த இந்த இயற்கையான, நிரந்தரமான தொடர்பை மிகத் துல்லியமாக வர்ணிக்கிறது அல்குர்ஆன். அந்த வர்ணிப்பில் மன நிம்மதி, பாதுகாப்பு மற்றும் ஆறுதலின் அழைப்புகள் பரவி நிற்கின்றன. கருணை, அன்பு மற்றும் புரிந்துணர்வின் நறுமணம் அங்கே கமழ்கிறது.

நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்தித்து உணரக்கூடிய மக்க ளுக்கு இவற்றில் (ஒன்றல்ல) நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அர்ரூம் 30:21)

திருமணம் என்பது ஆன்மாவை ஆன்மா வுடன் இணைக்கும் உறுதிமிக்க ஒரு பந்தமாகும். இதில் பாசத்துடன் கூடிய கருணை மற்றும் தூய்மையான அன்பு செழிப்புற்று விளங்குகின்றன. நேசமும் இதமும் மிக்க இந்த இல்லறத்தில் ஆண், பெண் இருவரும் மன நிம்மதி, மன மகிழ்ச்சி, மற்றும் பாதுகாப்பு எனும் அருட்கொடைகளை முழுமையாகப் பெறுகிறார்கள். இதற்காகத்தான் அல்லாஹ் இரு ஆன்மாக்களுக்குமிடையே திருமணப் பந்தத்தை ஏற்படுத்துகிறான்.

நல்ல பெண் இந்த உலக வாழ்வின் சிறந்த இன்பம் என்றும் ஓர் ஆணுக்கு அல்லாஹ் வழங்கும் மகத்தான அருட்கொடை அந்தப் பெண்ணே என்றும் இஸ்லாம் கூறுகிறது. ஏனென்றால், ஒரு கணவன் தன் வாழ்வில் துன்பங்களையும் சோதனைகளையும் சிரமங்களையும் சந்தித்த நிலையில் இல்லம் திரும்பும் போது, தன் மனைவியிடம்தான் நிம்மதியையும் மனஆறுதலையும் இன்பத்தையும் அடைகிறான். இந்த இன்பத்திற்கு இணையாக உலகில் வேறெந்த இன்பமும் இருக்க முடியாது.

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியது எவ்வளவு உண்மையாக உள்ளது!

”உலகம் அனைத்தும் இன்பமே. அதன் இன்பத்தில் மிகச் சிறந்தது நல்ல பெண். (ஸஹீஹ் முஸ்லிம்)

இப்படித்தான், திருமணம் அதன் உயர்ந்த, பிரகாசமிக்க தரத்தில் அமைய வேண்டும் என இஸ்லாம் கருதுகிறது. அவ்வாறே, பெண்ணையும் அவளது பெண்மையின் மிக உயர்ந்த தரத்தில் வைத்து இஸ்லாம் பார்க்கிறது. தொடர்ந்து படிக்க »

2 -  கஅபாவை இடிக்க வரும் கயவர் கூட்டம்!

உம்முல் முஃமினீன் ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெரும் படையொன்று கஅபாவுக்கு எதிராகப் போர் தொடுத்து வரும். அப்படையினர் பரந்து விரிந்த ஒரு மைதானத்தில் நிலை கொண்டிருக்கும் பொழுது அப்படையின் முதலாமவரும் இறுதியானவரும் -அனைவரும் பூமியினுள் விழுங்கப்பட்டு விடுவார்கள். அப்பொழுது நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாமவரும் இறுதியானவரும் – அனைவரும் பூமியினுள் எப்படி விழுங்கப் படுவார்கள்? அங்கே வியாபாரத்தில் ஈடுபட்டவர்களும் அந்தப் படையில் சேராத சாமானியர்களும் இருப்பார்களே என்று! அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்: அவர்களில் முதலாமவரும் இறுதியானவரும் – அனைவரும் பூமியினுள் விழுங்கப்படத்தான் செய்வார்கள். பின்னர் மறுமை நாளில் அவரவரின் நிய்யத் – எண்ணத்திற்கு ஏற்ப எழுப்பப்படுவார்கள்’ (நூல் : புகாரி, முஸ்லிம்)

தெளிவுரை

கஅபா என்பது திருமக்கா நகரிலுள்ள தொன்மையானதோர் இறையாலயம் ஆகும். மனிதர்கள் இறைவனை வழிபடுவதற்காக உலகில் முதன் முதலில் கட்டியெழுப்பப்பட்ட மஸ்ஜித் – பள்ளிவாசல் இதுவே! உலக முஸ்லிம்கள் அனைவரும் இதனை முன்னோக்கியே அல்லாஹ்வை தொழுது வருகிறார்கள். மேலும் ஆண்டு தோறும் இந்த ஆலயத்திற்கு நேரில் சென்று ஹஜ் எனும் புனிதக் கடமையை நிறைவேற்றுகிறார்கள். இத்தகைய சிறப்பு மிக்க இறையாலயத்தை இடித்துத் தகர்க்க இறுதிக் காலத்தில் ஒரு முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அது முறியடிக்கப்படுவதோடு அதை மேற்கொள்ளும் கயவர் கூட்டம் கடும் தண்டனைக்கு ஆளாக்கப்படும் என்றும் முன்னறிவிப்புச் செய்கிறது இந்நபிமொழி.

இந்த கஅபா ஆலயத்தை இப்ராஹீம் நபியவர்களும் அவர்களின் இன்னுயிர் மைந்தர் இஸ்மாயீல் நபி (அலை) அவர்களும் கட்டினார்கள். அவ்விருவரும் கஅபாவின் அடித்தளத்தில் சுற்றுச்சுவர் எழுப்பி முழுமையாகக்கட்டி முடித்தபொழுது இறைவனிடம் இவ்வாறு இறைஞ்சினார்கள்:

‘எங்கள் இறைவனே! எங்களுடைய இந்தப்பணியை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே எல்லாம் செவியுறுபவன்., எல்லாம் அறிபவன்’
(2:127) தொடர்ந்து படிக்க »

முன்மாதிரி முஸ்லிம் குடும்பம்

மூல நூல்: அஷ்ஷைக் முஹம்மது அலீ அல்ஹாஷிமி, தமிழில்: முஃப்தி அ. உமர் ஷரீஃப், வெளியிடு: தாருல் ஹுதா

பதிப்புரை

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! இறையருளும் ஈடேற்றமும் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள், நல்லோர் அனைவருக்கும் உண்டாகட்டும்.

இதற்கு முன்பு ‘முன்மாதிரி முஸ்லிம்’ என்ற நூலை ‘தாருல் ஹுதாவின்’ மூலமாக நாங்கள் வெளியிட்டிருந்தோம்.

அல்ஹம்துலில்லாஹ்… அந்நூலுக்கு மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பலர் அந்நூலைக் கொண்டு பெரிதும் பயன்பெற்று வருகின்றனர். முஸ்லிம்கள் மட்டுமின்றி மாற்று மத சகோதர சகோதரிகளும் அந்நூலைப் பெரிதும் விரும்பிப் படித்துப் பயன் பெறுகின்றனர்.

தமிழ்நாட்டு அரசாங்கம் அந்நூலின் 600 பிரதிகளை விலைக்கு வாங்கி தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசாங்க நூல் நிலையங்களிலும் வைத்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து ‘முன்மாதிரி முஸ்லிம் பெண்மணி’ என்ற நூலையும் தற்போது தமிழாக்கம் செய்து வருகிறோம்.

இதற்கிடையில் திருமணம் செய்யும் வாலிப சகோதர சகோதரிகளுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கும் வகையில் நல்ல ஒரு பரிசுப்புத்தகம் தேவை என்று நண்பர்கள் கருத்துக் கூறினர். அதற்கிணங்கவே ‘முன்மாதிரி முஸ்லிம் குடும்பம்’ என்ற இந்நூலை வெளியிடுகிறோம்.

இந்நூலில், கணவர் தமது மனைவியுடன் எப்படி அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்? தாம் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன? நல்ல இஸ்லாமியக் குடும்பத்தை எப்படி உருவாக்குவது? போன்ற விஷயங்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. தொடர்ந்து படிக்க »

1 – எண்ணம் போல் வாழ்வு

உமர் பின் கத்தாப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு அருளியதை நான் செவியுற்றிருக்கிறேன்: செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே உள்ளன. மனிதன் எதை எண்ணினானோ அதுவே அவனுக்குக் கிடைக்கும். எனவே ஒருவன் அல்லாஹ்வுக்காக அவனுடைய தூதருக்காக ஹிஜ்ரத் மேற்கொண்டால் அது அல்லாஹ்-ரஸூலுக்காக மேற்கொள்ளப்பட்டதாக அமையும். ஒருவன் உலக நன்மையை அடைவதற்காகவோ ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காகவோ ஹிஜ்ரத் மேற்கொண்டால் அவனது ஹிஜ்ரத் அது எந்நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டதோ அதற்காகவே அமையும். (புகாரி, முஸ்லிம்)

தெளிவுரை

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே உள்ளன.

மனிதன் எதை எண்ணினானோ அதுவே அவனுக்குக் கிடைக்கும்.

இந்த இரு வாக்கியங்கள் குறித்து நபிமொழி ஆய்வாளர்களிடையே பல கருத்துகள் நிலவுகின்றன. சிலர் கூறுவர்: இந்த இரண்டு வாக்கியங்களும் ஒரே பொருள் கொண்டவை. முதல் வாக்கியத்தின் பொருளையே இரண்டாம் வாக்கியமும் வலியுறுத்திக் கூறுகிறது!

இந்தக் கருத்து சரியானதல்ல. இரண்டாவது வாக்கியம் புதியதொரு கருத்தைக் கொடுப்பதே தவிர முந்தைய வாக்கியத்தின் கருத்தையே மீண்டும் கூறுவதல்ல.

சற்று ஆழமாகச் சிந்தித்தால் இவ்விரண்டு வாக்கியங்களுக்கிடையே பெருத்த வேறுபாடு இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.

முதல் வாக்கியம் காரண அடிப்படையிலானது.

இரண்டாம் வாக்கியம் விளைவாய் வருவது.

முதல் வாக்கியத்தில் ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எண்ணம் இருப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. மனிதன் செயல் சுதந்திரம் உடையவன். எனவே அவனுடைய செயல்களின் பின்னணியில் எண்ணம் இருக்கத்தான் செய்யும். அறிவும் சுதந்திரமும் உள்ள எந்த மனிதனின் செயலும் எண்ணமின்றி அமையாது. அப்படி அமைவது இயலாத ஒன்று!

அறிஞர் சிலர் கூறியதைக் கவனியுங்கள்: ‘எண்ணுதல் இன்றி அமல் செய்யுமாறு அல்லாஹ் நம்மைப் பணித்திருந்தால் அது நம்மால் முடியாது. நமது சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றை அல்லாஹ் நம் மீது சுமத்தியதாக ஆகிவிடும்’

- இந்தக் கருத்து முற்றிலும் சரியானது. நீங்கள் அறிவும் சுதந்திரமும் பெற்றிருந்து எவருடைய நிர்பந்தமும் இல்லா நிலையில் ஒரு செயலைச் செய்யும் பொழுது எந்த ஓர் எண்ணமும் இல்லாமல் எப்படிச் செயல்படுவீர்கள்? அது நடைமுறைக்கு இயலாதது. நாட்டம் மற்றும் ஆற்றலில் இருந்து பிறப்பதே செயல். நாட்டமே எண்ணம் என்பது!

இப்பொழுது பாருங்கள். முதல் வாக்கியம் ஒரு செயலைச் செய்பவருக்கு ஓர் எண்ணம் இருப்பது அவசியம் எனும் பொருளைத் தருகிறது.

- இங்கு இன்னொன்றை அறிந்து கொள்வது பயன்மிக்கது. அதாவது, எண்ணங்கள் பலவிதமாய் உள்ளன. ஓர் எண்ணத்திற்கும் மற்றோர் எண்ணத்திற்கும் வானம், பூமி அளவு வேறுபாடு உள்ளது.

சிலரின் எண்ணம் நல்லதாக இருக்கும். அவர்களுடைய அமல்களில் மேலான-உன்னதமான குறிக்கோள் இருக்கும். வேறு சிலரின் எண்ணம் கீழ்த்தரமானதாய் இருக்கும். மட்டரகமான – கெட்ட நோக்கமே அவர்களின் உள்ளத்தில் ஒளிந்திருக்கும்.

நீங்கள் இரண்டு மனிதர்களைப் பார்க்கலாம்! இருவரும் ஒரே செயலைத் தான் செய்வார்கள். அதன் தொடக்கம் – முடிவு, அமைதி, அசைவு எனும் அனைத்து அம்சங்களிலும் இருவரும் ஒன்று போல் தெரிவார்கள்! ஆனால் அவ்விருவருக்கும் வானம் – பூமி அளவு வித்தியாசம்! ஏன்? எண்ணத்தின் வேறு பாட்டினால்தான்!

-ஆக, எண்ணமின்றி எந்த ஒருசெயலும் இல்லை என்பது ஓர்அடிப்படை அம்சமாகும். தொடர்ந்து படிக்க »