3 – ஜிஹாத் ஏன்? எதற்கு?
ஆயிஷா(ரலி) அவர்களிடம் இருந்து அறிவிக்கப்படுகிறது: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் இல்லை. ஆயினும் ஜிஹாத்- இறைவழிப்போரும் நிய்யத் – தூய எண்ணமும் உண்டு. நீங்கள் புறப்பட வேண்டுமென அழைக்கப்பட்டால் புறப்படுங்கள்’ (புகாரி, முஸ்லிம்)
இமாம் நவவி(ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்: ‘இதன் பொருள் மக்கா நகரில் இருந்து ஹிஜ்ரத் செய்தல் கிடையாது என்பதே! ஏனெனில் அது இஸ்லாமிய நாடாக ஆகிவிட்டது’
தெளிவுரை
ஹிஜ்ரத் என்பது- முன்னர் குறிப்பிட்டது போன்று – இறை வழிகாட்டலுக்கு ஏற்ப வாழவும் அதன்பால் மக்களை அழைக்கவும் இடம் தராத நாட்டிலிருந்து வெளியேறி விடுவதாகும்.
நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றார்கள். எதனால்? அங்கு ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்யவும் இறை நெறியைப் பின்பற்றி வாழவும் மக்கத்து குறைஷிகள் அனுமதிக்கவில்லை. மேலும் அந்த மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட ஏழை எளிய முஸ்லிம்கள் மீது கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டார்கள்! ஒருகட்டத்தில் அது எல்லை மீறிப்போயிற்று! இதனால் நபியவர்கள் மக்காவை விட்டு வெளியேறி இஸ்லாத்தின் பாதுகாப்புக்கும் பிரச்சாரப் பணிக்கும் உத்திரவாதம் அளிக்க முன்வந்த திருமதீனாவில் குடியேறினார்கள்! நபித்தோழர்களும் சிறுகச்சிறுக மக்காவைத் துறந்து மதீனாவில் குடியேறிய வண்ணம் இருந்தார்கள்!
இந்த ஹிஜ்ரத் பயணம் பல ஆண்டுகள் தொடர்ந்தது!
மதீனா சென்ற மாநபி(ஸல்) அவர்கள் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மக்காவின் மீது போர் தொடுத்து அங்கே வெற்றிக் கொடி நாட்டினார்கள். சிலைவணக்கத்தின் ஆதிக்கத்திலிருந்த அந்நாட்டை மீட்டு ஓரிறைக் கொள்கை கோலோச்சும் புண்ணிய பூமியாய் மாற்றினார்கள். யுத்தமின்றி, ரத்தமின்றியே இந்தச் சாதனை நடந்தேறியது! இவ்வாறு புனித மக்காநகர் இஸ்லாமிய நாடாய் மலர்ந்த பிறகு அங்கிருந்து வெளியேறி வேறுநாடு செல்வதற்கு – ஹிஜ்ரத் செய்வதற்கு என்ன இருக்கிறது? எனவேதான் வெற்றிக்குப்பின் ஹிஜ்ரத் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். அதாவது, இனி யாரும் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வரவேண்டியதில்லை என்றார்கள்!
ஆகவே இது பொதுவான கட்டளை அல்ல. அதாவது, இனி எந்நச் சூழ்நிலையிலும் – எந்நாட்டிலிருந்தும் ஹிஜ்ரத் செய்ய வெண்டியதில்லை என்பதல்ல இதன் பொருள்., இமாம் நவவி (ரஹ்) அவர்கள் சென்னது போன்று-மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்தல் இல்லை என்பதே கருத்தாகும்.
தௌபா பாவமன்னிப்புக்கான அவகாசம் முடிவடையாதவரை ஹிஜ்ரத் முடிவடையாது. சூரியன் மேற்கிலிருந்து உதிக்காதவரை (அதாவது யுகமுடிவு நாள் வரையில்) பாவமன்னிப்பு முடிவடையாது என்று மற்றொரு நபிமொழி கூறுகிறது. தொடர்ந்து படிக்க »