6. மரண சாஸனமும் வாரிசுகளின் உரிமையும்
ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் (சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட பத்துப்பேரில் ஒருவர்) அறிவிக்கிறார்கள்: இறுதி ஹஜ்ஜின் ஆண்டில் எனக்குக் கடுமையான நோய் ஏற்பட்டிருந்த காரணத்தால் நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அப்பொழுது நான் கேட்டேன்:
அல்லாஹ்வின் தூதரே! நான் எந்த அளவுக்கு நோய்வாப்பட்டிருக்கிறேன் என்பதை நீங்களே பார்க்கிறீர்கள். நான் சொத்துசுகம் உடையவன். ஒரே ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுகள் எனக்கு இல்லை. எனவே எனது சொத்தில் மூன்றில் இரண்டு பகுதியை நான் தர்மம் செய்துவிடட்டுமா?
இதற்கு நபி(ஸல்)அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள்.
‘அல்லாஹ்வின் தூதரே! பாதியை?
‘ வேண்டாம்”
‘ அல்லாஹ்வின் தூதரே! மூன்றில் ஒரு பங்கினை? ”
மூன்றில் ஒரு பாகத்தை வேண்டுமானால் தர்மம் செய்யும். மூன்றில் ஒருபாகம்கூட அதிகம் (அல்லது கூடுதல்)தான். நிச்சயமாக நீர் உம் வாரிசுகளைச் செல்வந்தர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. மக்களிடம் கை நீட்டிக் கேட்கும் வகையில் ஏழைகளாக விட்டுச் செல்வதைவிட! நீர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி எது ஒன்றைத் தர்மம் செய்தாலும் அதன் பொருட்டு உமக்கு நற்கூலி வழங்கப்படாமல் போகாது! உம்முடைய மனைவியின் வாயில் நீர் ஊட்டுகிற உணவு-பானத்திற்குக்கூட (நற்கூலி உண்டு) ”
நான் கேட்டேன்: ‘அல்லாஹ்வின் தூதரே!என் தோழர்களெல்லாம் மதீனா திரும்பிச் செல்ல நான் இங்கே தங்க விடப்படுவேனா? ”
அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீர் தங்கிட வேண்டியது வராது. அப்படி நீர் தங்கியிருந்து – அப்போது அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி நீர் எந்த அமல் செய்தாலும் அதன் பொருட்டு ஒரு சிறப்பும் ஓர் அந்தஸ்தும் உமக்கு உயர்த்தப்படாமல் போகாது”
மேலும் நபியவர்கள் சொன்னார்கள்: ‘ஆனால் உமக்கு நீண்ட ஆயுள் அளிக்கப்படலாம்., உம்மின் மூலம் நிறையப்பேர் பயன் அடையும் வகையிலும் மேலும் பலபேர் உம்மின் மூலம் நஷ்டம் அடையும் வகையிலும்! (அது அமையலாம்)- யா அல்லாஹ்! என் தோழர்களுக்கு அவர்களின் ஹிஜ்ரத்தை செல்லுபடியாக்குவாயாக! அவர்களை – அவர்களின் பழைய நிலைக்குத் திருப்பி விடாதே!- ஆனால் துயரத்திற்குள்ளானவர் ஸஅத் இப்னு கௌலா என்பவர்தான்! ”- அவர் நோய்வாய்ப்பட்டு மக்காவிலேயே மரணம் அடைந்தது குறித்து நபி(ஸல்)அவர்கள் மனம் வருந்தினார்கள்’ (நூல்: புகாரி, முஸ்லிம்)
தெளிவுரை
புகழ்பெற்ற நபித்தோழரான ஸஅத்பின்அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் மக்காவைச் சேர்ந்தவர். பிறந்த பூமியான மக்கத் திருநகரை – அல்லாஹ்வுக்காகவும் ரஸூலுக்காகவும் துறந்து ஹிஜ்ரத் மேற்கொண்டு மதீனாவில் குடியேறியவர். சுவனவாசி என்று உலகிலேயே நபியவர்களால் நற்செய்தி சொல்லப்பட்டவர்! இவையே, அன்னாரின் சிறப்புக்கும் உயர்வுக்கும் தெளிவான சான்றுகளாகும்.
ஹிஜ்ரீ 10 ஆம் ஆண்டு ஹஜ்ஜை நிறைவேற்ற வந்த நபி(ஸல்) அவர்களுடன் ஸஅத் (ரலி) அவர்களும் மக்கா மாநகர் வந்திருந்தார்கள். ஹஜ்ஜுக்குப் பிறகு கடுமையான பிணிக்குள்ளான ஸஅத் அவர்களை நலம் விசாரிக்க வந்தார்கள் நபியவர்கள். !
நற்குணத்தின் முன்மாதிரியாக விளங்கிய நபியவர்கள் தம் தோழர்களுடன் அன்பாய்ப் பழகும் பண்புள்ளவர்கள். அதிலும் குறிப்பாக பிணியுற்றவர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்கள். தொடர்ந்து படிக்க »