Feed on
Posts
Comments

6. மரண சாஸனமும் வாரிசுகளின் உரிமையும்

ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் (சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட பத்துப்பேரில் ஒருவர்) அறிவிக்கிறார்கள்: இறுதி ஹஜ்ஜின் ஆண்டில் எனக்குக் கடுமையான நோய் ஏற்பட்டிருந்த காரணத்தால் நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அப்பொழுது நான் கேட்டேன்:

அல்லாஹ்வின் தூதரே! நான் எந்த அளவுக்கு நோய்வாப்பட்டிருக்கிறேன் என்பதை நீங்களே பார்க்கிறீர்கள். நான் சொத்துசுகம் உடையவன். ஒரே ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுகள் எனக்கு இல்லை. எனவே எனது சொத்தில் மூன்றில் இரண்டு பகுதியை நான் தர்மம் செய்துவிடட்டுமா?

இதற்கு நபி(ஸல்)அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள்.

‘அல்லாஹ்வின் தூதரே! பாதியை?

‘ வேண்டாம்”

‘ அல்லாஹ்வின் தூதரே! மூன்றில் ஒரு பங்கினை? ”

மூன்றில் ஒரு பாகத்தை வேண்டுமானால் தர்மம் செய்யும். மூன்றில் ஒருபாகம்கூட அதிகம் (அல்லது கூடுதல்)தான். நிச்சயமாக நீர் உம் வாரிசுகளைச் செல்வந்தர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. மக்களிடம் கை நீட்டிக் கேட்கும் வகையில் ஏழைகளாக விட்டுச் செல்வதைவிட! நீர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி எது ஒன்றைத் தர்மம் செய்தாலும் அதன் பொருட்டு உமக்கு நற்கூலி வழங்கப்படாமல் போகாது! உம்முடைய மனைவியின் வாயில் நீர் ஊட்டுகிற உணவு-பானத்திற்குக்கூட (நற்கூலி உண்டு) ”

நான் கேட்டேன்: ‘அல்லாஹ்வின் தூதரே!என் தோழர்களெல்லாம் மதீனா திரும்பிச் செல்ல நான் இங்கே தங்க விடப்படுவேனா? ”

அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீர் தங்கிட வேண்டியது வராது. அப்படி நீர் தங்கியிருந்து – அப்போது அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி நீர் எந்த அமல் செய்தாலும் அதன் பொருட்டு ஒரு சிறப்பும் ஓர் அந்தஸ்தும் உமக்கு உயர்த்தப்படாமல் போகாது”

மேலும் நபியவர்கள் சொன்னார்கள்: ‘ஆனால் உமக்கு நீண்ட ஆயுள் அளிக்கப்படலாம்., உம்மின் மூலம் நிறையப்பேர் பயன் அடையும் வகையிலும் மேலும் பலபேர் உம்மின் மூலம் நஷ்டம் அடையும் வகையிலும்! (அது அமையலாம்)- யா அல்லாஹ்! என் தோழர்களுக்கு அவர்களின் ஹிஜ்ரத்தை செல்லுபடியாக்குவாயாக! அவர்களை – அவர்களின் பழைய நிலைக்குத் திருப்பி விடாதே!- ஆனால் துயரத்திற்குள்ளானவர் ஸஅத் இப்னு கௌலா என்பவர்தான்! ”- அவர் நோய்வாய்ப்பட்டு மக்காவிலேயே மரணம் அடைந்தது குறித்து நபி(ஸல்)அவர்கள் மனம் வருந்தினார்கள்’ (நூல்: புகாரி, முஸ்லிம்)

தெளிவுரை

புகழ்பெற்ற நபித்தோழரான ஸஅத்பின்அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் மக்காவைச் சேர்ந்தவர். பிறந்த பூமியான மக்கத் திருநகரை – அல்லாஹ்வுக்காகவும் ரஸூலுக்காகவும் துறந்து ஹிஜ்ரத் மேற்கொண்டு மதீனாவில் குடியேறியவர். சுவனவாசி என்று உலகிலேயே நபியவர்களால் நற்செய்தி சொல்லப்பட்டவர்! இவையே, அன்னாரின் சிறப்புக்கும் உயர்வுக்கும் தெளிவான சான்றுகளாகும்.

ஹிஜ்ரீ 10 ஆம் ஆண்டு ஹஜ்ஜை நிறைவேற்ற வந்த நபி(ஸல்) அவர்களுடன் ஸஅத் (ரலி) அவர்களும் மக்கா மாநகர் வந்திருந்தார்கள். ஹஜ்ஜுக்குப் பிறகு கடுமையான பிணிக்குள்ளான ஸஅத் அவர்களை நலம் விசாரிக்க வந்தார்கள் நபியவர்கள். !

நற்குணத்தின் முன்மாதிரியாக விளங்கிய நபியவர்கள் தம் தோழர்களுடன் அன்பாய்ப் பழகும் பண்புள்ளவர்கள். அதிலும் குறிப்பாக பிணியுற்றவர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்கள். தொடர்ந்து படிக்க »

  • அவனைத் தவிர மற்ற அனைத்தும் அழியக் கூடியவையே! (28:88)
  • எவருடைய பார்வையும் அவனை அடையாது; அவனோ யாவற்றையும் பார்க்கின்றான்!
  • அவனைப் போன்று வேறு எதுவும் இல்லை. (42:11)
  • அவன் எவ்வகையிலும் பிறப்பெடுப்பதில்லை. வேறு பொருளுடன் கலந்து விடுவதில்லை; இணைவதில்லை. (5:17) தொடர்ந்து படிக்க »

முஸ்லிம் பெண்மணி தமது கணவருடன்

இஸ்லாமியப் பார்வையில் திருமணம்

இஸ்லாமியப் பார்வையில் திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுகிற அருள் வளமிக்க ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலமாகவே, இருவரில் ஒருவர் மற்றவருக்கு ஆகுமானவராக ஆகிறார்.

இது மட்டுமின்றி, இதன் வழியாகத்தான், இருவரும் ஒரு நீண்ட வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகின்றனர்.

இந்தப் பயணத்தின் மத்தியில் இருவரும் தங்களுக்குள் நேசம் கொண்டவர்களாகவும், அன்பு கொண்டவர்களாகவும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வு உள்ளவர்களாகவும், உதவி ஒத்தாசை செய்பவர்களாகவும் இருக்கின்றனர். மேலும், இந்தத் திருமண ஒப்பந்தத்தின் வாயிலாக, ஒருவர் மற்றவரைக் கொண்டு நிம்மதியையும் அமைதியையும் பெறுகிறார். ஒருவர் மற்றவரது தோழமையில் வாழ்வின் சுபிட்சத்தையும், சுவையையும், பாதுகாப்பையும், மனமகிழ்ச்சியையும், திருப்தி உணர்வையும் அடைந்து கொள்கிறார்.

அல்லாஹ்வின் சங்கைமிகு நூலாம் அல்குர்ஆன், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுகிற இந்த சட்டரீதியான ஒப்பந்தத்தை அழகிய முறையில் விளக்கிச் சொல்கிறது.

அன்பு, பாசம், நெருக்கம், உறுதி, புரிந்துணர்வு, இரக்கம் ஆகிய அனைத்தும் இந்த ஒப்பந்தத்தில் பரந்து காணப்படுகின்றன. இதனால்தான் இந்தத் திருமணத்திலே நற்பாக்கியம், ஈடேற்றம், வாழ்க்கையில் வெற்றி போன்ற நறுமணங்கள் வீசுகின்றன.

அல்லாஹ் கூறுகிறான்:

நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு இவற்றில் (ஒன்றல்ல) நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அர்ரூம் 30:21)

இந்தத் திருமண ஒப்பந்தம், மிக உறுதி மிக்க அடிப்படையில் கண்ணியமிக்க இறைவனால் ஏற்படுத்தப்படுகிற ஒப்பந்தமாகும். ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் நன்மையை நாடிக் கொள்வதற்காக இதில் சந்திக்கிறார்கள். இருவரும் தங்களுக்கிடையே இறையச்சம் கொண்ட இஸ்லாமியக் குடும்பத்தை நிர்மாணிக்கிறார்கள். இங்குதான் இஸ்லாமியக் குழந்தை வளர்கிறது. அதன் அறிவு வளர்கிறது. அதன் ஆன்மா, இஸ்லாமியப் பண்பாட்டிலே வார்த்தெடுக்கப்படுகிறது. தொடர்ந்து படிக்க »

5 -  சொந்த மகனுக்கு ஜகாத் கொடுக்கலாமா?

மஅன் பின் யஜீத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (இவருடைய தந்தையும் பாட்டனாரும் நபித்தோழர்களாவர்) என் தந்தை யஜீத் (ரலி) அவர்கள் சில தங்க நாணயங்களைத் தர்மம் செய்வதாக எடுத்துச் சென்று பள்ளிவாசலில் இருந்த ஒரு மனிதரிடம் (யாராவது தேவையுடையோருக்கு வழங்குமாறு) கொடுத்து வைத்தார். நான் சென்று அவற்றை வாங்கிக் கொண்டேன். அந்தத் தங்க நாணயங்களுடன் என் தந்தையிடம் வந்தேன். அவரோ அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உனக்கென நினைக்கவில்லையே! என்றார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இந்தப் பிரச்சனையைக் கொண்டு சென்றேன். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: யஜீதே! நீ நினைத்தது உனக்கு. மஅனே! நீ பெற்றுக் கொண்டது உனக்கு. (நூல்: புகாரி)

தெளிவுரை

இந்த நபிமொழி சுவையானதும் சிந்தனைக்குரியதுமான நிகழ்ச்சி ஒன்றை எடுத்துரைக்கிறது.

நபித்தோழராகிய யஜீத் சில தங்க நாணயங்களை எடுத்துக் கொண்டு தர்மம் செய்வதற்காக பள்ளிவாசல் சென்றபோது அங்கு ஏழைகள் யாரும் இல்லை. அங்கே அமர்ந்திருந்த ஒருவரிடம் சென்று யாராவது ஏழை எளியவர் வந்தால் அவருக்கு என் சார்பாக இவற்றை வழங்கவும் என்று சொல்லிக் கொடுத்து விட்டு வந்தார்.

சற்று நேரத்தில் அவருடைய மகனாரின் கையிலேயே அந்தத் தர்மம் வந்து சேர்ந்தது. அது எப்படி? தொடர்ந்து படிக்க »

4 – நல்லெண்ணமும் நற்கூலியும்

ஜாபிர் பின் அப்துல்லாஹ் அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போருக்காகச் சென்றிருந்தோம். நபியவர்கள் கூறினார்கள்: சிலபேர் (நம்முடன் புறப்பட இயலாமல்) மதீனாவில் உள்ளனர். நீங்கள் எந்த ஒரு பாதையில் நடந்தாலும் எந்த ஓர் ஓடையைக் கடந்தாலும் அவர்கள் உங்களுடன் இல்லாமல் இல்லை. நோய் அவர்களைத் தடுத்து விட்டது, – மற்றோர் அறிவிப்பில்: கூலியில் உங்களுடன் அவர்கள் கூட்டாகாமல் இல்லை’ என உள்ளது.

இமாம் புகாரி (ரஹ்)அவர்கள் பதிவு செய்துள்ள அனஸ்(ரலி) அவர்களின் அறிவிப்பில், ‘நாங்கள் தபூக் யுத்தத்திலிருந்து நபி(ஸல்) அவர்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்தோம். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கொஞ்சம் பேர் நம்முடன் வர இயலாமல் மதீனாவில் உள்ளனர். அவர்களும் நம்முடன் உள்ள நிலையிலேயே தவிர நாம் எந்த ஒரு கணவாயிலும் எந்த ஓர் ஓடையிலும் நடந்து செல்வதில்லை. அவர்களைத் தக்க காரணம் தடுத்து விட்டது’

தெளிவுரை

ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு நபி(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் ரோமானியர்களை எதிர்த்துப் போர் புரிவதற்காகப் புறப்பட்டிருந்தார்கள். இதற்கு தபூக் யுத்தம் என்று பெயர். நோய், முதுமை போன்ற காரணத்தாலும் வாகன வசதியின்மையாலும் முஸ்லிம்கள் சிலர் மதீனாவிலேயே தங்கி விட்டனர். ஆனால் அவர்களின் உள்ளத்தில் வாய்மை இருந்தது. அதிமுக்கியமான இந்தப் போரில் நம்மால் பங்கேற்க முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது! ஆரம்பத்தில் பலர் நபியவர்களின் சமூகம் வந்து-போருக்குப் புறப்படுவதற்காக, இரவலாக வாகனம் தந்து உதவுமாறு வேண்டி நின்றனர். சிலருக்குத்தான் நபியவர்களால் வாகனம் வழங்க முடிந்தது. வாகனம் கிடைக்காதவர்களோ அழுதுகொண்டே திரும்பிச் சென்றார்கள். இத்தகைய வாய்மையான முஸ்லிம்களை நினைவுகூர்ந்தே நபி(ஸல்)அவர்கள் இவ்வாறு கூறினார்கள். தபூக்கில் இருந்து திரும்பும் வழியில்!

இந்த நபிமொழியின் கருத்து இதுதான்: ஒரு மனிதன் நல்ல அமல் ஒன்றை-பணியைச் செய்ய வேண்டுமென நாடினான். பிறகு ஏதேனும் தடை ஏற்பட்டு அதைச் செய்ய இயலவில்லை என்றால் அதற்கான கூலி அவனுக்கு உண்டு. அதாவது, ஒரு நல்ல பணியைச் செய்திட நிய்யத் – எண்ணம் வைத்தான் எனும் வகையில் அவன் பெயரில் நற்கூலி பதிவு செய்யப்படும்.

ஆனால் முன்னரே அந்த அமலை செய்து வருவது அவனுக்கு வழக்கமாக இருந்து-அதைச் செய்ய இயலாவண்ணம் தற்போது தடை ஏற்பட்டு விட்டது என்றால் அந்த அமலைச் செய்ததற்கான முழுக் கூலியுமே அவனுக்குக் கிடைக்கும்.

ஏனெனில் மற்றொரு தடவை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஓர் அடியான் நோயுற்று விட்டாலோ பயணம் புறப்பட்டு விட்டாலோ – முன்னர் ஆரோக்கியமாக ஊரில் தங்கியிருந்த பொழுது அவன் செய்து வந்த அமல்களின் கூலி அவன் பெயரில் எழுதப்படும்’ (நூல்: புகாரி) தொடர்ந்து படிக்க »