Feed on
Posts
Comments

5:116. இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே (ஏசு நாதர்) ‘அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்’ என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் (தீர்ப்பு நாளில்) கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறி இருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலுள்ளதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றை எல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.

5:117. “நீ எனக்கு கட்டளை இட்டப்படி (மனிதர்களை நோக்கி), ‘என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களுக்கு கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (என்றும்);

5:118. “(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீதான் (யாவரையும்) மிகைத்தோனாகவும், ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்” (என்றும் கூறுவார்).

5:119. அப்போது அல்லாஹ், ” இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும்; கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் – இது மகத்தான பெரும் வெற்றியாகும்.

5:120. வானங்களுடையவும், பூமியுனுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவனே எல்லாப் பொருட்கள் மீது பேராற்றலுடையோன் ஆவான்.

அல் குர்ஆன்: சூரா அல் மாயிதா (உணவுத் தட்டு)

20:124. “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம (தீர்ப்பு) நாளில் குருடனாகவே எழுப்புவோம்”

20:125. (அப்போது அவன்) “என் இறைவனே! நான் (உலக வாழ்வில்) பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான்.



20:126. (அதற்கு இறைவன்) “இவ்விதம் தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உம்மிடம் வந்தன; அவற்றை நீ மறந்து விட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்” என்று (அல்லாஹ்) கூறுவான்.

20:127. ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், வரம்பு மீறி நடக்கிறானோ அவனுக்கு இவ்வாறு தான் நாம் கூலி கொடுப்போம்; மேலும் மறுமையின் (தீர்ப்பு நாளின்) வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும்.

20:128. இவர்களுக்கு முன் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பது அவர்களுக்கு (ப் படிப்பினையைத் தந்து) நேர் வழி காட்டவில்லையா? (அழிந்து போன) அவர்கள் குடியிருந்த இடங்களில் தானே இவர்கள் நடக்கிறார்கள்; நிச்சயமாக அதில் அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன. அல் குர்ஆன்: சூரா; தாஹா

6:162. (நபியே) (தூதரே) நீர் கூறும்: என்னுடைய

தொழுகையும், (வணக்க வழிபாடு) என்னுடைய குர்பானியும்,

(அறுத்து பலியிடுதல்) என்னுடைய வாழ்வும், என்னுடைய

மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய

அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.

6:163. “அவனுக்கு யாதோர் இணையுமில்லை – இதைக்

கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் – (அவனுக்கு)

வழிப்பட்டவர்களில் – முஸ்லிம்களில் – நான்

முதன்மையானவன் (என்றும் கூறும்)

6:164. அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான்

இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப்

பொருட்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் -

பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே கேட்டை

தேடிக் கொள்கிறது; ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை

மற்றோர் ஆத்மா சுமக்காது.
பின்னர் நீங்கள் (அனைவரும்)

உங்கள் இறைவன் பக்கமே திரும்பி செல்ல

வேண்டியதிருக்கிறது; அப்போது நீங்கள் பிணங்கி விவாதம்

செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு

அறிவிப்பான் என்று (நபியே) நீர் கூறும்.

6:165. அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக

ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில்

உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரை சிலரை

விடப் பதவிகளில் உயர்த்தினான் – நிச்சயமாக உம்

இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன்

நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடையவன்.

அல் குர்ஆன்: அல் அன்ஆம்(கால்நடைகள்)

6:95. நிச்சயமாக அல்லாஹ்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான்; இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்; அவனே உங்கள் அல்லாஹ் – எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?

6:96. அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதி பெற அவனே இரவையும், காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் – இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும்.

6:97. அவனே உங்களுக்காக நட்சத்திரங்களை உண்டாக்கினான்; அவற்றைக் கொண்டு நீங்கள் கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் வழியறிந்து செல்கிறீர்கள் – அறியக் கூடிய மக்களூக்கு நிச்சயமாக (நம்) வசனங்களை இவவாறு விவரிக்கிறோம்.

6:98. உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, ( பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.

6:99. அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்; அதிலிருந்து நாம் வித்துக்களை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம்; பேரித்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக் குலைகளும் இருக்கின்றன; திராட்சை தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்); அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக – ஈமான் (நம்பிக்கை) கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன. அல் குர்ஆன்: சூரா அல் அன்ஆம் (கால்நடைகள்)

6:141. பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படா செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும் அவனே (அல்லாஹ்) படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குறிய (கடமையான) பாகத்தைக் (ஏழைகளுக்கு) கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள் – நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.

6:145. (நபியே) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” – ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் – (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) – ஆனால் எவரேனும் நிர்பந்திக்கப்பட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்து விட்டால் – (அவர் மீது குற்றமாகாது; ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

அல் குர்ஆன்: சூரா அன்ஆம் (கால்நடைகள்)