Feed on
Posts
Comments

33:1. நபியே! அல்லாஹ்வையே அஞ்சுவீராக! காஃபிர்களுக்கும், (நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கும்) முனாஃபிக்களுக்கும் (நயவஞ்சகர்களுக்கும்) கீழ்ப்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிபவன், ஞானமிக்கவன்.

33:2. இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

33:3. (நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக; அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்.

33:4. எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை – உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் ளிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய சுவிகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.

33:5. (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர்களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் – அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.

33:6. இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். (ஒரு முஃமினின் சொத்தை அடைவதற்கு) மற்ற முஃமின்களை விடவும், (தீனுக்காக நாடு துறந்த) முஹாஜிர்களை விடவும் சொந்த பந்துக்களே சிலரைவிட சிலர் நெருங்கிய(பாத்தியதையுடைய)வர்களாவார்கள்; இதுதான் அல்லாஹ்வின் வேதத்திலுள்ளது; என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் (முறைப்படி செய்யலாம்) இது வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்.

33:7. (நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹூ, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.

33:8. எனவே உண்மையாளர்களாகிய (அத்தூதர்களிடம்) அவர்கள் (எடுத்துக் கூறிய தூதின்) உண்மையைப் பற்றி அல்லாஹ் கேட்பான்; (அவர்களை நிராகரித்த) காஃபிர்களுக்கு அல்லாஹ் நோவினை தரும் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான்.

அல் குர்ஆன்: அல் அஹ்ஜாப் (சதிகார அணியினர்)

6:91. இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை; ஏனெனில் அவர்கள், “அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எ(ந்த வேதத்)தையும் இறக்கவில்லை” என்று கூறுகின்றனர்; அவர்களிடத்தில் நீர் கூறும்: “பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மூஸா (மோஸே) கொண்டு வந்தாரே அந்த வேதத்தை இறக்கியவன் யார்? அதனை நீங்கள் தனித்தனி ஏடுகளாக ஆக்கி, அவற்றில் சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள்; பெரும்பாலானவற்றை மறைத்தும் விடுகிறீர்கள்; (அவ்வேதத்தின் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அறியாமல் இருந்தவைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டீர்கள்.” (நபியே! மேலும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் (அதை இறக்கி வைத்தான்)” பின்பு அவர்களைத் தம் வீணான(தர்க்கத்)தில் விளையாடிக் கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக.

6:92. இந்த வேதத்தை (குர்ஆனை) அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்கு முன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனை சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்) எவர்கள் மறுமையை (இறுதி தீர்ப்பு நாளை) நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள்.

6:93. அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, “எனக்கு வஹீ வந்தது” என்று கூறுபவன்; அல்லது “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்” என்று கூறுபவன், ஆகிய இவர்களைவிடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் (வானவர்கள்) தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) ” உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்” (என்று கூறுவதை நீர் காண்பீர்).

6:94. அன்றியும் (மறுமையில் அல்லாஹ் இவர்களை நோக்கி) “நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று நீங்கள் (எதுவுமில்லாமல்) தனியே எம்மிடம் வந்து விட்டீர்கள்; இன்னும், நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுவார்கள் (என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ) அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை; உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது; உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறி விட்டன” (என்று கூறுவான்).

அல் குர்ஆன்: அல் அன்ஆம் (கால்நடைகள்)

(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாத வரையில் உம்மைப் பற்றி திருப்தியடைய மாட்டார்கள்; (ஆகவே, அவர்களை நோக்கி) ” நிச்சயமாக அல்லாஹ்வின் வழி – (இஸ்லாம்) அதுவே நேர்வழி’ என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. (2:120)

(அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இருமடங்கு (வேதனையும்,) மரணத்தில் இருமடங்கு வேதனையு)ம், நுகருமாறு நாம் செய்திருப்போம், பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர். (17:75)

நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவன் பாதுகாப்பதிலும் மிகச் சிறந்தவன்; இன்னும் உதவி செய்வதிலும் மிகவும் சிறந்தவன். (8:40)

நிச்சயமாக வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. (அவனே) உயிர் கொடுக்கிறான்; (அவனே) மரிக்கும்படி செய்கிறான். அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு பாதுகாவலரும் இல்லை; உதவியாளரும் இல்லை. (9:116)

(நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக; அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன். (33:3)

அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை கிருபையை நாடினால் (அதை உங்களுக்கு தடை செய்பவர் யார்?) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காண மாட்டார்கள்.” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (33:17)



6:74. இப்ராஹீம் தம் தகப்பனார் ஆஜரிடம், “விக்கிரகங்களையா நீர் தெய்வங்களாக எடுத்துக் கொள்கிறீர்? நான் உம்மையும் உம் சமூகத்தாரையும், பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை நிச்சயமாகப் பார்க்கிறேன்” என்று கூறியதை நினைத்துப்பாரும்.

6:75. அவர் உறுதியான நம்பிக்கையுடையவராய் ஆகும் பொருட்டு வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியை இப்ராஹீமுக்கு இவ்வாறு காண்பித்தோம்.

6:76. ஆகவே அவரை இரவு மூடிக் கொண்ட போது அவர் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தார்; “இதுதான் என் இறைவன்!” என்று கூறினார்; ஆனால் அது மறைந்த போது அவர், “நான் மறையக் கூடியவற்றை நேசிக்க மாட்டேன்” என்று சொன்னார்.

6:77. பின்னர் சந்திரன் (பிரகாசத்துடன்) உதயமாவதைக் கண்டு, அவர், “இதுவே என் இறைவன்” என்று கூறினார். ஆனால் அது மறைந்த போது அவர், “என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான் நிச்சயமாக வழி தவறியவர்கள் கூட்டத்தில் (ஒருவனாக) ஆகிவிடுவேன்” என்று கூறினார்.

6:78. பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்ட போது: “இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது” என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்” என்று கூறினார்.

6:79. “வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக – (இணைவைப்போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்” (என்று கூறினார்).

6:80. அவருடன் அவருடைய கூட்டத்தார் விவாதித்தார்கள்; அதற்கவர் “அல்லாஹ்வைப் பற்றியா என்னிடம் தர்க்கம் செய்கிறீர்கள்? அவன் நிச்சயமாக எனக்கு நேர்வழி காட்டி விட்டான்; நீங்கள் அவனுக்கு இணையாக்குபவற்றைப் பற்றி நான் பயப்பட மாட்டேன்; என் இறைவன் எதையாவது நாடினாலன்றி (எதுவும் நிகழ்ந்து விடாது); என் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்; இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” என்று கூறினார்.

6:81. உங்களுக்கு அவன் எந்த அத்தாட்சியும் இறக்கி வைக்காமலிருக்கும்போது நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது பற்றி பயப்படவில்லை – அப்படியிருக்க நீங்கள் (அவனுக்கு) இணைவைப்பவற்றுக்கு நான் எப்படி பயப்படுவேன்? நம் இருபிரிவினரில் அச்சமின்றி இருக்கத்தகுதி உடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், (கூறுங்கள் எனவும் கேட்டார்).

6:82. எவர் ஈமான் (நம்பிக்கை) கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்த வில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியை பெற்றுக் கொண்டவர்கள்.

6:83. இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்ராஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன்.

அல் குர்ஆன்: அல் அன்ஆம்.

14:42. மேலும் அக்கிரமக்காரர்கள் செய்துக் கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பாராமுகமாக இருக்கின்றான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதபடுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை – இறுதி) நாளுக்காகத்தான்.

14:43. (அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவர்களாகவும் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது. இன்னும், அவர்களுடைய இருதயங்கள் (திடுக்கங் கொண்டு) சூனியமாக இருக்கும்.

14:44. எனவே, அத்தகைய வேதனை அவர்களிடம் வரும் நாளை (நபியே!) நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! அப்போது அநியாயம் செய்தவர்கள்; “எங்கள் இறைவனே! எங்களுக்குச் சற்றே அவகாசம் கொடுப்பாயாக! உன்னுடைய அழைப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்; (உன்னுடைய) தூதர்களையும் பின் பற்றுகிறோம்” என்று சொல்வார்கள். (அதற்கு இறைவன்) “உங்களுக்கு முடிவேயில்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக்கவில்லையா?” (என்றும்)

14:45. அன்றியும் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களே அவர்கள் வாழ்விடங்களில் நீங்களும் வசித்தீர்கள்; அவர்களை நாம் என்ன செய்தோம் என்பதும் உங்களுக்குத் தெளிவாக்கப்பட்டது; இன்னும் நாம் உங்களுக்கு(ப் பல முன்) உதாரணங்களையும் எடுத்துக் காட்டி இருக்கின்றோம் (என்றும் இறைவன் கூறுவான்).

14:46. எனினும், அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளைச் செய்து கொண்டேயிருந்தனர்; அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளைப் பெயர்த்து விடக்கூடியவையாக இருந்த போதிலும், அவர்களின் சூழ்ச்சி(க்கு உரிய தண்டனை) அல்லாஹ்விடம் இருக்கிறது.

14:47. ஆகவே, அல்லாஹ் தன் தூதர்களுக்கு அளித்த தன் வாக்குறுதியில் மாறு செய்வான் என்று (நபியே!) நீர் எண்ண வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பழி வாங்குபவனாகவும் இருக்கின்றான்.

14:48. இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்.

14:49. இன்னும் அந்நாளில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாகக் குற்றவாளிகளை நீர் காண்பீர்.

14:50. அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி இருக்கும்; இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.

14:51. அல்லாஹ் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்தற்கான கூலி கொடுப்பதற்காகவே (அவர்களை அல்லாஹ் இவ்வாறு செய்வான்) நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.

14:52. இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்.



அல் குர்ஆன்: ஸூரத்து இப்ராஹீம்.