12. பாறையை அகற்றிய பிரார்த்தனைகள்!
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்)அவர்கள் இவ்வாறு கூறிட நான் கேட்டுள்ளேன்: ‘உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று பேர் (ஒருபாதை வழியே) நடந்து சென்றனர். ஒருகுகையில் இரவு தங்க வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாயினர். அவர்கள் குகையினுள் சென்றதும் மலையிலிருந்து ஒருபாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்துக் கொண்டது.
அவர்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்: நாம் செய்த நல்ல அமல்களின் மூலம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறெதுவும் இந்தப் பாறையை அகற்றி நம்மைக் காப்பாற்றப் போவதில்லை.
அவர்களில் ஒருவர் பிரார்த்தனை செய்தார்: யா அல்லாஹ்! என்னுடைய பெற்றோர் இருவரும் தள்ளாத வயதுடைய முதியோராய் இருந்தார்கள். நான் மாலைநேரத்தில் பால் கறந்து அவர்கள் இருவருக்கும் புகட்டிய பிறகுதான் என் மனைவி- மக்களுக்கும் பணியாட்களுக்கும் புகட்டுவேன்.
ஒருநாள் (ஆடுகளை மேய்த்திட) புல்-செடிகொடிகளைத் தேடிச் சென்றது வெகு தூரத்திற்கு என்னை இட்டுச் சென்றுவிட்டது! மாலையில் அவர்கள் இருவரும் கண்ணயரும் வரைக்கும் கால்நடைகளை நான் வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு வரவில்லை! அவ்விருவருக்கும் தேவையான பாலை நான் கரந்து முடித்தபொழுது இருவரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கக் கண்டேன். அவ்விருவரையும் தூக்கத்திலிருந்து எழுப்பவோ அவர்களுக்கு முன்னர் என் மனைவி – மக்களுக்கும் பணியாட்களுக்கும் பால் புகட்டவோ நான் விரும்பவில்லை. கையில் பால் குவளையை ஏந்தியபடியே பெற்றோர்கள் விழித்தெழுவதை எதிர் பார்த்து நின்று கொண்டிருந்தேன். அதிகாலை உதயமாகும் வரையில்! பிள்ளைகள் என் காலடியில் பசி தாளாமல் கதறிக் கொண்டிருந்தனர்!
யா அல்லாஹ்! உனது விருப்பத்தை நாடியே இவ்வாறு நான் செய்திருந்தேன் எனில் நாங்கள் சிக்கியிருக்கும் இந்தப் பாறையை எங்களை விட்டும் அகற்றுயாயாக!
- சிறிதளவு பாறை அகன்றது. அவர்களால் வெளியேற இயலாத வகையில்!
மற்றொருவர் பிரார்த்தனை செய்தார்: யா அல்லாஹ்! என் சிறிய தகப்பனாருக்கு ஒருமகள் இருந்தாள். அனைவரினும் எனக்கு அவள் பிரியமானவள். (மற்றோர் அறிவிப்பில், பெண்கள் மீது ஆண்கள் அன்பு கொள்வதிலெல்லாம் கூடுதலாக நான் அவள் மீது அன்பு கொண்டிருந்தேன்) அவளை அனுபவிக்க வேண்டுமென நான் பெரிதும் விருப்பம் கொண்டேன். அவளோ என் விருப்பத்தை நிராகரித்து விட்டாள். இவ்வாறு இருக்கும்பொழுது வறுமையும் துயரமும் அவளை வாட்டின. என்னிடம் வந்தாள். அப்பொழுது எனது ஆசைக்குத் தன்னை அவள் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக 120 தங்க நாணயங்கள் அவளுக்கு கொடுத்தேன். அவள் எனக்கு இணங்கினாள்.
இவ்வாறாக அவளை என் வசத்திற்கு நான் கொண்டு வந்தபோது (மற்றோர் அறிவிப்பில் அவளது இரண்டு கால்களிடையே நான் அமர்ந்த பொழுது) அவள் சொன்னாள்:
‘அல்லாஹ்வுக்கு அஞ்சி விடு. எனது கற்பை அநியாயமாகப் பறித்து விடாதே!’
உடனே அவளை விட்டும் நான் விலகி விட்டேன். அப்பொழுது அவள் மீது அனைவரினும் அதிகமாக பிரியம் வைத்திருந்தேன். அவளுக்குக் கொடுத்திருந்த தங்க நாணயங்களையும் அப்பபடியே விட்டுக் கொடுத்தேன்.
யா அல்லாஹ்! உனது விருப்பத்தை நாடியே இவ்வாறு நான் செய்தேன் எனில் எங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சிரமத்தை அகற்றுவாயாக!
அந்தப் பாறை இன்னும் சற்று விலகியது. ஆனாலும் அவர்களால் அதிலிருந்து வெளியேற இயலவில்லை!
மூன்றாமவர் பிரார்த்தனை செய்தார்: யா அல்லாஹ்! நான் சில கூலி ஆட்களை வேலைக்கு அமர்த்தினேன். அவர்களது கூலியை அவர்களுக்கு நான் கொடுத்து விட்டேன். ஆயினும் ஒருநபர் தனது கூலியை வாங்காமல் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அவரது கூலியை (வியாபாரத்தில் ஈடுபடுத்திப்) பெருக்கினேன். அதன்மூலம் அதிகமான சொத்துக்கள் உருவாயின!
சில காலத்திற்குப் பிறகு அவர் வந்து அல்லாஹ்வின் அடியாரே! எனது கூலியை என்னிடம் ஒப்படைத்துவிடும் எனச் சொன்னார். நான் சொன்னேன். நீ பார்க்கிற அனைத்தும் உனது கூலியில் சேர்ந்ததே! ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், கூலியாட்கள் எல்லாமும் உனது கூலியே!
அதற்கு அவர் அல்லாஹ்வின் அடியாரே! என்னைப் பரிகாசம் செய்யாதீர்! என்றார். நான் சொன்னேன்: நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை!
பிறகு அவை எல்லாவற்றையும் அவர் எடுத்துக் கொண்டார். ஓட்டிச் சென்றார்! எது ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. -யா அல்லாஹ்! உனது விருப்பத்தை நாடியே இதை நான் செய்தேன் எனில் எங்களது துன்பத்தை அகற்றுவாயாக!
- பாறை முழுவதும் அகன்றது. அவர்கள் வெளியே புறப்பட்டுச் சென்றார்கள் ” (நூல்: புகாரி, முஸ்லிம்)
தெளிவுரை
இது முற்காலத்து பனீ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று மனிதர்களின் வாழ்வில் நடைபெற்ற அபூர்வமான நிகழ்ச்சியாகும். பல படிப்பினைகளையும் தத்துவங்களையும் இது உள்ளடக்கியுள்ளது. தொடர்ந்து படிக்க »