Feed on
Posts
Comments

15,  பாவம் செய்த மனிதனும் காணாமல் போன ஒட்டகமும்

ஹதீஸ் 15: நபி(ஸல்) அவர்களின் பணியாளரான அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். தன்னுடைய அடியான் பாவமீட்சி தேடி தன் பக்கம் மீளும்பொழுது அதுகுறித்து அல்லாஹ் அதிக மகிழ்ச்சி உடையவனாக இருக்கிறான். ஒரு பொட்டல் பூமியில் தனது ஒட்டகத்தைத் தவறவிட்டிருந்த உங்களில் ஒருவர், திடீரென அது கிடைக்கப் பெற்றதும் அடையும் மகிழ்சியை விட அதிகமாக!

ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது.

நபி(ஸல்) அவர்களின் பணியாளரான அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். தன்னுடைய அடியான் பாவமீட்சி தேடி தன் பக்கம் மீளும்பொழுது அது பற்றி அல்லாஹ் அதிக அளவு மகிழ்ச்சி அடைபவனாக இருக்கிறான். அது உங்களில் ஒருவர் (பின்வரும் சூழ்நிலையில்) அடையும் மகிழ்ச்சியைவிட அதிகமாகும்., அவர் ஒருபொட்டல் பூமியில் தனது வாகனத்தில் பயணமாகிக் கொண்டிருந்தார். திடீரென அது அவரை விட்டும் காணாமல் போய்விட்டது! அவரது உணவும் பானமும் அதிலேதான் இருந்தன. இனி அந்த வாகனம் கிடைக்கப் போவதில்லை என அவர் நிராசை அடைந்தார். பிறகு ஒரு மரத்தருகே வந்து அதன் நிழலில் ஓய்வாகப் படுத்திருந்தார். தன் வாகனம் கிடைக்குமென்ற நம்பிக்கையே அவருக்கில்லை. இந்நிலையில் திடீரென அந்த வாகனத்தை அவர் காண்கிறார். அவர் முன்னால் அது நின்று கொண்டிருக்கிறது! உடனே அதன் கடிவாளத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சிப் பெருக்கோடு கூறலானார்: யாஅல்லாஹ்! நீதான் என் அடிமை! நான் உன் எஜமானன் என்று! அதிக அளவு மகிழ்ச்சியினால் அவரது வார்த்தை தவறியது! (நூல்: முஸ்லிம்)

தெளிவுரை

பாவம் செய்த மனிதன் திருந்தி மனம் வருந்தி பாவமீட்சி தேடுவது குறித்து இறைவன் அடையும் மகிழ்ச்சியை ஓர் உவமை மூலம் அழகாக விளக்கியுள்ளார்கள் நபி(ஸல்)அவர்கள். அந்த உவமை இதுதான்: தண்ணீரோ புற்பூண்டுகளோ இல்லாத ஒருபொட்டல் பூமியில் ஒட்டகப் பயணம் மேற்கொண்ட மனிதன் அந்த ஒட்டகத்தைத் தொலைத்து விடுகிறான். அங்கும் இங்கும் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. பதறிப் போய்விட்டான்;. என்ன செய்வது? எதுவும் அவனுக்குப் புலப்படவில்லை. அப்படியே அலைந்து திரிந்து களைத்து- மனம்நொந்து கடைசியில் ஒருமரத்தடிக்கு வந்து அதன் நிழலில் படுத்துச் சிறிது கண்ணயர்ந்து விடுகிறான்! தொடர்ந்து படிக்க »

காஃபிர்களுடன் நடந்து கொள்ளும் முறை

இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர ஏனைய மதங்களும் இஸங்களும் அசத்தியமானவை. அவற்றைப் பின்பற்றக்கூடியவர்கள் காஃபிர்களாவர். இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம். அதை பின்பற்றக்கூடியவர்கள் முஃமின்கள், முஸ்லிம்களாவர்.

அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக இஸ்லாம்தான் அல்லாஹ்விடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். (அல்குர்ஆன்: 3:19)

‘இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால் அவனிடமிருந்து அது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் மறுமையில் அவன் நஷ்டமடைந்தவர்களில் ஒருவனாக இருப்பான். (அல்குர்ஆன்: 3:85)

இதனால் இஸ்லாத்தை  ஏற்றுக்கொள்ளாத அனைவருமே காஃபிர்கள் என்று ஒரு முஸ்லிம் கருத வேண்டும். காஃபிருடன் பின்வரும் ஒழுக்கங்களைப் பேணி நடக்க வேண்டும். தொடர்ந்து படிக்க »

13, 14. இதில் இரு நன்மைகள் உண்டு!

ஹதீஸ் 13: அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்: ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! திண்ணமாக நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு அதிகமாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருகிறேன். அவன் பக்கம் மீளுகிறேன்’ (நூல்: புகாரி)

ஹதீஸ் 14: அஃகர்ரு இப்னு யஸார்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘ஓ! மனிதர்களே! பாவமீட்சி தேடி அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள். அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள். திண்ணமாக நான் ஒருநாளில் நூறு தடவை பாவமீட்சி தேடி அல்லாஹ்வின் பக்கம் மீளுகிறேன்’ (நூல்: முஸ்லிம்)

தெளிவுரை

இமாம் நவவி(ரஹ்) அவர்கள், பாவமீட்சி தேடுவதற்கு ஆதாரமாக குர்ஆன் வசனங்களைக் குறிப்பிட்ட பிறகு இப்பொழுது நபிமொழிகளை வரிசைப்படுத்துகிறார்கள். ஒரு கருத்துக்கு ஒன்றுக்கதிகமான ஆதாரங்கள் சேரும்பொழுது அதன் உறுதிப்பாடும் கட்டாய நிலையும் அதிகரிக்கும்.!

நபி(ஸல்)அவர்கள் பரிசுத்தமானவர்கள். அவர்களின் முந்தைய – பிந்தைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான். அத்தகைய உத்தமரான நபி(ஸல்) அவர்களே ஒருதடவை இருதடவை அல்ல. ஒருநூறு தடவை பாவமீட்சி தேடியுள்ளார்கள் எனில் அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

பாவமீட்சி தேடுமாறு நபியவர்கள் தம் சமுதாயத்திற்கு இட்ட கட்டளையாகும் இது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், ஒருமுஸ்லிம் பாவமீட்சி தேடும்பொழுது அதில் இரு நன்மைகள் கிடைக்கின்றன. ஒன்று: அல்லாஹ் – ரஸூலின் கட்டளைக்குக் கீழ்ப்படிதல் அதிலுள்ளது. அல்லாஹ் – ரஸூலின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது முழுக்க முழுக்க நன்மையே! இம்மை, மறுமையின் நற்பேறுகளுக்கு அதுவே அடிப்படை.

இரண்டாவதாக ஒரு நாளைக்கு சுமார் நூறு தடவை பாவமீட்சி தேடிய உத்தம நபியைப் பின்பற்றிய நற்பேறு கிடைக்கிறது. தொடர்ந்து படிக்க »

தௌபா – பாவமீட்சி தேடல்

இறைமார்க்க அறிஞர்கள் கூறுவர்: அனைத்துப் பாவங்களில் இருந்தும் பாவமீட்சி தேடுவது கடமையாகும். மனித உரிமையுடன் தொடர்பில்லாமல் – மனிதனுக்கும் இறைவனுக்கும் மத்தியிலான பாவமாக இருந்தால் அதிலிருந்து மீட்சி பெறுவதற்கு மூன்று நிபந்தனைகள் உள்ளன.

  • அந்தப் பாவத்திலிருந்து முற்றாக விடுபடுதல்
  • அதனைச் செய்தது குறித்து வருந்துதல்
  • இனி எப்போதும் அந்தப் பாவத்தைத் திரும்பச் செய்வதில்லை என்று உறுதி கொள்ளல்

இந்த மூன்று நிபந்தனைகளில் ஒன்று விடுபட்டால் அவனது பாவமீட்சி நிறைவேறாது. மனித உரிமையுடன் தொடர்பான பாவமாக இருந்தால் அதிலிருந்து மன்னிப்புத் தேடுவதற்கு நான்கு நிபந்தனைகள் உள்ளன. நான்காவதாக அந்த மனிதனின் உரிமையி(னைப் பாதிக்கும் தீங்கி)லிருந்து விடுபடல் வேண்டும். அது பணமாகவோ பொருளாகவோ இருந்தால் அதனை அவனிடம் திருப்பிக் கொடுத்திட வேண்டும். அவதூறு சுமத்தியதற்கான தண்டனை போன்றதாக இருந்தால் அந்தத் தண்டனையை ஏற்றிடும் வகையில் அவனிடம் தன்னை ஒப்படைத்திட வேண்டும். அல்லது அதனை மன்னித்து விடுமாறு அவனிடம் கோரிட வேண்டும். புறம் பேசிய பாவமாக இருந்தால் அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு அவனிடம் கேட்க வேண்டும்.

அனைத்துப் பாவங்களை விட்டும் மீட்சி பெறுவது கடமை. ஒரு மனிதன் சில பாவங்களிலிருந்து மட்டும் பாவமீட்சி தேடினால் சத்தியவான்களிடத்தில் அந்தப் பாவத்திலிருந்து மட்டும் தான் மீட்சி தேடியதாக ஆகும். மற்ற பாவங்கள் அப்படியே அவன் மீது படிந்திருக்கும்.

பாவமீட்சி தேடுவது கடமை என்பதற்கு குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்கள் ஏராளம் உள்ளன. சமுதாயத்தின் கருத்தொற்றுமையும் அதற்குண்டு. அல்லாஹ் கூறுகிறான்:

‘இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாவமன்னிப்புக் கோரி அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள். நீங்கள் வெற்றி அடையக்கூடும்’(24:31)

வேறோரிடத்தில், ‘உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்புப் கோரி பிறகு அவன் பக்கம் மீளுங்கள்” (11:3)

இன்னோரிடத்தில், ‘இறை நம்பிக்கைகொண்டோரே! அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருங்கள். தூய்மையான பாவமன்னிப்பாக” (66:8)

தெளிவுரை

தௌபா எனும் அரபிச் சொல்லுக்கு அகராதியில் திரும்புதல் என்று பொருள். இறைமார்க்கத்தின் வழக்கில் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்வதை விட்டும் திரும்பி, அவனுக்குக் கீழ்ப்படிவதாகும்.

பாவமீட்சி தேடுவதில் மிக முக்கியமானதும் கண்டிப்பானதும் யாதெனில், இறை நிராகரிப்பை விட்டும் இணைவைப்பை விட்டும் பாவமீட்சி தேடி இறைநம்பிக்கை கொள்வதாகும். ஏனெனில், இவை தான் மிகவும் கொடிய பாவச்செயல்களாகும். தொடர்ந்து படிக்க »

12. பாறையை அகற்றிய பிரார்த்தனைகள்!

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்)அவர்கள் இவ்வாறு கூறிட நான் கேட்டுள்ளேன்: ‘உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று பேர் (ஒருபாதை வழியே) நடந்து சென்றனர். ஒருகுகையில் இரவு தங்க வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாயினர். அவர்கள் குகையினுள் சென்றதும் மலையிலிருந்து ஒருபாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்துக் கொண்டது.

அவர்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்: நாம் செய்த நல்ல அமல்களின் மூலம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறெதுவும் இந்தப் பாறையை அகற்றி நம்மைக் காப்பாற்றப் போவதில்லை.

அவர்களில் ஒருவர் பிரார்த்தனை செய்தார்: யா அல்லாஹ்! என்னுடைய பெற்றோர் இருவரும் தள்ளாத வயதுடைய முதியோராய் இருந்தார்கள். நான் மாலைநேரத்தில் பால் கறந்து அவர்கள் இருவருக்கும் புகட்டிய பிறகுதான் என் மனைவி- மக்களுக்கும் பணியாட்களுக்கும் புகட்டுவேன்.

ஒருநாள் (ஆடுகளை மேய்த்திட) புல்-செடிகொடிகளைத் தேடிச் சென்றது வெகு தூரத்திற்கு என்னை இட்டுச் சென்றுவிட்டது! மாலையில் அவர்கள் இருவரும் கண்ணயரும் வரைக்கும் கால்நடைகளை நான் வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு வரவில்லை! அவ்விருவருக்கும் தேவையான பாலை நான் கரந்து முடித்தபொழுது இருவரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கக் கண்டேன். அவ்விருவரையும் தூக்கத்திலிருந்து எழுப்பவோ அவர்களுக்கு முன்னர் என் மனைவி – மக்களுக்கும் பணியாட்களுக்கும் பால் புகட்டவோ நான் விரும்பவில்லை. கையில் பால் குவளையை ஏந்தியபடியே பெற்றோர்கள் விழித்தெழுவதை எதிர் பார்த்து நின்று கொண்டிருந்தேன். அதிகாலை உதயமாகும் வரையில்! பிள்ளைகள் என் காலடியில் பசி தாளாமல் கதறிக் கொண்டிருந்தனர்!

யா அல்லாஹ்! உனது விருப்பத்தை நாடியே இவ்வாறு நான் செய்திருந்தேன் எனில் நாங்கள் சிக்கியிருக்கும் இந்தப் பாறையை எங்களை விட்டும் அகற்றுயாயாக!

- சிறிதளவு பாறை அகன்றது. அவர்களால் வெளியேற இயலாத வகையில்!

மற்றொருவர் பிரார்த்தனை செய்தார்: யா அல்லாஹ்! என் சிறிய தகப்பனாருக்கு ஒருமகள் இருந்தாள். அனைவரினும் எனக்கு அவள் பிரியமானவள். (மற்றோர் அறிவிப்பில், பெண்கள் மீது ஆண்கள் அன்பு கொள்வதிலெல்லாம் கூடுதலாக நான் அவள் மீது அன்பு கொண்டிருந்தேன்) அவளை அனுபவிக்க வேண்டுமென நான் பெரிதும் விருப்பம் கொண்டேன். அவளோ என் விருப்பத்தை நிராகரித்து விட்டாள். இவ்வாறு இருக்கும்பொழுது வறுமையும் துயரமும் அவளை வாட்டின. என்னிடம் வந்தாள். அப்பொழுது எனது ஆசைக்குத் தன்னை அவள் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக 120 தங்க நாணயங்கள் அவளுக்கு கொடுத்தேன். அவள் எனக்கு இணங்கினாள்.

இவ்வாறாக அவளை என் வசத்திற்கு நான் கொண்டு வந்தபோது (மற்றோர் அறிவிப்பில் அவளது இரண்டு கால்களிடையே நான் அமர்ந்த பொழுது) அவள் சொன்னாள்:

‘அல்லாஹ்வுக்கு அஞ்சி விடு. எனது கற்பை அநியாயமாகப் பறித்து விடாதே!’

உடனே அவளை விட்டும் நான் விலகி விட்டேன். அப்பொழுது அவள் மீது அனைவரினும் அதிகமாக பிரியம் வைத்திருந்தேன். அவளுக்குக் கொடுத்திருந்த தங்க நாணயங்களையும் அப்பபடியே விட்டுக் கொடுத்தேன்.

யா அல்லாஹ்! உனது விருப்பத்தை நாடியே இவ்வாறு நான் செய்தேன் எனில் எங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சிரமத்தை அகற்றுவாயாக!

அந்தப் பாறை இன்னும் சற்று விலகியது. ஆனாலும் அவர்களால் அதிலிருந்து வெளியேற இயலவில்லை!

மூன்றாமவர் பிரார்த்தனை செய்தார்: யா அல்லாஹ்! நான் சில கூலி ஆட்களை வேலைக்கு அமர்த்தினேன். அவர்களது கூலியை அவர்களுக்கு நான் கொடுத்து விட்டேன். ஆயினும் ஒருநபர் தனது கூலியை வாங்காமல் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அவரது கூலியை (வியாபாரத்தில் ஈடுபடுத்திப்) பெருக்கினேன். அதன்மூலம் அதிகமான சொத்துக்கள் உருவாயின!

சில காலத்திற்குப் பிறகு அவர் வந்து அல்லாஹ்வின் அடியாரே! எனது கூலியை என்னிடம் ஒப்படைத்துவிடும் எனச் சொன்னார். நான் சொன்னேன். நீ பார்க்கிற அனைத்தும் உனது கூலியில் சேர்ந்ததே! ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், கூலியாட்கள் எல்லாமும் உனது கூலியே!

அதற்கு அவர் அல்லாஹ்வின் அடியாரே! என்னைப் பரிகாசம் செய்யாதீர்! என்றார். நான் சொன்னேன்: நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை!

பிறகு அவை எல்லாவற்றையும் அவர் எடுத்துக் கொண்டார். ஓட்டிச் சென்றார்! எது ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. -யா அல்லாஹ்! உனது விருப்பத்தை நாடியே இதை நான் செய்தேன் எனில் எங்களது துன்பத்தை அகற்றுவாயாக!

- பாறை முழுவதும் அகன்றது. அவர்கள் வெளியே புறப்பட்டுச் சென்றார்கள் ” (நூல்: புகாரி, முஸ்லிம்)

தெளிவுரை

இது முற்காலத்து பனீ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று மனிதர்களின் வாழ்வில் நடைபெற்ற அபூர்வமான நிகழ்ச்சியாகும். பல படிப்பினைகளையும் தத்துவங்களையும் இது உள்ளடக்கியுள்ளது. தொடர்ந்து படிக்க »