Feed on
Posts
Comments

22. இதனை விடவும் சிறந்த பாவமீட்சி உண்டா?

ஹதீஸ் 22: இம்றான் ஹுஸைன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”ஜுஹைனா என்ற குலத்தைச் சேர்ந்த ஒருபெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்தாள். அவள் விபச்சாரத்தில் ஈடுபட்டதினால் கருவுற்றிருந்தாள். அவள் சொன்னாள்: அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனை பெறும் அளவுக்குத் தவறு செய்து விட்டேன். என் மீது தண்டனை நிறைவேற்றுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் பொறுப்பாளரை அழைத்தார்கள். அவரிடம் சொன்னார்கள்: நீர் இவளிடம் மிகவும் நல்ல முறையில் நடந்து கொள்ளும். குழந்தை பெற்றெடுத்ததும் இவளை என்னிடம் அழைத்து வாரும்.

அவ்வாறே அவளுக்குக் குழந்தை பிறந்ததும் அவளை நபியவர்களிடம் அழைத்து வந்தார் அவர். அவளது விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள். அவள் மீது அவளுடைய ஆடைகள் கட்டப்பட்டன. பிறகு கல்லெறிந்து அவளைக் கொல்லுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பிறகு நபியவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.

அப்பொழுது உமர்(ரலி)அவர்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! இவள் விபச்சாரம் செய்தவளாயிற்றே! இவளுக்காகவா நீங்கள் ஜனாஸா தொழுகை நடத்துகிறீர்கள்?

அதற்கு நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: இந்தப் பெண்மணி தேடிக் கொண்டது எத்தகைய பாவமீட்சியெனில், அதனை மதீனத்து முஸ்லிம்களில் எழுபது பேருக்குப் பங்கீடு செய்தால் அவர்கள் அனைவருக்கும் அது போதுமாகி விடுமே! அல்லாஹ்வின் வழியில் தனது உயிரையே இவள் ஈந்து விட்டாளே! இதனைவிடவும் சிறந்த நிலையொன்றை நீர் கண்டுள்ளீரா என்ன? ” நூல்: முஸ்லிம்

தெளிவுரை

பாவமீட்சி தேடுவது கடமை என்பதையும் வாய்மையான பாவமீட்சியின் பயனையும் சிறப்பையும் இந்த அரிய நிகழ்ச்சி அழகாய் உணர்த்துகிறது. தொடர்ந்து படிக்க »

21, தபூக் யுத்தமும் தடுமாற்றமும்

ஹதீஸ் 21: கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் அறிவிக்கிறார்கள்: (இவர்தான் கஅப்(ரலி)அவர்கள் கண்பார்வை இழந்த காலத்தில் அவர்களை வழிநடத்தி அழைத்துச் செல்பவராக இருந்தார்.) கஅப்(ரலி) அவர்கள் தபூக் போரில் கலந்துகொள்ளாமல் நபியவர்களை விட்டும் பின்தங்கி விட்டபொழுது நடந்த நிகழ்ச்சி பற்றி இவ்வாறு அறிவித்ததை நான் கேட்டுள்ளேன்.

கஅப்(ரலி) அவர்கள் சொன்னார்கள்: நபி(ஸல்)அவர்கள் கலந்துகொண்ட எந்தப் போரை விட்டும் நான் எப்போதும் பின்தங்கியதில்லை., தபூக் யுத்தத்தைத்தவிர! ஆனால் பத்று போரில் நான் கலந்து கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்! அதில் கலந்துகொள்ளாமல் இருந்த எவரும் கண்டிக்கப்படவில்லை. ஏனெனில் நபி(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் – குறைஷிகளின் வாணிபக் குழுவைத் தாக்குவதற்காகத்தான் புறப்பட்டிருந்தார்கள். அங்கே முன்னறிவிப்பு இல்லாமல் அவர்களையும் அவர்களுடைய பகைவர்களையும் மோதச் செய்தான், அல்லாஹ்!

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக நாங்கள் உறுதிமொழி கொடுத்தபோது நடைபெற்ற நள்ளிரவு கணவாய் உடன்படிக்கையில் நபி(ஸல்) அவர்களிடம் நான் ஆஜராகியுள்ளேன். அதற்குப் பகரமாக பத்ருப் போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கப்பெறுவதை நான் விரும்பவில்லை. அதைவிட பத்ருப் போர்தான் மக்களிடையே அதிகம் பேசப்படக்கூடியதாக இருந்தாலும் சரியே!

தபூக் போரில் நபி(ஸல்) அவர்களை விட்டும் நான் பின்தங்கியிருந்தபோது நடைபெற்றது பற்றி நான் அறிவிப்பது என்னவெனில், நான் அதிக அளவு சக்தியும் சௌகரியமும் முன்னெப்போதும் பெற்றிருந்ததில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அதற்கு முன்பு ஒரு பொழுதும் இரண்டு ஒட்டகங்கள் என்னிடம் இருந்ததில்லை. ஆனால் அந்தப் போரின்போது இரண்டு ஒட்டகங்களை நான் சேகரித்து வைத்திருந்தேன்.

நபி(ஸல்) அவர்கள் ஏதேனும் போருக்குப் புறப்பட நாடினால் அதனை மற்றொரு விஷயத்துடன் இணைத்து மறைத்தே பேசுவார்கள். இவ்வாறு இந்தப் போரும் வந்தது! நபியவர்கள் இந்தப் போருக்காகப் புறப்பட்டது கடுமையான வெயில் நேரத்தில்! அதுவும் நெடியதொரு பயணத்தை மேற்கொண்டார்கள். பாலைவெளியைக் கடந்து செல்ல நேர்ந்தது! எதிரிகளின் அதிக எண்ணிக்கை கொண்ட படையைச் சந்திக்க நேர்ந்தது! எனவே முஸ்லிம்கள் தங்களுடைய போர்த் தளவாடங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக யதார்த்த நிலையை அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறினார்கள். முஸ்லிம்கள் எங்கு நோக்கிச் செல்ல வேண்டும் என்பது தமது நாட்டம் என்பதை வெளிப்படையாக அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்களுடன் முஸ்லிம்கள் அதிக அளவில் புறப்பட்டிருந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை எந்த ஏட்டிலும் பதிவு செய்து வைக்கப்படவில்லை. (அதாவது அரசாங்கப் பதிவேடு என்று எதுவும் அப்பொழுது இல்லை) தொடர்ந்து படிக்க »

20. நூறு கொலை செய்தவனுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால்?

ஹதீஸ் 20: அபூ ஸயீதில் குத்ரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களுக்கு முன்னர் வாழ்ந்து சென்ற சமுதாயத்தில் ஒருமனிதன் இருந்தான். அவன் தொன்னூற்றி ஒன்பது பேரைக் கொலை செய்திருந்தான்! பிறகு அவன், இந்தப் புவிவாழ் மக்களில் அதிகம் அறிந்தவர் யார் என்று விசாரித்தான். ஒரு துறவியின் பக்கம் அவனுக்கு வழி காட்டப்பட்டது. அவரிடம் வந்தான். நான் தொன்னூற்றி ஒன்பது பேரைக் கொலை செய்து விட்டேன். எனக்கு மன்னிப்பு உண்டா? என்று அவரிடம் கேட்டான். அவர், கிடையாது என்று சொல்லி விட்டார். உடனே அவரையும் கொலை செய்து அவருடன் நூறைப் பூர்த்தியாக்கினான்.

பிறகு இப்புவி வாழ் மக்களில் அதிகம் அறிந்தவர் யார் என்று கேட்டான். கல்லி அறிவுபெற்ற இன்னொரு மனிதரின் பக்கம் அவனுக்கு வழிகாட்டப்பட்டது. (அவரிடம் சென்று) கேட்டான்: நான் நூறு பேரைக் கொலை செய்துள்ளேன். எனக்குப் பாவமன்னிப்பு உண்டா?

அவர் சொன்னார்: ஆம், உண்டு! பாவமன்னிப்புப் பெறவிடாமல் உன்னை யாரால் தடுக்க முடியும்? நீ இன்ன இன்ன ஊருக்குச் செல்! அங்கு, அல்லாஹ்வை வணங்கி வழிபட்டுக் கொண்டிருக்கும் மக்கள் உள்ளனர்., அவர்களுடன் சேர்ந்து நீயும் அல்லாஹ்வை வணங்கு. உனது சொந்த ஊருக்கு நீ திரும்பி விடாதே! அது கெட்டதொரு பூமியாகும்!

உடனே அவன் (அந்த ஊரை நோக்கிப்) புறப்பட்டான். பாதி வழி வந்திருக்கும்பொழுது மரணம் அவனைத் தழுவிக்கொண்டது! அவனைக் கைப்பற்றும் விஷயத்தில் கருணை மலக்குகளும் தண்டனை மலக்குகளும் தர்க்கம் செய்யலானார்கள்!

கருணை மலக்குகள் சொன்னார்கள்: இவன் பாவமீட்சி தேடியவனாக – தனது இதயத்தால் அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கியவனாக வந்துள்ளான்,. என்று! தண்டனை மலக்குகள் சொன்னார்கள்: இவன் எந்த ஒரு நன்மையையும் செய்யவில்லை என்று!

இந்நிலையில் வேறொரு மலக்கு மனித வடிவத்தில் அங்கு வந்தார். அவரைத் தங்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும் நடுவராக்கினார்கள், அந்த மலக்குகள். அவர் சொன்னார்: இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட தூரத்தை அளந்து பாருங்கள். இந்த மனிதன் எந்த ஊரின் பக்கம் நெருக்கமாக இருக்கிறானோ அந்த ஊரைச் சேர்ந்தவனாவான்! ”

அவ்வாறு அளந்து பார்த்த பொழுது அவன்,எந்த ஊரை நாடி வந்தானோ அந்த ஊரின் பக்கம் நெருக்கமானவனாக இருந்தான். உடனே கருணை மலக்குகள் அவனைக் கைப்பற்றிக் கொண்டார்கள்!” (நூல்: புகாரி, முஸ்லிம்)

ஸஹீஹ் (முஸ்லிமின்) ஓர் அறிவிப்பில் வந்துள்ளது: ‘அவன் நல்ல ஊரின் பக்கமே ஒருசாண் அளவு அதிக நெருக்கமாக இருந்தான். எனவே அவ்வூர்வாசிகளுடன் சேர்க்கப்பட்டான்’

ஸஹீஹ் (முஸ்லிமின்) வேறோர் அறிவிப்பில் உள்ளது: ‘இந்த ஊருக்கு நீ தூரமாகிவிடு என்று அல்லாஹ் கட்டளையிட்டான். மேலும் அந்த ஊருக்கு- நீ நெருக்கமாகிவிடு என்று கட்டளையிட்டான். மேலும் கூறினான்: (இப்பொழுது) இரு ஊர்களுக்கும் மத்தியில் அளந்து பாருங்கள் என்று! அதன்படி அந்த மனிதன் இந்த ஊரின் பக்கமே அதிக நெருக்கமாக இருக்கக் கண்டார்கள்!’

ஸஹீஹ் (முஸ்லிமின்) இன்னோர் அறிவிப்பில் உள்ளது: ‘அவன் தனது இதயத்தால் அந்த ஊரை நாடிப் புறப்பட்டான்.

தெளிவுரை

வாய்மையுடன் பாவமன்னிப்புத் தேடும் மனிதனுக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு உண்டு. அவன் செய்த பாவம் எவ்வளவு பெரிதாயினும் எவ்வளவு அதிகமாயினும் சரியே! ஏனெனில், அல்லாஹ்வின் கருணை எல்லையில்லாதது! உலகின் எல்லாப் பொருள்களையும் வியாபித்து நிற்கக் கூடியது! இந்த உண்மைக்கு இன்னோர் ஆதாரமே இந்நபிமொழி. தொடர்ந்து படிக்க »

19, காலுறை மீது மஸஹ் செய்வதன் சட்டம்

ஹதீஸ் 19: ஸிர்ரு பின் ஹுபைஸ்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: காலுறைகளின் மீது மஸஹ் செய்வது பற்றி கேட்பதற்காக நான் ஸஃப்வான் பின் அஸ்ஸால்(ரலி) அவர்களிடம் வந்தேன்.

‘அப்பொழுது அவர்கள் ஸிர்ரே! என்ன விஷயமாக வந்துள்ளீர்? என வினவினார்கள்”

‘கல்வியைத் தேடித்தான் ” என்றேன்.

‘கல்வியைத் தேடுபவருக்காக – அவரது தேடல் குறித்து திருப்தி அடைந்தவாறு மலக்குகள் தங்கள் இறக்கைகளைத் தாழ்த்துகிறார்கள்” என்றார்கள்.

நான் சொன்னேன்: மலம், சிறுநீர் கழித்த பிறகு (உளூ செய்யும்போது) காலுறைகளின் மீது மஸஹ் செய்வதென்பது என் மனத்தில் ஒருநெருடலை ஏற்படுத்தி விட்டது. நீங்கள் நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர். எனவேதான் உங்களிடம் விளக்கம் கேட்கலாம் என வந்தேன். நபியவர்கள் இதுவிஷயத்தில் ஏதேனும் சொல்ல நீங்கள் கேட்டிருக்கிறீர்களா”?

அவர்கள் சொன்னார்கள்: ‘ஆம்! நாங்கள் பயணம் மேற்கொண்டால் மலஜலம் கழித்தாலோ தூங்கினாலோ (உளூவின்பொழுது) எங்கள் காலுறைகளை மூன்று பகல் – இரவுகளுக்குக் கழற்ற வேண்டாமென நபி(ஸல்) அவர்கள் எங்களை ஏவுவார்கள் – பெருந்துடக்கு நீங்கலாக!

‘அன்பு கொள்வது பற்றி நபி(ஸல்) அவர்கள் ஏதாவது கூறக் கேட்டிருக்கிறீர்களா? ”

‘ஆம்! ஒரு தடவை நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பயணம் புறப்பட்டிருந்தோம். நாங்கள் அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோது ஒரு நாட்டுப்புற மனிதர், அவருக்கே உரிய உரத்தகுரலில் நபி(ஸல்) அவர்களை நோக்கி- ஏ முஹம்மத்! என அழைத்தார். நபி(ஸல்) அவர்களும்- அவரது குரலுக்கு ஈடாக குரலுயர்த்தி ‘பெற்றுக் கொள்வீராக” என்று அவருக்குப் பதில் அளித்தார்கள்.

நான் சொன்னேன்: ‘நாசமாகப் போவாய்! குரலைத் தாழ்த்து! நீ நபியவர்களின் சமூகத்தில் இருக்கிறாய்! இப்படிக் குரலுயர்த்துவது உனக்குத் தடை செய்யப்பட்டுள்ளது!” என்று. அதற்கு அவர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் குரலைத் தாழ்த்தமாட்டேன்.

அந்த நாட்டுப்புறத்துக்காரர் கேட்டார்: ‘ஒரு மனிதன் தன் சமூகத்தினரை நேசிக்கிறான். ஆனால் (அமல் விஷயத்தில்) அவர்களைச் சென்றடையாமல் இருக்கிறான்?”

அதற்கு நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ‘ஒரு மனிதன் யாரை நேசித்தானோ அவர்களுடனேதான் மறுமைநாளில் இருப்பான் – இவ்வாறாகத் தொடர்ந்து பலவிஷயங்களை அவர்கள் எங்களுக்கு அறிவித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் மேற்குத் திசையில் ஒரு வாசல் படைக்கப்பட்டிருப்பது பற்றி எடுத்துரைத்தார்கள். அது எத்துணை விசாலமானது என்றால், அதன் அகலத்தின் நடைபயணம் (அல்லது ஒருபயணி அதன் அகல வாட்டில்) நாற்பது அல்லது எழுபது ஆண்டுகள் நடந்து செல்லும் அளவு இருக்கும். (அறிவிப்பாளர்களில் ஒருவராகிய ஸுஃப்யான் (இப்னு உயைனா) என்பவர் கூறுகிறார்: ‘அது ஷாம் தேசத்தை நோக்கியதாகும்’)

வானங்கள், பூமியைப் படைத்த காலத்திலேயே அந்த வாசலையும் அல்லாஹ் படைத்து விட்டான். அந்தவாசல் பாவமீட்சிக்காகத் திறந்தே இருக்கும். சூரியன் மேற்கில் உதிக்கும் வரையில் அது மூடப்படமாட்டாது” – இதனை இமாம் திர்மிதி(ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். மேலும் இது, ஹஸன் – ஸஹீஹ் என்றும் சொல்லியுள்ளார்கள்.

தெளிவுரை

பாவமீட்சி தேடுவதற்கான காலம் எப்பொழுது முடிவடையும் என்பதை விளக்கும் நபிமொழிகளில் இதுவும் ஒன்றாகும். இதற்காகவே இமாம் நவவி(ரஹ்) அவர்கள் இதனை இங்கு கொண்டு வந்துள்ளார்கள். தொடர்ந்து படிக்க »

16,17,18 சூரியன் மேற்கிலிருந்து உதித்தால்!

ஹதீஸ் 16: அபூ மூஸா அல் – அஷ்அரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நிச்சயமாக அல்லாஹ், பகலில் பாவம் செய்த மனிதன் பாவமீட்சி தேடட்டும் என்பதற்காக இரவில் தனது கையை விரித்து வைக்கிறான். இரவில் பாவம் செய்தவன் பாவமீட்சி தேடட்டும் என்று பகலில் கையை விரித்து வைக்கிறான். (இது) சூரியன் மேற்கில் இருந்து உதயமாகும் வரையில் (நடந்து கொண்டிருக்கும்) (நூல்: முஸ்லிம்)

ஹதீஸ் 17: அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘சூரியன் மேற்கிலிருந்து உதயமாவதற்கு முன் (அதாவது யுக முடிவு நாள் வருவதற்கு முன்) யார் பாவமீட்சி தேடுகிறரோ அவரை அல்லாஹ் மன்னித்து விடுகிறான்’ (நூல்: முஸ்லிம்)

ஹதீஸ் 18: உமர்(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘நிச்சயமாக அல்லாஹ் மனிதனின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறான்., அம்மனிதனின் உயிர் ஊசலாடும் கட்டத்தை அடையாதிருக்கும் வரையில்!’ (நூல்:திர்மிதி)

தெளிவுரை

இந்த மூன்று நபிமொழிகளின் கருத்து இதுதான்: பாவம் செய்த மனிதனை இறைவன் உடனுக்குடன் தண்டிப்பதில்லை. பாவமன்னிப்புத் தேடுவதற்கு அவனுக்கு அவகாசம் அளிக்கிறான். மனிதன் தாமதமாகப் பாவமன்னிப்புத் தேடினாலும் அதை ஏற்றுக் கொள்கிறான். தொடர்ந்து படிக்க »