Feed on
Posts
Comments

தௌபா – பாவமீட்சி தேடல்

இறைமார்க்க அறிஞர்கள் கூறுவர்: அனைத்துப் பாவங்களில் இருந்தும் பாவமீட்சி தேடுவது கடமையாகும். மனித உரிமையுடன் தொடர்பில்லாமல் – மனிதனுக்கும் இறைவனுக்கும் மத்தியிலான பாவமாக இருந்தால் அதிலிருந்து மீட்சி பெறுவதற்கு மூன்று நிபந்தனைகள் உள்ளன.

  • அந்தப் பாவத்திலிருந்து முற்றாக விடுபடுதல்
  • அதனைச் செய்தது குறித்து வருந்துதல்
  • இனி எப்போதும் அந்தப் பாவத்தைத் திரும்பச் செய்வதில்லை என்று உறுதி கொள்ளல்

இந்த மூன்று நிபந்தனைகளில் ஒன்று விடுபட்டால் அவனது பாவமீட்சி நிறைவேறாது. மனித உரிமையுடன் தொடர்பான பாவமாக இருந்தால் அதிலிருந்து மன்னிப்புத் தேடுவதற்கு நான்கு நிபந்தனைகள் உள்ளன. நான்காவதாக அந்த மனிதனின் உரிமையி(னைப் பாதிக்கும் தீங்கி)லிருந்து விடுபடல் வேண்டும். அது பணமாகவோ பொருளாகவோ இருந்தால் அதனை அவனிடம் திருப்பிக் கொடுத்திட வேண்டும். அவதூறு சுமத்தியதற்கான தண்டனை போன்றதாக இருந்தால் அந்தத் தண்டனையை ஏற்றிடும் வகையில் அவனிடம் தன்னை ஒப்படைத்திட வேண்டும். அல்லது அதனை மன்னித்து விடுமாறு அவனிடம் கோரிட வேண்டும். புறம் பேசிய பாவமாக இருந்தால் அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு அவனிடம் கேட்க வேண்டும்.

அனைத்துப் பாவங்களை விட்டும் மீட்சி பெறுவது கடமை. ஒரு மனிதன் சில பாவங்களிலிருந்து மட்டும் பாவமீட்சி தேடினால் சத்தியவான்களிடத்தில் அந்தப் பாவத்திலிருந்து மட்டும் தான் மீட்சி தேடியதாக ஆகும். மற்ற பாவங்கள் அப்படியே அவன் மீது படிந்திருக்கும்.

பாவமீட்சி தேடுவது கடமை என்பதற்கு குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்கள் ஏராளம் உள்ளன. சமுதாயத்தின் கருத்தொற்றுமையும் அதற்குண்டு. அல்லாஹ் கூறுகிறான்:

‘இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாவமன்னிப்புக் கோரி அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள். நீங்கள் வெற்றி அடையக்கூடும்’(24:31)

வேறோரிடத்தில், ‘உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்புப் கோரி பிறகு அவன் பக்கம் மீளுங்கள்” (11:3)

இன்னோரிடத்தில், ‘இறை நம்பிக்கைகொண்டோரே! அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருங்கள். தூய்மையான பாவமன்னிப்பாக” (66:8)

தெளிவுரை

தௌபா எனும் அரபிச் சொல்லுக்கு அகராதியில் திரும்புதல் என்று பொருள். இறைமார்க்கத்தின் வழக்கில் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்வதை விட்டும் திரும்பி, அவனுக்குக் கீழ்ப்படிவதாகும்.

பாவமீட்சி தேடுவதில் மிக முக்கியமானதும் கண்டிப்பானதும் யாதெனில், இறை நிராகரிப்பை விட்டும் இணைவைப்பை விட்டும் பாவமீட்சி தேடி இறைநம்பிக்கை கொள்வதாகும். ஏனெனில், இவை தான் மிகவும் கொடிய பாவச்செயல்களாகும். தொடர்ந்து படிக்க »

12. பாறையை அகற்றிய பிரார்த்தனைகள்!

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்)அவர்கள் இவ்வாறு கூறிட நான் கேட்டுள்ளேன்: ‘உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று பேர் (ஒருபாதை வழியே) நடந்து சென்றனர். ஒருகுகையில் இரவு தங்க வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாயினர். அவர்கள் குகையினுள் சென்றதும் மலையிலிருந்து ஒருபாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்துக் கொண்டது.

அவர்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்: நாம் செய்த நல்ல அமல்களின் மூலம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறெதுவும் இந்தப் பாறையை அகற்றி நம்மைக் காப்பாற்றப் போவதில்லை.

அவர்களில் ஒருவர் பிரார்த்தனை செய்தார்: யா அல்லாஹ்! என்னுடைய பெற்றோர் இருவரும் தள்ளாத வயதுடைய முதியோராய் இருந்தார்கள். நான் மாலைநேரத்தில் பால் கறந்து அவர்கள் இருவருக்கும் புகட்டிய பிறகுதான் என் மனைவி- மக்களுக்கும் பணியாட்களுக்கும் புகட்டுவேன்.

ஒருநாள் (ஆடுகளை மேய்த்திட) புல்-செடிகொடிகளைத் தேடிச் சென்றது வெகு தூரத்திற்கு என்னை இட்டுச் சென்றுவிட்டது! மாலையில் அவர்கள் இருவரும் கண்ணயரும் வரைக்கும் கால்நடைகளை நான் வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு வரவில்லை! அவ்விருவருக்கும் தேவையான பாலை நான் கரந்து முடித்தபொழுது இருவரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கக் கண்டேன். அவ்விருவரையும் தூக்கத்திலிருந்து எழுப்பவோ அவர்களுக்கு முன்னர் என் மனைவி – மக்களுக்கும் பணியாட்களுக்கும் பால் புகட்டவோ நான் விரும்பவில்லை. கையில் பால் குவளையை ஏந்தியபடியே பெற்றோர்கள் விழித்தெழுவதை எதிர் பார்த்து நின்று கொண்டிருந்தேன். அதிகாலை உதயமாகும் வரையில்! பிள்ளைகள் என் காலடியில் பசி தாளாமல் கதறிக் கொண்டிருந்தனர்!

யா அல்லாஹ்! உனது விருப்பத்தை நாடியே இவ்வாறு நான் செய்திருந்தேன் எனில் நாங்கள் சிக்கியிருக்கும் இந்தப் பாறையை எங்களை விட்டும் அகற்றுயாயாக!

- சிறிதளவு பாறை அகன்றது. அவர்களால் வெளியேற இயலாத வகையில்!

மற்றொருவர் பிரார்த்தனை செய்தார்: யா அல்லாஹ்! என் சிறிய தகப்பனாருக்கு ஒருமகள் இருந்தாள். அனைவரினும் எனக்கு அவள் பிரியமானவள். (மற்றோர் அறிவிப்பில், பெண்கள் மீது ஆண்கள் அன்பு கொள்வதிலெல்லாம் கூடுதலாக நான் அவள் மீது அன்பு கொண்டிருந்தேன்) அவளை அனுபவிக்க வேண்டுமென நான் பெரிதும் விருப்பம் கொண்டேன். அவளோ என் விருப்பத்தை நிராகரித்து விட்டாள். இவ்வாறு இருக்கும்பொழுது வறுமையும் துயரமும் அவளை வாட்டின. என்னிடம் வந்தாள். அப்பொழுது எனது ஆசைக்குத் தன்னை அவள் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக 120 தங்க நாணயங்கள் அவளுக்கு கொடுத்தேன். அவள் எனக்கு இணங்கினாள்.

இவ்வாறாக அவளை என் வசத்திற்கு நான் கொண்டு வந்தபோது (மற்றோர் அறிவிப்பில் அவளது இரண்டு கால்களிடையே நான் அமர்ந்த பொழுது) அவள் சொன்னாள்:

‘அல்லாஹ்வுக்கு அஞ்சி விடு. எனது கற்பை அநியாயமாகப் பறித்து விடாதே!’

உடனே அவளை விட்டும் நான் விலகி விட்டேன். அப்பொழுது அவள் மீது அனைவரினும் அதிகமாக பிரியம் வைத்திருந்தேன். அவளுக்குக் கொடுத்திருந்த தங்க நாணயங்களையும் அப்பபடியே விட்டுக் கொடுத்தேன்.

யா அல்லாஹ்! உனது விருப்பத்தை நாடியே இவ்வாறு நான் செய்தேன் எனில் எங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சிரமத்தை அகற்றுவாயாக!

அந்தப் பாறை இன்னும் சற்று விலகியது. ஆனாலும் அவர்களால் அதிலிருந்து வெளியேற இயலவில்லை!

மூன்றாமவர் பிரார்த்தனை செய்தார்: யா அல்லாஹ்! நான் சில கூலி ஆட்களை வேலைக்கு அமர்த்தினேன். அவர்களது கூலியை அவர்களுக்கு நான் கொடுத்து விட்டேன். ஆயினும் ஒருநபர் தனது கூலியை வாங்காமல் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அவரது கூலியை (வியாபாரத்தில் ஈடுபடுத்திப்) பெருக்கினேன். அதன்மூலம் அதிகமான சொத்துக்கள் உருவாயின!

சில காலத்திற்குப் பிறகு அவர் வந்து அல்லாஹ்வின் அடியாரே! எனது கூலியை என்னிடம் ஒப்படைத்துவிடும் எனச் சொன்னார். நான் சொன்னேன். நீ பார்க்கிற அனைத்தும் உனது கூலியில் சேர்ந்ததே! ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், கூலியாட்கள் எல்லாமும் உனது கூலியே!

அதற்கு அவர் அல்லாஹ்வின் அடியாரே! என்னைப் பரிகாசம் செய்யாதீர்! என்றார். நான் சொன்னேன்: நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை!

பிறகு அவை எல்லாவற்றையும் அவர் எடுத்துக் கொண்டார். ஓட்டிச் சென்றார்! எது ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. -யா அல்லாஹ்! உனது விருப்பத்தை நாடியே இதை நான் செய்தேன் எனில் எங்களது துன்பத்தை அகற்றுவாயாக!

- பாறை முழுவதும் அகன்றது. அவர்கள் வெளியே புறப்பட்டுச் சென்றார்கள் ” (நூல்: புகாரி, முஸ்லிம்)

தெளிவுரை

இது முற்காலத்து பனீ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று மனிதர்களின் வாழ்வில் நடைபெற்ற அபூர்வமான நிகழ்ச்சியாகும். பல படிப்பினைகளையும் தத்துவங்களையும் இது உள்ளடக்கியுள்ளது. தொடர்ந்து படிக்க »

11 -  ஏராளமான நன்மைகளைப் பெறுவது எப்படி?

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருட்பேறும் உயர்வும் மிக்கவனாகிய தம் இறைவன் கூறியதாக அருளினார்கள்: ‘திண்ணமாக அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் பதிவு செய்து விட்டான்’

பிறகு அதற்கு விளக்கம் அளித்தார்கள்: ஒருவன் ஒரு நன்மையை நாடினால் அதனை அவன் செயல்படுத்தாவிட்டால் அல்லாஹ் அதனைத் தன்னிடத்தில் முழுமையானதொரு நன்மையாகப் பதிவு செய்து கொள்கிறான். மேலும் ஒருவன் நன்மை செய்ய நாடி அதனைச் செயல்படுத்தவும் செய்தால் அல்லாஹ் அதனைப் பத்து நன்மைகளாகப் பதிவு செய்து கொள்கிறான். அது எழுநூறு மடங்குகளாக ஏன் அதற்கும் அதிகமாக ஏராளமான மடங்குகளாக அதிகரித்துக் கொண்டு செல்கிறது!

ஒருவன் ஒரு தீமையை நாடினான். ஆனால் அதைச் செய்திடவில்லை என்றால் அல்லாஹ் அதனைத் தன்னிடத்தில் முழுமையானதொரு நன்மையாகப் பதிவு செய்து கொள்கிறான். ஆனால் தீமையை நாடி அதைச் செயல்படுத்தவும் செய்தால் அல்லாஹ் அதனை ஒரேஒரு தீமையாகத்தான் பதிவு செய்கிறான். (நூல் : புகாரி, முஸ்லிம்)

தெளிவுரை

மனிதர்களின் செயல்களை மட்டுமல்ல அவற்றிற்குத் தூண்டுகோலாய் அமையும் நிய்யத்-எண்ணங்களையும் இறைவன் கவனிக்கிறான். அவை ஒவ்வொன்றிற்கும் தனது அறிவு ஞானத்திற்கு ஏற்ப நற்கூலி தண்டனை வழங்குகிறான். இவ்வாறு மனிதனுக்குரிய நன்மை-தீமைகளை இறைவன் பதிவு செய்வது இருவகையாய் உள்ளது.

லவ்ஹுல் மஹ்பூழ் எனும் மூல ஏட்டில் பதிவு செய்தல்

- பேரண்டத்தில் நிகழ்கிற எல்லாவற்றையும் அந்த மூல ஏட்டில் அல்லாஹ் பதிவு செய்கிறான். இதனை குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: ‘திண்ணமாக நாம் ஒவ்வொன்றையும் ஒருகுறிப்பிட்ட விதிமுறையின்படி படைத்திருக்கிறோம்’ (54: 49)

மற்றோரிடத்தில், ‘ஒவ்வொரு சிறிய – பெரிய விஷயமும் எழுதப் பட்டுள்ளது(54: 53) என்று கூறுகிறது.

நன்மைகளையும் தீமைகளையும் – மனிதன் அவற்றைச் செய்கிற பொழுது பதிவு செய்தல்

இவ்விரண்டையும் வேறொரு வார்த்தையில் விளக்குவதானால் இவ்வாறு சொல்லலாம்: ஒன்று முந்தைய பதிவு. மற்றொன்று பிந்தைய பதிவு.

முந்தைய பதிவை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிந்திட முடியாது. அல்லாஹ் நமக்கு நன்மையைப் பதிவு செய்துள்ளானா? தீமையைப் பதிவு செய்துள்ளானா? என்பதை – அவை நிகழும் முன்னர் யாரும் அறிய முடியாது. தொடர்ந்து படிக்க »

10. ஜமாஅத்துடன் தொழுவது கடமையே!

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் ஜமாஅத்துடன் நிறைவேற்றும் தொழுகை, அவர் தனது வீட்டில் தொழும் தொழுகையை விடவும் தனது கடைத்தெருவில் தொழும் தொழுகையை விடவும் இருபதுக்கும் அதிகமான அந்தஸ்துகளைப் பெறுகிறது.

அதற்குக் காரணம், ஒருவர் அழகாக உளூ செய்துகொண்டு பிறகு பள்ளிவாசல் நோக்கி வருகிறார் எனில் – தொழுகையைத் தவிர வேறதுவும் அவரை வெளிக்கிளப்பவில்லை என்றிருந்தால், அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்குப் பகரமாக நிச்சயமாக அவருக்கு ஓர் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்துகிறான். ஒரு குற்றத்தை அவரை விட்டும் அகற்றுகிறான். இது பள்ளிவாசலில் அவர் நுழைவது வரையிலாகும்.

பள்ளிவாசலில் நுழைந்து விட்டாரெனில் – தொழுகை அவரை அங்கு தடுத்து வைத்திருக்கும் காலம் வரையில் அவர் தொழுகையில் ஈடுபட்டிருப்பதாகவே கருதப்படுவார். மேலும் உங்களில் ஒருவர் தான் தொழுத இடத்தில் இருந்து கொண்டிருக்கும் காலமெல்லாம் மலக்குமார்கள் அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்தனை செய்த வண்ணம் இருக்கிறார்கள்: யா அல்லாஹ், இவருக்கு அருள் பொழிந்திடு! இவரது பாவத்தை மன்னித்திடு. இவரது பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றிடு என்று! அந்த இடத்தில் இவர் யாருக்கும் தொல்லை கொடுக்காமலும் உளூ முறியாமலும் இருக்கும் வரையிலாகும் இது” (நூல்: புகாரி, முஸ்லிம்)

தெளிவுரை

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் தொழுகையும் ஒன்று. இது நாள்தோறும் ஐந்து நேரம் கடமையாக்கப்பட்டுள்ளது. இந்தக் கடமையான தொழுகையைப் பள்ளிவாசல் சென்று இமாம் – ஜமாஅத்துடன் சேர்ந்து நிறைவேற்ற வேண்டும். அதாவது ஒருவரை இமாமாக -தலைவராக முன்னிருத்தி அவர் பின்னால் எல்லோரும் அணிவகுத்து நின்று கூட்டான முறையில் நிறைவேற்றுவது கடமை. இத்தகையக் கூட்டுத் தொழுகையின் அவசியத்தையும் சிறப்பையுமே இந்நபிமொழி எடுத்துரைக்கிறது.

இமாம் – ஜமாஅத்துடன் நிறைவேற்றும் ஒரு தொழுகைக்கு இருபது சொச்சம் (மற்றோர் அறிவிப்பின்படி) இருபத்தேழு நன்மைகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில் ஜமாஅத்துடன் தொழுவதென்பது அல்லாஹ் விதித்த முக்கியமானதொரு கடமை. அதனைப் பேணுவதற்கே இத்துணை சிறப்பு!

சிலரிடம் தவறான கருத்தொன்றுள்ளது. அதாவது ஜமாஅத்துடன் தொழுவது கடமையானதல்ல. ஸுன்னத்தானது – சிறப்பானது மட்டுமே என்று வாதிடுகின்றனர். அதற்கு இதுபோன்ற நபிமொழிகளை ஆதாரமாகக் காட்டுகின்றனர். தொடர்ந்து படிக்க »

9. இருவரும் குற்றவாளிகளே!

அபூபக்ரா நுஃபையிப்னு ஹாரிஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ நபி(ஸல்)அவர்கள் அருளினார்கள்: இரண்டு முஸ்லிம்கள் தங்களின் வாட்களைக் கொண்டு மோதிக் கொண்டார்கள் எனில் கொல்பவனும் கொல்லப்படுபவனும் நரகம்தான் செல்வர். நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே! இவனோ கொலை செய்தவன். கொலை செய்யப்பட்டவனின் நிலை என்ன? (அவன் ஏன் நரகம் செல்லவேண்டும்?) அதற்கு நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: நிச்சயமாக அவன் தன் சகோதரனைக் கொலை செய்யப் பெரிதும் ஆசைப்பட்டவனாக இருந்தான்” (நூல்: புகாரி, முஸ்லிம்)

தெளிவுரை

இரண்டு முஸ்லிம்கள் தங்களின் வாட்களைக்கொண்டு மோதிக் கொண்டால்… என்பதன் கருத்து இருவரும் பரஸ்பரம் கொலை செய்யும் எண்ணத்தில் வாளை உருவித் தாக்குதல் தொடுத்தனர் என்பதாகும். வாட்கள் என்று சொல்லப்பட்டிருப்பது ஓர் எடுத்துக்காட்டிற்காகவே! கத்தி, துப்பாக்கி, கைக்குண்டு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவதையும் இது உள்ளடக்கும்.

கொலைக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதத்தைக் கையிலேந்தி முஸ்லிம்கள் இருவர் மோதிக்கொண்டு ஒருவர் மற்றவரைக் கொலை செய்தால், கொன்றவன் -கொல்லப்பட்டவன் இருவருமே நாளை மறுவுலகில் நரக வேதனை எனும் கொடிய தண்டனைக்கு ஆளாக நேரிடும்!

ஆனால் இங்கு ஒரு கேள்வி எழுகிறது: அதாவது கொலை செய்தவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டியதுதான். இதில் நியாயம் உண்டு. ஏனெனில் அவன் வேண்டுமென்றே ஓர் இறை நம்பிக்கையாளனைக் கொலை செய்துள்ளான். அதற்கான தண்டனையிலிருந்து அவன் தப்பிட முடியாதுதான்! குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:

‘ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவன் வேணடுமென்றே கொலை செய்து விட்டால் அவனுக்குரிய தண்டனை நரகமாகும். அதில் அவன் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பான். மேலும் அல்லாஹ் அவன் மீது கோபம் கொண்டான். சபித்தான். மேலும் பெரியதொரு தண்டனையையும் அவனுக்காகத் தயார் செய்து வைத்துள்ளான்.” (4 : 93)

ஆனால் கொலை செய்யப்பட்டவனுக்கு ஏன் தண்டனை, மறுமையில்? இதுபற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினா எழுப்பினார்கள், அபூ பக்ரா (ரலி)- ‘இவனோ கொலை செய்தவன். கொலை செய்யப்பட்டவனும் ஏன் நரகம் செல்ல வேண்டும்?” தொடர்ந்து படிக்க »