ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-5-60)

60. மனித வடிவில் வந்த ஜிப்ரீல்!

ஒரு நாள் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்பொழுது திடீரென ஒருவர் எங்கள் முன் வந்தார். அவருடைய ஆடை அதிக வெண்மையாகவும் தலைமுடி அதிகக் கருமையாகவும் இருந்தது அவரைப் பார்த்தால் பயணத்திலிருந்து வந்தவர் போன்றும் தெரியவில்லை. ஆனால் அதற்கு முன்னர் எங்களில் எவரும் அவரை அறிந்திருக்கவுமில்லை. அவர் நபியவர்களுக்கு எதிரில் உட்கார்ந்தார். தன்னுடைய முழங்கால்களை அவர்களின் முழங்கால்களுடன் இணைத்து வைத்தார். பிறகு தன் கைகளை அவர்களின் தொடைகள் மீது வைத்தார். முஹம்மதே! எனக்கு இஸ்லாத்தைப் பற்றிக் கூறும் எனக் கேட்டார்.

அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை என்றும் முஹம்மத், அல்லாஹ்வின் தூதர் என்றும் நீ சாட்சியம் அளிக்க வேண்டும். இன்னும் தொழுகையை நீ நிலைநாட்ட வேண்டும். மேலும் ஜகாத் வழங்க வேண்டும். ரமளானில் நோன்பு நோற்க வேண்டும். வசதி இருந்தால் கஃபா ஆலயத்திற்குச் சென்று நீ ஹஜ் செய்ய வேண்டும். இந்தச் செயல்களே இஸ்லாம் ஆகும்.

அதற்கு அந்த மனிதர், நீர் உண்மையே உரைத்தீர் என்றார். அவர் கேள்வியும் கேட்கிறார். நபியவர்களின் கூற்றை மெய்யானது என்று உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியந்தோம்.

பிறகு அவர், ஈமான் – நம்பிக்கை பற்றி எனக்கு அறிவித்துத் தாரும் எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: ‘இறைவன் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் மறுமை நாள் மீதும் நல்லது கெட்டது விதியில் எழுதப்பட்டு விட்டன என்றும் நீர் நம்பிக்கை கொள்வதாகும் ஈமான் என்பது’.

அதற்கு அந்த மனிதர் நீங்கள் உண்மையே உரைத்தீர் என்றார்.

பிறகு அவர், இஹ்ஸான் பற்றி எனக்குக் கூறும் என்றார்.

அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: இஹ்ஸான் என்றால், நீர் அல்லாஹ்வைப் பார்த்துக் கொண்டிருக்கும் உணர்வோடு அவனை வணங்குவதாகும். அவ்வாறு நீர் அவனைப் பார்ப்பது போல் வணங்க முடியாவிட்டால், அவன் உம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் (எனும் உறுதியான உணர்வோடு அவனை வணங்க வேண்டும்)

வந்தவர் மீண்டும் – எனக்கு மறுமை நாளைப் பற்றிக் கூறும் என வினவினார்.

அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: கேட்கப்படுபவர் கேட்பவரை விட அதிகமாக அறிந்தவரல்லர்.

பிறகு அவர் மறுமை நாளின் அடையாளங்கள் பற்றிச் சொல்லும் என்றார்.

அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: மறுமை நாளின் அறிகுறிகள் இவையே: அடிமைப் பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாள். மேலும் காலணிகள் அணியாத, (அரை) நிர்வாணமாகத் திரியக் கூடிய, ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் தரித்திரர்கள் பெரிய பெரிய மாளிகைகளில் இருந்து பெருமை அடித்துக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்.

பிறகு அந்த மனிதர் சென்றுவிட்டார். நான் வெகு நேரம் அப்படியே இருந்தேன். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் என்னை நோக்கி, உமரே! இப்பொழுது வந்து சென்றவர் யார் என்பதை நீர் அறிவீரா? என்று கேட்டார்கள். அதற்கு நான் இறைவனும் அவன் தூதரும்தான் நன்கு அறிந்தவர்கள் எனக் கூறினேன்,

அதற்கு நபிவர்கள் கூறினார்கள்: அவர்தான் ஜிப்ரீல். உங்களுக்கு உங்கள் தீனை- இறைமார்க்கத்தைப் போதிக்கவே உங்களிடம் அவர் வந்திருந்தார். (நூல்: முஸ்லிம்)

தெளிவுரை

காலத்தின் அருமை!

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபொழுது திடீரென ஒருவர் எங்கள் முன் வந்தார்.

– நபித் தோழர்கள் அநேக நேரங்களில் நபிகளாருடன் அமர்ந்து உரையாடுவது வழக்கம். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் ஒன்று, வீட்டில் அன்பு மனைவி – மக்களுடன் இருப்பார்கள் அல்லது அருமைத் தோழர்களுடன் இருப்பார்கள்.

வீட்டில் இருந்தாலும் நபியவர்கள் வெறுமனே உட்கார்ந்து நேரத்தை வீணாகக் கழிப்பதில்லை. ஆடு – ஒட்டகங்களில் பால் கறப்பது, கிழிந்த ஆடைகளைத் தைப்பது, பிய்ந்த செருப்புகளைச் செப்பனிடுவது போன்ற ஏதேனும் ஒரு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.

அன்புத் தோழர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தால் இறைமார்க்கப் போதனைகளைத்தான் எடுத்துரைத்துக் கொண்டி ருப்பார்கள். வெளியில் சென்றால் உறவினரைச் சந்திக்கச் செல்வார்கள். அல்லது நோயாளியைப் பார்த்து நலம் விசாரிப்பார்கள். அல்லது ஏதேனும் மக்கள் சேவையில் ஈடுபட்டிருப்பார்கள்.

அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் காலம்நேரம் என்பது வீணாகியதே கிடையாது. வேறு வார்த்தையில் சொல்வதானால் நபியவர்கள் தம் வாழ்நாள் முழுவதையும் அல்லாஹ்வின் பாதையில் -அறபணியில்தான் அற்பணித்திருந்தார்கள்.

இன்று நமது நிலை என்ன? நேரத்தை வீணாக்குது நமது அன்றாடப் பழக்கமாகி விட்டது! ஆச்சரியம் என்னவெனில்; காலம் பொன்னைவிடவும் மதிப்புமிக்கதென்று சொல்லிக் கொண்டே அதை அலட்சியமாகக் கருதி வீணாக்கிக் கொண்டி ருக்கிறோம்! இதனை விடவும் பெரிய இழப்பு வேறென்ன இருக்க முடியும்! இதோ! குர்ஆன் கூறுகிறது:

‘இறுதியில் அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமாயின் இறைவா! நான் விட்டு வந்துள்ள உலகத்திற்கு என்னை மீண்டும் அனுப்பு. அப்படி அனுப்பினால் அங்கு நான் நற்செயல் செய்வேனே என்று கூறத் தொடங்குவான்!’ (23: 99-100) Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-5-60)

உலகில் மனிதன் புரியும் பாவங்களிலேயே மிகப்பெரியது, அல்லாஹ்வுக்கு இணை வைத்தலே!

“ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் தூதர்களை அனுப்பி இருக்கிறோம்। (அத்தூதர்கள் அச்சமுகத்தவர்களிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள் (ஷைத்தான்களாகிய) தாகூத்துகளிடமிருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.” (அந்நஹ்ல்: 36)

“உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம்முடைய தூதர்களிடம் அர்ரஹ்மானையன்றி வணங்கப்படும் வேறு தெய்வங்களை நாம் ஆக்கியிருந்தோமா? என்று கேட்பீராக!.” (அல்ஜுக்ருஃப்: 45)

“எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அப்பொழுது அவன் வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனைக் கொத்திக்கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்)காற்று அவனை வெகுதூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துச் சென்றதைப் போன்றோ இருக்கின்றான்.” (அல்ஹஜ்: 31)

“நிச்சயமாக அல்லாஹ் இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான்.” (அந்நிஸா: 48)

“மனிதர்களே! நீங்கள் உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம்.’ (அல்பகரா: 21) Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Tagged , , , , , | Comments Off on உலகில் மனிதன் புரியும் பாவங்களிலேயே மிகப்பெரியது, அல்லாஹ்வுக்கு இணை வைத்தலே!

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-5)

பாடம்-5 இறைக் கண்காணிப்பு

அல்லாஹ் கூறுகிறான்: – ‘அவன் எத்தகையவன் எனில் (நபியே) நீர் எழுகிறபோதும் அவன் உம்மைப் பார்க்கிறான். மேலும் சிரம் பணிந்து வணங்குவோரிடையே உமது அசைவையும் பார்க்கிறான்’ (26 :218-219)

மற்றோர் இடத்தில், ‘நீங்கள் எங்கிருப்பினும் அவன் உங்களுடன் இருக்கிறான்’ (57:4)

இன்னோர் இடத்தில், ‘நிச்சயமாக பூமியிலும் வானத்திலும் உள்ள எப்பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததன்று’ (3 :5)

பிறிதோர் இடத்தில், ‘திண்ணமாக உம் இறைவன் குறிவைத்துக் காத்துக் கொண்டிருக்கிறான்;’ (89:14)

வேறோர் இடத்தில், ‘கண்களின் கள்ளத்தனங்களையும் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பவற்றையும் அவன் அறிகிறான்;(40 :19)

இந்தப் பாடத்தில் எல்லோருக்கும் தெரிந்த இன்னும் அனேக குர்ஆன் வசனங்கள் உள்ளன.

தெளிவுரை

எண்ண ஓட்டங்களையும் இறைவன் அறிவான்!

அல் முறாக்கபா எனும் அரபிச் சொல்லுக்கு கண்காணித்தல் என்று பொருள். அதாவது, அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்றும், சொல், செயல்களையும் உள்ளத்தில் நிழலாடும் எண்ணங்களையும் அறிகிறான் என்றும் உறுதி கொள்வதற்கே முறாக்கபா எனப்படும்.

இப்னு கையிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் அகத்தையும் புறத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று ஒரு மனிதன் உறுதியாகவும் தெளிவாகவும் சதாவும் அறிந்து உணர்ந்த கொண்டிருக்கும் நிலைக்கே முறாக்கபா என்று சொல்லப்படும்.

இறைக் கண்காணிப்புக்கு ஆதாரமாக குர்ஆனில் பல வசனங்களை இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கொண்டு வந்துள்ளார்கள். அவற்றின் சுருக்கமான விளக்கத்தைப் பார்ப்போம்.

முதல் வசனம்: ‘மேலும் (நபியே) நீர், வல்லமை மிக்கவனும் பெரும் கிருபையாளனுமாகிய அல்லாஹ்வையே முழுவதுஞ் சார்ந்திருப்பீராக! அவன் எத்தகையவன் எனில் நீர் எழுகிற பொழுதும் உம்மை அவன் பார்க்கிறான். சிரம் பணிந்து வணங்குவோரிடையே உமது அசைவையும் பார்க்கிறான். திண்ணமாக அவன் யாவற்றையும் செவியுறுபவன். நன்கறிபவன்.’ (26:218 -219) Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-5)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-4-56)

56. அந்த நபி உண்மை பேசுமாறு ஏவுகிறார்!

அபூ ஸுப்யான் (ரலி) அவர்கள் ஹிர்கல் மன்னனின் கதை தொடர்பான தமது நீண்ட செய்தியில் அறிவிக்கிறார்கள்: ‘உங்களுக்கு அவர் அதாவது நபிகளார் (ஸல்) அவர்கள் எதனை ஏவுகிறார்? என்று ஹிர்கல் மன்னர் கேட்டார். நான் சொன்னேன்: அவர் கூறுவது இதுதான்:

அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள். வேறெந்தப் பொருளையும் அவனுக்கு இணையாக்காதீர்கள். மேலும் உங்கள் மூதாதையர் சொல்வதை விட்டுவிடுங்கள். மேலும் தொழுகை, உண்மை, பத்தினித்தனம், பந்தபாசம் ஆகியவற்றை மேற்கொள்ளுமாறும் எங்களுக்கு அவர் ஏவுகிறார்!’ (புகாரி, முஸ்லிம்)

தெளிவுரை

நபிகளார் (ஸல்) அவர்களைப் பற்றி தமக்கும் ஹிர்கல் மன்னனுக்கும் நடந்த உரையாடலை இங்கு நினைவு கூர்கிறார் அபூ ஸுப்யான் (ரலி) அவர்கள்! அப்பொழுது அவர் முஸ்லிமாக இல்லை. அவர் இஸ்லாத்தை ஏற்றது பின்னாட்களில் தான்! அதாவது ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கும் மக்கா வெற்றிக்கும் இடைப்பட்ட காலத்தில் தான் அபூ ஸுப்யான் இஸ்லாம் மார்க்கம் ஏற்றார்!

ஹிஜ்ரி 6 ம் ஆண்டு ஹுதைபிய்யா உடன்படிக்கை நடைபெற்ற பிறகு நபி (ஸல்)அவர்கள், இஸ்லாத்தை ஏற்குமாறு அண்டை நாடுகளின் மன்னர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதன்படி ரோம் நாட்டு மன்னர் ஹிர்கல் என்பாருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது! அதனைப் படித்துப் பார்த்த பிறகே நபிகளார் (ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்கும் எண்ணம் ஹிர்கல் மன்னருக்கு வந்தது!

மக்காவாசியான அபூஸுப்யான் அப்பொழுது வியாபாரம் தொடர்பாக ஷாம் தேசம் வந்திருந்தார். அவருடன் குறைஷிகளின் வாணிபக் கூட்டத்தினர் சிலரும் இருந்தனர். அதே காலகட்டத்தில் ஜெரூஸலம் வருகை தந்த ஹிர்கல் மன்னர், பைத்துல் முகத்தஸில் முகாமிட்டிருந்தார். ஹிஜாஸ் பகுதியிலிருந்து அரபுகள் சிலர் வந்திருப்பதைக் கேள்விப்பட்டதும் அந்த அரபுகளிடம் நபிகளார் (ஸல்)அவர்களைப் பற்றி விசாரிக்கலாமெனக் கருதி அவர்களை அழைத்து வருமாறு மன்னர் கட்டளையிட்டார்! அதன்படியே அபூ ஸுப்யானும் அவருடனிருந்த அரபுகளும் அரச தர்பாருக்கு வந்தனர். Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-4-56)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-4-55)

55. உண்மையே உள்ளத்தின் அமைதி!

ஹஸன் பின் அலீ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் மனப்பாடம் செய்துள்ளேன்: ‘உன்னைச் சந்தேகத்தில் ஆழ்த்தக் கூடியதை விட்டுவிட்டு சந்தேகமில்லாததைச் செய்திடு! ஏனெனில் உண்மையே உள்ளத்தின் அமைதியாகும். பொய்தான் சஞ்சலத்தை ஏற்படுத்தக்கூடியது!’ ( திர்மிதி)

உன்னைச் சஞ்சலத்தில் ஆழ்த்தக்கூடியது என்பதன் பொருள் : இது ஹலால் (ஆகுமானது)தானா என்று நீ சந்தேகப்படுவதை விட்டுவிட்டு அப்படிச் சந்தேமில்லாததன் பக்கம் சென்றிடு!

தெளிவுரை

இமாம் நவவி (ரஹ்) அவர்களின் நாற்பது நபிமொழிகள் எனும் நபிமொழித் தொகுப்பிலும் இது இடம்பெற்றுள்ளது.

இரத்தினச் சுருக்கமான வார்த்தைகளைத் தாங்கியுள்ள இந்நபிமொழியில் ஆழிய கருத்துகள் பயனுள்ள வகையில் அமைந்திருப்பதைக் காணலாம்! அது வழங்கும் மிக முக்கியமான வழிகாட்டல் நமது ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும்! பேணுதலான நடைமுறை என்பது தான் அந்த வழிகாட்டல்! ஓருசெயல் ஹராமா, ஹலாலா (அதாவது இது தடை செய்யப்பட்டதா, அனுமதிக்கப்பட்டதா?) என்று ஐயம் வந்துவிட்டால் அதை விட்டுவிட வேண்டும். அதிலிருந்து விலகிட வேண்டும். அதுவே பேணுதலான முறை! தூய்மைக்கான வழிகாட்டல்! மேலும் ஹராம் தவிர்த்த சாதாரணமான விஷயங்களிலும் மிகத் தெளிவான நிலைப்பாட்டைக் கொடுக்கக் கூடியதும் இதுவே! Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-4-55)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-4-54)

54. உண்மையாளரின் உயர் அந்தஸ்து!

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச் செயல் சுவனம் செல்ல வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒருமனிதன் உண்மையே பேசிக் கொண்டிருகிறான். இறுதியில் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்!

மேலும் திண்ணமாக பொய் என்பது தீமை செய்ய வழிகாட்டுகிறது. தீமை செய்வது நரகத்திற்கு வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒருமனிதன் பொய் பேசிக் கொண்டிருக்கிறான். இறுதியில் அல்லாஹ்விடத்தில் மகாப் பொய்யன் என்று எழுதப்படுகிறான்! (நூல்: புகாரி, முஸ்லிம்)

தெளிவுரை

இந்நபிமொழி, ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ள அறிவிப்பின்படி – ‘உண்மையைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று தொடங்குகிறது. உண்மை பேசுவதன் சிறப்பு, அதன் நல்முடிவு குறித்து இந்நபிமொழி எடுத்துரைக்கிறது. பொய் பேசுங்கள். அப்பொழுது தான் உலகில் வாழ முடியும். பொய் பேசினால்தான் எதுவொன்றிலும் நல்ல லாபம் ஈட்டலாம் என்று சிலர் சொல்லலாம்! ஆனால் பொய் பேசிச் சம்பாதிக்கும் பணத்தில் எந்த அபிவிரித்தியும் கிடையாது. பொய் பேசிச் சம்பாதிக்கும் செல்வம் தற்காலிகமானது – சீக்கிரம் அழியக் கூடியது என்பது மட்டுமல்ல, நம்மை நீடித்த அழிவில் ஆழ்த்தக் கூடியதும் கூட! உண்மை பேசுவது தான் நிலையான லாபத்திற்கும் நன்மைக்கும் வழிவகுக்கக்கூடியது!

முன்னர் கூறியதுபோன்று – பொய்யான சொல் என்பது போல் பொய்யான செயல் என்றும் கூறப்படும்!. பொய்யான செயலுக்கு நயவஞ்சகனின் செயல் எடுத்துக்காட்டாகும். நயவஞ்சகன் தன்னை ஓர் விசுவாசியென வெளிக்காட்டிக் கொள்கிறான். எல்லோருடன் சேர்ந்து அவனும் தொழுகிறான். நோன்பு நோற்கிறான். செல்வத்தை எடுத்து இறைவழியில் செலவும் செய்கிறான்! அவன் ஹஜ் செய்வதைக் கூட காணலாம்! Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-4-54)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-4)

உண்மை

அல்லாஹ் கூறுகிறான்: ‘இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும் உண்மையாளர்களுடன் இணைந்திருங்கள்!’ (9:119)

வேறோரிடத்தில், ‘…உண்மை பேசக்கூடிய ஆண்களும் பெண்களும்…(33:35)

இன்னோர் இடத்தில், ‘அல்லாஹ்விடம் அவர்கள் அளித்த வாக்குறுதியில் உண்மையாளர்களாய் அவர்கள் நடந்திருந்தால் அது அவர்களுக்கு நல்லதாய் இருந்திருக்கும்!’ (47:21)

தெளிவுரை

அகராதியில் உண்மை (ஸித்க்) எனும் சொல்லின் பொருள், ஒருசெய்தி யதார்த்தத்திற்கு ஒத்திருத்ததல் என்பதாகும். நீங்கள் அறிவிக்கும் செய்தி யதார்த்தத்தில் நடைபெற்றிருந்தால் அது உண்மைச் செய்தியே! எடுத்துக்காட்டாக, இன்று வெள்ளிக்கிழமை என்று நீங்கள் அறிவிக்கும்பொழுது யதார்த்தத்தில் அது வெள்ளிக்கிழமையாக இருந்தால் அது உண்மைச் செய்தி!

இது சொல்லால் வெளிப்படுத்தும் செய்தியின் நிலை!

இதேபோன்றுதான் செயல் மூலம் வெளிப்படுத்தும் செய்தியும்! அதாவது ஒரு மனிதனின் செயல் யதார்த்தத்திற்கும் அவனது உள்ளத்து எண்ணத்திற்கும் ஒத்திருந்தால் அது உண்மையாகும்! எனவே முகஸ்துதிக்காகச் செயல்படுபவன் உண்மையாளன் அல்லன். ஏனெனில் அவன் தன்னை ஒரு வணக்கசாலியாகக் வெளிக்காட்டுகிறான். ஆனால் அவனது உள்ளத்து நிலை அதற்கு முரண்படுவதால் உண்மையான வணக்கசாலியாக அவன் திகழமுடியாது!  Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-4)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-53)

53. எதிரிகளைக் களத்தில் சந்திக்க ஆசைப்படாதீர்கள்

ஹதீஸ் 53. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எதிரிகளைச் சந்தித்த (யுத்த) நாட்களில் ஒருநாளன்று சூரியன் மேற்கில் சாயும் வரையில் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பிறகு எழுந்து கூறினார்கள்: ‘ஓ, மனிதர்களே! எதிரிகளை(க் களத்தில்) சந்திப்பதற்கு ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் சுக வாழ்வைக் கேளுங்கள். ஆனால் எதிரிகளைச் சந்திக்கும்படியானால் பொறுமையை மேற்கொள்ளுங்கள். மேலும் நிச்சயமாக வாட்களின் நிழலின் கீழ்தான் சுவனம் உள்ளதென்பதை அறிந்து கொள்ளுங்கள்! பிறகு இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்: யா அல்லாஹ்! வேதங்களை இறக்கியருளியவனே! மேகங்களை ஓட்டுபவனே! அடர்ந்துவந்த எதிரணியினரைத் தோல்வி அடையச் செய்தவனே! எதிரிகளைத் தோல்வி அடையச் செய்வாயாக! அவர்கள் மீது எங்களுக்கு வெற்றியைத் தருவாயாக! (நூல்: புகாரி, முஸ்லிம்)

தெளிவுரை

நபி(ஸல்) அவர்கள் மாலை நேரத்தை எதிர்பார்த்ததற்குக் காரணம், பகலின் வெப்பம் சற்றுத் தணிந்து நிழல்கள் வளர்ந்து குளுமை கிடைக்க வேண்டும் என்பதுதான்! அப்பொழுதுதான் மக்களுக்கு உற்சாகம் பிறக்கும். முழு ஈடுபாட்டுடன் போரில் அவர்கள் இறங்குவதற்கு வசதியாக இருக்கும்!

போர்ச் சூழ்நிலையை முன்னிட்டு மக்களிடையே சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். நபிகளார்(ஸல்) அவர்கள்! ஜும்ஆ நாளின் நிரந்தரமான சொற்பொழிவுகளுக்கிடையே – இந்த நபிமொழியில் குறிப்பிடப்பட்டது போன்று தற்காலிக உரைகளையும் அவர்கள் நிகழ்த்தியதுண்டு! இத்தகைய தற்காலிக உரைகளும் நபித்தொகுப்புகளில் எராளம் பதிவாகியுள்ளன!

‘எதிரிகளை(க் களத்தில்) சந்திப்பதற்கு ஆசைப்படாதீர்கள்’

அதாவது, எதிரிகளுடன் மோதவும் போர்ச்சூழ்நிலை உருவாகி இரத்தக் களறியை ஏற்படுத்தவும் ஆசைப்படுவது யாருக்கும் அழகல்ல. யா அல்லாஹ்! எதிரிகளுடன் எங்களை மோதச் செய்வாயாக என்று பிரார்த்தனை செய்வது ஏற்புடையதல்ல! யா அல்லாஹ்! அச்சமற்ற- அமைதி வாழ்வைக் கொடு என்றுதான் பிரார்த்தனை செய்ய வேண்டும்!

‘ஆனால் எதிரிகளைச் சந்திக்கும்படியானால் பொறுமையை மேற்கொள்ளுங்கள்’

பொறுமையின் இந்த அறிவுரைக்காகத்தான் இந்த நபிமொழியை இந்தப் பாடத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள், இமாம் நவவி (ரஹ்) அவர்கள்!

கருத்து இதுதான்:
எதிரிகளைச் சந்தித்தாக வேண்டிய – போர் புரிந்தாக வேண்டிய சூழ்நிலை வந்தால் பொறுமையைக் கைவிட்டு விடக்கூடாது. இப்புவியில் இறைமார்க்கத்தை மேலோங்கச் செய்யும் உயர் இலட்சியத்தை மனத்தில் ஏந்தி, பொறுமையுடனும் உறுதியுடனும் போர் புரியத்தான் வேண்டும். பொறுமையாளர்களுக்கு உதவியும் வெற்றியும் நல்குவதாக அல்லாஹ் வாக்குறுதி அளித்துள்ளான்!

‘நிச்சயமாக வாட்களின் நிழலின் கீழ்தான் சுவனம் உள்ளதென்பதை அறிந்துகொள்ளுங்கள்!’

அதாவது, இறைவழிப் போராளி ஏந்திச் செல்லும் வாட்களின் நிழலின் கீழ்தான் சுவனம் உள்ளது. இதோ! இறைமார்க்கத்தின் வெற்றிக்காகக் களமிறங்கும் அவர் அதிலேயே மரணத்தைச் சந்திக்க நேரிட்டு விட்டால் இன்ப வாழ்வும் அருட்பேறுகளும் நிறைந்த சுவனபதி செல்லக்கூடிய மேன்மக்களில் ஒருவராக அழைத்துக் கொள்ளப்படுகிறார்!

அல்லாஹ் கூறுகிறான்:‘இறைவழியில் கொல்லப்படுகிறவர்களை இறந்தவர்களாக ஒருபோதும் கருதாதீர்கள். உண்மையில் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். தங்கள் இறைவனிடம் இருந்து தங்களுக்குரிய வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் தன்னருளில் இருந்து தங்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்! தங்களுக்குப் பின் உலகில் வாழ்ந்துவருகிற – இன்னும் தங்களுடன் வந்து சேராதிருக்கும் இறைநம்பிக்கையாளர்கள் குறித்து-அவர்களுக்கு எத்தகைய அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள் என்று இவர்கள் மன நிறைவு பெறுகிறார்கள். அல்லாஹ் அளித்த கொடையினாலும் அருளினாலும் அவர்கள் அக மகிழ்வுடன் இருக்கிறார்கள். மேலும் திண்ணமாக அல்லாஹ் விசுவாசிகளின் கூலியை வீணாக்க மாட்டான் என்பதாலும்! (3 : 169 -171) Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-53)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-51-52)

51, 52. நல்ல ஆட்சியாளர்கள் கிடைக்க வேண்டுமெனில்…!

ஹதீஸ் 51. இப்னு மஸ்ஊத்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘நிச்சயமாக என(து வாழ்நாளு)க்குப் பிறகு (உங்களுக்கு உரிமைப் பறிப்பு ஏற்படும் வகையிலான) சுயநலப் போக்கும் நீங்கள் வெறுக்கக்கூடிய வேறு சில காரியங்களும் நடைபெறும்!’ தோழர்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! அப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென எங்களுக்குக் கட்டளையிடுகிறீர்கள்? நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்கள் மீதுள்ள கடமையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். மேலும் உங்களுக்குச் சேர வேண்டிய உரிமைகளை அல்லாஹ்விடம் நீங்கள் கேட்க வேண்டும்!’ நூல்: புகாரி, முஸ்லிம்

அல் அஃதரா: ஒன்றைத் தனதாக்கிக் கொள்வது. உரிமையுள்ளவர்களின் உரிமையைப் புறக்கணித்து விட்டு!

ஹதீஸ் 52. உஸைத் பின் ஹுளைர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘மதீனத்து அன்ஸாரித் தோழர்களில் ஒருவர் கேட்டார்: அல்லாஹ்வின் தூதரே! இன்ன மனிதரை அதிகாரியாக நீங்கள் நியமித்தது போன்று என்னையும் அதிகாரியாக நியமிக்கக்கூடாதா? அதற்கு நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: என(து வாழ்நாளு)க்குப் பிறகு (உங்கள் உரிமைகளைப் புறக்கணிக்கும் வகையிலான) சுயநலப் போக்கை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும். அப்போது பொறுமையை மேற்கொள்ளுங்கள். (மறுமை நாளில்) தடாகத்தின் அருகே என்னை நீங்கள் சந்திக்கும் வரையில்!’ நூல்: புகாரி, முஸ்லிம்

தெளிவுரை

இவ்விரு நபிமொழிகளும் எதிர்காலத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்களிடம் தலைதூக்கும் சர்வாதிகாரப் போக்கு குறித்து எச்சரிக்கை செய்வதுடன் அந்தச் சூழ்நிலைகளில் பொறுமை மேற்கொள்ள வேண்டுமென நற்போதனையும் தருகின்றன! இதனால்தான் இவ்விரு நபிமொழிகளையும் இந்தப் பாடத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள் இமாம் நவவி (ரஹ்) அவர்கள்!

கருத்து இதுதான்: பிற்காலத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்களின் வாழ்க்கைப் போக்கில் பெரும் வீழ்ச்சி ஏற்படும். நபிகளார்(ஸல்) அவர்களும் நேர்வழி பெற்ற கலீஃபாக்களும் விட்டுச் சென்ற- நீதிநெறிமிக்க உயரிய பண்பாடுகளையும் உன்னத நெறிகளையும் அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்! பொதுமக்களின் சொத்துக்களைத் தன்னிச்சையாகக் கையாளுவார்கள்! முஸ்லிம்களுக்குச் சேர வேண்டிய உரிமைகளை தமதாக்கிக் கொள்வார்கள்! Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-51-52)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-50)

50. உமர்(ரலி) அவர்களின் உயர் பண்பு!

ஹதீஸ் 50. இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘உயைனா இப்னு ஹிஸ்ன் என்பார் (மதீனா) வந்து தன்னுடைய சகோதரர் மகனாகிய ஹுர்ரு பின் கைஸ் என்பாரிடம் தங்கியிருந்தார். உமர்(ரலி) அவர்கள் யார் யாரையெல்லாம் தங்களது அவையில் நெருக்கமான அந்தஸ்தில் வைத்திருந்தார்களோ அத்தகைய நபர்களுள் ஹுர்ரும் ஒருவர். குர்ஆனை கற்றறிந்த அறிஞர்கள்தான் உமர்(ரலி) அவர்களது அவைத் தோழர்களாகவும் ஆலோசகர்களாவும் இருந்தனர். அவர்கள் பெரிய வயதுடையவர்களாயினும் இளைஞர்களாயினும் சரியே! தன் சகோதரர் மகனிடம் உயைனா சொன்னார்: ‘மகனே! இந்த அமீரிடத்தில் உனக்கு செல்வாக்குள்ளது. எனவே அவரைச் சந்திப்பதற்கு எனக்கு அனுமதி வாங்கிக் கொடு!’அவ்வாறே அவர் அனுமதி கேட்டார். உமர்(ரலி) அவர்களும் அனுமதி கொடுத்தார்கள்.

உமர்(ரலி) அவர்களின் சமூகத்தில் உயைனா வந்தபொழுது சொன்னார்: ‘இதோ! கத்தாபின் மகனாரே! நீர் எங்களுக்கு அதிக மானியம் கொடுப்பதில்லை. மேலும் எங்களிடையே நீதியுடன் தீர்ப்பு அளிப்பதில்லை!’ (இதனைக் கேட்டதும்) உமர்(ரலி) அவர்கள் அதிகஅளவு கோபம் கொண்டு அவரைத் தண்டிக்கவே முனைந்து விட்டார்கள்!

அப்பொழுது உமர்(ரலி) அவர்களிடம் ஹுர்ரு சொன்னார்: ‘அமீருல் முஃமினீன் அவர்களே! (குர்ஆனில்) அல்லாஹ் தன்னுடைய நபியை நோக்கிக் கூறுகிறான்: (நபியே! மக்களிடத்தில்) மென்மையையும் மன்னிக்கும் போக்கையும் மேற்கொள்வீராக! நன்மை புரியுமாறு ஏவுவீராக. மேலும் அறிவீனர்களை விட்டும் விலகியிருப்பீராக! (7 : 199) – இந்த மனிதரும் அறிவீனர்களில் ஒருவர்தானே!’ – அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த வசனத்தை அவர் ஓதிக்காட்டியபொழுது உமர்(ரலி) அவர்கள் அதை மீறிச் செல்லவில்லை! அவர்கள் இறைவேதத்தின் வரம்புக்குக் கட்டுப்படுபவர்களாய்த் திகழ்ந்தார்கள்!’ நூல்: புகாரி

தெளிவுரை

இரண்டாம் கலீஃபா உமர்(ரலி) அவர்களைப் பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்நிகழ்ச்சியை இமாம் நவவி (ரஹ்) அவர்கள் பொறுமை பற்றிய இந்தப் பகுதியில் கொண்டு வந்துள்ளார்கள்!

நீதிக்கும் நேர்மைக்கும் புகழ் பெற்றவர்கள் உமர்(ரலி) அவர்கள்! சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் பண்பும் அதன் முன் பணியும் இயல்பும் அவர்களிடம் மிகுந்திருந்தன! அவர்களது வாழ்க்கை வரலாற்றில் பல்வேறு நிகழ்ச்சிகள் இதற்குச் சான்று பகன்று கொண்டிருப்பதைக் காணலாம்! ஒரு தடவை ஒருபெண்மணி குர்ஆனின் வசனத்தை ஓதிக்காட்டி நினைவூட்டியபொழுது உடனே உமர்(ரலி) அவர்கள் அதன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்கள் எனும் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானதே! அத்தகைய சான்றுகளுள் ஒன்று தான் இங்கு கூறப்பட்ட இந்நிகழ்ச்சியும்! Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-50)