அத்தியாயம்-2 இறைத்தூது.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டிடுவான் வேண்டி எண்ணற்ற நபிமார்களை அனுப்பி வைத்தான். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழிகாட்டி – இறைத்தூதர் அனுப்பப்பட்டுள்ளார். இறைவனின் தூதர்கள் அத்தனை பேரும் சீரிய ஒழுக்கங்களின் சிகரங்களாய் திகழ்ந்தனர். அவர்களை இறைவன், தனது வழிகாட்டுதலை மனிதர்களுக்கு வழங்குவதற்காக பயிற்றுவித்தான். அவர்களது நேர்மை, நாணயம், அறிவின் ஆழம் இவைகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவைகளாக இருந்தன. அவர்கள் இறைவனின் வழிகாட்டுதல்களை மீறி நடந்ததே இல்லை. இந்த வகையில் அவர்கள் பாவங்களே செய்தவர்களல்ல எனக் கொள்ளலாம். ஆனால் அவர்களும் மனிதர்கள் என்ற வகையில் தங்களை அறியாமல் சில தவறுகளைச் செய்திருக்கலாம். சில முடிவுகளில் அவர்கள் தவறி இருக்கலாம். ஆனால் அவர்கள் இறைவன் வகுத்துத் தந்த வரையறைகளை மீறியதே கிடையாது.

இறைவன், இறைதூதர்களை அனுப்பி இருப்பது பூமிக்கும், சுவர்க்கத்திற்கும் இடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்துகின்றது. அதேபோல் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகின்றது. இறைவன் இறைத்தூதர்களை அனுப்பி இருப்பது மனிதனை மாற்ற முடியும், அவனை பண்புடையவனாக ஆக்கிட முடியும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இன்னும், மனிதனிடம் தீமைகளை செய்யும் பண்புகளைவிட, நன்மையைச் செய்யும் பண்புகளே அதிகமாக இருக்கின்றன என்று பொருள்.

மனிதன் இயற்கையாகவே அறிந்திருப்பவற்றை உறுதிபடுத்திடுவது, அவனால் இன்னும் என்னென்னவற்றை புதிதாகத் தெரிந்திட முடியுமோ அவற்றை அறிவிப்பது, அவனுக்கு தெரியாதவற்றை தெரியத்தருவது இவைகளே இறைத்தூதின் நோக்கமாகும். மனிதனுக்காக இறைவன் தரும் நேரிய பாதையை அவனுக்கு தெரிவிப்பது இறைத்தூதின் இலட்சியமாகும். மனிதனை நன்மை செய்யத் தூண்டுவதும், தீமையைச் செய்வதிலிருந்து தடுப்பதும் இறைத்தூதின் இனியப் பணியாகும். Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-2 இறைத்தூது.

அத்தியாயம்-2 இறையச்சம்.

நன்மையான செயல்  – நல்லன செய்தல், (ஈமான்) நம்பிக்கை, இவைகளின் கீழ் விவாதித்தவை இறையச்சத்திற்கும் பொருந்தும். இறையச்சம் எனப்படுவது வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல. அல்லது நமது வசதிக்குத் தக்கப்படி வைத்துக்கொண்டதும் அல்ல. இறையச்சம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இங்கேயும் திருக்குர்ஆனே நமது முதல் ஆதாரமாக பயன்படும். திருக்குர்ஆன் இறையச்சம் மிக்கோரைப்பற்றி குறிப்பிடும்போது: “(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள். இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள். இன்னும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள். மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (திருக்குர்ஆன்: 2:3-5)

(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள். தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். தவிர, மானக்கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும். உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள். அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், சுவனபதிகளும் ஆகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும். அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர். இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது. (திருக்குர்ஆன்: 3:134-136) Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-2 இறையச்சம்.

அத்தியாயம்-2 நேர்மை (பிர்ரு) நற்செயல்கள்.

எந்தவிதமான பற்றும் பிடிப்பும் இல்லாமல் வைக்கப்படும் நம்பிக்கையை இஸ்லாம் வெறுக்கின்றது. வெற்றுச் சடங்குகளையும் வீண் சம்பிரதாயங்களையும் இஸ்லாம் மறுக்கின்றது. செயலில் வராத நம்பிக்கையை இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை.

(நேர்மை) – நற்செயல்கள் என்றால் என்ன என்பதை திருக்குர்ஆனின் ஒரு வசனம் தெளிவாக விளக்குகின்றது.

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல். இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல் (இவையே புண்ணியமாகும்). இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும், (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள். இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்). (திருக்குர்ஆன்: 2:177)

நன்மையை செய்பவர்கள் யார்? நேர்மையானவர்கள் யார்? என்பதை திருக்குர்ஆனின் மேலே எடுத்துத் தந்துள்ள வசனம் தெளிவாக விளக்கியுள்ளது. அவன் இறை வணக்கங்கள் அனைத்தையும் நிறைவாக நிறைவேற்றிட வேண்டும். இறைவனையும், இதர சகோதரர்களையும் அவன் இறைவனின் திருப்தியையும், மகிழ்ச்சியையும் பெறுவதற்காகவே நேசித்திட வேண்டும். இங்கு நான்கு பண்புகள் கவனிக்கப்பட வேண்டும். Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-2 நேர்மை (பிர்ரு) நற்செயல்கள்.

அத்தியாயம்-2 சில அடிப்படை கோட்பாடுகள்.

நம்பிக்கை: (ஈமான்)

இறைவன் ஒருவனே என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என்றும் நம்புகின்றவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்று நம்மில் பலர் எண்ணலாம். ஆனால் நம்பிக்கை (ஈமான்) என்பது இத்துணை குறுகியதன்று. அது இதனினும் விசாலமானது.

ஈமான் என்பது சில சடங்கு, சம்பிரதாயங்களின் தொகுப்பல்ல. பெயரளவில் வைக்கப்படுகின்ற நம்பிக்கை ஈமானாகி விடாது. ஈமான் அல்லது நம்பிக்கை என்பது செயலில் நிலைநிறுத்தப்படுகின்ற ஒன்று. நேரான நடத்தையின் மூலமே ஈமானின் நிறைவான நிலையை அடைய முடியும்.

ஈமான் என்றால் என்ன? ஈமானின் நிலைகள் என்னென்ன? எந்தெந்த அடிப்படைகளின் மூலம் நல்ல ஈமானை நாம் நம்முள் உருவாக்கிக் கொள்ள முடியும் என்பனவற்றிற்கு திருக்குர்ஆனும் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வும், வாக்கும் நல்ல இலக்கணங்களை வகுத்துத் தந்திருக்கின்றன.

இந்த வகையில் உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால்: Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-2 சில அடிப்படை கோட்பாடுகள்.

அத்தியாயம்-1 அடிப்படை நம்பிக்கைகள் (பகுதி-2)

11. இறைவன் தந்திருக்கின்ற வழிகாட்டுதல்களைக் கொண்டு, மனிதன் தன்னுடைய ஈடேற்றத்திற்கு தானே முயற்சிகளை மேற்கொண்டு வழிதேடிக் கொள்ள வேண்டும் என்று ஒரு உண்மையான முஸ்லிம் நம்புகின்றார்.

ஒருவர் தான் ஈருலக வாழ்விலும் வெற்றி பெறவேண்டும் என்றால் அவர் தனது நம்பிக்கை, செயல், நடைமுறை இவைகள் அனைத்தையும் ஒன்றாகக் கொண்டு முயற்சிக்க வேண்டும். செயலில் இல்லாத நம்பிக்கை, நம்பிக்கை இல்லாத செயலைப்போன்று குறையுடையதாகும். இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒருவன் இறைவனிடத்தில் வைக்கின்ற நம்பிக்கையை அவன் தனது அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்தினாலன்றி அவன் ஈடேற்றமடைய முடியாது.

இஃது நம்பிக்கையின் ஏனைய பகுதிகளோடு ஈமானின் பிற பகுதிகளே முற்றாக பொருந்திப் போகின்றது. இறைவன் வெறும் வார்த்தைகளை மட்டும் பார்ப்பதில்லை என்பதையே இது காட்டுகின்றது. இன்னும், நம்பிக்கையை செயல்படுத்துவதில் உண்மையான நம்பிக்கையாளர் எவரும் அலட்சியமாக இருந்து விட முடியாது. அதோடு ஒருவர் இன்னொருவருக்காக செயல்படவோ அல்லது அவருக்காக இறைவனிடத்தில் முறையிடவோ முடியாது என்பதையும் இது காட்டுகின்றது. (சான்றாக திருக்குர்ஆனின் 10:9-10, 18:30, 103:1-3 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.)

12. இறைவன், மனிதனுக்கு நேரிய வழியை காட்டியிருந்தாலன்றி அவனை அவனது செயல்களுக்கு பொறுப்பேற்கும்படி பணிக்கமாட்டான் என்பதை ஒரு உண்மையான முஸ்லிம் நம்புகின்றார்.

இதனால் தான் இறைவன் பல தூதர்களையும், வேத வெளிப்பாடுகளையும் அனுப்பினான். மனிதனுக்கு நேர்வழியை காட்டுவதற்கு முன்பும், எச்சரிக்கை கொடுப்பதற்கு முன்பும் தண்டனைகள் வழங்கப்பட மாட்டாது என்றும் இறைவன் தெளிவாக்கியிருக்கின்றான்.

இறைவனுடைய வழிகாட்டுதல்களை அறியாதவர்களும், இறைத்தூதர்களை அறியாதவர்களும், புத்தி சுவாதீனமில்லாதவர்களும் இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படியத் தவறி விட்டால், அதற்காக அவர்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை. இறைவன் அவர்களை பொறுப்பாளிகளாக ஆக்குவதில்லை. இவர்கள் தங்களுடைய பொதுஅறிவு சொல்கின்றவற்றை செய்யாது விட்டால், அதற்காக மட்டுமே பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால் இறைவனின் சட்டங்களை, கட்டளைகளை, அவனது வழிகாட்டுதல்களைத் தெரிந்திருந்தும் மீறுகின்றவர்கள் தண்டிக்கப்படுவார்கள். (சான்றாக அல்குர்ஆன்: 4:165, 5:16,21, 17:15)

இது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்றாகும். இஸ்லாத்தைப் பற்றி கேள்வியே பட்டிருக்காத மக்கள், அதனைப்பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாத மக்கள் ஏராளமாக இருக்கின்றனர். இந்த மக்கள் நேர்மையான சிந்தனையுடையவர்களாக இருக்கலாம். இஸ்லாத்தை அறிந்திடும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டால் அவர்கள் நல்ல முஸ்லிம்களாக ஆகலாம். இஸ்லாத்தை அவர்கள் அறியவில்லை என்றால், இஸ்லாத்தை அறிவதற்கு அவர்களுக்கு வாய்ப்பேதும் இல்லை என்றால், அவர்கள் முஸ்லிம்களாக இல்லாததற்கு அவர்கள் பொறுப்பாளியாக மாட்டார்கள்.

இஸ்லாத்தை சொல்லாலும், செயலாலும் இவர்களுக்கு எடுத்துச் சொல்லி அழைக்க தவறிவிட்டமைக்கு முஸ்லிம்களையே இறைவன் பொறுப்பாக்குவான். Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-1 அடிப்படை நம்பிக்கைகள் (பகுதி-2)

அத்தியாயம்-1 அடிப்படை நம்பிக்கைகள் (பகுதி-1)

உண்மையான முஸ்லிம் ஒருவர் பின்வருவனவற்றை நம்புகிறார்.

1. இறைவன் ஒருவனே. அவன் மேலானவன், நிரந்தரமானவன், முடிவற்றவன், வல்லவன், கருணையுள்ளவன், அளவற்ற அன்புடையவன், படைத்தவன், பரிபாலிப்பவன், பாதுகாப்பவன். இவற்றை ஒரு முஸ்லிம் பரிபூரண நம்பிக்கைக் கொள்கிறார்.

இந்த நம்பிக்கை உறுதிபெற இறைவனையே முழுமையாக நம்பியிருக்க வேண்டும். அவனிடமே தஞ்சம் புக வேண்டும். அவனுடைய ஆணைகளுக்கு அடிபணிந்திட வேண்டும். அவனுடைய உதவிகளையே சார்ந்திருக்க வேண்டும். இந்த நம்பிக்கை மனிதனுக்கு கௌரவத்தை அளிப்பதோடு அவனை அச்சத்திலிருந்தும், விரக்தியிலிருந்தும், குற்றங்களிலிருந்தும், குழப்பங்களிலிருந்தும் பாதுகாக்கின்றது.

2. ஒரு முஸ்லிம் இறைவனின் தூதர்கள் அனைவரையும் நம்புகிறார். இறைவனின் தூதர்களுக்கிடையில் அவர் எந்தவித வேற்றுமைகளையும் பாராட்டுவதில்லை.

ஒவ்வொரு சமூகத்திற்கும் இறைவனிடமிருந்து ஒரு எச்சரிக்கையாளர் அல்லது ஒரு தூதர் வந்துள்ளார்கள். இத்தூதர்கள் நன்மையின் நனிசிறந்த போதகர்கள். நேர்மையின் உறைவிடங்கள். அவர்கள் மனித இனத்திற்கு அறிவூட்டுவதற்காகவும், இறைவனின் தூதை மனித இனத்திற்கு கொண்டு வந்து சேர்க்கவும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் அவர்கள் அனுப்பப்பட்டார்கள். ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு இறைத்தூதரோ அல்லது அதற்கு மேற்பட்ட இறைத்தூதர்களோ அனுப்பப்பட்டார்கள்.

சில காலங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இறைத்தூதர்கள் ஒரே காலத்தில் ஒரே சமூகத்திற்கு அனுப்பப்பட்டனர். இறைவனின் அருள்மறையாம் திருமறை குர்ஆன் 25 இறைத்தூதர்களின் பெயரைக் குறிப்பிடுகின்றது. முஸ்லிம்கள் இவர்கள் அனைவரையும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட இறைத்தூதர்களே என நம்பி ஏற்றுக் கொள்கிறார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர ஏனைய நபிமார்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்புக்கோ அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் எனத் தெரிகிறது. இருப்பினும் எல்லா இறைத்தூதர்களின் மார்க்கமும், அவர்கள் கொண்டுவந்த இறைத்தூதும் ஒன்றாகத்தான் இருந்து வந்திருக்கின்றது. அதுதான் ’இஸ்லாம்’. ஏனெனில் அது இறைவன் எனும் ஒரே ஆதாரத்திலிருந்து, ஒரே நோக்கத்திற்காக வந்தது. அதாவது மனித இனத்தை இறைவன் காட்டிய நேரிய பாதையில் வழி நடத்துவதாகும்.

விதிவிலக்குகள் எதுவுமின்றி இறைவனின் தூதர்கள் அனைவரும் மரணத்திற்கு உட்பட்ட மானிட பிறவிகளே! அவர்கள் வேத வெளிப்பாடுகளைப் பெற்றவர்கள், சில குறிப்பிட்ட பணிகளை நிறைவேற்றுவதற்காக இறைவனால் நியமிக்கப்பட்டவர்கள். இறைவனின் தூதர்களில் முஹம்மத் (ஸல்) அவர்களே இறுதியானவர். மகத்துவமிக்கவர்!.

இது தாமாக தமது வசதிக்காக வைத்துக்கொண்ட நம்பிக்கையல்ல. இஸ்லாத்தின் ஏனைய நம்பிக்கைகளைப்போல இதுவும் ஆதாரபூர்வமான, வாத பிரதிவாதங்களின் அடிப்படையில் அமைந்தது. இங்கு நூஹ், இப்ராஹீம், இஸ்மாயீல், மூஸா, ஈஸா, முஹம்மத் (இவர்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், ஆசிகளும் உண்டாவதாக!) போன்ற சில தூதர்களின் பெயர்களைக் குறிப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும்.

திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு இவ்வாறு கட்டளையிடுகின்றது:

அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பெற்ற இவ்வேதத்தையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாக்கூப், முதலியவர்களுக்கும், இவர்களுடைய சந்ததிகளுக்கும், அருளப்பெற்ற யாவற்றையும், ஏனைய நபிமார்களுக்கு அருளப்பட்டிருந்தவற்றையும் நாங்கள் நம்புகின்றோம். அவர்கள் எவரிடையேயும் நாங்கள் பாகுபாடு காட்டுவதில்லை. இன்னும் இறைவனுக்கே நாங்கள் அடிபணிகின்றோம். (அல்குர்ஆன்: 2:136) ஒப்புநோக்குக. (3:84, 4:163-165, 6:84-87)

3. மேலே சொன்னவற்றின் விளைவாக முஸ்லிம்கள் இறைவனின் எல்லா வேதங்களையும், வேத வெளிப்பாடுகளையும் நம்புகின்றார்கள். இவ்வேதங்கள் இறைவனின் நேரிய பாதையை தம் மக்களுக்கு காட்டுவதற்காக இறைத்தூதர்களால் இறைவனிடமிருந்து பெறப்பட்டதாகும். திருக்குர்ஆனில் இப்ராஹீம், மூஸா, தாவூத், ஈஸா ஆகியோருக்கு வழங்கப்பட்ட வேதங்கள்பற்றி குறிப்பாக சொல்லப்பட்டுள்ளது. முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் வெளிப்படுத்தப் படுவதற்கு வெகுநாட்களுக்கு முன்பே இந்த வேதங்களில் சில தொலைந்து விட்டன. சில இடைச்செருகல்களுக்கு உள்ளாயின. மற்றவை மறக்கப்பட்டு விட்டன. அல்லது புறக்கணிக்கப்பட்டு விட்டன அல்லது மறைக்கப்பட்டு விட்டன. Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-1 அடிப்படை நம்பிக்கைகள் (பகுதி-1)

மனிதன் அல்லாஹ்வின் மீது கற்பனையாக இட்டுக்கட்டி வர்ணிப்பதெல்லாம் அவனுக்கே கேடாக ஆகி விடுகிறது!

21:11. மேலும், அநியாயக்கார(ர்கள் வாழ்ந்த) ஊர்கள் எத்தனையையோ நாம் அழித்தோம். அதற்குப் பின் (அங்கு) வேறு சமுதாயத்தை உண்டாக்கினோம்.

21:12. ஆகவே, அவர்கள் நமது வேதனை (வருவதை) உணர்ந்தபோது, அவர்கள் அங்கிருந்து விரைந்தோடலானார்கள்.

21:13. “விரைந்து ஓடாதீர்கள், நீங்கள் அனுபவித்த சுகபோகங்களுக்கும், உங்கள் வீடுகளுக்கும் திரும்பி வாருங்கள்; (அவை பற்றி) நீங்கள் கேள்வி கேட்கப்படுவதற்காக” (என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது)

21:14. (இதற்கு அவர்கள்) “எங்கள் கேடே! நாங்கள் நிச்சயமாக அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று வருந்திக் கூறினார்கள்.

21:15. அறுவடை செய்யப்பட்ட வயலின் அரிதாள்கள் எரிந்தளிவது போன்று அவர்களை நாம் ஆக்கும்வரை அவர்களுடைய இக்கூப்பாடு ஓயவில்லை.

21:16. மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்கவில்லை.

21:17. வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்து கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றிலிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம்.

21:18. அவ்வாறில்லை! நாம் சத்தியத்தைகொண்டு, அசத்தித்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்து விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.

அல்குர்ஆன்: அல் அன்பியா – நபிமார்கள்.
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on மனிதன் அல்லாஹ்வின் மீது கற்பனையாக இட்டுக்கட்டி வர்ணிப்பதெல்லாம் அவனுக்கே கேடாக ஆகி விடுகிறது!

அத்தியாயம்-1. இஸ்லாம் என்பதன் பொருள்

இஸ்லாம் என்ற சொல்லானது ‘சில்ம்’ என்ற அரபி வேர்ச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். அதற்குப் பல பொருள்களுண்டு. அவற்றில் சில சாந்தி, பரிசுத்தம், பணிவு, கீழ்படிதல் ஆகியவை ஆகும். மதம் என்ற கண்ணோட்டத்தில் இஸ்லாம் என்ற சொல்லுக்கு இறைவனுடைய ஆணைக்குப் பணிதல் என்றும், அவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படிதல் என்றும் பொருள்.

இஸ்லாம் என்ற சொல்லின் மூலப்பொருளுக்கும், மதம் என்ற நோக்கில் அதற்கு இருக்கும் பொருளுக்கும் இடையில் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. இறைவனின் ஆணைக்கு அடிபணிதல், அவனுடைய சட்டத்திற்கு கீழ்படிதல் இவற்றின் மூலமே உண்மையான அமைதியை அடைய முடியும். நிலையான தூய்மையான, புனித நிலையை எய்த முடியும்.

சில மதத்தவர்கள் இஸ்லாத்தை ’முஹம்மதியம்’ என்றும், அதனை ஏற்றுக் கொண்டவர்களை ’முஹம்மதியர்கள்’ என்றும் அழைக்கிறார்கள். முஸ்லிம்கள் இப்படித் தங்களை அழைப்பதை நிராகரிப்பதோடு அவற்றை எதிர்க்கவும் செய்கிறார்கள். தங்களது மார்க்கத்தை ’முஹம்மதியம்’ என்றும் தங்களை ’முஹம்மதியர்கள்’ என்றும் பிரித்துக் கூறுவது பல தவறான கருத்துக்களை வளர்க்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

இவ்வாறு தவறாக பெயரிடுவது, இஸ்லாம் என்பது மரணத்திற்குட்பட்ட வாழ்க்கையையுடைய முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயரால் அழைக்கப்படுகின்றது என்ற தவறான கொள்கையைத் தரும். இன்னும் ஏனைய ‘இஸம்’களான யூதாயிசம், (யூதமதம்) ஹிந்து இஸம், மார்க்சிஸம் போன்று இன்னொரு ‘இஸமே’ இஸ்லாம் என்றும் ஆகிவிடும். இந்த தவறான பெயர் ஏற்படுத்தக்கூடிய பிறிதொரு தவறான கருத்து என்னவெனில், முஸ்லிம்கள் முஹம்மத் (ஸல்) அவர்களைத் தொழுபவர்கள் என்பதாகும். அதாவது கிருஸ்தவர்கள் எந்த முறையில் ஏசுநாதரிடம் விசுவாசம் கொண்டிருக்கிறார்களோ அதே முறையில் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் முஸ்லிம்கள் விசுவாசம் கொண்டிருக்கின்றார்கள் என்ற தவறான கருத்தை தந்துவிடும். முஹம்மதியம் என்ற சொல்லானது இஸ்லாம் முஹம்மத் (ஸல்) அவர்களால் தான் நிறுவப்பட்டது என்றும், ஆகையால் நிறுவியரின் பெயரால் அது அழைக்கப்படுகின்றது என்றும் தவறான பொருளை தந்துவிடும். இப்படி பொருள் கொள்வது பெரும் தவறுகளாகும். மிகத் தவறான எண்ணங்களுக்கு இட்டுச் செல்லக் கூடியவையுமாகும். இஸ்லாம் என்பது இன்னொரு ‘இஸம்’ அல்ல. முஸ்லிம்கள் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்குவதுமில்லை. கிருஸ்தவர்கள், யூதர்கள், இந்துக்கள், மார்க்சிஸ்ட்டுகள் ஆகியோர் தங்களது தலைவர்களை பார்க்கும் அதே கண்ணோட்டத்தில் முஸ்லிம்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை பார்ப்பதுமில்லை.

(முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருந்த போதிலும் அவர்களும் மரணத்திற்கு உட்பட்ட மனிதராகவே இருந்தார்கள். மரணமடையக் கூடியவர்களின் பெயரால் இஸ்லாம் அழைக்கப்படவில்லை. மரணம் அடையக் கூடியவர்களால் இஸ்லாம் தோற்றுவிக்கப்படவுமில்லை என்பதை வலியுறுத்தவே இங்கு இவ்வாறு கூறப்பட்டுள்ளது.)

முஸ்லிம்கள் இறைவனை மட்டுமே தொழுகிறார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் போதனைகளை உலக மக்களுக்கு எடுத்து சொல்லிடவும், அந்த இறைவனின் போதனைகளின்படி ஒரு வாழ்க்கையை நடத்திக்காட்டி ஒரு முன்மாதிரியாக அமைவதற்காகவும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதரே ஆவார்கள். இறை அச்சத்திலும், இறைவனின் திட்டத்தின்படி வாழ்ந்து காட்டுவதிலும் அவர்கள் ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தார்கள்.

மனிதன் எந்த அளவிற்கு உயர்ந்தவனாக இருக்க முடியும் என்பதற்கும், நற்குணங்கள், நற்பண்புகள் இவற்றில் மனிதன் எத்துணை உன்னதமான நிலைக்கு உயரமுடியும் என்பதற்கும் அவர்கள் ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார்கள். Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-1. இஸ்லாம் என்பதன் பொருள்

அத்தியாயம்-1. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை! அல்லாஹ் (இறைவன்)

இறைவனைப் பற்றிய அறிவும், அவன் மீது வைக்கப்படும் நம்பிக்கையுமே இஸ்லாத்தின் அடிப்படைகளாக அமைகின்றன. இஃது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆகவே இதனை தெளிவுபடுத்திட முழுமையானதொரு விவாதம் தேவைப்படுகின்றது. இங்கே சில எளிய எடுத்துக்காட்டுகள் தரப்படுகின்றன. நாம் விவாதத்திற்காக எடுத்துக்கொண்ட பொருள்பற்றி ஏற்கனவே அறிந்தவர்களுக்கு இது மிகவும் சாதாரணமாகத் தோன்றலாம். இவர்களை பொறுமையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அறிவியலின் பெயரால் அல்லது அனுபவமும், புரிந்து கொள்ளும் திறனும் இல்லாத காரணத்தால் இறைவன் இருக்கின்றான் என்பதை மறுப்பவர்களும் இருக்கின்றார்கள். இவர்கள் தங்களை ’அறிஞர்கள்’ என்று கூறிக் கொண்டாலும் அவர்களது மனப்பான்மை ஒரு விதமான அமைதியின்மையையே பிரதிபலிக்கின்றது. என்னுடைய கவலையெல்லாம் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றியல்ல. அவர்களின் உண்மையான நிலை என்ன என்பதுதான்.

பின்வரும் விளக்கங்கள் பெரியவர்களுக்காக அல்லாமல் பெரும்பாலும் குழந்தைகளுக்காகவே அமைக்கப்பட்டது போல தோன்றுவதற்கான காரணத்தை இது விளக்கும். இறைவனைப் பற்றிய இஸ்லாத்தின் கொள்கையை முஸ்லிம் இளைஞர்களுக்கு விளக்கிடுவதே இங்கே குறிக்கோள். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், மதத்திற்காக வக்காலத்து வாங்குகிற முஸ்லிமல்லாதவர்கள், இவர்களிடையே இஸ்லாத்தின் இறைக் கருத்துப் பற்றி தவறான கருத்துக்கள் வேரூன்றியுள்ளன. இவர்களுக்கும் இறைவனைப் பற்றிய இஸ்லாத்தின் கொள்கையை எடுத்துச் சொல்வதும் இந்த விவாதத்தின் இன்னொரு நோக்கமாகும்.

இவைகளையெல்லாம் மனதில் கொண்டுதான் சில எளிமையான மிகச் சாதாரணமான விளக்கங்கள் இங்கே தரப்பட்டிருக்கின்றன. சில விளக்கங்களின் எளிமை வயது வந்தவர்களிடம் கூட சில புதிய சிந்தனைகளைத் தூண்டக்கூடும். இது சுவை நிறைந்ததாகவும், நிறைந்த பலனைத் தருவதாகவும் இருக்கும். இதுவே இஸ்லாத்தின் தனிச் சிறப்பாகும்.

நாம் நம்மை சுற்றியிருக்கின்றவைகளை பார்க்கும்பொழுது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குடும்பத்தலைவர் இருக்கின்றார்; ஒவ்வொரு மாநகருக்கும் ஒரு மேயர் இருக்கின்றார்; ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் ஒரு முதல்வர் இருக்கின்றார்; ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருக்கின்றார்; ஓவ்வொரு  நாட்டிற்கும் ஒரு பிரதமர்-தலைவர் இருக்கிறார் என்பதை நாம் காண்கிறோம். நாம் காணும் ஒவ்வொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட உற்பத்தியாளரின் தயாரிப்பு, ஒவ்வொரு அழகிய கலையும் ஒரு கலைஞரின் படைப்பு என்பதை நாம் ஐயமற அறிவோம். இவையெல்லாம் மிகத் தெளிவாக இருந்தபோதிலும் உலகிலுள்ள பெரும் ரகசியங்களைப் பற்றிய மனிதனின் அறிவுப் பசியை இவைகளால் திருப்திப்படுத்த முடியவில்லை.

அழகு கலையும், அழகையும் அள்ளித் தெளிக்கும் கவர்ச்சியான காட்சிகள், இயற்கையின் அற்புதம், ஆகாயத்தின் முடிவற்ற அடிவானம், ஆகாயத்தின் நீண்டு விரிந்த பரப்பு, மிக ஒழுங்கான முறையில் இரவு, பகல் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து வரும் நுணுக்கம், சூரியன், சந்திரன், இதர தாரகைகள் ஆகியவற்றின் போக்கு, உயிருள்ள, உயிரற்ற பொருள்களின் உலகம், தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் மனித வளர்ச்சியின் தொடர்ச்சி இவற்றைப் பார்த்து மனிதன் அடிக்கடி ஆச்சரியப்படுகின்றான். நாம் பார்த்து அனுபவித்து வருகின்ற இவற்றையெல்லாம் படைத்து பரிபாலித்து வருபவன் யார் என்பதை அவன் அறிந்து கொள்ள விரும்புகின்றான்.

நாம் காணும் இப்பிரமாண்டமான பிரபஞ்சத்திற்கு ஒரு விளக்கம் காண முடியுமா? ஜீவிதத்தின் ரகசியத்திற்கு நம்பத்தகுந்த விளக்கங்கள் ஏதேனும் இருக்கின்றதா? பொறுப்புள்ள ஒரு தலைவரின்றி எந்த குடும்பமும் சரிவர இயங்க முடியாது, சிறியதொரு நிர்வாகமின்றி எந்த மாநகரமும் செழிப்பாக இருக்க முடியாது, ஏதாவது ஒரு தலைவர் இல்லாமல் எந்த நாடும் இயங்க முடியாது, இவைகளையெல்லாம் நாம் உணர்ந்திருக்கின்றோம். எந்த ஒரு பொருளும் தானே தோன்ற முடியாது என்பதையும் கூட நாம் உணர்கின்றோம். Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-1. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை! அல்லாஹ் (இறைவன்)

இஸ்லாம் உங்கள் பார்வைக்கு (ஆசிரிய முன்னுரை)

வெளியீடு: International Islamic Federation Of Student Organizations

நூல்: இஸ்லாம் உங்கள் பார்வைக்கு

மூல நூல் ஆசிரியர்: ஹமுத அப்த் அல் அத்தி

தமிழில்: மு. குலாம் முஹம்மத்


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம்.

முன்னுரை.

இஸ்லாத்தின் அடிப்படை போதனைகளை ஒரு சாதாரண வாசகர் புரிந்திட உதவுவதே இந்த நூலின் நோக்கமாகும். அதாவது இஸ்லாத்தை மிகவும் விரிவாக விளக்குவதல்ல இந்த புத்தகத்தின் நோக்கம். இருந்தாலும் ஒரு சாதாரண மனிதனுக்கு இஸ்லாம் என்றால் என்ன? அது என்னென்ன கொள்கைகளுக்காக இருக்கின்றது என்பனவற்றை விளக்கிட தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒருவர் ஒருமுறை இஸ்லாத்தைப் பற்றிய ஆரம்ப அறிவை பெற்றுவிட்டால், பின்னர் அவர் இஸ்லாத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ளத் தேவையான முயற்சிகளை தாமே மேற்கொள்வார்.

பூமியின் மேற்கு தூரப் பகுதிகளில் வாழுகின்ற முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் பல்வேறு குழப்பமான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இந்தப் பகுதிகளின் சூழ்நிலைகள் இஸ்லாத்தைப் பொறுத்தவரைச் சாதகமில்லாத நிலையிலேதான் அமைந்திருக்கின்றன.

வானொலி தரும் செய்திகள், தொலைக்காட்சி தரும் காட்சிகள், பத்திரிக்கைகள் தரும் செய்திகள், திரையரங்குகளில் திரையிடப்படும் திரைப்படங்கள், சஞ்சிகைகளில் வெளிவரும் கட்டுரைகள், கல்விக் கூடங்களில் பயிற்றுவிக்கப்படும் பாட புத்தகங்கள் இவை அனைத்தும் இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துக்களையே தந்து கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தை தவறாக போதிக்கின்றோம் என்று தெரியாமல் இவை இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை தந்து கொண்டிருக்கவில்லை. மேலே சொன்ன மக்கள் தொடர்புக் கருவிகள் வேண்டுமென்றே இஸ்லாத்தைப்பற்றி தவறான கருத்துக்களை பிரச்சாரம் செய்கின்றன. சிலர் இஸ்லாத்திற்கு எதிராக அமைந்த இந்தச் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, முஸ்லிம்களைத் திசைதிருப்ப முயன்றனர். இதன் விளைவாக முஸ்லிம்கள் இஸ்லாத்தை வெறுத்து ஏதேனும் வேறு கொள்கைக்குத் தங்களை மாற்றிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றனர்.

இன்னொருபுறம் மனிதனின் சிற்றின்ப ஆசைகளைத் தூண்டி விட்டு அவர்களின் கவனத்தைச் சமயக் கோட்பாடுகளிலிருந்து திருப்புகின்ற விதத்தில் பல்வேறு கருவிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை எண்ணற்ற தீங்குகளை விளைவித்துக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் இளைஞர்களை இவை வெகுவாக பாதிக்கின்றன.

இஸ்லாத்தை மிகவும் தவறாக புரிந்து கொண்டிருக்கும் இந்த மேற்குப் பகுதியில் இவை இன்னும் அதிகமான தீங்குகளை விளைவிக்கின்றன.

உண்மையில் முஸ்லிம்களில் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு மார்க்கத்தைப் பற்றிய விளக்கங்களையும், தெளிவுகளையும் தர வேண்டும் என்றே விழைகின்றனர். ஆனால் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் மிகவும் சிறியதாகவே இருக்கின்றன. இந்த சிறிய முயற்சிகளால் பயனேதும் இல்லாமல் போய்விடுகின்றது. சூழ்நிலைகள் சூறாவளியாகத் தாக்கிடும் இந்த நிலையில் அவர்கள் மேற்கொள்ளும் இந்த சிறிய முயற்சிகள் வலுவிழந்தே போய்விடுகின்றன. பின்னர் என்னதான் நடக்கின்றது? இங்கே நிலைமை குளறுபடியாக இருக்கின்றது என்பதுதான் உண்மை. ஆனால் நிலைமை நாம் நம்பிக்கை இழந்து விடும் அளவிற்கு மோசமாக இல்லை.

தங்களைச் சுற்றியிருக்கும் சூழ்நிலைகளின் நிர்பந்தங்களுக்கு ஆளாகுகின்ற முஸ்லிம்கள், தங்களை இழந்து, மார்க்கம் தரும் போதனைகளில் அக்கறை அற்றவர்களாக தங்களது சொந்த வேலைகளில் முடங்கிக் கிடக்கின்றார்கள். அவர்கள் தங்களைச் சுற்றியிருக்கும் சூழ்நிலைகளைப் பார்த்து வெட்கப்படுகிறார்கள் சில வேளைகளில் அச்சப்படுகிறார்கள். இதனால் அவர்கள் சமுதாயத்திற்கு எந்த பலனையும் தர முடியாதவர்களாக ஆகி விடுகின்றனர். அதுபோலவே சமுதாயத்திலிருந்து கிடைக்கும் பலன்களையும் பெற முடியாதவர்களாக ஆகி விடுகின்றனர்.

இன்னும் பலர் சமுதாயம் போகும் போக்கிலேயே போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், தாங்கள் நாகரீகமானவர்கள் என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காவும் சமுதாய மாற்றங்களுக்குத் தலை சாய்க்கின்றனர். இவர்களும் சமுதாயத்திற்கு எந்தப் பலனையும் தரப்போவதில்லை. இப்படிப்பட்ட முஸ்லிம்கள் சமுதாயத்தை அழிக்கின்ற சக்தியாகவும், சாபத்திற்குரியவர்களாகவும் மாறிவிடுவார்கள். ஏனெனில் அவர்களிடம் உருப்படியான மார்க்க ஒழுக்கங்கள் இல்லை. Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , | Comments Off on இஸ்லாம் உங்கள் பார்வைக்கு (ஆசிரிய முன்னுரை)