44.வழக்குகள் (முறையீடுகள்) தகராறுகள்

பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2410

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். “ஒருவர் (திருக்குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதைக் கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி(ஸல்) அவர்கள், ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரின் கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்றேன். (விபரத்தைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள்” என்று கூறினார்கள்.

“நபி(ஸல்) அவர்கள், ‘வேற்றுமை கொள்ளாதீர்கள்! ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் வேற்றுமை கொண்டு (அதனால்) அழிந்தனர்’ என்று கூறினார்கள் என எண்ணுகிறேன்” என்று அறிவிப்பாளர் ஷுஅபா(ரஹ்) கூறினார்.

பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2411

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், ‘உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!” என்று கூறினார். அந்த யூதர், ‘உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!” என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்து விட்டார். அந்த யூதர், நபி(ஸல்) அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர)வையெல்லாம் தெரிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச்சொல்லி அதுபற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். (நடந்தவை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்) நபி(ஸல்) அவர்கள், ‘மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூஸா(அலை), (அல்லாஹ்வின்) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2412

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது யூதர் ஒருவர் வந்து, ‘அபுல் காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்தத் தோழர்) யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘அன்சாரிகளில் ஒருவர்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘அவரைக் கூப்பிடுங்கள்” என்று உத்திரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், ‘இவரை நீர் அடித்தீரா?’ என்று கேட்டார்கள். அந்த அன்சாரி, ‘இவர் கடைவீதியில், ‘மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!’ என்று ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததை செவியுற்றேன். உடனே நான், ‘தீயவனே! முஹம்மதை விடவா (மூஸா மேன்மை வாய்ந்தவர்)?’ என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டு விட, இவரின் முகத்தில் அறைந்து விட்டேன்” என்று கூறினார். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது, பூமி பிளந்து வெளிப்படுத்துபவர்களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது, நான் மூஸாவை அர்ஷின் (இறை சிம்மாசனத்தின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவராகக் காண்பேன். ‘மூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்டபோது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதுமென்று, இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு)விட்டதா என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2413

அனஸ்(ரலி) அறிவித்தார். யூதன் ஒருவன் சிறுமி ஒருத்தியின் தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அந்தச் சிறுமியிடம் மக்கள், ‘உன்னை இப்படிச் செய்தவன் யார்? இன்னாரா? இன்னாரா?’ எனறு கேட்டனர். யூதனின் பெயர் கூறப்பட்டவுடன் அச்சிறுமி (“ஆம், அவன்தான்” என்பதற்கு அடையாளமாகத்) தலையசைத்தாள். யூதன் பிடிக்கப்பட்டு தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். நபி(ஸல்) அவர்கள் அவனுடைய தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவனுடைய தலை நசுக்கப்பட்டது.

பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2414

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஒருவர் வியாபாரத்தில் ஏமாற்றப்பட்டு வந்தார். எனவே, நபி(ஸல்) அவர்கள் அந்த மனிதரிடம், ‘நீ வியாபாரம் செய்தால் (எதையும் விற்றால் அல்லது வாங்கினால்) ‘ஏமாற்றுதல் கூடாது’ என்று சொல்” என்றார்கள். அதன்படி அந்த மனிதர் (வியாபாரம் செய்யும் போதெல்லாம்) அவ்வாறே கூறி வந்தார்.

பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2415

ஜாபிர்(ரலி) அறிவித்தார். ஒருவர் ஓர் அடிமையை விடுதலை செய்தார். அவரிடம் அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவும் இருக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் அம்மனிதர் அந்த அடிமையை விடுதலை செய்ததை ரத்துச் செய்தார்கள். (அவருக்காக அவ்வடிமையை ஏலம்விட்டபோது) நபி(ஸல்) அவர்களிடமிருந்து அந்த அடிமையை நுஐம் இப்னு நஹ்ஹாம்(ரலி) வாங்கினார்கள். (பிறகு நபி(ஸல்) அவர்கள் அதன் விலையை அடிமையின் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டார்கள்.)

பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2416

‘ஒருவன் ஒரு முஸ்லிமுடைய செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்வானாயின், மறுமையில், தன் மீது கோபம் கொண்ட நிலையில் அல்லாஹ்வை, அவன் சந்திப்பான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கும்போது கேட்டுக் கொண்டிருந்த அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) கூறலானார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில்தான் இதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். எனக்கும் ஒரு யூதருக்கும் இடையே ஒரு நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்து விடவே நான் நபி(ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர்(ஸல்), ‘உன்னிடம் (உன் வாதத்திற்கான) ஆதாரம் ஏதும் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை” என்றேன். நபி(ஸல்) அவர்கள் யூதரைப் பார்த்து, ‘(அப்படியென்றால் நிலம் என்னுடையது தான். அதில் இந்த முஸ்லிமுக்கு எந்த உரிமையும் இல்லை’ என்று) சத்தியம் செய்” என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவ்வாறென்றால் அந்த யூதன் (பொய்) சத்தியம் செய்து என் சொத்தை அபகரித்துச் சென்று விடுவானே!” என்று கூறினேன். (அப்போதுதான் நபி(ஸல்) அவர்கள் இதைக் கூறினார்கள்.) உடனே, ‘அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்பவிலைக்கு விற்று விடுகிறவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது’ (திருக்குர்ஆன் 03:77) என்னும் திருக்குர்ஆன் வசனத்தை அல்லாஹ் அருளினான்.

பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2418

கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நான் இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் பள்ளிவாசலில் வைத்து, நான் கொடுத்த கடனைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். எங்கள் (இருவரிடையே இது தொடர்பாக வாக்குவாதம் தொடங்கி) இருவரின் குரலும் உயர்ந்துவிட்டது. எந்த அளவுக்கென்றால் இறைத்தூதர்(ஸல்) தம் வீட்டிலிருக்க, அவர்களும் எங்கள் குரலைச் செவியுற்று, தம் அறையின் திரையை நீக்கி எங்கள் இருவரையும் நோக்கிப் புறப்பட்டு வந்து, ‘கஅபே!” என்று அழைத்தார்கள். நான், ‘இதோ வந்து விட்டேன், இறைத்தூதர் அவர்களே!” என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘இதை (இந்த அளவை) உன் கடனிலிருந்து குறைத்துக் கொள்” என்று கூறி பாதியளவு கடனைக் குறைத்துக் கொள்ளும்படி (விரலால்) சைகை காட்டினார்கள். ‘அவ்வாறே செய்து விட்டேன், இறைத்தூதர் அவர்களே!” என்று கூறினேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் (இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களை நோக்கி,) ‘எழுந்து சென்று கடனை அடைப்பீராக!” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2419

உமர்(ரலி) அறிவித்தார். ஹிஷாம் இப்னு ஹகீம் இப்னி ஹிஸாம்(ரலி) (திருக்குர்ஆனின்) அத்தியாயம் அல்ஃபுர்கானை நான் ஓதுகிற முறைக்கு மாற்றமாக ஓதுவதைச் செவியுற்றேன். நபி(ஸல்) அவர்கள் ஏற்கெனவே அந்த அத்தியாயத்தை எனக்கு ஓதிக் காட்டியிருந்தார்கள். நான், உடனேயே ஹிஷாம்(ரலி), அவர்களைக் கண்டிக்க முற்பட்டேன். பிறகு (சற்று யோசித்து) அவர்கள் தொழுகையை முடிக்கும்வரை அவர்களுக்கு அவகாசம் அளித்(துக் காத்திருந்)தேன். (அவர்கள் தொழுது முடித்த) பிறகு, அவர்களின் போர்வை (போன்ற அங்கி)யை அவர்களின் கழுத்தில் போட்டு இழுத்து, அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு சென்று, ‘(நபி(ஸல்) அவர்களே!) நீங்கள் எனக்கு ஓதிக் கொடுத்ததற்கு மாற்றமாக இவர் ஓதுவதை கேட்டேன்” என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவரைவிட்டு விடு” என்று கூறினார்கள். பிறகு என்னை நோக்கி, ‘நீங்கள் ஓதுங்கள்” என்று கூறினார்கள். நான் ஓதினேன். (அதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘இப்படித்தான் (இந்த அத்தியாயம்) இறங்கிற்று. நிச்சயமாக, குர்ஆன், (ஓதுவதற்கான) ஏழு முறைகளின் படி இறக்கியருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு இலேசானதை அதிலிருந்து ஓதிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2420

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” தொழுகையை (நிலைநிறுத்தும்படி) கட்டளையிட்டுவிட்டு தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது (கூட்டுத்) தொழுகைக்கு வருகை தராத மக்களின் வீடுகளுக்குச் சென்று அவற்றை எரித்து விடலாம் என்று நான் நினைத்ததுண்டு. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2421

ஆயிஷா(ரலி) அறிவித்தார். அப்து இப்னு ஸம்ஆ(ரலி) அவர்களும் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களும் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனின் விஷயத்தில் (தமக்குள் ஏற்பட்ட தகராறைத் தீர்த்துக் கொள்ள) நபி(ஸல்) அவர்களிடம் வழக்கொன்றைக் கொண்டு வந்தனர். ஸஅத்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! என் சகோதரர், ‘நீ (மக்காவுக்குத் திரும்பிச்) சென்றால், ஸம்ஆவுடைய அடிமைப் பெண்ணின் மகனைக் கண்டு (அழைத்து வந்து) பராமரி. ஏனென்றால், அவன் என்னுடைய மகன்’ என்று என்னிடம் (மரணப் படுக்கையில் தன் இறுதி விருப்பமாகக்) கூறியிருந்தார்” என்றார்கள். அப்து இப்னு ஸம்ஆ(ரலி), ‘அவர் என் சகோதரர்; என் தந்தையின் அடிமைப் பெண்ணின் மகன்; என் தந்தையின் ஆதிக்கத்தில் அவன் இருந்தபோது பிறந்தவர்” என்று கூறினார். அந்த அடிமைப் பெண்ணின் மகனிடம் (ஸஅதுடைய சகோதரர்) உத்பாவின் சாயலைத் தெளிவாகக் கண்ட நபி(ஸல்) அவர்கள், ‘அப்து இப்னு ஸம்ஆவே! அவன் (சட்டப்படி) உனக்கு உரியவனே. (ஏனெனில், ஒரு பெண், யாருடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே அவள் பெற்றெடுத்த குழந்தை சொந்தமாகும். விபச்சாரம் செய்வதவருக்கு இழப்புதான் உரியது” என்று (தீர்ப்புக்) கூறினார்கள். பிறகு ,தம் மனைவி சவ்தா(ரலி) அவர்களை நோக்கி, ‘சவ்தாவே! இந்த இளைஞனிடம் நீ ஹிஜாபைப் பேணிக் கொள். (உன்னை நீ திரையிட்டு மறைத்துக் கொள்.)” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2422

நபி(ஸல்) அவர்கள் ‘நஜ்து’ மாநிலத்தை நோக்கி குதிரை வீரர்களின் படை ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த யமாமாவாசிகளின் தலைவரான ‘சுமாமா இப்னு உஸால்’ எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டு வந்தார்கள். அவரைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டி வைத்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரை நோக்கி வந்து, ‘சுமாமாவே, உங்களிடம் என்ன (செய்தி) உள்ளது?’ என்று கேட்டார்கள். அவர், ‘முஹம்மதே! என்னிடம் நல்ல செய்திதான் உள்ளது” என்று கூறினார்.

இறுதியில் நபி(ஸல்) அவர்கள், ‘சுமாமாவை அவிழ்த்துவிட்டு விடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2423

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நஜ்து மாநிலத்தை நோக்கி குதிரை வீரர்களின் படை ஒன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த சுமாமா இப்னு உஸால் என்று அழைக்கப்படுபவரைக் கொண்டு வந்தார்கள். (மக்கள்) அவரைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டி வைத்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2424

கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். எனக்கு அப்துல்லாஹ் இப்னு அபீ ஹத்ரத்(ரலி) கொடுக்க வேண்டிய கடன் ஒன்று இருந்தது. நான் அவரை (பாதையில்) சந்தித்தேன். உடனே அவரைப் பிடித்துக் கொண்டேன். (கடனைத் திருப்பிச் செலுத்தும்படி நச்சரிக்கலானேன்). நாங்கள் இருவரும் வாக்குவாதம் செய்யவே எங்கள் குரல்கள் உயர்ந்துவிட்டன. நபி(ஸல்) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது என்னை, ‘கஅபே!” என்றழைத்து, ‘பாதியை (வாங்கிக் கொள்)” என்று கூறுவது போல் தம் கையால் சைகை செய்தார்கள்.

எனவே, நான் இப்னு அபீ ஹத்ரத்(ரலி) திருப்பிக் கொடுக்க வேண்டியிருந்த கடனில் பாதியை வாங்கிக் கொண்டு மீதியை (மன்னித்து)விட்டுவிட்டேன்.

பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2425

கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார். நான் அறியாமைக் காலத்தில் கருமானாக இருந்தேன். எனக்கு ஆஸ் இப்னு வாயில் என்பவன் சில திர்ஹம்கள் கொடுக்க வேண்டியிருந்தது. அதைக் கொடுத்து விடும்படி கேட்டு அவனிடம் சென்றேன். அவன், ‘நீ முஹம்மதை நிராகரிக்காதவரை நான் உனக்குக் கடன் தீர்க்க மாட்டேன்” என்று கூறினான். நான், ‘முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, பிறகு உயிராக்கி எழுப்பும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்” என்று கூறினேன். அதற்கு அவன், ‘அப்படியென்றால் நான் இறந்து மீண்டும் உயிராக்கி எழுப்பப்படும் வரை என்னைவிட்டுவிடு. அப்போது எனக்குச் செல்வமும் குழந்தைகளும் கொடுக்கப்படும். பிறகு நான் உன் கடனைத் தீர்ப்பேன்” என்று கூறினான். அப்போதுதான், ‘எவன் நம்முடைய சான்றுகளை மறுக்கிறானோ, மேலும் ‘பொருள் செல்வமும் மக்கள் செல்வமும் எனக்கு வழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்’ என்றும் கூறுகிறானோ அவனை (நபியே!) நீங்கள் பார்த்தீர்களா? அவன் மறைவான உண்மைகளை அறிந்து கொண்டானா? அல்லது கருணை மிக்க இறைவனிடம் ஏதேனும் உடன்படிக்கை செய்தானா? அப்படியொன்றுமில்லை. அவன் பிதற்றுவதை நாம் எழுதி வைத்துக் கொள்வோம். அவனுக்குத் தண்டனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்…” (திருக்குர்ஆன் 19:77-80) என்னும் திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டது.

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.