31.தராவீஹ் தொழுகை

பாகம் 2, அத்தியாயம் 31, எண் 2008-2009

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளான் (மாதத்தின் சிறப்பு) பற்றி கூறினார்கள். “ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையைய் எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

“(ரமளானின் இரவுத் தொழுகையை அவரவர் தனியாகத் தொழுது கொள்ளும்) இந்நிலையில் மக்கள் இருக்கும்பொழுது நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் நிலைமை இவ்வாறே இருந்தது!” என்று இமாம் இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்.

பாகம் 2, அத்தியாயம் 31, எண் 2010

அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில் காரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் உமர்(ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர்(ரலி) ‘இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே!” என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை இப்னு கஅப்(ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றொரு இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) ‘இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது; இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதை விட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும்!” என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுது வந்தனர். இரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர்(ரலி) கூறினார்.

பாகம் 2, அத்தியாயம் 31, எண் 2011

ஆயிஷா(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் ரமளானில் (இரவுத்) தொழுகை தொழுதார்கள்!”

பாகம் 2, அத்தியாயம் 31, எண் 2012

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள். (மறுநாள்) முதல்நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி(ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இது பற்றிப் பேசிக் கொண்டார்கள். இந்த மூன்றாம் இரவில் பள்ளிவாசலுக்கு நிறையப் பேர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவில், பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர்; ஆனால், நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். ஸுப்ஹுத் தொழுகையை முடித்தும் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மொழிந்து, ‘நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன்; நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்களின் மீது கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்!’ எனக் கூறினார்கள்.

“நிலைமை இப்படியே இருக்க, (ரமளானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க) நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள்!”  அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 31, எண் 2013

அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்: “நபி(ஸல்) அவர்களின் தொழுகை ரமளானில் எவ்வாறு இருந்தது?’ என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர், ‘ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் பதினனொரு ரக்அத்களை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் தொழமாட்டார்கள்; நான்கு ரக்அத்கள் தொழுதார்கள்; அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்’ என்று கூறினார்.

மேலும் ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர் அவர்களே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குகிறீர்களே? (உளூ நீங்கி விடுமே) என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஆயிஷாவே! என் கண்கள் தாம் உறங்குகின்றன என் உள்ளம் உறங்குவதில்லை” எனக் கூறினார்கள்.

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.