27.(ஹஜ் செய்வதிலிருந்து) தடுக்கப்படுதல்

பாகம் 2, அத்தியாயம் 27, எண் 1806

நாஃபிவு(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) குழப்பம் நிறைந்த காலத்தில் உம்ராவிற்காக மக்கவிற்குப் புறப்பட்டார்கள். ‘நான் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டால் நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் (சென்று தடுக்கப்பட்ட போது) செய்தது போல் செய்வேன்!” என்று கூறிவிட்டு உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா ஆண்டில் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்ததே இதற்குக் காரணமாகும். 

பாகம் 2, அத்தியாயம் 27, எண் 1807

நாஃபிவு (ரஹ்) அறிவித்தார். இப்னு ஸுபைர்(ரலி) அவர்களை (ஹஜ்ஜாஜின்) ராணுவம் முற்றுகைட்டிருந்த நாள்களில் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் (அவரின் மக்களான) உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ், ஸாலிம் இப்னு அப்தில்லாஹ் ஆகிய இருவரும், ‘நிங்கள் இவ்வாண்டு ஹஜ்ஜு செய்யாதிருப்பது உங்களுக்கு எந்தத் தீங்கும் இழைக்காது; நீங்கள் கஅபாவிற்குச் செல்வதிலிருந்து தடுக்கப்படுவீர்கள் என்று நாங்கள் அஞ்சுகிறோம்!” என்றனர். அதற்கு இப்னு உமர்(ரலி) ‘நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம்; குறைஷிகளில் இறைமறுப்பாளர்கள் கஅபாவுக்குச் செல்லவிடாமல் (நபி(ஸல்) அவர்களைத்) தடுத்தனர்; நபி(ஸல்) தம் பலிப்பிராணியை அறுத்து (பலியிட்டுவிட்டு)த் தலையை மழித்தார்கள்: நான் உம்ரா செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன். அல்லாஹ் நாடினால் நான் புறப்பட்டுச் செல்வேன். கஅபாவிற்குச் செல்ல வழி விடப்பட்டால் வலம்வந்தேன்! அங்கு செல்ல முடியாதவாறு நான் தடுக்கப்பட்டால் நபி(ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது அவர்கள் செய்தது போல் நானும் செய்வேன்!” என்றார்கள். பிறகு, துல்ஹுலைஃபா எனும் இடத்தில் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தார்கள். பிறகு, சிறிது நேரம் நடந்துவிட்டு, ‘ஹஜ் உம்ரா இரண்டும் ஒரே மாதிரியானவையே! நான் என் உம்ராவுடன் ஹஜ்ஜையும் (என் மீது) கடமையாக்கிக் கொண்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன்!” என்றார்கள். துல்ஹஜ் மாதத்தின் பத்தாம் நாள் வந்து, பலியிடும்வரை இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபடவில்லை. ‘மக்காவில் நுழையும் தினத்தில் (ஹஜ், உம்ராவிற்காக) ஒரேயொரு முறை வலம்வரும்வரை இஹ்ராமிலிருந்து (முழுமையாக) விடுபட முடியாது” என்றும் கூறி வந்தார்கள்.

“நீங்கள் இங்கேயே தங்கிவிடலாமே!” என்று இப்னு உமர்(ரலி) அவர்களிடம் அவரின் மகன்களில் ஒருவர் (மேற்கண்ட சம்பவத்தின் போது) கூறினார்!” என்று மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.

பாகம் 2, அத்தியாயம் 27, எண் 1809

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் (கஅபாவிற்குச் செல்ல விடாமல்) தடுக்கப்பட்டபோது தம் தலையை மழித்துக் கொண்டு, தம் மனைவியருடன் கூடி, தம் பலிப்பிராணியையும் அறுத்து பலியிட்டார்கள்; மறுவருடம் உம்ரா செய்தார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 27, எண் 1810

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். “இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறை உங்களுக்குப் போதாதா? உங்களில் ஒருவர் ஹஜ்ஜிலிருந்து தடுக்கப்பட்டால், அவர் (சாத்தியப்பட்டால்) கஅபாவை வலம்வந்து, ஸஃபா மர்வாவுக்கிடையே சஃயு செய்து, இஹ்ராமிலிருந்து விடுபடட்டும்! மறுவருடம் ஹஜ் செய்து பலியிடட்டும்! பலிப் பிராணி கிடைக்காவிட்டால் நோன்பு நோற்கட்டும்!”

பாகம் 2, அத்தியாயம் 27, எண் 1811

மிஸ்வர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (உம்ராவிலிருந்து தடுக்கப்பட்டபோது) தலையை மழித்துக் கொள்வதற்கு முன் (பலிப்பிராணியை) அறுத்து பலியிட்டார்கள்; அவ்வாறே செய்யும் படி தம் தோழர்களுக்கும் கட்டளையிட்டார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 27, எண் 1812

நாஃபிவு(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ஸாலிம், அப்துல்லாஹ் ஆகியோர் (குழப்பமான சூழ்நிலையில் ஹஜ்ஜுக்குச் செல்வது குறித்து) ஆட்சேபனை செய்தபோது இப்னு உமர்(ரலி) ‘நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் உம்ரா செய்வதற்காகப் புறப்பட்டோம். குறைஷிகளில் இறைமறுப்பாளர்கள் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுத்துவிட்டார்கள்; எனவே, நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஒட்டகங்களை அறுத்து (குர்பானி கொடுத்து)விட்டுத் தம் தலையை மழித்தார்கள்! (இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள்!)” என்று கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 27, எண் 1813

நாஃபிவு(ரஹ்) அவர்கள் அறிவித்தார். குழப்பமான காலத்தில் உம்ரா செய்வதற்காக இப்னு உமர்(ரலி) மக்காவிற்குப் புறப்பட்டபோது, ‘கஅபாவுக்குச் செல்ல விடாமல் நான் தடுக்கப்பட்டால் நபி(ஸல்) அவர்களுடன் சென்றபோது நாங்கள் செய்தது போல் செய்து கொள்வோம்!” என்றார்கள். ஹுதைபிய்யா ஆண்டின்போது (ஹிஜ்ரி6-ல்), நபி(ஸல்) அவர்கள் உம்ராவிற்கு இஹ்ராம் அணிந்த காரணத்தினால் இப்னு உமர்(ரலி) அவர்களும் உம்ராவிற்கு இஹ்ராம் அணிந்தார்கள். பின்னர் சிந்தித்துப் பார்த்து, ‘ஹஜ், உம்ரா இரண்டும் ஒரே மாதிரியானது தான்!” என்று கூறினார்கள். பின்னர் தம் தோழர்களை நோக்கி, ‘இவ்விரண்டும் ஒரே மாதிரியானவையே! எனவே, உம்ராவுடன் ஹஜ்ஜையும் (நிறைவேற்றுவதை என்மீது) கடமையாக்கிக் கொண்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சியாக்குகிறேன்!” என்றார்கள். பிறகு, இரண்டிற்கும் (ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும்) சேர்த்து ஒரே வலம்வந்தார்கள். அதுவே (இரண்டிற்கும்) போதுமானது எனக் கருதினார்கள்; (பலிப் பிராணியை) பலியிடவும் செய்தார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 27, எண் 1814

கஅபு இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார். “உம்முடைய (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?’ என்று என்னிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் ‘ஆம்! இறைத்தூதர் அவர்களே!” என்றேன். நபி(ஸல்) அவர்கள் ‘உம்முடைய தலையை மழித்து மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவு அளிப்பீராக! அல்லது ஓர் ஆட்டை பலியிடுவீராக!” என்றார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 27, எண் 1815

கஅபு இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார். ஹுதைபிய்யாவில் என்னருகில் நபி(ஸல்) அவர்கள் நின்றார்கள். என் தலையிலிருந்து பேன்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உம் (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா!” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!” என்றேன். அதற்கு ‘உம் தலையை மழித்துக் கொள்ளும்!” என்றார்கள். என் விஷயமாகவே (திருக்குர்ஆன் 02:196) இறைவசனம் அருளப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள், ‘மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ஸாவு தானியத்தை ஆறு ஏழைகளுக்கு தர்மம் செய்வீராக! அல்லது உம்மால் முடிந்ததை பலியிடுவீராக!” என்று கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 27, எண் 1816

அப்துல்லாஹ் இப்னு மஃகல்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் கஅபு இப்னு உஜ்ரா(ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரம் பற்றி அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள், ‘என் விஷயமாகவே (திருக்குர்ஆன் 02: 196) இறைவசனம் அருளப்பட்டது; என்றாலும், அது உங்கள் அனைவருக்கும் பொதுவானதே! பேன்கள் என் முகத்தில் உதிர்ந்து கொண்டிருக்க, நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டேன்; நபி(ஸல்) அவர்கள், ‘உமக்கு இவ்வளவு அதிகமாக வேதனை ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை! உம்மிடம் ஓர் ஆடு இருக்கிறதா?’ என்று கேட்டார்கள்; நான் ‘இல்லை!’ என்றேன். நபி(ஸல்) அவர்கள், ‘(தலையை மழித்து) மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது ஒவ்வொரு ஏழைக்கும் அரை ஸாவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பீராக!’ என்று கூறினார்கள்” என்றார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 27, எண் 1817

கஅபு இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார். என் முகத்தில் பேன்கள் விழுந்து கொண்டிருந்தபோது என்னை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள். ‘உம் (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!” என்றேன். அப்போது ஹுதைபிய்யாவிலிருந்த நபி(ஸல்) அவர்கள் என் தலையை மழிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். மக்காவிற்குள் நுழைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்ததால் அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. அப்போது இறைவன் (குற்றப்) பரிகாரம் சம்பந்தப்பட்ட வசனத்தை அருளினான். உடனே, நபி(ஸல்) அவர்கள் ‘மூன்று ஸாவு தானியத்தை ஆறு பேருக்கு வழங்க வேண்டும்: அல்லது ஓர் ஆட்டை பலியிட வேண்டும்; அல்லது மூன்று நாள்கள் நோன்பு நோற்க வேண்டும்!” என்று எனக்குக் கட்டளையிட்டார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 27, எண் 1819

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், எந்தப் பாவமும் செய்யாமல், இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறவர் அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 27, எண் 1820

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், எந்தப் பாவமும் செய்யாமல் இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறவர் அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.