13.இரு பெருநாட்கள்

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 948

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். கடைவீதியில் விற்பனை செய்யப்பட்ட பட்டுக் குளிராடை ஒன்றை உமர்(ரலி) எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! இதை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்; பெருநாளிலும் தூதுக்குழுவினரைச் சந்திக்கும் பொழுதும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம்’ என்று கூறினார்கள்.

இதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இது (மறுமைப்)பேறு அற்றவர்களின் ஆடையாகும்’ எனக் கூறினார்கள். சிறிது காலம் கடந்தது. பிறகு நபி(ஸல்) அவர்கள் பட்டுக் குளிராடை ஒன்றை உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். அதை எடுத்துக் கொண்டு உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! இது (மறுமைப்) பேறு பெறாதவர்களின் ஆடை எனக் கூறிவிட்டு இதை எனக்குக் கொடுத்தனுப்பியுள்ளீர்களே’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இதை நீர் விற்றுக் கொள்ளும்! அல்லது இதன் மூலம் உம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும்!” என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 949

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘புஆஸ்’ (எனும் போர்) பற்றிய பாடல்களை இரண்டு சிறுமிகள் என்னிடம் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது என்னிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தம் முகத்தை (வேறு புறமாகத்) திருப்பினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து ‘நபி(ஸல்) அவர்களின் அருகில் ஷைத்தானின் இசைக்கருவிகளா?’ என்று கூறி என்னைக் கடிந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ரை நோக்கி ‘அவ்விருவரையும் விட்டு விடுங்கள்” என்றனர். அபூ பக்ர்(ரலி) அவர்களின் கவனம் வேறு புறம் திரும்பியபோது, அவ்விரு சிறுமிகளையும் விரல்களால் குத்தி (வெளியேறி விடுமாறு கூறி)னேன். அவ்விருவரும வெளியேறிவிட்டனர்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 950

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஒரு பெருநாளின்போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாமாகவோ, நான் கேட்டதற்காகவோ ‘நீ பார்க்க ஆசைப் படுகிறாயா?’ எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர்.

(பிறகு அவர்களை நோக்கி) ‘அர்பிதாவன் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்தபோது ‘உனக்குப் போதுமா?’ என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ‘அப்படியானால் (உள்ளே) போ!” என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 951

பராஃ(ரலி) அறிவித்தார்.“நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன்பின்னர் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். இவ்வாறு செய்கிறவர் நம்முடைய வழிமுறையைப் பேணியவராவார்” என்று நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 952

ஆயிஷா(ரலி) அறிவித்தார். புஆஸ்(எனும் பழமையான போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என்முன்னே பாடிக் கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். ‘அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?’ என்று அபூ பக்ர்(ரலி) கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாளின் போதாகும். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நம்முடைய பெருநாளாகும்” என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 953

அனஸ்(ரலி) அறிவித்தார். சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி(ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.

மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 954

அனஸ்(ரலி) அறிவித்தார். “(பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவர் திரும்பவும் அறுக்கட்டும்!” என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அப்போது ஒருவர் எழுந்து ‘மாமிசம் விரும்பி உண்ணக் கூடிய நாளாகும் இது; சதைப் பற்றுள்ள இரண்டு ஆடுகளை விட எனக்கு விருப்பமான ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்றும் என்னிடம் உள்ளது’ என்று கூறித் தம் அண்டை வீட்டார்(களுக்கும் கொடுக்க வேண்டியுள்ளது) பற்றியும் குறிப்பிட்டார். (தொழுகைக்கு முன்பே அறுப்பதற்கு மேற்கண்ட காரணங்களால் அவர் அனுமதி கேட்டார்) அவருக்கு நபி(ஸல்) சலுகை வழங்கினார்கள். இந்தச் சலுகை மற்றவர்களுக்கும் உண்டா இல்லையா? என்பது எனக்குத் தெரியவில்லை.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 955

பராஃ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள்தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘நம்முடைய தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பதுபோன்று கொடுக்கிறவரே ‘உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர்.” என்று குறிப்பிட்டார்கள்.

அப்போது அபூ புர்தா இப்னு நியார்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்துவிட்டேன். என் வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் என்னுடைய ஆடே முதன் முதலில் அறுக்கப்படுவதாக அமைய வேண்டும் என்றும் விரும்பி (அறுத்து) விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாகவும் உட்கொண்டேன்” என்றார். அப்போது நபி(ஸல்) ‘உம்முடைய ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்” என்று கூறினார்கள். அப்போது அவர் ‘இறைத்தூதர் அவர்களே! என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக்குட்டிகள் உள்ளன. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமாக ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா? என்று கேட்டார். ‘ஆம்! இனிமேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது” என்று நபி(ஸல்) விடையளித்தார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 956

அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிடவேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள்.

மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானுடன் நோன்புப் பெருநாள் தொழுகையையோ, ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையோ தொழச் செல்லும் வரை மக்கள் இவ்வாறே கடைப்பிடித்து வந்தனர். (மர்வான் ஆட்சியில் ஒரு நாள்) நாங்கள் தொழும் திடலுக்கு வந்தபோது கஸீர் இப்னு ஸல்த் என்பவர் உருவாக்கிய மேடை ஒன்று அங்கே திடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் தொழுவதற்கு முன்பே அதில் ஏறமுயன்றார். நான் அவரின் ஆடையைப் பிடித்து இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் மேடையில் ஏறித் தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்தலானார். அப்போது நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் (நபி வழியை) மாற்றி விட்டீர்கள் என்று கூறினேன்.

அதற்கு மர்வான் ‘நீ விளங்கி வைத்திருக்கும் நடைமுறை மலையேறி விட்டது’ என்றார். நான் விளங்காத (இந்தப் புதிய) நடைமுறையை விட நான் விளங்கி வைத்துள்ள நடைமுறை அல்லாஹ்வின் மீது ஆணையாகமிகச் சிறந்ததாகும் என கூறினேன்.

அதற்கு மர்வான் ‘மக்கள் தொழுகைக்ப் பிறகு இருப்பதில்லை’ எனவே நான் தொழுகைக்கு முன்பே உரையை அமைத்துக் கொண்டேன்’ என்று கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 957

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளைத் தொழுதுவிட்டுப் பிறகு உரை நிகழ்த்துவார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 958

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகை தொழப் புறப்பட்டுச் சென்று, உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுதார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 959

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) காலத்தில் நோன்புப் பெருநாளில் தொழுகைக்காகப் பாங்கு சொல்லப்பட்டதில்லை; தொழுகைக்குப் பிறகே உரையும் அமைந்திருந்தது.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 960

ஜாபிர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் கூறினார்கள்: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 961

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகித் தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் (உரை நிகழ்த்தி) முடித்து இறங்கிப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கை மீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள்.

பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக் கொள்ள, பெண்கள் தங்கள் தர்மத்தை அதில் போடலானார்கள்.

உரை நிகழ்த்தி முடித்துவிட்டுப் பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்குப் போதனை செய்வது இன்றைக்கும் இமாம்களின் மீது கடமை என நீங்கள் கருதுகிறீர்களா? என அதாஃவிடம் கேட்டேன். அதற்கு ‘நிச்சயமாக அது அவர்களுக்குக் கடமைதான். அவர்கள் எப்படி இதைச் செய்யாமலிருக்க முடியும்?’ என்று கேட்டார் என இப்னு ஜுரைஜ் கூறுகிறார்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 962

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான், நபி(ஸல்) அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடன் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 963

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோர் இரண்டு பெருநாள்களிலும் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுபவர்களாக இருந்தனர்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 964

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி(ஸல்) விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 965

பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். “இன்றைய தினத்தில் நாம் முதலில் செய்ய வேண்டியது தொழுவதாகும். பிறகு (இல்லம்) திரும்பி அறுத்ப் பலியிடுதலாகும். இவ்வாறு செய்கிறவர் நம்முடைய வழிமுறையில் நடந்தவராவார். தொழுகைக்கு முன்னர் அறுக்கிறவர் அறுத்தது, தம் குடும்பத்திற்காக அவர் ஒதுக்கிய மாமிசமாகும். அது குர்பானியில் சேராது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ புர்தா இப்னு நியார் என்று அழைக்கப்படும் அன்ஸார்களில் ஒருவர் ‘இறைத்தூதர் அவர்களே! நான் (முன்பே) அறுத்து விட்டேன். என்னிடம் ஓராண்டு நிறைந்த ஆட்டைவிடச் சிறந்த ஆறு மாதக் குட்டி ஒன்று உள்ளது. (அதை அறுக்கலாமா?)’ என்று கேட்டார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஒரு வயது ஆட்டுக்குப் பதிலாக அதை நீ அறுத்துக் கொள்! இனி மேல் உன்னைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது” என்று விடையளித்தார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 966

ஸயீத் இப்னு ஜுபைர் அறிவித்தார். இப்னு உமர்(ரலி) உடைய பாதத்தின் மையப் பகுதியில் அம்பு தாக்கி அவர்களின் பாதம் வாகனத்துடன் ஒட்டிக் கொண்ட சமயத்தில் நான் அவர்களுடன் இருந்தேன். நான் (கீழே) இறங்கி அதைப் பிடுங்கினேன். இது மினாவில் இருந்தபோது நடந்தது.

இச்செய்தி ஹஜ்ஜாஜு(பின் யூஸுஃபு)க்குக் கிடைத்து அவர் நோய் விசாரிக்க வந்தார். ‘உம்மைத் தாக்கியவர் யாரென்று தெரிந்தால் (நடவடிக்கை எடுப்போம்)’ என்று அப்போது குறிப்பிட்டார்.

அதற்கு இப்னு உமர்(ரலி) ‘நீர் தாம் தாக்கினீர்’ என்றார்கள். ‘அது எப்படி?’ என்று ஹஜ்ஜாஜ் கேட்டார். ‘ஆயுதம் கொண்டு செல்லக் கூடாத நாளில் நீர் தாம் ஆயுதம் தரித்தீர்! ஹரம் எல்லையில் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படக் கூடாது என்ற நிலையில் நீர் ஹரம் எல்லையில் ஆயுதங்களை நடமாட விட்டீர்’ என்று இப்னு உமர்(ரலி) குறிப்பிட்டார்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 967

ஸயீத் இப்னு அம்ர் ( அறிவித்தார்) இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ஹஜ்ஜாஜ் வந்தார். அப்போது நானும் அவர்களுடனிருந்தேன். ‘இப்னு உமர்(ரலி) எப்படி இருக்கிறார்?’ என்று (என்னிடம்) கேட்டார். நலமாக உள்ளார் என்று கூறினேன்.

பிறகு இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ‘உம்மைத் தாக்கியவர் யார்?’ என்று ஹஜ்ஜாஜ் கேட்டார். ‘அயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாத நாளில் ஆயுதங்களை எடுத்துச் செல்ல உத்தரவிட்டவரே என்னைத் தாக்கியவர்’ என்று ஹஜ்ஜாஜை மனதில் வைத்துக் குறிப்பிட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 968

பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். ஹஜ்ஜுப் பெருநாளில் நபி(ஸல்) எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘இன்றைய தினத்தில் நாம் முதலில் செய்ய வேண்டியது தொழுவதாகும். பிறகு (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுதலாகும். இவ்வாறு செய்கிறவர் நம்முடைய வழிமுறையில் நடந்தவராவார். தொழுகைக்கு முன்னர் அறுக்கிறவர் அறுத்தது, தம் குடும்பத்திற்காக. அவசரப்பட்டுவிட்டார்; அது குர்பானியில் சேராது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ புர்தா இப்னு நியார் எழுந்து ‘இறைத்தூதர் அவர்களே! நான் தொழுவதற்கு முன்பே அறுத்து விட்டேன். என்னிடம் ஓராண்டு நிறைந்த ஆட்டை விடச் சிறந்த ஆறுமாதக் குட்டி ஒன்று உள்ளது (அதை அறுக்கலாமா?)’ என்று கேட்டார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஒரு வயது ஆட்டுக்குப் பதிலாக அதை நீ அறுத்து கொள்! இனி மேல் உன்னைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது” என்று விடையளித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 969

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். “(துல்ஹஜ்) பத்து நாள்களில் செய்யும் எந்த நல்லறமும் அய்யாமுத் தஷ்ரீக் நாள்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விடச் சிறந்ததல்ல” என்று நபி(ஸல்) கூறினார்கள். ‘ஜிஹாதை விடவுமா?’ என்று நபித் தோழர்கள் கேட்டனர். ‘தன்உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர’ என்று நபி(ஸல்) கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 970

முஹம்மத் இப்னு அபீ பக்ர் அஸ்ஸஃபீ அறிவித்தார். நாங்கள் மினாவிலிருந்து அரஃபாவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது அனஸ்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களுடன் நீங்கள் எவ்வாறு தல்பியா கூறிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்னே;. அதற்கவர்கள் ‘தல்பியா கூறியவர்கள் தல்பியா கூறினர்; அது ஆட்சேபிக்கப் படவில்லை தக்பீர் கூறியவர் தக்பீர் கூறினர்; அதுவும் ஆட்சேபிக்கப் படவில்லை’ என்று விடையளித்தார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 971

உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். பெருநாளில் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்ப்பார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 972

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் ஓர் ஈட்டி நாட்டப்படும். நபி(ஸல்) அவர்கள் (அதை நோக்கித்) தொழுவார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 973

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்காகத்) தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பே கைத்தடி எடுத்துச் செல்லப் பட்டுத் தொழும் இடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கி நபி(ஸல்) தொழுவார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 974

உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும் மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் திடலுக்குப்) புறப்படச் செய்யும்படி எங்களை ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டு விலகியிருப்பார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 975

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் (சிறுவனாக இருக்கும் போது) நோன்புப் பெருநாளிலோ ஹஜ்ஜுப் பெருநாளிலோ நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். அவர்கள் தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பெண்கள் (பகுதிக்கு) வந்து அவர்களுக்குப் போதனையும் அறிவுரையும் வழங்கினார்கள். தர்மம் செய்யுமாறும் அவர்களை வலியுறுத்தினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 976

பராஃ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளில் பகீஃ எனுமிடத்திற்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பின்னர் எங்களை நோக்கி, ‘இன்று நாம் செய்யும் முதல் காரியம் தொழுகையை நிறைவேற்றுவது. பின்னர்(இல்லம்) திரும்பி (குர்பானிப் பிராணியை) அறுப்பது. இவ்வாறு தொழுகைக்கு முன் அறுத்துவிட்டவர் தம் குடும்பத்தாருக்காக, அவசரமாக அறுத்தவராவார். அது குர்பானியாகாது’ எனக் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் (தொழுகைக்கு முன்பே) அறுத்துவிட்டேன். என்னிடம் ஒரு வயதுடைய ஆட்டை விடச் சிறந்த ஆறு மாதக் குட்டி ஒன்று இருக்கிறது. (அதை அறுக்கலாமா?)’ என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அதை அறுப்பீராக! உமக்குப் பின் மற்றவர்களுக்கு இது பொருந்தாது” என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 977

அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிஸ் கூறினார்: நீங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்ததுண்டா? என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘ஆம்! (நபி(ஸல்) அவர்களுடன்) நெருக்கமான உறவு எனக்கு இல்லாவிட்டால் நான் சிறுவனாக இருந்த நிலையில் அதில் கலந்து கொண்டிருக்க முடியாது’ என்று கூறிவிட்டு ‘நபி(ஸல்) அவர்கள் கஸீர் இப்னு ஸல்த் என்பவரின் இல்லத்தினருகில் இருந்த அடையாளத்திற்கு வந்தார்கள். பிறகு தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பெண்களிடம் வந்தார்கள். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார்கள். பெண்களுக்குப் குனித்து தம் கைகளால் பிலாலுடைய துணியில் பொருட்களைப் போட்டதை பார்த்தேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரலி) உடன் தம் இல்லத்திற்கு புறப்பட்டனர்’ என்றார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 978

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் எழுந்து தொழுதார்கள். தொழுகையை முதலில் நடத்திவிட்டுப் பிறகு உரை நிகழ்த்தினார்கள். உரை முடித்து இறங்கிப் பெண்களிடம் சென்று பிலாலுடைய கையில் சாய்ந்து கொண்டு அவர்களுக்குப் போதனை செய்தார்கள். பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக் கொண்டிருந்தார்கள். பெண்கள் (தங்களின்) தர்மத்தை அதில் போடலானார்கள்.

(ஜாபிர் வழியாக இதை அறிவிக்கும்) அதாஃவிடம் பித்ரு ஸதகாவையா? என்று கேட்டேன். அதற்கவர் ‘இல்லை! அப்போது அவர்களாக விரும்பிச் செய்த தர்மத்தையே போட்டனர். கால் விரலில் அணிந்து கொள்ளும் மெட்டிகளையும் அவர்கள் போட்டுள்ளனர்’ என்று விடையளித்தார்.

இமாம் பெண்களுக்கும் போதனை செய்வது அவசியமானது என்று நீங்கள் கருதுகிறீர்களா? என அதாஃவிடம் கேட்டேன். அதற்கவர் ‘நிச்சயமாக அவர்களுக்கு அது கடமை தான். அதை அவர்கள் எப்படிச் செய்யாமலிருக்க முடியும்?’ என்று பதிலளித்தார் என இப்னு ஜுரைஜ் அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 979

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடனும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுகை நடத்துபவர்களாக அவர்கள் இருந்தனர். அதன் பிறகே உரை நிகழ்த்துவார்கள். நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அவர்கள் மக்களைத் தம் கைகளால் அமரச் செய்தது இன்றும் நான் பார்ப்பது போலுள்ளது. பிறகு ஆண்களை (வரிசையின}டே) பிளந்து கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். ‘நபியே உம்மிடம் இறைநம்பிக்கையுள்ள பெண்கள் உறுதி மொழி எடுக்க வரும் போது” (திருக்குர்ஆன் 60:12) என்ற வசனத்தை ஓதினார்கள். ஓதி முடித்துவிட்டு ‘இந்த உறுதிமொழியில் நீங்கள் நிலையாக இருப்பீர்களா?’ என்று கேட்டார்கள். எவரும் விடையளிக்கவில்லை. ஒரு பெண் மட்டுமே ‘ஆம்’ என்றார். அவர் யாரென்று அறிவிப்பாளர் ஹஸனுக்குத் தெரியவில்லை – பிலால் தம் ஆடையை ஏந்தினார்.

‘வாருங்கள்! தாய் தந்தையரை அர்ப்பணிக்க வாருங்கள்!’ என்று பிலால் கூறினார். மோதிரங்களையும் மெட்டிகளையும் பிலாலின் ஆடையில் அப்பெண்கள் போடலானார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 980

ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார். நாங்கள் இரண்டு பெருநாள்களிலும் தொழும் இடத்திற்குச் செல்வதை விட்டும் எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில் ஒரு பெண் வந்து பனீ கலஃப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் தம் சகோதரி (உம்மு அதிய்யா) வழியாக வந்த செய்தியை அறிவித்தார். அவரின் சகோதரி (உம்மு அதிய்யா) நபி(ஸல்) அவர்களோடு தம் கணவர் பங்கெடுத்த பன்னிரண்டு போர்களில் ஆறு போர்களில் கணவரோடு இருந்தவராவார்.

உம்மு அதிய்யா கூறினார்: ‘நாங்கள் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சையளிப்போம். நோயாளிகளைக் கவனிப்போம். நான் நபி(ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் இருப்பது குற்றமா? எனக் கேட்டேன். அதற்கு, ‘அவளுடைய தோழி தன்னுடைய உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களுடைய பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உம்மு அதிய்யா(ரலி) ‘(என்னிடம்) வந்தபோது நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் கேட்டீர்களா? என கேட்டேன். அதற்கு ‘என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்; ஆம்! கேட்டேன்’ எனக் கூறினார்கள். இவர் நபி(ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதெல்லாம்’ என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்’ என்பதையும் சேர்த்தே கூறுவார்.

‘கன்னிப் பெண்களும் மாதவிடாய் பெண்களும் (பெருநாள் அன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களுடைய பிரச்சாரத்திலும் பங்கு கொள்வார்கள். பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்லும் மாதவிடாய்ப் பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்’ என்றும் உம்மு அதிய்யா(ரலி) கூறினார். இதைக் கேட்ட நான் மாதவிடாய்ப் பெண்களுமா? (பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்வார்கள்) எனக் கேட்டபோது, ‘மாதவிடாயுள்ள பெண் அரஃபாவிலும் மற்ற (மினா, முஸ்தலிஃபா போன்ற) இடங்களுக்கும் செல்வதில்லையா?’ என உம்மு அதிய்யா(ரலி) கேட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 981

உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும் மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் திடலுக்குப்) புறப்படச் செய்யும்படி எங்களை ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தைவிட்டு விலகியிருப்பார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 982

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலிலேயே ஆடு மாடுகளையும் ஒட்டகங்களையும் அறுப்பவர்களாக இருந்தனர்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 983

பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘நம்முடைய தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போல் குர்பானி கொடுக்கிறவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். ஒருவர் தொழுகைக்கு முன்பே அறுப்பது மாமிசத்திற்காக அறுக்கப்பட்டதாகும்” என்று குறிப்பிட்டார்கள்.

அப்போது அபூ புர்தா இப்னு நியார்(ரலி) எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். நானும் என்னுடைய குடும்பத்தினரும் அண்டை வீட்டாரும் சாப்பிட்டு விட்டோம்” என்றார். அப்போது நபி(ஸல்) ‘அது மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்” என்று கூறினார்கள். அப்போது அவர் ‘இறைத்தூதர் அவர்களே! என்னிடம் சதைப்பற்றுள்ள இரண்டு ஆடுகளை விடச் சிறந்த, ஆறுமாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா?’ என்று கேட்டார். ‘ஆம்! இனிமேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது” என்று நபி(ஸல்) விடையளித்தார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 984

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை தொழுகை நடத்திவிட்டு உரை நிகழ்த்தினார்கள். தொழுகைக்கு முன் (குர்பானிப் பிராணிகளை) அறுத்தவர் மீண்டும் அறுக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அன்ஸார்களைச் சேர்ந்த ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு வறுமை நிறைந்த அண்டை வீட்டார் உள்ளனர். (அவர்களுக்கு முன்பே நான் அறுத்து விட்டேன் என்னிடம் கொழுத்த இரண்டு ஆடுகளை விட விருப்பமான ஆறு மாதக் குட்டி ஒன்று உள்ளது. (அதை அறுக்கலாமா?) என்று கேட்டார். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 985

ஜுன்தப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பலியிட்டார்கள். ‘தொழுகைக்கு முன் அறுத்தவர் மற்றொன்ரை அறுக்கட்டும்! அறுக்காதவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும்” என்றார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 986

ஜாபிர்(ரலி) அறிவித்தார். பெருநாள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 987

ஆயிஷா(ரலி) அறிவித்தார். என் அருகே இரண்டு சிறுமியர் ‘தஃப்’ எனும் ‘கொட்டு’ அடித்துக் கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள் தம் ஆடையால் போர்த்திக் கொண்டிருந்தனர். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து அவ்விருவரையும் விரட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் தம் முகத்தைவிட்டும் ஆடையை விலக்கி ‘அபூ பக்ரே! அவ்விருவரையும்விட்டு விடுவீராக! ஏனெனில் இவை பெருநாள்களாகும்” என்று கூறினார்கள். அந்த நாள்கள் மினவின் நாள்களாக (10,11,12,13) அமைந்திருந்தன.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 988

ஆயிஷா(ரலி) அறிவித்தார். அபிஸீனிய வீரர்கள் பள்ளியில் வீர விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது நான் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் என்னை மறைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வீரர்களை உமர்(ரலி) விரட்டலானார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘(உமரே!) அவர்விட்டு அபீ ஸீனியர்களை நோக்கி ‘அர்பிதாவின் மக்களே! அச்சமின்றி விளையாடுங்கள்!” என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 989

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலாலும் சென்றனர்.

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.