11.ஜும்ஆத் தொழுகை

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 876

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள். மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப் பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர்களும் அதற்கு மறு நாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 877

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ‘உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 878

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஜும்ஆ நாளில் உமர்(ரலி) சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஆரம்ப காலத்திலேயே ஹிஜ்ரத் செய்த நபித்தோழர் ஒருவர் வந்தார். அவரை உமர்(ரலி) அழைத்து ‘ஏனிந்தத் தாமதம்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘நான் அலுவலில் ஈடுபட்டு விட்டேன். பாங்கு சப்தத்தைக் கேட்டு(க் குளிக்காமல்) உளூ மட்டும் செய்துவிட்டு வேகமாக வருகிறேன்’ என்று கூறினார். அதற்கு உமர்(ரலி) ‘உளூ மட்டும்தான் செய்தீரா? நபி(ஸல்) அவர்கள் குளிக்குமாறு கட்டளையிட்டுள்ளனர் என்பது உமக்குத் தெரியுமே!” என்று கேட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 879

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.” என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 880

அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். “ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அபூ ஸயீத்(ரலி) வழியாக இதை அறிவிக்கும் அம்ர் இப்னு ஸுலைம் ‘குளிப்பது அவசியம்’ என்பதை நான் உறுதியாக அறிவேன். ஆனால் பல் குலக்குவதும் நறுமணம் பூசுவதும் கடமையா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஹதீஸில் அப்படித்தான் உள்ளது’ என்று குறிப்பிட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 881

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராம்ப் போதனையைக் கேட்கிறார்கள்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 882

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஜும்ஆ நாளில் உமர்(ரலி) சொற்பொழிவு நிகழ்த்தும்போது ஒருவர் வந்தார். தொழுகைக்கு ஏன் தாமதமாக வருகிறீர்?’ என்று உமர்(ரலி) கேட்டார்கள். அதற்கு அவர் ‘நான் பாங்கைக் கேட்டதும் உளூச் செய்வதற்குத் தவிர (குளிப்பதற்கு) நேரமில்லை’ என்றார். அதற்கு, ‘உங்களில் ஒருவ்h ஜும்ஆவுக்குச் செல்வதாயிருந்தால் குளித்துக் கொள்ளட்டும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நீர் கேள்விப் படவில்லையா?’ என்று உமர்(ரலி) கேட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 883

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு தம் வீட்டிலுள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (அங்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல், தமக்கு விதிக்கப் பட்டதைத் தொழுதுவிட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” என ஸல்மான் பார்ஸி(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 884

தாவூஸ் அறிவித்தார். “ஜும்ஆ நாளில் உங்களுக்குக் குளிப்புக் கடமையாக இல்லாவிட்டாலும் உங்கள் தலையைக் கழுவிக் கொள்ளுங்கள்; குளியுங்கள்; மேலும் நறுமணம் பூசிக் கொள்ளுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச் சிலர் கூறுகிறார்களே என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு குளிப்பைப் பொறுத்த வரை சரிதான்; நறுமணம் பற்றி எனக்குத் தெரியாது’ என்று விடையளித்தார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 885

தாவூஸ் அறிவித்தார். ஜும்ஆ நாளில் குளிப்பது பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) கூறியபோது நறுமணப் பொருளோ எண்ணெய்யோ ஒருவரின் இல்லத்தில் இருந்தால் அதைப்பூசிக் கொள்ள வேண்டுமா?’ என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘எனக்குத் தெரிய வில்லை’ என்று விடையளித்தார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 886

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். பள்ளியின் நுழைவாயிலில் பட்டாடை ஒன்றை (விற்பனை செய்வதை) உமர்(ரலி) பார்த்தார்கள். அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! இதை நீங்கள் விலைக்கு வாங்கி ஜும்ஆ நாளிலும் தூதுக் குழுவைச் சந்திக்கும் போதும் அணிந்து கொள்ளலாமே’ என்று நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) கேட்டார்கள். “மறுமையில் இந்தப் பாக்கியம் அற்றவர்களின் ஆடையே இது” என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.

பின்னர் நபி(ஸல்) அவர்களுக்குச் சில பட்டாடைகள் வந்தன. அதில் ஓர் ஆடையை உமர்(ரலி)க்குக் கொடுத்தனர். அதற்கு உமர்(ரலி) ‘பட்டாடை பற்றி வேறு விதமாக நீங்கள் கூறிவிட்டு அதை எனக்குக் கொடுக்கின்றீர்களே’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீர் அணிவதற்காக இதை உமக்கு நான் தரவில்லை’ என்று கூறினார்கள். அந்த ஆடையை மக்காவில் இருந்த முஷ்ரிக்கான தம் சகோதரருக்கு உமர்(ரலி) வழங்கினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 887

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “என் சமுதாயத்திற்குச் சிரமமாம் விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 888

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்: நபி(ஸல்) அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்குவார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 890

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்களின் மரணவேளையில்) அபூ பக்ருடைய மகன் அப்துர் ரஹ்மான் வந்தார். அவரிடம் அவர் பல் துலக்கப் பயன்படுத்தும் குச்சி ஒன்றும் இருந்தது. அதனை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். (அவர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட நான்) ‘அப்துர் ரஹ்மானே! அந்தக் குச்சியைக் கொடுப்பீராக! என்றேன். அவர் கொடுத்ததும் அதை வெட்டி, மென்று நபி(ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். என் நெஞ்சில் சாய்ந்து கொண்டு நபி(ஸல்) அவர்கள் பல் துலக்கினார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 891

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் ஃபஜ்ர் தொழுகையில் ‘அலிஃப் லாம் மீம் ஸஜ்தா’வையும் ‘ஹல்அதா அலல் இன்ஸான்’ என்ற அத்தியாயத்தையும் ஓதக் கூடியவர்களாக இருந்தனர்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 892

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் நடத்தப் பட்ட ஜும்ஆவுக்கு அடுத்து பஹ்ரைனில் உள்ள ஜுவாஸா எனும் கிராமத்தில் அப்துல் கைஸ் பள்ளியில்தான் முதன்முதலாக ஜும்ஆ நடந்தது.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 893

யூனுஸ் அறிவித்தார். அய்லாவின் அதிகாரியாக இருந்த ருஸைக் இப்னு ஹகீம், வாதில்குரா கிராமத்தில், தாம் ஜும்ஆ நடத்தலாமா என இப்னு ஷீஹாபுக்கு எழுதிக் கேட்டார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். அக்கிரமாத்தில் சூடான் நாட்டவரும் பிறரும் இருந்தனர். இப்னு ஷீஹாப், ஜும்ஆ நடத்துமாறு ருஸைக் இப்னு ஹகீமுக்குக் கட்டளையிட்டார்கள். இப்னு உமர்(ரலி) வழியாக ஸாலிம் அறிவிக்கும் பின்வரும் நபிமொழியை அதற்கு ஆதாரமாக காட்டினார்கள்.

“உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப் படுவார்கள். ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப் படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்.”

“ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான்” என்றும் கூறினார்கள் எனக் கருதுகிறேன்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 894

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்.” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 895

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.” என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 896

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள் மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப் பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப் பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர்களுக்கு அதற்கு மறுநாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 897

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஏழு நாள்களுக்கு ஒரு முறை தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 898

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஏழு நாள்களுக்கு ஒரு முறை குளிப்பது அல்லாஹ்வுக்காக ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய கடமையாகும்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 899

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “பெண்கள் இரவில் பள்ளிக்குச் செல்வதற்கு நீங்கள் அனுமதியுங்கள்.” இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 900

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழச் செல்வார். அவரிடம் ‘உங்கள் கணவர்) உமர்(ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்’ என்று கேட்கப் பட்டது. அதற்கு ‘அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளனர்’ என்று பதிலுரைத்தார்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 901

அப்துல்லாஹ் இப்னு அல் ஹாரிஸ் அறிவித்தார். பாங்கு சொல்பவரிடம் ஒரு மழை நாளில் ‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்’ என்று (பாங்கில்) கூறிய பிறகு ஹய்ய அலஸ்ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்) என்பதைக் கூறாமல் உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுகள் என்று கூறும்’ என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். (இவ்வாறு கூறியதை) மக்கள் வெறுப்பது போல் இருந்தபோது ‘என்னை விட மிகவும் சிறந்தவ(ரான நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்’ என்று நிச்சயமாக ஜும்ஆ அவசியமானது தான்; எனினும், நீங்கள் சேற்றிலும் சகதியிலும் நடந்து வந்து அதனால் உங்களுக்குச் சிரமம் தருவதை நான் விரும்பவில்லை’ என்றும் குறிப்பிட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 902

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.(மதீனாவுக்கு நான்கு மைல் தொலைவிலுள்ள) மேட்டுப் பகுதியிலிருந்தும் தங்கள் இல்லங் களிலிருந்தும் மக்கள் ஜும்ஆ நாளில் முறை வைத்து (மதீனாவுக்கு) வந்து கொண்டிருந்தார்கள். புழுதிகளில் அவர்கள் நடந்து வருவதால் அவர்கள் மேல் புழுதி யும் வியர்வையும் படிந்து விடும். அவர்களிடமிருந்து வியர்வை வெளியேறும். (இந்த நிலையில்) அவர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்கள் என்னுடனிருக்கும்போது வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இந்த தினத்துக்காக நீங்கள் தூய்மையாகிக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 903

யஹ்யா இப்னு ஸயீத் அறிவித்தார். ஜும்ஆ நாளில் குளிப்பது பற்றி நான் அம்ர்hவிடம் கேட்டேன். அதற்கு அம்ர்h ‘அன்றைய மக்கள் உழைப்பாளர்களாக இருந்தனர். அவர்கள் ஜும்ஆவுக்கு வரும்போது அதே கோலத்துடனேயே வந்து விடுவார்கள். இதனால்தான் நீங்கள் குளித்துக் கொள்ளலாமே என்று கூறப்பட்டது’ என ஆயிஷா(ரலி) கூறினார் என விடையளித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 904

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். சூரியன் சாயும் நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆத் தொழுபவர்களாக இருந்தனர்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 905

அனஸ்(ரலி) அறிவித்தார். நாங்கள் ஜும்ஆவை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவோம். ஜும்ஆவுக்குப் பிறகு (கைலூலா எனும்) முற்பகல் உறக்கம் கொள்வோம்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 906

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் குளிர் கடுமையாக இருக்கம்போது ஜும்ஆத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவார்கள். கோடை கடுமையாக இருக்கும்போது ஜும்ஆவைத் தாமதமாக்குவார்கள்.

யூனுஸ் இப்னு புகைர் அறிவிக்கும் ஹதீஸில் ஜும்ஆ என்று கூறாமல் தொழுகை என்று கூறுகிறார்.

பிஷ்ரு இப்னு ஸாபித் அறிவிக்கும் ஹதீஸில் ‘எங்களுக்கு அமீர் ஜும்ஆத் தொழுகை நடத்தினார். பிறகு ஜும்ஆத் தொழுகை நடத்தினார். பிறகு அனஸ்(ரலி) அவர்களிடம் ‘நபி(ஸல்) அவர்கள் எப்போது லுஹர் தொழுவார்கள்’ என்று விசாரித்தார். (அதற்குத்தான் அனஸ்(ரலி) மேற்கண்டவாறு விடையளித்தார்கள்)’ எனக் குறிப்பிடுகிறார்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 907

அபாயா இப்னு ரிஃபாஆ அறிவித்தார். நான் ஜும்ஆவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது அபூ அபஸ்(ரலி) என்னைச் சந்தித்தார்கள். அப்போது ‘இறைவழியில் எவருடைய பாதங்களில் புழுதி படிகிறதோ அவரை நரகைவிட்டும் இறைவன் விலக்குகிறான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 908

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள். நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். கிடைத்ததைத் தொழுங்கள். தவறியதைப் பூர்த்தி செய்யுங்கள்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 909

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “என்னை நீங்கள் காணும் வரை (தொழுவதற்காக) எழாதீர்கள்! நிதானத்தைப் கடைப்பிடியுங்கள்.” என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 910

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஜும்ஆ நாளில் ஒருவர் குளித்து, இயன்றவரை தூய்மையாகிப் பிறகு எண்ணெய் தேய்த்து நறுமணம் பூசி, (ஜும்ஆவுக்குப்) புறப்பட்டு (அமர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்காமல் அவருக்கு விதிக்கப் பட்டதைத் தொழுது, பிறகு இமாம் வந்ததும் மவுனம் காத்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடைப் பட்ட குற்றங்கள் மன்னிக்கப்படும்.” என ஸல்மான் அல் ஃபார்ஸி(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 911

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஒருவர் தம் சகோதரரை அவரின் இடத்திலிருந்து கிளப்பிவிட்டு அவ்விடத்தில் உட்கார்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர்.

ஜும்ஆவிலா? என்று நாஃபிவு இடம் தாம் கேட்டபோது, ஜும்ஆவிலும் ஜும்ஆ அல்லாத மற்ற சமயங்களிலும் தான்’ என்று நாஃபிவு விடையளித்ததாக இப்னு ஜுரைஜ் குறிப்பிடுகிறார்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 912

ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) காலங்களிலும் ஜும்ஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான்(ரலி) காலத்தில் மக்கள் பெருகியபோது கடை வீதியில் (பாங்கு, இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 913

ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். ஜும்ஆ நாளில் மூன்றாவது அறிவிப்பை அதிகப் படுத்தியவர் உஸ்மான்(ரலி) ஆவார். மதீனாவாசிகள் பெருகியபோது (இவ்வாறு செய்தார்கள்) நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு முஅத்தின் மட்டுமே இருந்தார். இமாம் மிம்பரில் அமர்ந்த நேரத்தில் ஜும்ஆவின் பாங்கு அமைந்திருந்தது.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 914

அபூ உமாமா(ரலி) அறிவித்தார். முஆவியா(ரலி) மிம்பரில் அமர்ந்திருந்தபோது முஅத்தின் பாங்கு சொன்னார். அவர் ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்று கூறியதும் முஆவியா(ரலி)வும் ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்றார்கள்.

முஅத்தின் ‘அஷ்ஹது அல் லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறியதும் ‘நானும் (அவ்வாறே நம்புகிறேன்)’ எனக் கூறினார்கள். முஅத்தின் ‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்’ எனக் கூறியதும் ‘நானும்’ என்றார்கள்.

பாங்கு சொல்லி முடித்தும், ‘மக்களே! முஅத்தின் பாங்கு சொன்னபோது நான் கூறிய இதே வார்த்தையை இதே இடத்தில் நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்’ என்று முஆவியா(ரலி) குறிப்பிட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 915

ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். மக்கள் பெருகியபோது ஜும்ஆ நாளின் இரண்டாம் அறிவிப்பை உஸ்மான்(ரலி) ஏற்படுத்தினார்கள். (அதற்கு முன்னர்) இமாம் அமரும்போது பாங்கு சொல்வது மட்டுமே இருந்தது.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 916

ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) காலங்களிலும் ஜும்அ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான்(ரலி) காலத்தில் மக்கள் பெருகியபோது கடை வீதியில் (பாங்கு இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது. இத நிலைபெற்றுவிட்டது.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 917

அபூ ஹாஸிம் இப்னு தீனார் அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் மிம்பர் எந்த மரத்தினாலானது என்று சர்ச்சை செய்த நிலையில் சில மனிதர்கள் ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அவர்களிடம் வந்து இது பற்றிக் கேட்டனர். அதற்கு ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக அது எந்த மரத்தினாலானது என்பதை அறிவேன். அது தயாரிக்கப் பட்ட முதல் நாளிலேயே அதை நான் பார்த்துள்ளேன். நபி(ஸல்) அவர்கள் முதன் முதலில் அதில் அமர்ந்த நாளிலும் அதை நான் பார்த்திருக்கிறேன்’ என்று கூறிவிட்டுப் பின்வரும் நிகழ்ச்சியைக் கூறலானார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு பெண்மணியிடம் — அப்பெண்மணியின் பெயரையும் ஸஹ்ல் குறிப்பிட்டார்கள். ஆளனுப்பி ‘நான் மக்களிடம் பேசும்போது அமர்ந்து கொள்வதற்காகத் ‘தச்சு வேலை தெரிந்த உன்வேலைக்காரரிடம் எனக்கொரு மேடை செய்து தரச் சொல்!” எனச் சொல்லியனுப்பினார்கள். அப்பெண்மணி அவ்வாறே தம் ஊழியரிடம் கூறினார். மதீனாவின் சமீபத்தில் காபா எனும் பகுதியிலுள்ள கருவேல மரத்திலிருந்து அதைச் செய்து அவர் அப்பெண்ணிடம் கொண்டு வந்தார். உடனே அப்பெண் அதை நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார். நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டதற்கேற்ப இவ்விடத்தில் அது வைக்கப்பட்டது.

அதன் பிறகு நபி(ஸல்) அவர்கள் அதன் மீதே தொழுததை – அதன் மீதே தக்பீர் கூறியதையும் அதன் மீதே ருகூவு செய்ததையும் அதன் பிறகு மிம்பரின் அடிப்பாகத்திற்குப் பின் பக்கமாக இறங்கி அதில் ஸஜ்தா செய்துவிட்டு மீண்டும் மேலேறியதையும் – நான் பார்த்துள்ளேன். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘மக்களே நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டுமென்பதற்காகவும் என் தொழுகையை நீங்கள் அறிந்து கொள்வற்காகவுமே நான் இவ்வாறு செய்தேன்” என்று குறிப்பிட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 918

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நின்று கொள்வதற்காகப் பேரீச்ச மரத்தின் கட்டை ஒன்று இருந்தது. மிம்பர் செய்யப்பட்ட பின் அந்தப் பேரீச்ச மரக்கட்டையிலிருந்து சூல் கொண்ட ஒட்டகத்தின் சப்தம் போன்றதை நாங்கள் செவியுற்றோம். நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கி அதன் மீது தம் கையை வைக்கும் வரை (அந்தச் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது).

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 919

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். “ஜும்ஆவுக்கு வருபவர் குளித்துக் கொள்ளட்டும்” என்று மிம்பரில் நின்று உரையாற்றும்போது நபி(ஸல்) கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 920

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நீங்கள் இப்போது செய்து வருவது போன்றே நபி(ஸல்) அவர்கள் நின்ற நிலையில் உரை நிகழ்த்திவிட்டுப் பிறகு உட்கார்ந்து, பிறகு எழக்கூடியவர்களாக இருந்தனர்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 921

அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மிம்பர் மீது அமர்ந்தனர். நாங்கள் (கீழே) அவர்களைச் சுற்றி அமர்ந்தோம்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 922

அஸ்மா(ரலி) அறிவித்தார். மக்கள் (ம்ரகணத் தொழுகை) தொழுது கொண்டிருந்தபோது நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று மக்களுக்கு என்று அவர்களிடம் கேட்டேன். ஆயிஷா(ரலி) தம் தலையால் வானை நோக்கிச் சைகை செய்தார்கள். இது ஏதாவது அடையாளமா? என்று கேட்டேன். ‘ஆம்’ எனத் தலையால் சைகை செய்தார்கள். எனக்கு மயக்கம் ஏற்படும் அளவுக்குத் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் நன்கு நீட்டினார்கள். என் விலாப் புறத்தில் தண்ணீர் நிரம்பிய தோல்பை ஒன்றிருந்தது. அதைத் திறந்து (மயக்கம் நீங்க) என் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டேன். கிரகணம் நீங்கியபோது நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்தார்கள். பின்னர் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். பிறகு ‘அம்மாபஃது” என்று கூறினார்கள்.

அன்ஸாரிப் பெண்களில் சிலர் கூச்சலிட்டனர். அவர்களை அமைதிப் படுத்துவதற்காக நான் சென்றேன். பின்னர் ஆயிஷா(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் என்ன உரையாற்றினார்கள் என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

“என்னுடைய இந்த இடத்தில் சொர்க்கம், நரகம் உட்பட நான் இது வரை காணாத அனைத்தும் எனக்குக் காட்டப் பட்டன. மேலும் கப்ருகளில் தஜ்ஜாலின் குழப்பத்துக்கு நிகரான குழப்பத்துக்கு நீங்கள் உள்ளாவீர்கள். உங்களில் ஒருவரிடம் ‘இந்த மனிதரை நபி(ஸல்) அவர்களைப் பற்றி நீ என்ன அறிந்திருக்கிறாய்’ என்று (வானவர்களால்) கேட்கப்படும். அதற்கு நம்பிக்கையாளர் உறுதியிலிருந்தவர் ‘இவர்கள் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) ஆவார்கள். எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நேர்வழிகளையும் கொண்டு வந்தார்கள். நாங்கள் அவரின் அழைப்பை நம்பி ஏற்றோம்; அவரை நம்பிப் பின் பற்றினோம்’ எனக் கூறுவார். அவரிடம் ‘நல்லவராக உறங்குவீராக! நீர் (உலகில் இருந்த காலத்தில்) இவ்வாறு நம்பிக்கை கொண்டிருந்தீர் என்பதை நிச்சயமாக நாமறிவோம்’ எனக் கூறப்படும். ‘இம்மனிதரைப் பற்றி நீர் அறிந்திருந்தது என்ன’ என்று கேட்கப்படும்போது நயவஞ்சகன் சந்தேகத்திலிருந்தவன் ‘இவரைப் பற்றி எனக்குத் தெரியாது; மக்கள் ஏதோ சொன்னார்கள்; நானும் சொன்னேன்’ எனக் கூறுவான்” என்று நபி(ஸல்) உரையாற்றினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 923

அம்ர் இப்னு தக்லீபு(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் சில பொருள்கள் அல்லது கைது செய்யப் பட்டவர்கள் கொண்டு வரப்பட்டுப் பங்கிட்டுக் கொடுத்தபோது சிலருக்குக் கொடுத்தும் வேறு சிலருக்குக் கொடுக்காமலும்விட்டுவிட்டனர்.

யாருக்குக் கொடுக்காமல்விட்டுவிட்டார்களோ அவர்கள் குறை கூறுவதாக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தபோது, ‘அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு ‘அம்மாபஃது’ எனக் கூறி ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் சிலருக்குக் கொடுக்கிறேன். (கொடுக்காமல்) யாரைவிட்டு விடுகிறேனோ அவர் நான் கொடுப்பவரை விட எனக்கு விருப்பமானவர். அவர்களின் உள்ளத்தில் அதிர்ச்சியும் பயமும் இருப்பதை நான் அறிந்த காரணத்தினாலேயே நான் சிலருக்குக் கொடுக்கிறேன். வேறு சிலரின் உள்ளங்களில் போதுமென்ற பண்பையும் நல்ல குணத்தையும் அவர்களைவிட்டு விடுகிறேன். இவர்களில் அம்ர் இப்னு தக்லீபும் ஒருவராவார்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக, நபி(ஸல்) அவர்கள் என்னைப் பற்றிக் கூறிய இந்த வார்த்தை சிகப்பு நிற ஒட்டகம் எனக்குக் கிடைப்பதை விட விருப்பமானதாக அமைந்தது.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 924

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நள்ளிரவில் (வீட்டைவிட்டுப்) புறப்பட்டுப் பள்ளியில் தொழுதார்கள். சிலர் அவர்களின் தொழுகையைப் பின்பற்றித் தொழலானார்கள். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறுநாள்) அதை விட அதிகமானவர்கள் திரண்டு நபி(ஸல்) அவர்களுடன் தொழுதனர். காலையில் இது பற்றி மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். மூன்றாம் இரவில் பள்ளியில் மக்கள் மேலும் அதிகமானார்கள். நபி(ஸல்) அவர்கள் (பள்ளிக்கு) வந்ததும் மக்கள் அவர்களைப் பின்பற்றித் தொழலானர்கள்.

நான்காம் இரவு வந்தபோது மக்கள் அதிகரித்தால் பள்ளி இடம் கொள்ளவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். ஃபஜ்ருத் தொழுகையை முடித்த பின் மக்களை நோக்கி இறைவனைப் புகழ்ந்து ‘அம்மா பஃது’ எனக் கூறிவிட்டு ‘நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை; எனினும் இரவுத் தொழுகை கடமையாக்கப் பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாது போய் விடுமோ என்று அஞ்சினேன். (இதனால்தான் இரவு நான் வரவில்லை)” என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 925

அபூ ஹுமைத் அஸ்ஸாயிரு(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு மாலைப் பொழுதில் எழுந்து ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை அவனுடைய தகுதிக்கேற்பப் புகழ்ந்துவிட்டுப் பிறகு ‘அம்மா பஃது” என்றார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 926

மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எழுந்து நின்று ஏகத்துவ உறுதிமொழி கூறிவிட்டு ‘அம்மா பஃது” என்று கூறி(த் தம் சொற்பொழிவைத் துவக்கி)யதை செவியுற்றுள்ளேன்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 927

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மிம்பர் மீது ஏறினார்கள். தம் தோள் புஜத்தின் மீது மேலாடையைச் சுற்றிக் கொண்டு, கருநிறத் துணியால் தலையில் கட்டுப் போட்டுக் கொண்டு அவர்கள் அமர்ந்த கடைசி அமர்வாகும் அது.

பிறகு அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி, ‘மக்களே என்னருகே வாருங்கள்” என்றதும் மக்கள்அவர்களை நோக்கி விரைந்து நகர்ந்தனர். பிறகு ‘அம்மா பஃது’ எனக் கூறினார்கள். அதன் பின்னர் ‘மற்ற மக்கள் பெருகும்போது, இது அன்ஸார்கள் எண்ணிக்கையில் குறைவார்கள். முஹம்மதுடைய சமுதாயத்தவர்களில் பொறுப்புக்கு வருகிறவர் யாருக்காவது நன்மையோ, தீமையோ செய்ய சக்தி பெற்றால் நல்லவர்களிடமிருந்து (நல்லவதை) ஏற்று அவர்களில் கெட்டவர்களை அலட்சியம் செய்து விடவும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 928

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இரண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்கள். அவ்விரண்டுக்குமிடையே அமர்வார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 929

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஜும்அ நாள் வந்துவிட்டால் வானவர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதலில் வருபவரையும் அதைத் தொடர்ந்து வருபவர்களையும் வரிசைப்படி பதிவு செய்கிறார்கள். முதலில் வருபவர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரைப் போன்றும் அதற்கடுத்து வருபவர் மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றும் அதன் பிறகு ஆடு, பிறகு கோழி, பிறகு முட்டை ஆகியவற்றைக் குர்பானி கொடுத்தவர் போலவுமாவார்கள். இமாம் வந்துவிட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளைச் சுருட்டிவிட்டுச் சொற்பொழிவைக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 930

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் ‘நீர் தொழுது விட்டீரா?’ என்று கேட்டார்கள். அதற்கவர் ‘இல்லை’ என்றார். ‘எழுந்து தொழுவீராக!” என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 931

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார் ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் ‘நீர் தொழுது வீட்டீரா?’ என்று கேட்டார்கள். அதற்கவர் ‘இல்லை’ என்றார். ‘(எழுந்து) இரண்டு ரக்அத் தொழுவீராக!” என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 932

அனஸ்(ரலி) அறிவித்தார். ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் எழுந்து ‘இறைத்தூதர் அவர்களே! கால் நடைகள் அழிந்துவிட்டன. ஆடுகளும் அழிந்துவிட்டன. எங்களுக்கு மழை பொழிவிக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் நீட்டித் பிரார்த்தித்தார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 933

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை மக்களைப் பஞ்சம் வாட்டியது. ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் உயர்த்தி தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள். அந்த நேரத்தில் வானத்தில் எந்த மழை மேகத்iயும் நாங்கள் பார்க்கவில்லை. என் உயிர் எவனுடைய கைவசனம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நபி(ஸல்) அவர்கள் தம் கைகளைக் கீழே இறக்கும் முன்பாக மலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள்ளாக மழை கொட்டி அவர்களின் தாடியிலிருந்து வழிந்ததை நான் பாத்தேன். அன்றைய தினமும் அதற்கடுத்த நாளும் அதற்குமடுத்த நாளும் அதற்கு மறு ஜும்ஆ வரையிலும் எங்களுக்கு மழை பொழிந்தது.

(மறு ஜும்ஆவில்) அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து ‘இறைத்தூதர் அவர்களே! கட்டிடங்கள் இழுந்து விழுகின்றன. செல்வங்கள் மூழ்குகின்றன. எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி ‘இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களை நோக்கி (இதை அனுப்புவாயாக!) எங்களுக்குக் கேடு தருவதாக (இம்மழையை) ஆக்கி விடாதே!” என்று கூறினார்கள். மேகம் உள்ள பகுதியை நோக்கி நபி(ஸல்) அவர்கள் சைகை செய்த போதெல்லாம் அம்மேகம் விலகிச் சென்றது. மதீனா நகர் பெரும் பள்ளமாக மாறியது. (இம்மழையால்) ‘கனாத்’ எனும் ஓடை ஒரு மாதம் ஓடியது. பல்வேறு பகுதிகளிலிருந்து வருபவர்களும் இம்மழையைப் பற்றிப் பேசாமலிருந்ததில்லை.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 934

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் ‘வாய்மூடு!’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 935

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு” என்று கூறிவிட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். ‘அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை” என்றும் குறிப்பிட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 936

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (ஜும்ஆத்) தொழுது கொண்டிருந்தபோது உணவுப் பொருட்களை ஏற்றி, ஒட்டகப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று வந்தது. அதை நோக்கி மக்கள் சென்றுவிட்டனர். பன்னிரென்டு நபர்களைத் தவிர வேறு எவரும் எஞ்சியிருக்கவில்லை. இந்த நேரத்தில் தான், ‘அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால் உம்மை நிலையில்விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர்” (திருக்குர்ஆன் 62:11) என்ற வசனம் அருளப்பட்டது.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 937

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்களும் பின் இரண்டு ரக்அத்களும் தொழுபவர்களாகவும் மஃரிபுக்குப் பிறகு தம் வீட்டில் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இஷாவுக்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர். ஜும்ஆவுக்குப் பின் (வீட்டுக்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 938

ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார். எங்களில் ஒரு பெண்மணி இருந்தார். அவர் தம் விளை நிலத்தின் வாய்க்கால் ஓரத்தில் ஒரு வகை கீரைச் செடியைப் பயிரிடுவார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வேருடன் அச்செடியைப் பிடிங்கி வந்து அதை ஒரு பாத்திரத்தில் போடுவார். பிறகு அதன் மீது கோதுமையில் ஒரு கைப்பிடி அளவு போட்டு அரைப்பார் அந்தக் கீரைச் செடியின் தண்டுப் பகுதிதான் அந்த உணவுக்கே மாமிசம் போல் அமையும். நாங்கள் ஜும்ஆத் தொழுதுவிட்டுத் திரும்பி அவருக்கு ஸலாம் கூறுவோம். அவர் எங்களுக்கு உணவு படைப்பார். அதை நாங்கள் விழுங்குவோம். அவரின் இந்த உணவுக்காக நாங்கள் ஜும்ஆ நாளை விரும்புவோம்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 939

ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார். ஜும்ஆவுக்குப் பிறகுதான் நாங்கள் முற்பகல் தூக்கத்தையும் காலை உணவையும் கொள்வோம்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 940

அனஸ்(ரலி) அறிவித்தார். ஜும்ஆவுக்கு முற்பகலிலேயே சென்றுவிட்டு அதன் பின்பே நாங்கள் முற்பகல் தூக்கம் மேற்கொள்வோம்.

பாகம் 1, அத்தியாயம் 11, எண் 941

ஸஹ்ல்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஜும்ஆத் தொழுவோம். அதன் பிறகே முற்பகல் தூக்கம் நிகழும்.

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.