நோன்பை முறித்ததற்காக மீண்டும் நோன்பு நோற்றலும், அதற்கான பரிகாரமும்.

நோன்பை முறிக்கக் கூடிய காரணிகளாக, திருமறைக் குர்ஆனில் மூன்று காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன : உண்ணுதல், பருகுதல் மற்றும் உடலுறவு கொள்ளுதல் ஆகியவைகளாகும். அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :

நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான். அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான். எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள். இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள். பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள். இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (2:187).

உணவையோ அல்லது பானங்களையோ உட்கொள்ளுதல், அது ஆகுமாக்கப்பட்டதாகவோ அல்லது ஆகுமாக்கப்படாததாகவோ இருப்பினும் சரியே. மற்றும் தீங்கு விளைவிக்கக் கூடிய அல்லது தீங்கு விளைவிக்காததாகவோ இருப்பினும்சரியே. மற்றும் உண்ணக் கூடிய பொருள் மிகக் குறைந்த அளவு அல்லது அதிகமான அளவுள்ளதாக இருப்பினும் சரியே, இவை யாவும், நோன்பை முறிக்கக் கூடியவைகளாகி விடும். இதனடிப்படையில், புகை பிடித்தலும் – இது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது மற்றும் இஸ்லாமியச் சட்டங்கள் அனுமதிக்காததும், இதுவும் நோன்பை முறிக்கக் கூடியதுதான்.

நோன்பாளி மிகச் சிறிய அளவிலான ரொட்டித் துண்டை விழுங்கினாலும் சரி, அந்த ரொட்டித் துண்டானது இவனது உடலுக்கு எந்தவித பிரயோஜனத்தையும் தர இயலாத அளவில் இருப்பினும், அதுவும் ஒரு நோன்பாளியின் நோன்பை முறிக்கக் கூடியது தான் என்று அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

உடலுறவு கொள்ளுதல் :

நோன்பு காலங்களில் உடலுறவு கொள்வது என்பது மிகக் கடுமையானதொரு பாவகரமான செயலாகும். ஏனென்றால், ஒருவர் நோன்பு காலங்களில் உடலுறவில் ஈடுபட்டு விட்டாரென்றால், அவர் ஒரு அடிமையை விடுதலை செய்தாக வேண்டும், அல்லது அதற்கு வழியேதும் இல்லை என்றால், இரண்டு மாதங்கள் இடைவிடாது தொடர்ந்து நோன்பு நோற்றாக வேண்டியது கட்டாயமாகும். இதற்கும் ஒருவர் தகுதி படைத்தவராக இல்லை எனில் அவர், இதற்குப் பகரமாக 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

உணர்ச்சியின் மேலீட்டால் விந்தை வெளியேற்றுதல் – நோன்பை முறித்து விடக் கூடியது. இதற்கு எந்தப் பரிகாரமும் இல்லை. புரிகாரம் என்பது பெண்ணுடன் உடலுறவு ஏற்பட்டால் மட்டுமே செலுத்தக் கூடியதாகும்.

நரம்புகளின் மூலம் ஊசியேற்றிக் கொள்ளுதல் – செலுத்தக் கூடிய ஊசி மருந்தின் தன்மை மருந்து என்ற அடிப்படையில் அல்லாத, உணவுக்கான மாற்றுப் பொருளாக இருக்குமென்றால், நோன்பை முறித்து விடக்கூடியது.

சுயமாக வாந்தி எடுத்தல் – ஆனால் தானாக வாந்தி எடுத்து விட்டால் அது எந்தவிதத்திலும் நோன்பை முறித்து விடாது.

மாதவிடாய் அல்லது குழந்தைப் பேற்றுக்குப் பின் உள்ள இரத்தப் போக்கு – சூரிய உதயத்திற்கு முன்பாக இரத்தப் போக்கு ஏற்பட்டு விட்டதென்றால், அது நோன்பு வைப்பது ஆகமானதல்ல, அது நோன்பை முறித்து விடும். ஆனால், நோன்பு வைத்த பின்பு சூரிய உதயத்திற்குப் பின்பாக இரத்த ஒழுக்கு ஏற்படுமென்றால், அது நோன்பை முறித்து விடாது.

இரத்தத்தை வெளியேற்றுதல். முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரத்தம் குத்தி எடுப்பவனுடைய மற்றும், இரத்தம் குத்தி இரத்தத்தை வெளியேற்றுபவனுடைய நோன்பும் முறிந்து விடும். இது இன்றுள்ள முறையில் பாட்டில்களில் இரத்தத்தை வெளியேற்றி சேமிப்பதையும் குறிக்கும். இதைத் தான் முஹம்மது (ஸல்) அவர்கள் காலத்தில் காற்றில்லாத பாத்திரத்தின் மூலம் உடலிலிருந்து இரத்தம் குத்தி உறிஞ்சி வெளியேற்றப்பட்டது. இரத்தத்தை இன்றுள்ள முறையின் பிரகாரம் ஊசியின் மூலம் குத்தி அல்லது சிரிஞ் மூலம்வெளியேற்றுவதும், நோன்பை முறிக்கக் கூடிய செயல்களாகும்.

மேலே குறிப்பிடப்பட்டவர்களில் – அதில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்களை நோன்புக் காலங்களில் அவர்கள் செய்துவிடுவார்களென்றால், அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு குற்றங்களை இழைத்தவர்களாவார்கள் :

1. அவர்கள் பாவமான காரியத்தைச் செய்து விட்டார்கள்

2. நோன்பை முறித்து விட்டார்கள்

3. அவர்கள் நோற்றிருக்கின்ற நோன்பை அதன் இறுதி வரைக்கும் அந்த நாளின் முடிவு வரைக்கும் தொடர வேண்டும்.

விட்ட நோன்புகளை ரமளானுக்குப் பின் உள்ள மாதங்களில் நோற்றாக வேண்டம்.

கீழ்க்கண்ட 3 காரணங்களால் நோன்பானது முறிந்து விடும் என்பதை நாம் எப்பொழுதும் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும் :

1. அறிவு

2. கவனமின்மை

3. விருப்பமின்மை

அறிவு :

நோன்பு நோற்றிருக்கும் நோன்பாளியானவர் மேலே நாம் கூறியுள்ள நோன்பை முறிக்கக் கூடிய காரியங்களை, தன்னுடைய சுயநினைவின்றி மறதியின் காரணமாக அல்லது அறியாமையின் காரணமாக பாழ்படுத்தி விட்டாரென்றால், அந்த நோன்பு முறிந்து விடாது, அதை அவர் தொடர வேண்டும், இதில் அவர் நோன்பின் கால வரையறைகளையோ அல்லது சட்டங்களையோ மீறியிருந்தாலும் சரியே! உதாரணமாக, நோன்பு நோற்கக் கூடிய ஒருவர், இரவின் இறுதி நேரத்தில், அதாவது ஸஹர் நேரத்தில் எழுந்திருந்து ஸஹருக்கான உணவை உட்கொண்டிருக்கின்றார், அப்பொழுது அவர் இன்னும் விடியவில்லை சுபுஹினுடைய நேரம் வரவில்லை என நினைத்துக் கொண்டு, தன்னுடைய உணவு உட்கொள்வதைத் தொடர்கின்றார், ஆனால் பின்பு தான் தெரிய வருகின்றது விடிந்து விட்டது அல்லது ஸஹர் செய்வதற்கான நேரம் முடிந்து விட்டது என்பதை அறிய வருகின்றார் எனில், அவரது நோன்பு செல்லுபடியானது – முறிந்து விடாது, அவர் தன்னுடைய நோன்பைத் தொடரலாம், ஏனெனில் அவர் அறியாமையின் காரணமாக நேரத்தை அவர் தவறு விட்டு விட்டார் என்பதேயாகும்.

நோன்பை முறிக்கக் கூடிய சட்டத்தை அறிந்திருக்கவில்லை, இதற்கு உதாரணம், ஒருவர் தன்னுடைய இரத்தத்தைத் தானே குத்தி எடுத்துக் கொண்டிருக்கின்றார், இவ்வாறு இரத்தம் எடுப்பது நோன்பை முறிக்கக் கூடிய செயல் அல்லது நோன்பை முறிக்கக் கூடியவைகள் எவை எவை என்றறியக் கூடிய சட்டங்களில் உள்ள ஒரு சட்டம் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. ஏனவே, இவருடைய நோன்பை முறிந்து விடாது, இவருடைய நோன்பு ஏற்றுக் கொள்ளப்படத்தக்கது தான்.

இறைவன் ஒரு நல்லடியாரின் பிரார்த்தனைகள் இவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்புகின்றான் : என்னுடைய இறைவனே! நாங்கள் மறதியாகவோ அல்லது தவறுதலாகவோ செய்த தவற்றுக்காக எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக!

ஆபுபக்கர் (ரலி) அவர்களின் மகளார் அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஒரு நாள் (ரமளான் மாதத்தில்) முஹம்மது (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்து கொண்டிருக்கின்ற நேரத்தில், அந்த நாளானது மிகவும் மேக மூட்டத்துடன் காணப்பட்டது, எனவே நாங்கள் அன்றைய தினம் முடிந்து சூரியன் மறைந்து விட்டது என நினைத்து, எங்களது நோன்பைத் திறந்து விட்டோம். நாங்கள் நோன்பைத் திறந்த பின்பு சூரியன் மீண்டும் உதித்தது, இருப்பினும் முஹம்மது (ஸல்) அவர்கள், மீண்டும் அந்த நாளைய நோன்பை (பரிகாரமாக ரமளானுக்குப் பின்பு) நோற்கச் சொல்லவில்லை. அவ்வாறு (பரிகாரமாக) நோற்க வேண்டும் என்பது கட்டாயம் என்றிருந்தால், அந்த விட்டுப் போன அந்த நோன்பை நோற்கச் சொல்லியிருப்பார்கள்.

கவனமின்மை :

அதாவது ஒவ்வொரு நோன்பாளியும் தான் நோன்பிருக்கின்றோம், நோன்பிருந்து கொண்டிருக்கின்றோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும் ஒருவர் நோன்பு நோற்றிருக்க அந்த நிலையில், தான் நோன்பு நோற்றிருக்கின்றோம் என்பதை மறந்த நிலையில் உணவையோ அல்லது குடி பானங்களையோ அருந்தி விடுகின்றார் எனில் அவருடைய நோன்பு முறிந்து விடாது. முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யாரொருவர் தான் நோன்பிருந்து கொண்டிருக்கின்றோம் என்பதை மறந்த நிலையில் உணவையோ அல்லது குடிப்பையோ உட்கொண்டு விடுகின்றாரோ அவர் தன்னுடைய நோன்பைத் தொடரட்டும். அல்லாஹ் தான் அவருக்கு உணவையும் மற்றும் குடிப்பையும் வழங்கினான். (அஹ்மது)

விருப்பமின்மை :

ஒரு மனிதன், நோன்பிருந்து கொண்டிருக்கின்ற தன்னுடைய மனைவியை வலுக்கட்டாயமாக உடலுறவுக்கு அழைத்து, அதனைத் தடுக்க இயலாத நிலையில் இவள் இருந்து அவனுடன் உடலுறவில் ஈடுபட்டு விடுவாளெனில், அதற்குப் பகரமாக இவள் பரிகாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. இவள் மீண்டும் அந்த நோன்பை நோற்கவோ அல்லது அதற்குப் பரிகாரமாக இரண்டு மாதங்கள் தொடராக நோன்பு நோற்க வேண்டியது இவள் மீது கடமை இல்லை. (ஃபத்வா முஹம்மது பின் உதைமீன், ரமளான் பற்றி கேள்வி பதில் – பக்கம் 13-18).

Tamil Islamic Library

This entry was posted in ஈமான் (நம்பிக்கை) and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.