அத்தியாயம்-6 நபி ஈஸா (அலை) மர்யம் அவர்களின் மைந்தர். (பகுதி-1) (JESUS SON OF MARY)

மனித வரலாற்றில் எண்ணற்ற வாதப் பிரதிவாதங்களால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு பிரச்சினை நபி ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு பற்றியதாகும். அவர்கள் முழுக்க முழுக்கத் தெய்வீகமானவர்களா? அல்லது மனிதர்களில் ஒருவர்தானா? அல்லது அவர்கள் பாதி மனிதராகவும் பாதித் தெய்வீகமாகவும் இருந்தார்களா? அவர்கள் உண்மையானவர்களா அல்லது ஏமாற்றித் திரிந்தவர்களுல் ஒருவரானவர்களா? அவர்கள் எல்லாக் குழந்தைகளையும் போலவே தாய், தந்தை ஆகியோருக்குப் பிறந்தவர்களா? அவர்கள் குளிர்காலத்தில் பிறந்தார்களா? கோடைகாலத்தில் பிறந்தார்களா?

இவையும், இவைபோன்ற இன்னும் பல கேள்விகளையும் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவர் அல்லாதவர்களும் கேட்டு வருகின்றார்கள். நபி ஈஸா (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை இது குறித்து பல விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கேள்விகளில் தேவையில்லாத சில அம்சங்களுக்கு விளக்கம் தருவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக கிறிஸ்தவர்களுக்குள் பல்வேறு பகுதிகளாப் பிரிந்துள்ளனர். இவைகளெல்லாம் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவர் அல்லாதவர்களும் நன்றாக அறிவார்கள். இவைகளுக்கு இஸ்லாம் தரும் விளக்கமென்ன? சிக்கலும் குழப்பமும் நிறைந்த இந்தக் கேள்விகளுக்கு இஸ்லாத்தில் ஏதேனும் விளக்கமுண்டா?

இதில் நமது விவாதத்தை ஆரம்பித்திடும்முன், சில விஷயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம். முதலில், நபி ஈஸா (அலை) அவர்களைப் பொருத்தவரை ஒரு முஸ்லிம் எந்தக் குழப்பமுமின்றி தெளிவுடனே தான் இருக்கின்றார். அவரது மனம் இது குறித்து எந்த அலைக்கழிப்புமின்றி அமைதியாகவே இருக்கின்றது. அவரது நம்பிக்கை உறுதியாகவே இருக்கின்றது. இரண்டாவதாக, முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டுள்ள இறைக்கொள்கை, மதக்கோட்பாடு, இறைத்தூதுவரின் கொள்கை, இறைவழிபாடு, மனித இனத்தின் மேல் கொண்டுள்ள நம்பிக்கை இவற்றின் அடிப்படையில் முஸ்லிம்கள் ஈஸா (அலை) அவர்களை உண்மை என ஏற்றுக்கொள்கின்றனர். ஏனைய நபிமார்களைப்போல் அவர்களையும் மதிக்கின்றனர்.

இங்கே ஒன்றை நினைவுகூற வேண்டும். ஈஸா (அலை) அவர்களை இறைவனின் தூதர்களில் ஒருவர் என ஏற்றுக்கொள்வது ஈமானின் (நம்பிக்கையின்) ஒரு முக்கியமான பகுதியாகும். இந்த அடிப்படையில் ஒரு முஸ்லிம் ஈஸா (அலை) அவர்களைச் சந்தேகக் கண்கொண்டு அணுகிட முடியாது. ஆகவே ஈஸா (அலை) அவர்களையோ அல்லது வேறு எந்த இறைத்தூதரையுமோ குறைத்துக் கூறுகின்ற உரிமை முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, நாம் இங்கே சொல்வதெல்லாம் திருக்குர்ஆன் நமக்குச் சொல்வதும், போதிப்பதுமேயாகும். *கிறிஸ்தவர்களுக்கு இடையே இது பரவலாக காணப்படாத போதிலும், ஈஸா (அலை) அவர்கள் மீது முஸ்லிம்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஈஸா (அலை) அவர்களது அற்புதப் பணிகளில் எதையும் குறைத்து மதிப்பிடுவதில்லை. அவர்களது குணநலன்களைப் பழிப்பதுமில்லை. முஸ்லிம்கள் இறைவன், நபி ஈஸா (அலை) அவர்களை எவ்வளவு கண்ணியப்படுத்தினானோ, அவ்வளவு கண்ணியமாக மதிக்கின்றார்கள். உண்மையை சொல்வதானால் சில கிறிஸ்தவர்களைவிட, அதிகமாக முஸ்லிம்கள் நபி ஈஸா (அலை) அவர்களை மதிக்கின்றார்கள். அதே நேரத்தில் இஸ்லாத்தின் கண்ணோட்டத்தைத் தவறாக புரிந்திடவும் கூடாது. இது திருப்திக்காக எடுத்து வைக்கப்பட்ட வாதம் என்றோ, புகழ்ச்சிக்காக புனையப்பட்ட கருத்தோட்டம் என்றோ எவரும் கருதிடக் கூடாது. அல்லது முஸ்லிம்கள் தங்களது கொள்கையில் விட்டுக் கொடுக்கின்றார்கள் என்றோ கொண்டிடக் கூடாது. இதை உண்மையென்றே கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் தங்களது நம்பிக்கையில் உறுதியானவர்கள். தங்கள் நம்பிக்கையில் என்றென்றும் ஒன்றுபோல் உறுதியாய் நிற்பவர்கள். இது கடந்துபோன காலங்கள் சாட்சிகூறும் உண்மை, நிகழ்கால நிதர்சனம், எதிர்காலத்திலும் உண்மையாகவே இருந்திடும்.

*நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றிய முழு விவரத்தையும் விவாதித்திடுவது என்பது இயலாதொன்று. ஜனாப் முஹம்மத் பரக்கத்துல்லாஹ் அவர்கள் எழுதிய நூல் “JESUS SON OF MARY, FALLACY AND FACULTY” இது குறித்து விரிவானதொரு விளக்கத்தைத் தருகின்றது. சான்றாக அந்நூலைக் காணகவும். (Philadelphia Dorrance & Company) (1973)

நபி ஈஸா (அலை) அவர்கள் பிறந்து, வளர்ந்த சூழ்நிலை சற்று உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. நபி ஈஸா (அலை) அவர்கள் எந்த மக்களுக்காக அனுப்பப்பட்டார்களோ அந்த மக்கள் சில தனியான குணங்களைக் கொண்டவர்கள். அவைகளுள் சில: 1. அவர்கள் இறைவனின் வெளிப்பாடுகளில் எண்ணற்ற இடைச் சொறுகல்களைச் செய்தார்கள். இறைவெளிப்பாட்டைத் திரித்தும், மறித்தும் கூறி வந்தார்கள். 2. அவர்கள் இறைத்தூதர்களுள் சிலரை (நபி ஈஸா (அலை) அவர்கள் உட்பட) நிராகரித்தார்கள். சில இறைத்தூதர்களைக் கொன்றார்கள். 3. அவர்கள் தங்களிடமிருந்த செல்வத்தால் செருக்கடைந்தவர்களாகவும், அவர்களின் செல்வத்தைப் பொறுத்தவரை பொறுப்பற்றவர்களாகவும் இருந்தார்கள். திருக்குர்ஆன் கூறுகின்றது:

எந்த ஒரு தூதரும் உங்களுடைய விருப்பத்திற்கு இணக்கமில்லாதவற்றை உங்களிடம் கொண்டுவரும் போதெல்லாம் நீங்கள் ஆணவம் கொண்டு புறக்கணிக்கவில்லையா? சிலரை நீங்கள் நிராகரித்தீர்கள். சிலரை நீங்கள் கொலை செய்தீர்கள். (அல்குர்ஆன் : 2:87)

நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள் தான் சீமான்கள் என்று எவர்கள் கூறினார்களோ, அவர்களுடைய சொல்லை நிச்சயமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். (இவ்வாறு) அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நிச்சயமாக நாம் பதிவு செய்து கொண்டிருக்கிறோம். (ஆகவே மறுமையில் அவர்களை நோக்கி) ‘எரிக்கும் வேதனையை நீங்கள் (சிறிது) சுகித்துப் பாருங்கள்.’ என நாம் கூறுவோம். (திருக்குர்ஆன்: 3:81)

அவர்கள் தங்களுடைய உறுதிமொழிக்கு மாறு செய்ததன் காரணமாக, நாம் அவர்களை சபித்து, அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்து விட்டோம். (ஆகவே) அவர்கள் (தங்கள் வேத) வசனங்களை, அவற்றின் (உண்மை) அர்த்தங்களிலிருந்து புரட்டுகின்றார்கள். அன்றி, அதில் நினைவூட்டப் பெற்றிருந்த பாகத்தையும் மறந்து விட்டார்கள். (திருக்குர்ஆன்: 5:13)

இது நபி ஈஸா (அலை) அவர்கள் அனுப்பப்பட்ட மக்களின் தனியான குணமாகும். நபி ஈஸா (அலை) அவர்களின் பிறந்த தேதியை பொறுத்தவரை கிறிஸ்தவர்களால் ஏதேனும் குறிப்பான பருவகாலத்தையும் கூறிட இயலவில்லை. எந்தவொரு ஆண்டையும் குறிப்பிட முடியவில்லை.

”வானியல் வல்லுனர்கள் இதுவரை பெத்தலஹோமில் தோன்றிய நட்சத்திரத்தைப் பற்றி எந்த விஞ்ஞான விளத்தையும் தந்ததில்லை. ’கிறிஸ்து’ அவர்களின் பிறந்த வருடத்தையோ அல்லது வருடத்தின் எந்த பருவகாலத்தில் அந்த நட்சத்திரம் தோன்றியது என்பதோ நிச்சயமாக தெரியவில்லை.

1. ’திருமணம்’ என்ற வாழ்க்கை ஒப்பந்தங்களுக்கு இஸ்லாம் மிகுந்த முக்கியத்துவம் தருகின்றது.எல்லா முஸ்லிம்களும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என இஸ்லாம் பரிந்துரைக்கின்றது. சமுதாயத்தின் உயிரோட்டத்திற்கு திருமணம் மிகவும் முக்கியமானதாகும்.

2. முஹம்மத் (ஸல்) அவர்கள், தான் இறவா மனிதர் என்றோ, தெய்வீகமயமானவர்கள் என்றோ ஒருபோதும் கூறியதில்லை. அவர்கள் தான் இறப்புக்குட்பட்ட மனிதன் என்றும், இறைவனால் அவனுடைய தூதை இந்த உலகுக்கு அறிவிக்க வந்த திருத்தூதர் என்றே மொழிந்தார்கள். அவருடைய வாழ்க்கைத் தனித்தன்மைகள் நிறைந்தது. மனித இனத்திற்கு ஒரு அழகிய முன்மாதிரி. எனினும் அவர்கள் ஒரும் ‘மனிதர்’ என்ற அளவிலேயே வாழ்ந்தார்கள். அவ்வாறே இறந்தார்கள். ஆகவே திருமணம் என்பது அவர்களுக்கு இயல்பாகவே தேவையான ஒன்றேயாகும். அவர்களுக்கு தடை செய்யப்பட்ட ஒன்றல்ல.

3. அவர்கள் வாழ்ந்த இடம் வெப்பமான பிரதேசமாகும். இந்த வெப்பம் நிறைந்த இடங்களில் வாழும் மக்களிடம் சில தனியான குணங்கள் உண்டு. அவர்கள் சிறு வயதிலேயே உடல் முதிர்ச்சி அடைந்து விடுவார்கள். உடல் சம்பந்தமான விருப்பங்கள் அவர்களிடம் மிகுந்து காணப்படும். மக்கள் மிகவும் எளிதான வழிகளில் தங்களது உடல் விருப்பங்களைத் தணித்துகொள்ள விழைவார்கள். அதற்கான சூழ்நிலைகளும் அங்கு நிலவும். இப்படிப்பட்ட இயல்புகளை வளர்க்கக்கூடிய நிலபரப்பில் வாழ்ந்த பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களுடைய இருபத்தைந்தாம் வயதுவரை ஒரு பெண்ணைக்கூட தீண்டியதில்லை. அவர்கள் வாழ்ந்த தூயவாழ்க்கையைக் கண்ட அரேபியர்கள் அவரை எண்ணற்ற அடைமொழிகளைக் கொண்டு அழைத்தார்கள். தனது இருபத்தைந்தாவது வயதிலேதான் அவர்கள் தங்களது முதல் திருமணத்தை முடித்தார்கள். அவர்களைச் சுற்றி இருந்த மக்கள் அவர்கள் அல் – அமீன் என்ற அடைமொழியைக் கொண்டு அழைத்தார்கள். இதன் பொருள் சிறந்த ஒழுக்கங்களின் உறைவிடம் என்பதாகும்.

நபி ஈஸா (அலை) அவர்களை இறைவன் படைத்த காலத்தை வத்து பார்க்கும்போது அதில் அடங்கியிருக்கும் அறிவாழத்தை நம்மால் அறிய முடிகிறது. அந்தக் காலத்தில் மருத்துவம் என்பது அனேகமாக வழக்கில் இல்லாததாகவே இருந்திருக்கின்றது. சில இடங்களில் மருத்துவம் என்பது என்னவென்றே தெரியாமலிருந்திருக்கின்றது. நபி ஈஸா (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்கள் இறைவனின் வழியிலிருந்து விலகி வெகுதூரம் சென்றவர்களாக இருந்தார்கள். அந்த வழிகேட்டில் அவர்கள் பிடிவாதத்துடன் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நேரத்தில் இறைவன் புது முறையான படைப்பின் மூலம் தனது எல்லையில்லா வல்லமையைக் காட்டினான். இறைவன் இந்தப் படைப்பின் முறைவழி தன்னால் எல்லாம் ஆகும் என்றும், மனிதன் வெற்றிபெற இறைவனின் வழிமட்டுமே துணைபுரிய முடியும் என்றும் தெளிவாக்கினான். அந்த ஏக இறைவனை நம்புவதன் மூலமே மனிதர்கள் நேர்வழி பெற முடியும் என்பதன் வெளிப்பாடே இறைவன் நபி ஈஸா (அலை) அவர்களின் படைப்பில் காட்டிய அற்புதம். ஒருவேளை இந்த அற்புதம் பின்னால் நபி ஈஸா (அலை) அவர்கள் இறைவனின் துணையோடு காட்டவிருந்த அற்புதங்களின் முன்னறிவிப்பாகவும் இருக்கலாம். அந்த அற்புதங்கள் பெரும்பாலும் மருத்துவ தொடர்புடையனவாக இருந்தன.

ஈஸா (அலை) அவர்களின் பிறப்பைக் குறித்து இங்கே குறிப்பிட்டுள்ளவை திருக்குர்ஆன், நபிமொழி ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டவை அல்ல. இவைகள் அனைத்தும் இந்நூல் ஆசிரியரின் கருத்துக்களே ஆகும். நான்கு முறையானப் படைப்புக்கள் என்ற கருத்தும் கணிப்பும் இந்நூல் ஆசிரியரின் சொந்த ஆராய்ச்சியே! ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் திருக்குர்ஆன், நபிமொழி ஆகியவற்றின் ஆதாரத்தில் அமைக்கப்பட்டவைகள் அல்ல. அதாவது ஆசிரியரின் ஆராய்ச்சி முடிவுகள் பிற்காலத்தில் வரும் ஆராய்ச்சியாளர்களால் மாற்றப்படலாம். ஆனால் திருக்குர்ஆன், நபிமொழி ஆகியவை முடிவானவை, தெளிவானவை, உண்மையானவை.

இங்கே விவரித்துள்ள நான்கு முறையான படைப்புகள் என்ற ஆசிரியரின் அனுமானம் நிலையானதோ, நிலையற்றதோ எவ்வாறாயினும், முஸ்லிம்களின் நம்பிக்கையை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. நபி ஈஸா (அலை) அவர்களின் பிறப்பைப் பற்றி திருக்குர்ஆன் கூறும் உண்மையை முஸ்லிம்கள் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு அதிசயம் நிறைந்த ஒன்று என்பதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவே செய்கின்றார்கள். எனினும் இதுபற்றி ஆராய்வதே சிறந்தது.

இப்போது யாராவது நபி ஈஸா (அலை) அவர்கள் தந்தை இல்லாமல் பிறந்தார்கள், இறைவனே அவருடைய தந்தை என்ற இடத்தில் இருக்கின்றான் என்பதையெல்லாம் காரணங்காட்டி ஈஸா (அலை) அவர்களை இறைவன் என அழைத்திடத் தலைப்பட்டால் அது ஏற்புடையதாகாது. ஆதம் (அலை) அவர்கள் தாயோ, தந்தையோ இல்லாமல் படைக்கப்பட்டார்கள். ஆகவே இறைவனின் மைந்தர் என்பது ஈஸா (அலை) அவர்களைவிட ஆதம் (அலை) அவர்களுக்கே அதிகமாகப் பொருந்தும். இன்னும் இறைவனை தந்தை என உண்மையாகவே பாவிப்போமானால், அவன் மனிதகுலம் முழுமைக்கும் தந்தையாக இருக்கின்றான். குறிப்பாக இறைபணியில் தங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டவர்களுக்குத் தந்தையாக, தலைவனாக இருக்கின்றான் என்பதே மிகவும் பொருத்தமாக இருந்திடும். மனிதர்கள் அனைவரும் இறைவனின் மிக அழகிய படைப்புக்கள் என்ற வகையில் மனிதர்கள் அனைவரும் இறைவனின் குழந்தைகளே! ஆக, இறைவனைத் தந்தையென ஏற்றுக்கொள்ளத் தலைப்பட்டால் முதன்முதலில் அவன் ஆதம் (அலை) அவர்களின் தந்தை, பின்னர் மனிதர்கள் அனைவருக்கும் அவனே தந்தை. அவன் ஈஸா (அலை) அவர்களுக்கு மட்டும்தான் தந்தை எனக்கொள்வதெப்படி?

ஈஸா (அலை) அவர்களின் பிறப்புக் குறித்து திருக்குர்ஆன் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றது.

(நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது,  

அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார். அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம். (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.  

(அப்படி அவரைக் கண்டதும்,) “நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன். நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)” என்றார்.  

“நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன். பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார்.

அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்.

“அவ்வாறேயாகும். ‘இது எனக்கு மிகவும் சுலபமானதே மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம். இது விதிக்கப்பட்ட விஷயமாகும்’ என்று உம் இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார்.

அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார். பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.  

பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப்பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறி(அரற்றி)னார்.  

(அப்போது ஜிப்ரயீல்) அவருக்குக் கீழிருந்து “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினார்.  

“இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும். (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.

“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், ‘மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன். ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.  

பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!”

“ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை” (என்று பழித்துக் கூறினார்கள்).

(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும்படி) அதன் பால் சுட்டிக் காட்டினார். “நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?” என்று கூறினார்கள்.

“நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான். இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.

“இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான். மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.

“என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்.) நற்பேறுகெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.  

“இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது.

இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்) எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).  

அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை அவன் தூயவன். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.

“நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான். ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள். இதுவே நேரான வழியாகும்” (என்று நபியே! நீர் கூறும்).  (திருக்குர்ஆன்: 19:16-36)

சான்றாக திருமறையில் 3:42-64, 4:171, 172, 5:17,72-75, 25:2, 43:57-65 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.

This entry was posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.