97. ஓரிறைக் கோட்பாடு

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7371

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (நீதி நிர்வாகத்தைக் கவனிக்க) அனுப்பி வைத்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7372

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது அவர்களிடம், ‘நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். எனவே, அவர்களுக்கு முதலாவதாக, அல்லாஹ் ஒருவன் எனும் (ஏக இறைக்) கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து (ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐந்து நேரத் தொழுகைகளை அவர்களின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அவர்கள் (அதை ஏற்று) தொழவும் செய்தால் அவர்களிடையேயுள்ள செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குச் செலுத்தப்படுகிற ஸகாத்தை அவர்களின் செல்வங்களில் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அதையும் அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களிடமிருந்து (ஸகாத்தை) வசூலித்துக் கொள்ளுங்கள். (ஆனால்,) மக்களின் செல்வங்களில் சிறந்தவற்றைத் தவிர்த்திடுங்கள்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7373

முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘முஆதே! அடியார்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர்கள் அவனையே வணங்குவதும் அவனுக்கு எதையும் இணைவைக்காமலிருப்பதும் ஆகும். (அவ்வாறு அவர்கள் செய்தால்) அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்க, நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமலிருப்பது தான்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7374

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். ஒருவர், ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ (‘நபியே! கூறுக: அல்லாஹ் ஒருவனே’) எனும் (112 வது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருந்ததை ஒருவர் செவிமடுத்தார். விடிந்ததும் அம்மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினார். அம்மனிதர் (பேசிய விதம்) அந்த அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப ஓதியதை)க் குறைத்து மதிப்பிட்டதைப் போன்றிருந்தது.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமானது’ என்றார்கள்.

இதே ஹதீஸ் கத்தாதா இப்னு நுஅமான்(ரலி) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7375

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரை படைப்பிரிவொன்றுக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். அவர், தம் தொழுகையில் தம் தோழர்களில் (குர்ஆன் வசனங்களை) ஓதி (தொழுகை நடத்தி) வந்தார்; (ஒவ்வொரு முறையும்) ஓதி முடிக்கும்போது ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112 வது) அத்தியாயத்துடன் முடிப்பார். அப்படையினர் திரும்பி வந்தபோது நபி(ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘எதற்காக இப்படிச் செய்கிறார் என்று அவரிடமே கேளுங்கள்’ என்று கூற, அவர்களும் அவரிடம் கேட்டனர். அவர், ‘ஏனெனில், அந்த அத்தியாயம் பேரருளாளனின் (ஏகத்துவப்) பண்புகளை எடுத்துரைக்கின்றது. நான் அதை (அதிகமாக) ஓதுவதை விரும்புகிறேன்’ என்றார். (இதைக் கேள்விப்பட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அவரை நேசிக்கிறான் என்று அவருக்குத் தெரிவியுங்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7376

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான் என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7377

உசாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்களின் புதல்வியரில் ஒருவரின் (ஸைனப்(ரலி) அவர்களின்) தூதுவர் அங்கு வந்தார். ஸைனப் உடைய புதல்வர் இறக்கும் தறுவாயில் இருப்பதாகச் சொல்லி, ஸைனப் அழைப்பதாகத் தெரிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘நீ ஸைனபிடம் சென்று, ‘அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் அவனுக்குரியதே! அவன் கொடுத்ததும் அவனுக்குரியது தான். ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, (அல்லாஹ்விடம் அதற்கான) நன்மையை எதிர்பார்த்து பொறுமையாக இருக்கச் சொல்’ என்று சொல்லி அனுப்பினார்கள். ஆனால், அவர்களின் புதல்வியார், (அல்லாஹ்வின் மீது) ஆணையிட்டுக் கண்டிப்பாக வரவேண்டுமெனச் சொல்லி தம் தூதுவரை மீண்டும் அனுப்பி வைத்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் (தம் புதல்வியின் வீட்டுக்குச் செல்ல) எழுந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து ஸஅத் இப்னு உபாதா(ரலி), முஆத் இப்னு ஜபல்(ரலி) ஆகியோரும் எழுந்தனர். (அங்கு சென்றவுடன்) நபி(ஸல்) அவர்களிடம் அக்குழந்தை தரப்பட்டது. அப்போது தோல் பைக்குள் உள்ள காற்றைப் போன்று அது (சுவாசிக்க முடியாமல்) மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீரைச் சொரிந்தன. அப்போது ஸஅத்(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! என்ன இது? (அழுகிறீர்களே!)’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இது அல்லாஹ் தன் அடியார்களில் உள்ளங்களில் (இயல்பாகவே) வைத்துள்ள இரக்க உணர்வாகும்; அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்களுக்கே இரக்கம் காட்டுவான்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7378

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மனவேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகிறார்கள். அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் அவன் வழங்கிக் கொண்டிருக்கிறான் என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7379

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். (பெண்களின்) கருவறைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் (உறுதியாக) அறியமாட்டார்கள். எந்த உயிரும் தான் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது; அல்லாஹ் தான் அதை அறிவான். மறுமைநாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் தெரியாது என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7380

மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். ஆயிஷா(ரலி) அவர்கள், ‘முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் அறிவிக்கிறவர் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ ‘கண்பார்வைகள் அவனை எட்ட முடியாது’ என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 06:103). மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என உங்களிடம் அறிவிக்கிறவரும் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ ‘அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறியமாட்டார்’ என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 27:65)’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7381

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழும்போது, ‘அஸ்ஸலாமு அலல்லாஹ்’ (அல்லாஹ்வின் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று (அத்தஹிய்யாத் அமர்வில்) சொல்லிவந்தோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வே சாந்தி அளிப்பவன் (அஸ்ஸலாம்). (எனவே, இப்படிச் சொல்லாதீர்கள்.) மாறாக, ‘(சொல், செயல், பொருள் சார்ந்த) எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் அவனுக்கே உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய சுபிட்சமும் ஏற்படட்டும். எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் (அனைவர்) மீதும் சாந்தி உண்டாகட்டும். அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவரும் இல்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்’ எனக் கூறுங்கள் என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7382

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ், மறுமை நாளில் பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தன்னுடைய வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு ‘நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?’ என்று கேட்பான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7383

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்துவந்தார்கள்: (இறைவா!) உன் கண்ணியத்தின் பெயரால் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஜின் இனத்தாரும் மனித குலத்தாரும் இறந்துவிடுவார்கள்; (ஆனால்,) நீ இறக்கமாட்டாய்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7384

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நரகவாசிகள்) நரகத்தில் போடப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். அப்போது நரகம், ‘இன்னும் அதிகம் இருக்கிறதா?’ என்று கேட்கும்; இறுதியில் அகிலங்களின் அதிபதி (யான அல்லாஹ்,) நரகத்தில் தன்னுடைய பாதத்தை வைப்பான். உடனே நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் ஒட்டிக் கொள்ளும் பிறகு, ‘போதும்; போதும். உன் கண்ணியத்தின் மீதும், உன் கொடையின் மீதும் சத்தியமாக!’ என்று கூறும். சொர்க்கத்தில் இடம் மீதி இருந்து கொண்டேயிருக்கும். இறுதியில், சொர்க்கத்திற்கென அல்லாஹ் புதியவர்களைப் படைத்து, சொர்க்கத்தில் மீதியுள்ள இடத்தில் அவர்களைக் குடியமர்த்துவான் என அனஸ்(ரலி) அறிவித்தார். இந்த ஹதீஸ் மூன்று வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7385

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் (தொழுவதற்காக எழும்போது பின்வருமாறு) பிரார்த்திப்பார்கள். இறைவா! உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் இறைவன் ஆவாய். உனக்கே புகழனைத்தும். நீ வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாவாய். உன் சொல் உண்மை; உன் வாக்குறுதி உண்மை; (மறுமையில்) உன் தரிசனம் உண்மை; சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை; மறுமைநாள் உண்மையானது. இறைவா! உனக்கே நான் அடிபணிந்தேன்; உன் மீதே நம்பிக்கை கொண்டேன்; உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன்; உன் சான்றுகளைக் கொண்டே வழக்காடுவேன்; உன்னிடமே நீதி கேட்பேன். எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக! நீயே என் இறைவன். உன்னைத் தவிர எனக்கு வேறெவரும் இறைவன் இல்லை.

ஸாபித் இப்னு முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்: சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) அவர்கள் இதை நமக்கு அறிவித்துவிட்டு, ‘நீ உண்மை; உன் சொல் உண்மை’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7386

அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (கைபர்) பயணத்தில் இருந்தோம். அப்போது நாங்கள் மேட்டில் ஏறும்போது ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று (உரக்கச்) சொல்லிவந்தோம். நபி(ஸல்) அவர்கள், ‘உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் (மெல்லக் கூறுங்கள்). ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. மாறாக, அருகிலிருந்து செவியேற்பவனையும் பார்ப்பவனையுமே அழைக்கின்றீர்கள்’ என்றார்கள். பிறகு நான் என் மனத்திற்குள் ‘லா ஹவ்ல வ லா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியின்றி பாவங்களிலிருந்து விலகிடவும் முடியாது; நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவும் முடியாது) என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். ‘அப்துல்லாஹ் இப்னு கையேஸ! ‘லா ஹவ்ல வ லா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்’ என்று சொல்லுங்கள். ஏனெனில் அது, ‘சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்’ என்றோ, ‘அதைப் பற்றி நான் அறிவிக்கட்டுமா?’ என்றோ சொன்னார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7387-7388

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். அபூ பக்ர் அஸ்ஸித்தீக்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தொழுகையில் (இறுதி அமர்வில்) நான் ஓத வேண்டிய ஒரு பிரார்த்தனையை எனக்குக் கற்றுத் தாருங்கள்’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதியிழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்கமாட்டார். எனவே, எனக்கு உன் தரப்பிலிருந்து (பாவ) மன்னிப்பை வழங்குவாயாக. நீயே அதிகம் மன்னிப்பவனாகவும் கருணைபுரிபவனாகவும் இருக்கிறாய்!’ என்று கூறுங்கள் என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7389

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்து, ‘(நபியே!) உங்கள் சமுதாயத்தாரின் சொல்லையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் செவிமடுத்தான்’ என்றார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7390

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அஸ்ஸலமீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் தோழர்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை), குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுக் கொடுப்பதைப் போன்று கற்றுக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் கூறுவார்கள்: உங்களில் ஒருவர் ஒன்றைச் செய்ய நினைத்தால், கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளட்டும். பின்னர் ‘இறைவா! நீ அறிந்துள்ளபடி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன் அருளைக் கோருகிறேன். ஏனெனில், நீயே ஆற்றல்மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் -(தான் தொடங்கப் போகும்) அந்தக் காரியம் இன்னதெனக் குறிப்பிட்டு எனக்கு ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ அல்லது ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ நன்மை பயக்கும் என நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதை சுலபமாக்கித் தருவாயாக! பிறகு அதில் எனக்கு சுபிட்சம் அளித்திடுவாயாக! இறைவா! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ தீமை பயக்கும் என நீ அறிந்திருந்தால் இந்தக் காரியத்தைவிட்டு என்னைத் திருப்பிவிடுவாயாக! நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதில் எனக்குத் திருப்தி அளித்திடுவாயாக!’ என்று பிரார்த்திக்கட்டும்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7391

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சத்தியம் செய்யும்போது அதிகமாகப் பயன்படுத்திய வாக்கியம் ‘இல்லை; உள்ளங்களைப் புரட்டுபவன் மீதாணையாக!’ என்பதாகவே இருந்தது.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7392

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: நிச்சயமாக அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது – நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கத்தில் நுழைவார் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘அஹ்ஸா’ எனும் சொல்லுக்கு ‘மனனமிடல்’ என்று பொருள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7393

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டிவிடுங்கள். மேலும் (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்: என் அதிபதியே! உன் பெயரால் நான் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக. அதை நீ (கைப்பற்றாமல்) விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை நீ எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7394

ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, ‘அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா’ (அல்லாஹ்வே! உன் பெயர் கூறியே நான் இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள். காலையில் (எழும்போது) ‘அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும் (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியதுள்ளது) என்று கூறுவார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7395

அபூ தர் அல்கிஃபாரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இரவில் படுக்கைக்குச் செல்லும்போது, ‘அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா’ (அல்லாஹ்வே! உன் பெயர் கூறியே நாங்கள் இறக்கிறோம்; உயிர் வாழவும் செய்கிறோம்) என்று கூறுவார்கள். (உறக்கத்திலிருந்து) விழித்தெழும்போது ‘அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும் (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியுள்ளது) என்று கூறுவார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7396

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விரும்பும்போது, ‘பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான் மா ரஸ்க்த்தனா’ (அல்லாஹ்வின் திருப்பெயரால்… இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!) எங்களுக்கு நீ வழங்கும் குழந்தைச் செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!) என்று பிரார்த்தித்து, அந்த உறவில் அத்தம்பதியருக்து விதிக்கப்பட்டபடி குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7397

அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் ‘நான் பயிற்சியளிக்கப்பட்ட என்னுடைய நாயை (வேட்டைக்காக) அனுப்புகிறேன். (அது வேட்டையாடிக் கொண்டு வருகிறவற்றை நான் உண்ணலாமா?)’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் பயிற்சியளிக்கப்பட்ட உங்களின் நாயை (வேட்டைக்காக) அனுப்பிவைக்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் கூறியிருந்தால் அது (உங்களுக்காக வேட்டையாடிக்) கவ்விப்பிடித்தவற்றை நீங்கள் சாப்பிடுங்கள். நீங்கள் இறகு இல்லாத அம்பை எய்து, அது (தன்னுடைய முனையால்) தைத்துக் கொன்றதையும் சாப்பிடுங்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7398

ஆயிஷா(ரலி) அறிவித்தார். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! இங்கு இப்போதுதான் இணைவைப்பிலிருந்து விலகி (இஸ்லாத்தை ஏற்று) வந்த சில சமுதாயத்தார் உள்ளனர். அவர்கள் எங்களிடம் இறைச்சி கொண்டு வருகிறார்கள். அவர்கள் பிராணிகளை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறுகிறார்களா, இல்லையா என்று எங்களுக்குத் தெரியாது. (இந்நிலையில் அதைச் சாப்பிடலாமா)?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் (அதன் மீது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி உண்ணுங்கள்’ என்று பதில் சொன்னார்கள்.

இதே ஹதீஸை மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7399

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இரண்டு செம்மறி ஆட்டுக்கிடாக்களை அல்லாஹ்வின் பெயர் (‘பிஸ்மில்லாஹ்’) சொல்லியும், அல்லாஹு மிகப்பெரியவன் என்று (தக்பீர்) சொல்லியும் குர்பானி கொடுத்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7400

ஜுன்தப்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் இருந்தேன். அவர்கள் (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டு உரையாற்றினார்கள். அப்போது அவர்கள், ‘தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டவர் அதற்குப் பகரமாக மற்றொரு பிராணியை அறுக்கட்டும். (தொழுது முடிக்கும்வரை) அறுக்காமலிருப்பர் (தொழுகைக்குப் பின்) அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கட்டும்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7401

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் உங்கள் தந்தையர் பெயர் சொல்லி சத்தியம் செய்ய வேண்டாம்; சத்தியம் செய்ய வேண்டாம். சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் பெயர் கூறியே சத்தியம் செய்யட்டும் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7402

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்துப்பே(ர் கொண்ட உளவுப்படையின)ரை (ஓரிடத்திற்கு) அனுப்பிவைத்தார்கள். அவர்களில் அன்சாரியான குபைப்(ரலி) அவர்களும் இருந்தார்கள். (உளவுப்படையினரின் வருகையை அறிந்து ஹுதைல் எனும் கூட்டத்தார் பின்தொடர்ந்து வந்து சிலரைக் கொன்றுவிட்டு, சிலரை சிறை பிடித்தார்கள். குபைப் மக்காவில் பனுல் ஹாரிஸ் எனும் கூட்டத்தாரிடம் விற்கப்பட்டார்.) அவர்கள் குபைப்(ரலி) அவர்களைக் கொலை செய்வதற்காக ஒன்று திரண்டபோது குபைப்(ரலி) அவர்கள் தங்களின் மறைவிடத்து முடிகளை மழித்துக் கொள்வதற்காக ஹாரிஸின் மகளிடம் சவரக்கத்தி ஒன்றை இரவல் வாங்கினார்கள். அவர்கள் அவரைக் கொல்வதற்காக (மக்காவின்) புனித எல்லைக்கு வெளியே சென்றபோது குபைப்(ரலி) அவர்கள், ‘நான் முஸ்லிமாகக் கொல்லப்படும் இந்த வேளையில் எதைப் பற்றியும் நான் பொருட்படுத்துவதாக இல்லை. நான் எந்தப் பகுதியில் கொல்லப்பட்டாலும் அது அல்லாஹ்வுக்காகத்தான் (என்பதை எண்ணிப் பெருமிதம் அடைகிறேன்). நான் கொல்லப்படுவது எல்லாம் அல்லாஹ்வின் உள்ளமைக்காகத்தான். அவன் நினைத்தால் துண்டிக்கப்பட்ட என் உறுப்புகளின் இணைப்புகளின் மீது அருள்வளத்தைப் பொழிவான்’ என்று பாடினார்கள். பின்னர், ஹாரிஸின் மகன், குபைப்(ரலி) அவர்களைக் கொன்றுவிட்டான். குபைப்(ரலி) அவர்கள் மற்றும் அவர்களின் தோழர்களின் செய்தியை அவர்கள் கொல்லப்பட்ட அன்றே நபி(ஸல்) அவர்கள் (இறை அறிவிப்பின் வாயிலாக அறிந்து) தம் தோழர்களுக்குத் தெரிவித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7403

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அல்லாஹ்வை விட அதிக ரோஷம் உள்ளவர் வேறெவரும் இல்லை. எனவே நான் அவன் ஆபாசங்களுக்குத் தடை விதித்துள்ளான். அல்லாஹ்வைவிட மிகவும் விரும்புகிறவர் வேறெவருமில்லர் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7404

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் படைப்புகளை படைத்தபோது (தன்னுடைய) அரியாசனத்தின் மீது வைக்கப்பட்டிருந்த தன்னுடைய பதிவேட்டில், ‘என் கருணை என் கோபத்தை வென்றுவிட்டது’ என்று (கருணையைத்) தனக்குத்தானே விதியாக்கிக் கொள்ளும் வகையில் எழுதினான். இதைஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7405

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7406

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ‘(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ, உங்கள் கால்களுக்குக் கீழிருந்தோ ஏதோனுமொரு வேதனையை உங்களின் மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை வேறு சிலர் அனுபவிக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்’ எனும் (திருக்குர்ஆன் 06:65 வது) இறைவசனம் அருளப்பெற்றபோது, ‘உங்களுக்கு மேலிருந்து’ என்பதைக் கேட்டவுடன் ‘(இறைவா!) உன் (திரு) முகத்தால் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லது உங்கள் கால்களுக்குக் கீழிலிருந்து’ என்பதைக் கேட்டவுடனும் ‘(இறைவா!) உன் திரு) முகத்தால் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்றார்கள். ‘உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து…’ என்பதைக் கேட்டவுடன் ‘இது (முந்தைய வேதனைகளை கூட) மிக எளிதானது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7407

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் தஜ்ஜால் பற்றிக் குறிப்பிடப்பட்டது. அப்போது அவர்கள், ‘அல்லாஹ்வை நீங்கள் அறியாதவர்கள் அல்லர். நிச்சயமாக அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன்’ என்று கூறிவிட்டு, தம் கரத்தால் தம் கண்ணைச் சுட்டிக் காட்டினார்கள். மேலும், ‘மஸீஹுத் தஜ்ஜால் கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்’ என்றும் கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7408

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைவனால் அனுப்பிவைக்கப் பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை மகா பொய்யான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. (நினைவிற் கொள்க!) அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். ஆனால் உங்களுடைய இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனின் இரண்டு கண்களுக்கிடையே ‘காஃ’பிர்’ (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7409

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். பனுல் முஸ்தலிக் போரின்போது பெண் போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக்க கிடைத்தனர். அவர்களுடன் கருவுற்று விடக் கூடாதென்றும் நாங்கள் விரும்பினோம். எனவே, புணர்ச்சி இடை முறிப்பு ‘அஸல்’ செய்து கொள்வது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இதைச் செய்யாமலிருப்பதால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நேர்ந்துவிடப் போவதில்லை ஏனெனில், அல்லாஹ் மறுமை நாள்வரை நான் படைக்கவிருப்பவற்றை எழுதி முடித்துவிட்டான்’ என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ‘படைக்கப்பட உள்ள எந்த உயிரையும் அல்லாஹ் படைத்தே தீருவான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7410

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதி முதல் அந்தம் வரை வாழ்ந்த) இறை நம்பிக்கையாளர்கள் அனைவரையும் அப்படியே மறுமை நாளில் அல்லாஹ் ஒன்று திரட்டுவான். அப்போது அவர்கள் ‘(நமக்கு ஏற்பட்டுள்ள) இந்த(ச் சோதனையான)க் கட்டத்திலிருந்து நம்மை விடுவிக்க நாம் (யார் மூலமாவது) நம் இறைவனிடம் மன்றாடினால் (மிகவும் நன்றாயிருக்கும்)’ என்று பேசிக் கொள்வார்கள். பிறகு அவர்கள் ஆதம் (அலை) அவர்களே! மக்களை(ச் சூழ்ந்துள்ள இக்கட்டான சூழ்நிலையை) நீங்கள் காணவில்லையா? அல்லாஹ் தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். (எனவே) இந்த(ச் சோதனையான)க் கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள்’ என்று சொல்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ என்று கூறிவிட்டுத் தாம் புரிந்த தவற்றை மக்களிடம் கூறுவார்கள். ‘(எனவே, நீங்கள் நூஹ்(அலை) அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பி வைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவராவார்’ என்று கூறுவார்கள்.

உடனே, இறை நம்பிக்கையாளர்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அன்னாரும், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ என்று கூறிவிட்டுத் தாம் புரிந்த தவற்றை அவர்களிடம் கூறுவார்கள். பிறகு, ‘நீங்கள் அளவற்ற அருளாள(ன் இறைவ)னின் உற்ற நண்பர் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள். உடனே இறை நம்பிக்கையாளர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ என்று கூறிவிட்டுத் தாம் புரிந்த தவறுகளை மக்களிடம் சொல்வார்கள். அப்போது அவர்களும், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ எனவே, நீங்கள் அடியாரான முஹம்மத்(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள்
.
உடனே இறைநம்பிக்கையாளர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான் என்னுடைய இறைவனிடத்தில் (பரித்துரை செய்ய) அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அதற்கான அனுமதி எனக்கு வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது அவனுக்கு (சிரம்பணிந்து) சஜ்தாவில் விழுவேன். தான் நாடிய வரை அல்லாஹ் (அப்படியே) என்னை (சிரவணக்கத்தில்)விட்டுவிடுவான். பிறகு (இறைவனின் தரப்பிலிருந்து, ‘முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்; சொல்லுங்கள்; செவியேற்கப்படும் கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும் பரிந்ரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று என்னிடம் சொல்லப்படும். அப்போது நான் என் இறைவனை அவன் எனக்குக் கற்றுத்தந்த புகழ் மொழிகளைக் கூறி போற்றுவேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், ‘(நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு நான் அவர்களை சொர்க்கத்தில் அனுப்பிவைப்பேன். பின்னர் மீண்டும் நான் (இறைவனிடம்) செல்வேன். என் இறைவனைக் காணும்போது நான் (முன்போன்றே, சிரம் பணிந்து) சஜ்தாவில் விழுவேன். அப்போது அல்லாஹ் தாம் நாடிய வரை என்னை (அப்படியே சிர வணக்கத்தில்)விட்டுவிடுவான். பிறகு (இறைவனின் தரப்பிலிருந்து) ‘முஹம்மதே! தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள். உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று சொல்லப்படும். அப்போது நான் என் இறைவனை அவன் எனக்குக் கற்றுத்தந்த புகழ் மொழிகளை கூறி போற்றிவேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு (அவர்களுக்காகப் பரிந்துபேசி) அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு (அவர்களுக்காகப் பரிந்துபேசி) அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன்.. பிறகு (மூன்றாம்) முறையாக நான் (இறைவனிடம்) செல்வேன். (நான்காம் முறையாக இறைவனிடம்) செல்வேன். அப்போது நான், ‘என் இறைவா! குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகி விட்ட(வர்களான இறை மறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை’ என்று சொல்வேன்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை) என்று கூறியதுடன் அவரின் உள்ளத்தில் ஓர் வாற்கோதுமை எடையளவு நன்மையிருக்குமோ அவர் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார். பிறகு யார் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறியதுடன் அவரின் உள்ளத்தில் மணிக் கோதுமையின் எடையளவு நன்மை இருக்குமோ அவரும் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார். பிறகு யார் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறியதுடன், அவரின் உள்ளத்தில் கடுகின் எடையளவு நன்மை இருக்குமோ அவரும் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7411

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் கரம் நிரம்பியுள்ளது. வாரி வழங்குவதால் அது வற்றிப் போய்விடுவதில்லை. இரவும் பகலும் (மழை மேகத்தைப் போல் அது தன் அருள மழையைப் பொழிந்து கொண்டேயிருக்கிறது. வானங்களையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் வழங்கியவை அவனுடைய கரத்திலுள்ள (செல்வத்)தை வற்றச் செய்து விடவில்லை என்பதைப் பார்த்தீர்களா? வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு (முன்னர்) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்), நீரின் மீது இருந்தது. அவனுடைய இன்னொரு கரத்தில் தராசு உள்ளது. அவனே (அதைத்) தாழ்த்துகிறான்; அவனே உயர்த்துகிறான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7412

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் மறுமைநாளில் பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் இருக்கும். பிறகு ‘நானே அரசன்!’ என்று சொல்வான் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7413

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் (மறுமை நாளில்) பூமியைத் தன் கைப்பிடிக்குள் அடக்கிக்கொள்வான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இதே ஹதீஸ் இப்னு உமர்(ரலி) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7414

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஒரு யூதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘முஹம்மதே! அல்லாஹ் (மறுமை நாளில்) வானங்களை ஒருவிரலின் மீதும் பூமிகளை ஒருவிரலின் மீதும் மலைகளை ஒரு விரலின் மீதும் மரத்தை ஒரு விரலின் மீதும் (இதர) படைப்புகளை ஒரு விரலின் மீதும் நிறுத்திக்கொண்டு, ‘நானே அரசன்’ என்று கூறுவான்’ என்றார்.

(இதைக் கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் வெளியே தெரியச் சிரித்துவிட்டு, ‘அவர்கள் அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி மதிக்கவில்லை’ எனும் (யூதர்களைப் பற்றிய 6:91 வது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இந்த யூதரின் சொல்லைக் கேட்டு வியப்படைந்து, அதை உறுதிப்படுத்தும் வகையில் சிரித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7415

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்: வேதக்காரர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘அபுல் காசிமே! (மறுமையில்) அல்லாஹ் வானங்களை ஒரு விரலின் மீதும் பூமிகளை ஒரு விரலின் மீதும் மரத்தையும் ஈர மண்ணையும் ஒரு விரலின் மீதும், (இதர) படைப்புகளை ஒரு விரலின் மீதும் (நிறுத்தி) வைத்துக்கொண்டு, ‘நானே அரசன்; நானே அரசன்’ எனக் கூறுவான்’ என்றார்.

(இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் தங்களின் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்துவிட்டு, ‘அவர்கள் அல்லாஹ்வை எப்படி மதிக்கவேண்டுமோ அப்படி மதிக்கவில்லை’ எனும் (யூதர்களைப் பற்றிய 6:91 வது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7416

முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்கள், ‘என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்’ என்று சொல்ல, இச்செய்தி இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், ‘ஸஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியக்கின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரைவிட அதிக ரோஷமுள்ளவன்; அல்லாஹ் தன் ரோஷமுள்ளவன். அல்லாஹ் தன் ரோஷத்தின் காரணத்தால்தான் வெளிப்படையான மற்றும் மறைவான மானக்கேடான செயல்கள் (ஆபாசங்கள்) அனைத்தையும் தடைசெய்துவிட்டான். (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புகிறவர் அல்லாஹ்வை விட வேறெவரும் இல்லை. எனவேதான் நற்செய்தி சொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும் அல்லாஹ் அனுப்பிவைத்தான். அல்லாஹ்வை விட மிகவும் புகழை விரும்புகிறவர் வேறெவருமில்லை. எனவேதான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7417

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், ‘குர்ஆனிலிருந்து உங்களுடன் (மனனமாக) ஏதேனும் ஒன்று (ஷைஉ) இருக்கின்றதா?’ என்று கேட்டார்கள். அம்மனிதர் ‘ஆம். இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம்’ என்று சில அத்தியாயக்ளைப் பெயர் குறிப்பிட்டுச் சொன்னார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7418

இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். அப்போது பனூ தமீம் குலத்தாரில் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், ‘நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!’ என்றார்கள். அதற்கு அவர்கள், ‘எங்களுக்கு நற்செய்தி சொன்னீர்கள். (அது இருக்கட்டும்! தர்மம்) கொடுங்கள்’ என்று கூறினார்கள்: அப்போது யமன் நாட்டு மக்கள் சிலர் (-அஷ்அரீ குலத்தார்) வந்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘யமன் வாசிகளே! நீங்கள் நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை’ என்றார்கள். அதற்கு அவர்கள், ‘நாங்கள் (அதை) ஏற்றுக் கொண்டோம்; மார்க்கக் கல்வி கற்பதற்காகவும், இந்த உலகம் உண்டானதன் ஆரம்ப நிலை குறித்துத் தங்களிடம் கேட்பதற்காகவுமே
நாங்கள் தங்களிடம் வந்தோம்’ என்று கூறினார்கள்:நபி(ஸல்) அவர்கள், ‘(ஆதியில்) அல்லாஹ் மட்டுமே இருந்தன அவனுக்கு முன்  (அவனைத் தவிர வேறு) எந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) தண்ணீரின் மீது இருந்தது. பின்னர் வானங்கள் மற்றும் பூமியை அவன் படைத்தான். (லவ்ஹுல் மஹ்ஃபூழ் எனும்) பாதுகாக்கப் பெற்ற பலகையில் (பிரபஞ்சத்தின்) எல்லா விஷயங்களையும் எழுதினான்’ என்றார்கள்.

(அறிவிப்பாளர் கூறுகிறார்:) பின்னர் ஒருவர் என்னிடம் வந்து, ‘இம்ரானே! உங்கள் ஒட்டகத்தை (கண்டு) பிடியுங்கள்; அது (ஓடிப்) போய்விட்டது’ என்று கூற, நான் அதைத் தேட (எழுந்து) சென்றுவிட்டேன். சென்று பார்த்தால் ஒட்டகத்தைக் காண முடியாதபடி கானல் நீர் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது போனால் போகட்டும் என்று கருதி, (ஹதீஸ் முடிவதற்கு முன்) நான் அங்கிருந்து எழுந்து செல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7419

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் வலக் கரம் நிரம்பியுள்ளது. வாரிவழங்குவதால் அது வற்றிவிடுவதில்லை. அது இரவிலும் பகலிலும் (அருள் மழையைப்) பொழிந்து கொண்டேயிருக்கிறது. அவன் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த (நேரத்)திலிருந்து (இப்போது வரை) அவன் வாரி வழங்கியது எவ்வளவு இருக்கும் சொல்லுங்கள். அதுவும் கூட அவனுடைய வலக்கரத்தில் இருப்பதைக் குறைத்து விடவில்லை. (வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தபோது) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) தண்ணீரின் மீதிருந்தது. அவனுடைய மற்றொரு கரத்தில் ‘கொடைப் பொழிவு’ அல்லது ‘கொடைக்குறைவு’ உள்ளது. (அதன் வாயிலாக) அவன் (சிலரை) உயர்த்துகிறான்; (சிலரைத்) தாழ்த்துகிறான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7420

அனஸ்(ரலி) அறிவித்தார். ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்கள் தம் மனைவியின் போக்கு குறித்து (நபி(ஸல்) அவர்களிடம்) முறையிட வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்; உன் மனைவியை (மண விலக்குச் செய்துவிடாமல்) மணபந்தத்தில் நீடிக்கச் செய்’ என்று கூறலானார்கள். நபி(ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில் குர்ஆன் வசனங்களில்) எதையேனும் மறைப்பவர்களாக இருந்திருந்தால் (பின்வரும் 33:37 வது வசனமான) இதைத்தான் மறைத்திருப்பார்கள். இதன் காரணத்தால் ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக் கொள்வார்கள். ‘உங்களை (நபி(ஸல்) அவர்களுக்கு) உங்கள் வீட்டார் மணமுடித்துத்தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து (நபி(ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக் கொடுத்தான்’ என்று சொல்வார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (நபியே!) நீங்கள் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உங்களின் உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 33:37 வது) இறைவசனம், (தம்பதியராயிருந்த) ஸைனப்(ரலி) அவர்களுக்கும் ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களுக்குமிடையே நடந்த பிரச்சினையில் (நபி(ஸல்) அவர்கள் கருத்து தெரிவித்தபோது) தான் அருளப்பெற்றது’ என்று அனஸ்(ரலி) அவர்கள் சொன்னார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7421

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். பர்தா தொடர்பான வசனம் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் விஷயத்தில் நான் அருளப்பெற்றது. அன்று நபி(ஸல்) அவர்கள் ஸைனப்(ரலி) அவர்களை மணந்ததற்காக (‘வலீமா’ விருந்தாக) ரொட்டியையும் இறைச்சியையும் உண்ணக் கொடுத்தார்கள். ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாகப் பெருமை பாராட்டிவந்தார்கள்: ‘அல்லாஹ் எனக்கு வானத்தில் மணமுடித்து வைத்தான்’ என்று சொல்வார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7422

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் (படைப்புகளைப்) படைக்கும் பணியை நிறைவு செய்தபோது தன்னிடமுள்ள அரியாசனத்திற்கு மேலே, ‘என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது’ என்று எழுதினான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7423

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு தொழுகையை நிலைநிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் நுழையச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது; அவர் இறைவழியில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றாலும் சரி; அல்லது அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரி’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மக்களுக்கு இந்த (நற்) செய்தியை அறிவிக்கலாமா?’ என்று (நபித் தோழர்கள்) கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவற்றைத் தன்னுடைய பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காக (அல்லாஹ்) தயார்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொரு இரண்டு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளதைப் போன்ற தொலைதூரம் உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால், ஃபிர்தவ்ஸ் எனும் (சொர்க்கத்தின்) படித்தரத்தையே கேளுங்கள்; ஏனெனில், அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும். அதற்கு மேலே அளவிலா அருளாள(ன் இறைவ)னின் அரியாசனம் (அர்ஷ்) இருக்கிறது. இன்னும் அ(ந்த படித்தரத்)திலிருந்தே சொர்க்கத்தின் ஆறுகள் பாய்கின்றன என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7424

அபூ தர் அல்ஃம்ஃபாரீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அமர்ந்திருக்க பள்ளிவாசலினுள் நான் நுழைந்தேன். சூரியன் மறையத் தொடங்கியதும் நபி(ஸல்) அவர்கள், ‘அபூ தர்ரே! இது (-சூரியன்) எங்கு செல்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்று சொன்னேன். அவர்கள், ‘இது இறைவனுக்கு (அவனுடைய அரியாசனத்திற்குக் கீழே) சிரவணக்கம் (சஜ்தா) செய்ய அனுமதி கேட்பதற்காகச் செல்கின்றது. அதற்கு அனுமதி வழங்கப்படும். அதனிடம், ‘நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடத்திற்கே திரும்பிச் செல்’ என்று சொல்லப்பட்டுவிட்டதைப் போன்று இருக்கும். உடனே அது மறைந்த இடத்திலிருந்து (இறுதி நாளில்) உதயமாகும்’ என்று சொல்லிவிட்டு, ‘அதுதான் அது நிலைகொள்ளும் இடமாகும்’ (தாலிக்க முஸ்த்தகர்ருல் லஹா) என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி (திருக்குர்ஆன் 36:38 வது வசனத்தை) ஓதினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7425

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் வசனங்களை ஒன்று திரட்டும்படி கேட்டு) என்னிடம் ஆளனுப்பினார்கள். எனவே, நான் குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அப்போது ‘அத்தவ்பா’ எனும் (9 வது) அத்தியாயத்தின் இறுதிப் பகுதியை அன்சாரியான கிடைக்கப்பெற்றேன். அவரல்லாத வேறொருவரிடமும் அதை நான் காணவில்லை. அந்த இறுதிப் பகுதி, ‘உங்களிலிருந்தே ஓர் இறைத்தூதர் உங்களிடம் வந்திருக்கிறார்’ என்பதிலிருந்து அல்பராஅத் வந்திருக்கிறார்’ என்பதிலிருந்து அல்பராஅத் அத்தியாயத்தின் இறுதி(யான ‘அவனே மகத்தான அரியாசனத்தின் அதிபதி ஆவான்’ என்பது) வரை உள்ளதாகும்.

இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7426

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது, ‘லா இலாஹ இல்லல்லாஹுல் அலீமுல் ஹலீம்; லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அரீம்; லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி, வ ரப்புல் அர்ளி, வ ரப்புல் அர்ஷில் கரீம்’ (நன்கறிந்தோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை; மகத்தான அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை; வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும், சிறப்புக்குரிய அரியாசனத்தின் அதிபதியுமாகிய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை) என்று பிரார்த்தித்து வந்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7427

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் மக்கள் மயக்கமடைந்து விடுவார்கள். அப்போது (நான் முதலாவதாக மூர்ச்சை தெளிந்து எழும்போது) மூஸாவின் அருகில் இருப்பேன். அவர்(இறை) அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பார் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7428

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நானே முதலாவதாக (மயக்கம் தெளிவித்து) எழுப்பப்பட்டவனாக இருப்பேன். அப்போது மூஸா(இறை) அரியாசனத்தைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7429

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரவில் சில வானவர்களும், பகலில் சில வானவர்களும் உங்களிடையே அடுத்தடுத்து இறங்கி) வருகிறார்கள். அவர்கள் அஸ்ர் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் ஒன்று சேருகிறார்கள். பிறகு உங்களிடையே இரவு தங்கியிருந்தவர்கள் (வானத்திற்கு) ஏறிச் செல்கிறார்கள். அவர்களிடம் அல்லாஹ் ‘என் அடியார்களை எந்த நிலையில்விட்டுவிட்டு வந்தீர்கள்?’ என்று -உங்களைப் பற்றி அவன் நன்கறிந்த நிலையிலேயே – கேட்கிறான். ‘அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் அவர்களைவிட்டுவிட்டு வந்தோம்; அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்’ என்று வானவர்கள் பதிலளிப்பார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7430

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நல்ல சம்பாத்தியத்தின் வாயிலாக (ஈட்டிய வருமானத்திலிருந்து) ஒரு பேரீச்சம் பழத்திற்குச் சமமான அளவு தர்மம் செய்கிறவரிடமிருந்து அதை அல்லாஹ் தன் வலக் கரத்தால் பெற்று ஏற்றுக் கொள்வான். -அல்லாஹ்வை நோக்கி நல்ல (தூய்மையான)து மட்டுமே மேலே. செல்லும் – பிறகு அதை, உங்களில் ஒருவர் தம் குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று மலை அளவிற்கு அல்லாஹ் வளர்த்துப் பெருகச் செய்வான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7431

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது இச்சொற்களைக் கூறிப் பிரார்த்தித்துவந்தார்கள்: லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம்; லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம்; லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ஷில் கரீம். (மகத்துவமிக்கோனும் பொறுமை மிகுந்தோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை; மகத்தான அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை; வானங்களின் அதிபதியும் சிறப்புமிக்க அரியாசனத்தின் அதிபதியுமாகிய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை.)

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7432

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். அலீ(ரலி) அவர்கள் வார்க்கப்படாத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமன் நாட்டிலிருந்து நபி(ஸல்) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் அக்ரஉ இப்னு ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷிஈ(ரலி), உயைனா இப்னு பத்ர் அல்ஃபஸாரீ(ரலி), அல்கமா இப்னு உலாஸா அல் ஆமிரீ அல்கிலாபீ(ரலி), ஸைத் அல்கைல் அத்தாயீ அந்நப்ஹானீ(ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டார்கள். இதைக் கண்ட குறைஷியரும் அன்சாரிகளும் கோபமடைந்து, நஜ்த்வாசிகளின் தலைவர்களுக்கு இதைக் கொடுக்கிறார்கள்; நம்மைவிட்டுவிடுகிறார்களே’ என்று கூறினார்கள்.

(இதையறிந்த) நபி(ஸல்) அவர்கள், ‘(புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) அவர்களை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு கொடுத்தேன்’ என்றார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த நெற்றி புடைத்த, அடர்த்தியான தாடி கொண்ட, கன்னங்கள் உப்பிய, தலை முடி மழிக்கப்பட்டிருந்த ஒரு மனிதன் முன்வந்து, ‘முஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்’ என்று சொன்னான். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான் அல்லாஹ்வுக்கு மாறு செய்தால் வேறு யார் அவனுக்குக் கீழ்ப்படியப் போகிறார்கள்? பூமியிலிருப்பவர்களில் என்னை அவன் நம்பிக்கைகுரியவனாக ஆக்கியுள்ளான்; (நான் வானிலிருப்பவர்களின் நம்பிக்கைக்கும் உரியவன்;) ஆனால், நீங்கள் என்னை நம்ப மறுக்கின்றீர்களே?’ என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர் அவனைக் கொன்றுவிட அனுமதி கேட்டார் – அவர் காலித் இப்னு வலீத்(ரலி) என்றே கருதுகிறேன் – ஆனால், நபி(ஸல்) அவர்கள் அவரைத் தடுத்துவிட்டார்கள்.

அந்த மனிதன் திரும்பிச் சென்றபோது நபி(ஸல்) அவர்கள், ‘இந்த மனிதனின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டி (இதயத்திற்குள்) செல்லாது; வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவார்கள். இஸ்லாமியர்களையே அவர்கள் கொலை செய்வார்கள்; சிலை வணங்கிகளை விட்டு விடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் ‘ஆது’ கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் நான் அழிப்பேன்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7433

அபூ தர் அல்ஃம்ஃபாரீ(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் ‘சூரியன், தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது’ எனும் (திருக்குர்ஆன் 36:38 வது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அதன் நிலைகொள்ளும் இடம் அரியாசனத்திற்குக் கீழே உள்ளது’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7434

ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது (அந்த) பெளர்ணமி இரவில் அவர்கள் முழுநிலாவைக் கூர்ந்து பார்த்தார்கள். ‘இந்த நிலாவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பதைப் போன்றே உங்களுடைய இறைவனையும் (மறுமையில்) காண்பீர்கள். எனவே, சூரியன் உதயமாவதற்கு முன்புள்ள தொழுகையிலும் சூரியன் மறைவதற்கு முன்புள்ள தொழுகையிலும் (உறக்கம் போன்ற) எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் முடியும் என்றால் அவ்வாறே செய்யுங்கள் (உங்களுடைய இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்)’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7435

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் உங்களுடைய இறைவனை (மறுமையில்) கண்கூடாகக் காண்பீர்கள் என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7436

ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பெளர்ணமி இரவில் எங்களிடம் புறப்பட்டு வந்து ‘நீங்கள் இந்த முழு நிலாவை நெருக்கடியின்றி காண்பதைப் போன்றே உங்களுடைய இறைவனை மறுமைநாளில் காண்பீர்கள்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7437

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?’ என்று மக்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘பெளர்ணமி இரவில் முழு நிலாவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?’ என்று கேட்டார்கள். மக்கள் ‘இல்லை; இறைத்தூதர் அவர்களே!’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘இல்லை; இறைத்தூதர் அவர்களே!’ என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

இவ்வாறுதான் உங்களுடைய இறைவனை நீங்கள் (மறுமை நாளில்) காண்பீர்கள். அல்லாஹ் மறுமைநாளில் மனிதர்களை ஒன்றுகூட்டி, ‘(உலகத்தில்) யார் எதை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் அதைப் பின்பற்றிச் செல்லட்டும்’ என்று கூறுவான். எனவே, சூரியனை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் சூரியனைப் பின்தொடர்வார்கள். சந்திரனை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் சந்திரனைப் பின்தொடர்வார்கள். ஷைத்தான்களை வழிபட்டு வந்தவர்கள் ஷைத்தான்களைப் பின்தொடர்வார்கள். இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியருப்பார்கள். அவர்களிடையே ‘பரிந்துரைப்போர்’ அல்லது ‘நயவஞ்சகர்கள்’ இருப்பார்கள். அப்போது அல்லாஹ் அவர்களிடம் (அவர்கள் அறிந்திராத அவர்களிடம் (அவர்கள் அறிந்திராத தோற்றத்தில்) வந்து, ‘நானே உங்களுடைய இறைவன்’ என்று கூறுவான். அதற்கு அவர்கள், ‘எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம் நீ எங்கள் இறைவன் அல்லன்). அவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்’ என்று கூறுவர்.

அப்போது அல்லாஹ் அவர்களிடம் அவர்கள் அறிந்து கொள்ளும் தோற்றத்தில் வந்து, ‘நானே உங்களுடைய இறைவன்’ என்று சொல்வான். அப்போது அவர்கள், ‘நீதான் எங்கள் இறைவன்’ என்று கூறியபடி அவனைப் பின்தொடர்வார்கள். அங்கு நரகத்திற்கு மேலே பாலம் அமைக்கப்படும. அப்போது நானும் என் சமுதாயத்தாருமே அ(ந்தப் பாலத்)தை முதல் முதலாகக் கடப்போம். அன்றைய தினம் இறைத் தூதர்கள் மட்டுமே பேசுவார்கள். அப்போது இறைத்தூதர்களின் பிரார்த்தனை ‘(இறைவா!) காப்பாற்று! காப்பாற்று!’ என்பதாகவே இருக்கும். கருவேல மரத்தின் முற்களைப் போன்ற கொக்கிகள் நரகத்தில் மாட்டப்பட்டிருக்கும். கருவேல மரத்தைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே!’ என்று பதிலளித்தனர். அந்தக் கொக்கிகள் கருவேல மர முள்ளைப் போன்றுதானிருக்கும். ஆயினும், அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெருவரும் அறியமாட்டார்கள். அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் (தீய) செயல்களுக்கேற்ப கவ்விப் பிடிக்கும். மக்களில் சிலர் தம் செயலினால் அழிந்து விடுவார்கள். இன்னும் சிலர் (கொக்கியின் பிடி தளர்ந்து நரகத்தில்) விழுந்து விடுவார்கள். மற்றச் சிலர் வேறு நிலையில் இருப்பார்கள். பிறகு இறைவன் காட்சியளித்து, தன் அடியார்களிடையே தீர்ப்பளித்து முடித்த பின், நரகவாசிகளில் தான் நாடிய சிலரை தன் கருணையால் (நரகத்திலிருந்து) வெளியேற்ற விரும்புவான். எனவே, அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் வாழ்ந்தவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றி விடுமாறு வானவர்களுக்கு அவன் கட்டளையிடுவான். வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என உறுதி கூறியவர்களில் யாருக்குத் தான் கருணை புரிய வேண்டுமென நாடுகிறானோ அவர்களை (நரகத்திலிருந்து வெளியேற்றிடுமாறு ஆணையிடுவான்). நரகத்திலிருக்கும் அவர்களை (அவர்கள் செய்த) சஜ்தாவின் (சிரவணக்கத்தின்) அடையாளத்தை வைத்து வானவர்கள் இனங் கண்டு கொள்வார்கள். ஆதமின் மகனின் (-மனிதனின்) சஜ்தா அடையாள(ம் உள்ள இட)த்தைத் தவிர அவனை (முழுமையாக) நரகம் தீண்டும். (ஆனால்,) சஜ்தா அடையாளத்தைத் தீண்டக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துள்ளான். எனவே, அவர்கள் அங்கமெல்லாம் கரிந்துவிட்டநிலையில் நரகத்திலிருந்து வெளியேறுவார்கள். அப்போது அவர்களின் மீது ஜீவ நீர் (-மாஉல் ஹயாத்) ஊற்றப்படும். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறிவிடுவார்கள்.

பின்னர் அடியார்களிடையே அல்லாஹ் தீர்ப்பளித்து முடிக்கும்போது நரகத்தை முன்னோக்கியபடி ஒருவர் எஞ்சியிருப்பார். அவர்தாம் சொர்க்கத்தில் நுழையக் காத்திருக்கும் கடைசி நரகவாசியாவார். அவர், ‘என் இறைவா! நரகத்தைவிட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்புவாயாக! அதன் (வெப்பக்) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது; அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது’ என்று கூறுவார். பின்னர் எதைச் சொல்லி அவர் பிரார்த்திக்க வேண்டுமென அல்லாஹ் நாடுவானோ அதைச் சொல்லி அவர் பிரார்த்திப்பார்.

பிறகு அல்லாஹ் (அவரிடம்), ‘நீ கேட்பதை நான் கொடுத்தால் இஃதல்லாத வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடும் அல்லவா?’ என்பான். அதற்கு அவர், ‘இல்லை. உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதைத் தவிர வேறெதையும் நான் உன்னிடம் கேட்க மாட்டேன்’ என்று கூறி, இறைவன் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் அவர் தம் இறைவனிடம் வழங்குவார். அப்போது அல்லாஹ் நரகத்தைவிட்டு அவரின் முகத்தை (வேறு பக்கம்) திருப்பிவிடுவான். அவர் சொர்க்கத்தை முன்னோக்கி பார்வையைச் செலுத்தும்போது அல்லாஹ் நாடிய நேரம் வரை அவர் அமைதியாக இருப்பார். பிறகு, ‘என் இறைவா! சொர்க்கத்தின் வாசல் வரை என்னைக் கொண்டு செல்வாயாக!’ என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் அவரிடம், ‘உனக்கு வழங்கப்பட்ட இதைத் தவிர வேறெதையும் ஒருபோதும் என்னிடம் நீ கேட்கமாட்டாய் என உறுதிமொழிகளையும் வாக்குறுதிகளையும் நீ வழங்கவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன?’ என்று கூறுவான். அதற்கு அவர், ‘இல்லை. உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்’ எனக் கூறி, அவன் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் (இறைவனிடம்) வழங்குவார்.

எனவே, அல்லாஹ் அவரை சொர்க்கத்தின் வாசல் வரை கொண்டு செல்வான். சொர்க்க வாசலில் அவர் நிற்கும்போது சொர்க்கவாசல் அவருக்காகத் திறக்கும். அப்போது அவர் அதிலுள்ள உல்லாச சுகங்களைப் பார்த்தவாறு அல்லாஹ் நாடிய வரை அமைதியாக இருப்பார். பிறகு, ‘என் இறைவா! என்னை சொர்க்கத்திற்குள் அனுப்புவாயாக!’ என்று கூறுவார். அப்போது அல்லாஹ், ‘உனக்கு வழங்கப்பட்டதைத் தவிர வேறெதையும் கேட்கமாட்டேன் என்று கூறி வாக்குறுதிகளையும் உறுதி மொழிகளையும் நீ வழங்கவில்லையா?’ என்று கேட்டுவிட்டு, ‘மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன?’ என்று கூறுவான்.

அதற்கு அவர், ‘என் இறைவா! உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாய் நான் ஆகிவிடக் கூடாது’ என்று பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவரைக் கண்டு அல்லாஹ் சிரித்துவிடுவான். அவரைக் கண்டு சிரித்ததும், ‘சொர்க்கத்தில் நுழைந்து கொள்’ என்று அவரிடம் அல்லாஹ் கூறுவான். சொர்க்கத்திற்குள் அவர் நுழைந்த பின் ‘நீ (விரும்பிய) தை ஆசைப்படலாம்’ என்று அவரிடம் இறைவன் சொல்வான். அவ்வாறே அவர் ஆசைப்பட்டு தம் இறைவனிடம் கேட்பார். இறுதியில் அல்லாஹ்வே அவருக்கு (ஆசைப்பட வேண்டியவற்றை ஒவ்வொன்றாகச் சொல்லி) ‘இன்னதை இன்னதை நீ ஆசைப்படு’ என்று நினைவு படுத்துவான். கடைசியில் அந்த மனிதரின் ஆசைகள் எல்லாம் அடங்கும். (அப்போது) அல்லாஹ், ‘(நீ கேட்ட) இதுவும் உனக்குக் கிடைக்கும். இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்’ என்று சொல்வான்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7438

அதாஉ இப்னு யஸீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் மேற்கண்ட ஹதீஸை அறிவித்தபோது அவர்களுடன் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் இருந்தார்கள். அன்னார் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸிற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இறுதியில் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள், ‘இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுவான்: என அறிவித்தபோது தான் அபூ ஸயீத்(ரலி) அவர்கள் (குறுக்கிட்டு,) ‘இதுவும் இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும்’ என்றல்லவா ஹதீஸ் இருக்கிறது அபூ ஹுரைராவே!’ என்று கேட்டார்கள். அபூ ஹுரைரா(ரலி) அவர்கள், ‘நான் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து ‘உனக்கு இதுவும் இதைப் போன்ற இன்னொரு மடங்கும் கிடைக்கும்’ என்று கூறினார்கள் எனவே மனனம் செய்துள்ளேன்’ என்றார்கள். அதற்கு அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள், ‘நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து ‘இதுவும் இதைப் போன்று பத்து மடங்குகளும் உனக்குக் கிடைக்கும்’ என்ற சொல்லையே மனனம் செய்துள்ளேன் என உறுதி கூறுகிறேன்’ என்றார்கள். அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் ‘அந்த மனிதர் தாம் சொர்க்கத்தில் இறுதியாக நுழையும் மனிதராவார்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7439

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?’ என்று (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்டோம். அதற்கு அவர்கள், ‘(மேகமூட்டமில்லாது) வானம் தெளிவாக இருக்கையில் சூரியனையும் சந்திரனையும் பார்க்க நீங்கள் (முண்டியத்துக் கொண்டு) சிரமப்படுவீர்களா?’ என்று கேட்டார்கள். நாங்கள், ‘இல்லை’என்றுபதிலளித்தோம். இவ்விரண்டையும் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே அந்த நாளில் உங்களுடைய இறைவனைக் காணவும் நீங்கள் சிரமப்பட மாட்டீர்கள்’ என்று கூறிவிட்டு (பின்வருமாறு) விளக்கினார்கள்.

(மறுமை நாளில்) அழைப்பாளர் ஒருவர், ‘ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்’ என்று அழைப்புவிடுப்பார். அப்போது சிலுவை வணங்கிகள் தங்கள் சிலுவையுடனும், சிலை வணங்கிகள் தங்கள் சிலைகளுடனும், ஒவ்வொரு (பொய்த்) தெய்வ வழிபாட்டார்கள் தத்தம் கடவுள்களுடனும் செல்வார்கள். முடிவில் அல்லாஹ்வை வணங்கிக்கொண்டு நன்மைகளும் புரிந்து கொண்டிருந்த நல்லவர்கள், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். பின்னர் நரகம் கொணரப்பட்டுக் கானலைப் போன்று அவர்களுக்குக் காட்டப்படும். அப்போது யூதர்களிடம், ‘நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்?’ என்று கேட்கப்படும் அதற்கு அவர்கள், ‘நாங்கள் அல்லாஹ்வின் மகன் உஸைர் அவர்களை வணங்கிக் கொண்டிருந்தோம்’ என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், ‘நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கே மனைவியோ மக்களோ இருக்கவில்லை’ என்று சொல்லப்படும். பிறகு அவர்களிடம், ‘இப்போது நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?’ என்று கேட்கப்படும். அதற்கவர்கள், ‘எங்களுக்கு (குடிப்பதற்கு நீர்) புகட்டுவாயாக!’ என்பார்கள். அப்போது (அவர்களிடம் கானலைப் போன்று நரகம் காட்டப்பட்டு), ‘குடியுங்கள்’ என்று கூறப்படும். (அதைக் குடிக்க முனையும்போது) அவர்கள் நரகத்தில் விழுந்து விடுவார்கள். பின்னர் கிறிஸ்தவர்களிடம், ‘நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்கப்படும் அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் மகன் மஸீஹை (ஈசாவை) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம்’ என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், ‘நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள்; அல்லாஹ்வுக்கு மனைவியோ மக்களோ இருக்கவில்லை’ என்று கூறப்பட்ட பின் ‘நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?’ என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், ‘நீ எங்களுக்கு (நீர்) புகட்டுவதையே நாங்கள் விரும்புகிறோம்’ என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம் (கானலைப் போன்று காட்சி தரும் நரகத்தைக் காட்டி) ‘குடியுங்கள்!’ என்று கூறப்படும். அப்போது நரகத்தில் அவர்களும் விழுந்துவிடுவார்கள்.

இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் ‘மக்கள் (அனைவரும் தத்தம் தெய்வங்களுக்குப் பின்னால்) சென்றார்களே! நீங்கள் மட்டும் ஏன் இங்கேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், ‘(உலகத்தில்) நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும் (அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல்) அவர்களைப் பிரிந்திருந்தோம். (இப்போது மட்டும் அவர்கள் பின்னால் நாங்கள் செல்வோமா?) இங்கு ஓர் அழைப்பாளர்’ ‘ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலக வாழ்வில்) தாம் வணங்கிக் கொண்டிருந்த அவர்களுடன் சேர்ந்துகொள்ளட்டும் என்று அழைக்கக் கேட்டோம். நாங்கள் (வணங்கிக் கொண்டிருந்த) எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்று கூறுவார்கள். அப்போது சர்வ வல்லமை படைத்தவ(னான இறைவ)ன், அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றம் அல்லாத வேறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல் முறையாக வந்து, ‘நானே உங்கள் இறை நம்பிக்கையாளர்கள், ‘நீயே எங்கள் இறைவன்’ என்று சொல்வார்கள். அப்போது இறைவனிடம் இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேச மாட்டார்கள். அப்போது, ‘அவனை இனங்கண்டுகொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?’ என்று (ஒருவர்) கேட்பார். அதற்கு இறை நம்பிக்கையாளர்கள், ‘(இறைவனி) கால் (பாதம்) தான்’ என்று கூறுவார்கள். உடனே அல்லாஹ் தன்னுடைய காலை வெளிப்படுத்துவான். இறை நம்பிக்கையாளர்கள் யாவரும் அவனுக்கு சிர வணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும் பாராட்டுக்காகவும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து (தொழுது) கொண்டிருந்தவர்கள் மட்டுமே அப்போது எஞ்சியிருப்பார்கள்; அவர்கள் சிரவணக்கம் செய்ய முற்படுவார்கள். ஆனால், அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே பலகையைப் போன்று மாறிவிடும். (அவர்களால் சிரம் வணக்கம் செய்ய முடியாது.)

பிறகு பாலம் கொண்டு வரப்பட்டு, நரகத்தின் மேலே கொண்டுவைக்கப்படும். (இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொன்னபோது,) நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அது என்ன பாலம்?’ என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், ‘அது (கால்கள்) வழுக்குமிடம்; சறுக்குமிடம்; அதன் மீது இரும்புக் கொக்கிகளும் அகன்ற நீண்ட முற்களும் இருக்கும். அந்த முட்கள் வளைந்திருக்கும். ‘நஜ்த்’ பகுதியில் முளைக்கும் அவை ‘கருவேல மர முற்கள்’ எனப்படும்’ என்றார்கள். (தொடர்ந்து கூறினார்கள்:) இறைநம்பிக்கையாளர் அந்தப் பாலத்தை கண்சிமிட்டலைப் போன்றும், மின்னலைப் போன்றும், காற்றைப் போன்றும், பந்தயக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களைப் போன்றும் (விரைவாகக்) கடந்து விடுவார். எந்தக் காயமுமின்றி தப்பிவிடுவோரும் உண்டு. காயத்துடன் தப்புவோரும் உண்டு. மூர்ச்சையாகி நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் அவர்களில் கடைசி ஆள் கடுமையாக இழுத்துச் செல்லப்படுவார். பின்னர், தாம் தப்பித்துவிட்டோம் என்பதை இறைநம்பிக்கையாளர்கள் காணும்போது தம் சகோதரர்களுக்காக சர்வ அதிகாரமும் படைத்த (இறை)வனிடம் அன்று அவர்கள் கடுமையாக மன்றாடுவார்கள். அந்த அளவிற்கு (இம்மையில்) உங்களுக்கத் தெளிவாகிவிட்ட உரிமைக்காகக் கூட நீங்கள் என்னிடம் வலியுறுத்திக் கேட்டிருக்கமாட்டீர்கள். அப்போது அவர்கள், ‘எங்கள் இறைவா! (இவர்கள்) எங்களுடன் தொழுது கொண்டிருந்தார்கள்; எங்களுடன் நோன்பு நோற்றார்கள்; எங்களுடன் (மற்ற) நல்லறங்கள் புரிந்து கொண்டிருந்தார்கள் (எனவே இவர்களை நீ காப்பாற்றுவாயாக)’ என்று வேண்டுவார்கள். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், ‘நீங்கள் சென்று, எவருடைய உள்ளத்தில் ஒரு பொற்காசு (தீனார்) அளவுக்கு இறைநம்பிக்கை இருக்கக் காண்கின்றீர்களோ அவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்’ என்று கூறுவான். அவ்வாறே அவர்களும் (நரகவாசிகளிடம்) செல்வார்கள். அவர்களின் முகங்களைக் கரிக்கக் கூடாதென நரகத்திற்கு அல்லாஹ் தடை விதித்துவிடுவான். அப்போது (அந்த நரகவாசிகளில்) சிலர் தம் பாதம் நரகத்திற்குள் மறையும் அளவிற்கு, பாதி கால்கள் மறையும் அளவிற்கு நரகினுள் கிடப்பார்கள். உடனே அவர்கள் தமக்கு அறிமுகமானவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுவார்கள். பிறகு மீண்டும் (இறைவனிடம்) செல்வார்கள். ‘எவருடைய உள்ளத்தில் பாதி பொற்காசு அளவுக்கு இறைநம்பிக்கை உள்ளதெனக் காண்கிறீர்களோ அவர்களையும் வெளியேற்றுங்கள்’ என்பான். அவ்வாறே அவர்கள் தமக்குத் தெரிந்தவர்களை வெளியேற்றிவிட்டு மறுபடியும் (இறைவனிடம்) வருவார்கள். அப்போது அவன், ‘எவருடைய உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை இருக்கக் கண்டீர்களோ அவர்களையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்’ என்று சொல்வான். அவ்வாறே அவர்கள் (வந்து) தமக்கு அறிமுகமானவர்களை (அதிலிருந்து) வெளியேற்றுவார்கள்.

இதன் அறிவிப்பாளரான அபூ ஸயீத்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (இதை) நீங்கள் நம்பாவிட்டால், ‘நிச்சயமாக அல்லாஹ் எவருக்கும் அணுவளவு கூட அநீதி இழைக்கமாட்டான். அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதை இரட்டிப்பாக்குவான்’ எனும் (திருக்குர்ஆன் 04:40 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள். இவ்வாறு இறைத்தூதர்கள், வானவர்கள், இறை நம்பிக்கையாளர்கள் ஆகியோர் (தத்தம் தகுதிக்கேற்ப) பரிந்துரை செய்வார்கள். அப்போது சர்வ அதிகாரம் படைத்த (இறை)வன் ‘(இனி) என் பரிந்துரை (மட்டுமே) எஞ்சியிருக்கிறது’ என்று கூறிவிட்டு, நரகத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவு மக்களை அள்ளியெடுத்து அவர்களை வெளியேற்றுவான். அவர்கள் கரிந்து போயிருப்பார்கள். எனவே, சொர்க்க வாசலிலுள்ள ஒரு நதியில் அவர்கள் போடப்படுவார்கள். அதற்கு ‘ஜீவ நீர்’ (‘மாஉல் ஹயாத்’) என்று பெயர். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று நதியின் இரண்டு மருங்கிலும் முளைத்து (நிறம் மாறி) விடுவார்கள். பாறையில் ஓரத்திலும் மரத்தின் ஓரத்திலும் இந்தப் பயிரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் வெயில் பக்கமாக இருப்பது பச்சையாகவும், நிழல் பக்கமாக இருப்பது வெள்ளையாகவும் இருக்கும். ஆக, இவர்கள் (அந்த நதியிலிருந்து) வெளியேறும்போது முத்தைப் போன்று (புதுப் பொலிவுடன்) வெளியேறுவார்கள். அவர்களின் கழுத்தில் (நரகத்திலிரந்து விடுதலை பெற்றவர்கள் என்பதற்கான) முத்திரை பதிக்கப்படும். பிறகு அவர்கள் சொர்க்கத்தினுள் நுழைவார்கள். அப்போது சொர்க்கவாசிகள் (இவர்களைப் பார்த்து), ‘இவர்கள் பேரருளாளனால் விடுதலை செய்யப்பட்டவர்கள்; இவர்கள் எந்த நற்செயலும் புரியாமல், எந்த நன்மையும் ஏற்கெனவே செய்திராமல் அவனே இவர்களைச் சொர்க்கத்தினுள் பிரவேசிக்கச் செய்தான்’ என்று கூறுவர். பிறகு (அவர்களிடம்) நீங்கள் காண்கிறீர்களே இதுவும் உங்களுக்கு உண்டு; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உங்களுக்கு உண்டு’ என்று (நற்செய்தி) சொல்லப்படும்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7440

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் இறை நம்பிக்கையாளர்கள் கவலைப்படும் அளவுக்கு நிறுத்தி வைக்கப்படுவார்கள். அப்போது அவர்கள், ‘(அதி பயங்கரமான) இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும் படி (யாரையாவது) நாம் கேட்டுக் கொண்டால் என்ன?’ என்று பேசிக் கொள்வார்கள். பிறகு அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, ‘நீங்கள் மனிதர்களின் தந்தை ஆதம் ஆவீர்; அல்லாஹ் தன்னுடைய கையால் உங்களைப் படைத்தான்; தன்னுடைய சொர்க்கத்தில் உங்களை குடியிருக்கச் செய்தான்; தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான்; எல்லாப் பொருட்களின் பெயர்களையும் உங்களுக்கு அவன் கற்பித்தான். (எனவே,) இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்’ என்று கோருவர். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை’ என்று கூறிவிட்டு, உண்ணக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டிருந்த மரத்திலிருந்து புசித்துவிட்டதால் தாம் புரிந்த தவற்றினை அவர்கள் எடுத்துக் கூறுவார்கள். ‘(எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு இறைவனால் நியமிக்கப்பட்ட (முக்கியமான) இறைத்தூதர்களில் முதலாமவரான நூஹ்(அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.

உடனே இறை நம்பிக்கையாளர்கள் நூஹ்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அன்னாரும் ‘(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை’ என்று கூறி, அறியாமல் தம் இறைவனிடம் வேண்டியதால் ஏற்பட்ட தம் தவற்றினை அவர்கள் நினைவுகூர்வார்கள். பிறகு, ‘நீங்கள் பேரருளாள(ன் இறைவ)னின் உற்ற நண்பர் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள். உடனே இறை நம்பிக்கையாளர்கள் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை’ என்று சொல்லிவிட்டு, தாம் (உலக வாழ்வில்) சொன்ன மூன்று பொய்களை எடுத்துக்கூறுவார்கள். பிறகு, ‘நீங்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்லுங்கள். அவருக்கு அல்லாஹ் தவ்ராத் (வேதத்)தை வழங்கி, அவருடன் உரையாடி, தன்னுடன் கலந்துரையாடும் அளவுக்கு நெருக்கம் அளித்த அடியாராவார் அவர்’ என்று சொல்வார்கள். உடனே இறை நம்பிக்கையாளர்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அன்னாரும், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை’ என்று சொல்லிவிட்டு, (உலகில்) ஒருவரைக் கொலை செய்துவிட்டதால் தாம் செய்த குற்றத்தை எடுத்துக்கூறுவார்கள். பிறகு ‘நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமான, அவனுடைய ஆவியும் வார்த்தையுமான ஈசா(அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று மூஸா கூறுவார்கள். உடனே இறை நம்பிக்கையாளர்கள் ஈசா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அவர்களும் ‘(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை; இறைவனால் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத்(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள்.

உடனே இறை நம்பிக்கையாளர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான் என் இறைவனை அவனுடைய இல்ல(மான சொர்க்க)த்தில் சந்திக்க அனுமதி கோருவேன். எனக்கு அதற்கான அனுமதி வழங்கப்படும். நான் என் இறைவனைக் காணும்போது சஜ்தாவில் விழுந்துவிடுவேன். தான் நாடிய வரை அல்லாஹ் என்னை (அப்படியே) விட்டுவிடுவான். பிறகு எவன், ‘எழுங்கள், முஹம்மதே! சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும். கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும்’ என்று கூறுவான். அப்போது நான் என்னுடைய தலையை உயர்த்தி இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழ் மொழிகளைக் கூறி என் இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன் (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பின்னர் நான் (அவனுடைய இல்லத்திலிருந்து) வெளியேறி அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன்.

கத்தாதா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘பின்னர் நான் (அவனுடைய இல்லத்திலிருந்து) புறப்பட்டுச் சென்று (நரகத்திலிருந்து) அவர்களை வெளியேற்றி, சொர்க்கத்திற்குள் அனுப்பிவைப்பேன்’ என்றும் அனஸ்(ரலி) அவர்கள் கூற கேட்டேன்.பிறகு மீண்டும் (இரண்டாம் முறையாக) என் இறைவனை அவனுடைய இல்லத்தில் சந்திக்க நான் அனுமதி கோருவேன். எனக்கு அதற்கான அனுமதி வழங்கப்படும். நான் இறைவனைக் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான் நாடிய வரை அல்லாஹ் என்னை (அப்படியே)விட்டுவிடுவான். பின்னர் ‘முஹம்மதே! எழ ‘நான் வெளியேறிச் சென்று, அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றி சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன் என்றும் அனஸ்(ரலி) அவர்கள் கூறியதை கேட்டேன்’ என கத்தாதா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் மூன்றாம் முறையாக மறுபடியும் என் இறைவனை அவனுடைய இல்லத்தில் சந்திக்க நான் அனுமதி கேட்பேன். எனக்கு அந்த அனுமதி வழங்கப்படும். இறைவனை நான் காணும்போது சிரவணக்கத்தில் விழுவேன். தான் நாடிய வரை (அப்படியே) என்னை அல்லாஹ்விட்டுவிடுவான். பிறகு ‘முஹம்மதே! எழுங்கள். செய்க ஏற்கப்படும். கோருக அது தரப்படும்’ என இறைவன் கூறுவான். அப்போது நான் எழுந்து, என் இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றி புகழ்வேன். பின்னர் பரிந்துரைப்பேன். அவன் எனக்கு வரம்பு விதிப்பான். நான் வெளியேறிச் சென்று, அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன். ‘நான் வெளியேறிச் சென்று அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றி சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன் என்று கூறியதை கேட்டேன்’ என கத்தாதா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

‘இறுதியில் குர்ஆன் தடுத்துவிட்ட, அதாவது நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் இருக்கமாட்டார்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ‘(நபியே!) உம் இறைவன் உம்மை (‘மகாமும் முஹ்மூத்’ எனும்) உயர் அந்தஸ்துக்கு அனுப்பலாம்’ எனும் (திருக்குர்ஆன் 17:79 வது வசனத்தை) ஓதினார்கள்.

பிறகு இந்த ‘மகாமும் மஹமூத்’ எனும் இடம் உங்கள் நபிக்காக வாக்களிக்கப்பட்ட இடமாகும்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7441

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம் ஆளனுப்பி அவர்களை ஒரு கூடாரத்தினுள் ஒன்றுதிரட்டினார்கள். அவர்களிடம் ‘அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (மறுமையில்) நீங்கள் சந்திக்கும் வரை பொறுமையைக் கைக்கொள்ளுங்கள். ஏனெனில், நான் (அந்நாளில்) ‘கவ்ஸர்’ தடாகத்தின் அருகே இருப்பேன்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7442

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தஹஜ்ஜுத் தொழுகை தொழும்போது (பின்வருமாறு) பிரார்த்திப்பார்கள்: இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும் நீயே வானங்கள் மற்றும் பூமியின் நிர்வாகியாவாய். உனக்கே புகழ் அனைத்தும் நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் இறைவன் ஆவாய். உனக்கே புகழனைத்தும் நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் ஒளியும் ஆவாய். நீயே உண்மை. உன் சொல் உண்மை. உன் வாக்கு உண்மை. உன் சந்திப்பு உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. மறுமை நாள் உண்மை. இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிந்தேன். உன் மீதே நம்பிக்கை கொண்டேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே என் வழக்குகளைக் கொண்டு வந்தேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பம்ரங்கமாகச் செய்த பாவங்களையும், என்னைவிட எதை நீ நன்கு அறிந்துள்ளாயோ அதையும் மன்னித்தருள்வாயாக. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை.

(மேற்கண்ட ஹதீஸில் ‘நிர்வாம்’ என்பதைக் குறிக்க ‘கய்யிம்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.) வேறு சில அறிவிப்புகளில் ‘கய்யாகி’ மற்றும் ‘கய்யூம்’ ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘அனைத்தையும் கண்காணிப்பவன்’ என்று பொருள்.

உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் (திருக்குர்ஆன் 02:255 வது வசனத்தின் மூலத்திலுள்ள ‘அல்கய்யாகி’ என ஓதியுள்ளார்கள். இரண்டுமே புகழைக் குறிக்கும் (மிகைச்) சொற்கள் தாம்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7443

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் (மறுமைநாளில் தனித் தனியாகப்) பேசாமலிருக்கமாட்டான். அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளரும் இருக்கமாட்டார்; தடுக்கிற திரையும் இருக்காது என அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7444

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரண்டு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை; (வேறு) இரண்டு சொர்க்கங்களும் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருடகளும் பொன்னால் ஆனவையாகும். ‘அத்ன்’ எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன் மேலுள்ள ‘பெருமை’ எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது என அபூ மூஸா அப்துல்லாஹ் இப்னு கைஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7445

‘பொய்ச் சத்தியத்தின் மூலம் ஒரு முஸ்லிமின் செல்வத்தைப் பறித்துக் கொள்கிறவரின் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையிலேயே அவனை அவர் சந்திப்பார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு இதை உண்மைப்படுத்துகிற இறைவசனத்தை ஓதினார்கள்: அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறும் கிடையாது; அவர்களிடம் அல்லாஹ் பேச மாட்டான் (திருக்குர்ஆன் 03:77)85′ என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7446

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் மறுமைநாளில் மூன்று பேரிடம் பேசமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான். ஒருவர் (தம்) விற்பனைப் பொருளுக்கு (அதைக் கொள்முதல் செய்தபோது உண்மையில்) தாம் கொடுத்த விலையை விட அதிக விலை கொடுத்ததாகப் பொய்ச் சத்தியம் செய்கிறார். மற்றொருவர், ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரிப்பதற்காக அஸ்ர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் ஒன்று கூடும் நேரத்தில்) பொய்ச் சத்தியம் செய்கிறார். வேறொருவர், தம் தேவைக்குப் போக மிஞ்சிய தண்ணீரை (வழிப்போக்கருக்குத் தராமல்) தடுக்கிறார். (அவரிடம்) அல்லாஹ் மறுமைநாளில் ‘நீ தேடிச் சம்பாதிக்காத பொருளை (நீரை) நீ தர மறுத்ததைப் போன்று இன்று என் அருளை உனக்கு வழங்க மறுக்கிறேன்’ என்று கூறுவான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7447

அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதல் ஆகிராவுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ‘முள்ர்’ குலத்தாரின் ரஜப் மாதமாகும்’ என்று கூறிவிட்டு, ‘இது எந்த மாதம்?’ என்று கேட்டார்கள். நாங்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்’ என்றோம். அப்போது அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மெளனமாக இருந்துவிட்டு, ‘இது துல்ஹஜ் மாதம் அல்லவா?’ என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்’ என்றோம். ‘இது எந்த நரகம்?’ என்று கேட்டார்கள். நாங்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்’ என்றோம். அப்போது அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மெளனமாக இருந்துவிட்டு, ‘இது (புனித) நகரமல்லவா?’ எனக் கேட்க, நாங்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தோம். ‘இது எந்த நாள்?’ என்று அவர்கள் கேட்டார்கள். நாங்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்’ என்று சொன்னோம். அப்போதும் அவர்கள், அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மெளனமாக இருந்துவிட்டு, ‘இது நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா?’ எனக் கேட்டார்கள். நாங்கள், ‘ஆம்’ என்றோம்.

(பிறகு,) ‘உங்களின் புனிதமிக்க இந்நகரத்தில் உங்களுடைய புனிதமிக்க இம்மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் – உங்கள் மானமும் – உங்களுக்குப் புனிதமானவையாகும். நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள்: எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகேடர்களாக நீங்கள் மாறவிடாதீர்கள். இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (நான் சொன்ன கட்டளைகளை) அறிவித்து விடுங்கள். ஏனெனில், இச்செய்தி எவரிடம் தெரிவிக்கப் படுகிறதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவர்களில் சிலரைவிட (அதாவது தமக்கு இதைச் சொன்னவரைவிட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவராயிருக்கலாம்’ என்று கூறினார்கள்:

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது, ‘நபி(ஸல்) அவர்கள் உண்மை சொன்னார்கள்’ என்று கூறுவார்கள்.

பிறகு, நபி(ஸல்) அவர்கள் ‘நான் (உங்களிடம் இறைச்செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா? நான் (உங்களிடம் இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்து விட்டேனா? என்று (இரண்டு முறை) கேட்டார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7448

உசாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் ஒரு புதல்வியாரின் மகன், இறக்கும் தறுவாயில் இருந்தார். எனவே, நபி(ஸல்) அவர்கள் தம்மிடம் வந்து சேரும்படி அந்தப் புதல்வியர் சொல்லி அனுப்பினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியதாகும். ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையைக் கைக்கொள்வீராக நன்மையை எதிர்பார்ப்பீராக’ என்று சொல்லியனுப்பினார்கள். (மீண்டும்) அவர் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் (கட்டாயம் தம்மிடம் வர வேண்டுமெனக்) கூறியனுப்பினார். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் புதல்வியின் வீட்டுக்குச் செல்ல) எழுந்தார்கள். நானும், முஆத் இப்னு ஜபர்(ரலி), உபை இப்னு கஅப்(ரலி), உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) ஆகியோரும் அவர்களுடன் எழுந்தோம். நாங்கள் (வீட்டுக்குள்) நுழைந்தவுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அந்தச் சிறுவரைக் கொடுத்தார்கள். அந்தச் சிறுவரின் மூச்சு (சுவாசிக்க முடியாமல்) நெஞ்சுக்குள் திணறிக் கொண்டிருந்தது. அது தோல் துருத்தியைப் போன்று (ஏறி இறங்கிக் கொண்டு) இருந்தது என்று அறிவிப்பாளர் கூறினார்கள் என நான் (அபூ உஸ்மான் அந்நஹ்தீ) எண்ணுகிறேன்.

(இதைக் கண்ணுற்ற) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழுதார்கள். அப்போது (அங்கிருந்த) ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்கள், ‘(இறைத்தூதர் அவர்களே!) நீங்கள் அழுகின்றீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7449

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். சொர்க்கமும் நரகமும் தம் இறைவனிடம் வாக்குவாதம் செய்தன. அப்போது சொர்க்கம், ‘என் இறைவா! எனக்கென்ன ஆயிற்று? மக்களில் பலவீனர்களும் சாமானியர்களும் தானே எனக்குள் நுழைகிறார்கள்!’ என்று கேட்டது. நரகம் ‘நான் தற்பெருமைக்காரர்களுக்கு மட்டுமே உரியவனாகி விட்டேனே!’ என்று முறையிட்டது. அப்போது அல்லாஹ் சொர்க்கத்திடம், ‘நீ என்ன கருணை(யின் பரிசு) ஆவாய்’ என்று சொன்னான். நரகத்திடம் நீ நான் அளிக்கும் வேதனை ஆவாய். நான் விரும்புகிறவர்களை உன் மூலம் தண்டிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு -இரண்டையும் நோக்கி – ‘உங்கள் ஒவ்வொருவரையும் நிரப்புபவர்கள் (மக்களிடையே) உள்ளனர்’ என்று கூறுவான்.

மேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கம் இருக்கிறதே (அதில் தகுதியானோர் நுழைவார்கள்). அல்லாஹ் தன் படைப்புகளில் யாரும் அநீதி இழைப்பதில்லை. அவன், தான் நாடியவர்களை நரகத்திற்காகப் படைக்கிறான். நரகத்தில் அவர்கள் போடப்படும்போது, ‘இன்னும் இருக்கிறதா?’ என அது மும்முறை கேட்கும். இறுதியில் இறைவன் அதில் தன்னுடைய பாதத்தை வைக்க, அது நிரம்பிவிடும்; அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். போதும்; போதும்; போதும் என அது கூறும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7450

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.மக்கள் சிலர் தாங்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனையாக நரக நெருப்பினால் தீண்டப்பட்டு, அவர்களின் சருமத்தின் நிறமே மாறிவிடும். பிறகு அல்லாஹ் அவர்களைத் தன் தனிக் கருணையினால் சொர்க்கத்தில் அனுமதிப்பான். அவர்களுக்கு ‘ஜஹன்னமிய்யூன்’ (நரக விடுதலைபெற்றோர்) என்று சொல்லப்படும் என அனஸ்(ரலி) அறிவித்தார். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7451

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். யூதப் பாதிரியார் ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘முஹம்மதே! மறுமைநாளில் அல்லாஹ் வானத்தை ஒரு விரலிலும் பூமியை ஒரு விரலிலும் மலைகளை ஒரு விரலிலும் மரத்தை ஒரு விரலிலும் நதிகளை ஒரு விரலிலும் இதர படைப்புகள் அனைத்தையும் ஒரு விரலிலும் (நிறுத்தி) வைத்துக்கொண்டு தன்னுடைய கரத்தால் (சைகை செய்தவாறு) ‘நானே அரசன்’ எனக் கூறுவான்’ என்றார்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு, ‘அவர்கள் (யூதர்கள்) அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி மதிக்கவில்லை’ எனும் (திருக்குர்ஆன் 06:91 வது) வசனத்தைக் கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7452

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் (என் சிறிய தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான) மைமூனா(ரலி) அவர்களின் இல்லத்தில், இரவில் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறுள்ளது என்பதைப் பார்ப்பதற்காக (ஒரு நாள்) இரவு தங்கினேன். அப்போது மைமூனா அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியாருடன் சிறிது நேரம் பேசிவிட்டுத்தூங்கிவிட்டார்கள். ‘இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி வந்தபோது’ அல்லது அதன் ‘ஒரு பகுதி வந்தபோது’ அவர்கள் (எழுந்து) அமர்ந்துகொண்டு வானத்தை நோக்கியவாறு ‘நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும் இரவு பகல் மாறி மாறிவருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன’ எனும் (திருக்குர்ஆன் 03:190 வது) வசனத்தை ஓதினார்கள். பிறகு எழுந்து அங்கசுத்தி (உளூ) செய்தார்கள்; பல் துலக்கினார்கள். பிறகு, பதினொன்று ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் பிலால்(ரலி) அவர்கள் ஃபஜ்ர் தொழுகைக்கு அழைப்புக் கொடுத்தார்கள். உடனே இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுதுவிட்டுப் புறப்பட்டு பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுக்கு சுப்ஹு தொழுகை நடத்தினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7453

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் படைப்புகளை படைத்தபோது தன்னிடமுள்ள அரியாசனத்தின் (அர்ஷின்) மேலே ‘என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது’ என்று தன்னிடம் எழுதி வைத்துக் கொண்டான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7454

உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரின் கரு தம் தாயின் வயிற்றில் நாற்பது ‘பகல்’ அல்லது ‘இரவு’ சேமிக்கப்படுகிறது. பிறகு அதைப் போன்றே (40 நாள்கள்) அது (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறுகிறது. பிறகு அதைப் போன்றே (மேலும் 40 நாள்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார். அந்த வானவரும் நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன: அவர், (கருவாக இருக்கும்) அந்த மனிதனின் வாழ்வாதாரத்தையும், அவனுடைய வாழ்நாளையும், செயல்பாட்டையும், அவன் (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா அல்லது நற்பாக்கியசாலியா என்பதையும் (இறைவனின் கட்டளைப்படி) பதிவு செய்கிறார். பிறகு அவனுள் உயிர் ஊதப்படுகிறது. இதனால்தான், உங்களில் ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்செயல்களைப் புரிந்துகொண்டே செல்வார். இறுதியில் சொர்க்கத்திற்கும் அவருக்குமிடையே ஒரு முழம் (இடைவெளி) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ள அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாக நரகம் புகுந்து விடுவார். (இதைப் போன்றே) உங்களில் ஒருவர் நரகவாசிகளின் செயலைப் புரிந்து கொண்டே செல்வார். இறுதியில் நரகத்திற்கும் அவருக்குமிடையே ஒரு முழம் இடைவெளி தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக்கொள்ளும். அவர் சொர்க்கத்திற்குரியவர்களின் (நற்) செயல்களைச் செய்து அதன் விளைவாக சொர்க்கம் புகுவார் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7455

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம்), ‘ஜிப்ரீலே! நீங்கள் இப்போது எம்மைச் சந்திப்பதைவிட அதிகமாகச் சந்திக்கத் தடையாக இருப்பதென்ன?’ என்று கேட்டார்கள். அப்போதுதான், (நபியே!) உங்களுடைய இறைவனின் உத்தரவுபடியே தவிர (வானவர்களாகிய) நாங்கள் இறங்குவதில்லை. எங்களுக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும் இரண்டுக்குமிடையே இருப்பவையும் அவனுக்குச் சொந்தமானவையே! (இதில் எதையும்) உங்களுடைய இறைவன் மறப்பவன் அல்லன்’ எனும் (திருக்குர்ஆன் 19:64 வது) இறைவசனம் அருளப்பெற்றது. இதுவே முஹம்மது(ஸல்) அவர்களு(டைய கேள்வி)க்கு பதிலாக அமைந்தது.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7456

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நான் மதீனாவிலுள்ள ஒரு வேளாண்மை பூமியில் (பேரீச்சந் தோப்பில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நடந்து (போய்க்) கொண்டிருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை ஊன்றியவாறு யூதர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றொருவரிடம், (நபியவர்களைச் சுட்டிக்காட்டி,) ‘இவரிடம் ‘உயிர்’ (ரூஹ்) பற்றிக் கேளுங்கள்!’ என்றார். இன்னொருவர், ‘இவரிடம் கேட்காதீர்கள்! (நாம் விரும்பாத பதிலை அவர் சொல்லி விடலாம்)’ என்றார்.

பின்னர் அவர்கள் (அனைவரும் சேர்ந்து) நபி(ஸல்) அவர்களிடம் ‘ரூஹ்’ பற்றிக் கேட்டனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டையை ஊன்றியவர்களாக எழுந்தார்கள். அப்போது அவர்களுக்குப் பின்னாலிருந்த நான், நபி(ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) வருகிறது என அறிந்து கொண்டேன். பிறகு அவர்கள், ‘(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். சொல்லுங்கள்; உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது. உங்களுக்கு ஞானத்தில் சிறிதளவே கொடுக்கப்பட்டுள்ளது’ எனும் (திருக்குர்ஆன் 17:85 வது) வசனத்தைக் கூறினார்கள். அப்போது அந்த யூதர்கள் ஒருவர் மற்றவரிடம் ‘அவரிடம் கேட்க வேண்டாமென உங்களிடம் முன்பே கூறினோமே!’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7457

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைவழியில் போராடுவதற்காகவும் அவனுடைய வாக்குகளை உண்மையென நிரூபிப்பதற்காகவும் மட்டுமே வெளியே புறப்பட்டு, அவனுடைய பாதையில் போராடியவரை சொர்க்கத்தில் அனுப்புவதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான்; அல்லது அவர் பெற்ற நன்மையுடன், அல்லது (அந்த நன்மையுடன் சேர்த்து) போரில் கிடைத்த செல்வத்துடன் அவரை வீட்டிற்குத் திரும்பக் கொண்டு வர அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான் என அபூ ஹுரைர(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7458

அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் இன மாச்சரியத்திற்காகப் போரிடுகிறார். ஒருவர் வீரத்தை வெளிக்காட்டப் போரிடுகிறார். இன்னொருவர் பிறருக்குக் காட்டிக் கொள்வதற்காகப் போரிடுகிறார். இவர்களில் இறைவழியில் போரிடுகிறவர் யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகிறவரே இறைவழியில் போரிடுபவராவார்’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7459

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் கட்டளை(யான மறுமை நாள்) வரும் வரை என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர், (உண்மையை எதிர்க்கும்) மக்களின் மீது மேலாண்மை கொண்டவர்களாகவே இருந்து கொண்டிருப்பார்கள் என முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7460

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் கட்டளையை நிலை நிறுத்தும் ஒரு குழுவினர் என் சமுதாயத்தாரிடையே இருந்து கொண்டேயிருப்பர். அவர்களை நம் மறுப்பவர்களும் சரி, அவர்களுக்குத் துரோகம் இழைப்பவர்களும் சரி அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது. இறுதியில் அவர்கள் இதே நிலையில் இருந்து கொண்டிருக்க அல்லாஹ்வின் கட்டளை (மறுமைநாள்) வந்துவிடும்.

இதை முஆவியா(ரலி) அவர்கள் அறிவித்தபோது அங்கிருந்த மாலிக் இப்னு யுகாமிர்(ரஹ்) அவர்கள், ‘முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள், ‘இந்தக் குழுவினர் ஷாம் நாட்டில் இருப்பார்கள்’ என்று சொல்ல கேட்டேன்’ என்று கூற, முஆவியா(ரலி) அவர்கள் ‘இதோ, இந்த மாலிக் ‘இந்தக் குழுவனிர் ஷாம் நாட்டிலிருப்பார்கள்’ என்று முஆத் அவர்கள் சொன்னதாகக் கூறுகிறார்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7461

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் புடைசூழ (தன்னை நபி என வாதிட்ட மகா பொய்யன்) முசைலிமாவுக்கு அருகே நின்றார்கள். அப்போது (தலைமைப் பதவியை உங்களுக்குப் பின் எனக்குத் தர வேண்டும் என அவன் கேட்டான். அதற்கு) நபி(ஸல்) அவர்கள் ‘நீ இந்தப் பேரீச்ச மட்டையின் துண்டை என்னிடம் கேட்டாலும் நான் அதை உனக்குத் தரமாட்டேன். அல்லாஹ் உன் விஷயத்தில் விதித்துள்ள கட்டளையை உன்னால் தாண்டிச் சென்றுவிட முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்து) முதுகைக் காட்டினால் அல்லாஹ் உன்னை அழித்துவிடுவான்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7462

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் மதீனாவில் உள்ள ஒரு வேளாண் பூமியில் பேரீச்சந் தோட்டத்தில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது யூதர்கள் சிலரை நாங்கள் கடந்து சென்றோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை ஊன்றியபடி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது யூதர்களில் ஒருவர் மற்றொருவரிடம் ‘அவரிடம் உயிர் (ரூஹ்) பற்றிக் கேளுங்கள்’ என்றார். அதற்கு மற்றவர் ‘அவரிடம் கேட்காதீர்கள். இது தொடர்பாக நீங்கள் விரும்பாத பதிலை அவர் தந்து விடக் கூடும்’ என்று சொல்ல, மற்றவர்கள் ‘நாம் அவரிடம் நிச்சயம் கேட்போம்’ என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் எழுந்து வந்து) ‘அபுல் காசிமே! உயிர் (ரூஹ்) என்பதென்ன?’ என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (அவருக்க பதில் எதுவும் சொல்லாமல்) மெளனமாக இருந்தார்கள். நான் நபி(ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்பெறுகின்றது என்று அறிந்து கொண்டேன். ‘(நபியே!) உங்களிடம் அவர்கள் உயிர் பற்றிக் கேட்கிறார்கள். உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது. அவர்களுக்குச் சிறிதளவு ஞானமே வழங்கப்பட்டுள்ளது’ எனும் (திருக்குர்ஆன் 17:85 வது) இறைவசனத்தை எடுத்துரைத்தார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ்(ரஹ்) கூறினார்: (‘உங்களுக்கு’ சிறிதளவு ஞானமே வழங்கப்பட்டுள்ளது என்பதற்கு பதிலாக) ‘அவர்களுக்கு’ என்றே எங்களின் ஓதலில் உள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7463

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைவழியில் போராடுவதற்காகவும் அவனுடைய வாக்குகளை உண்மையென நிரூபிப்பதற்காகவும் மட்டுமே தம் வீட்டைவிட்டுப் புறப்பட்டு, அவனுடைய பாதையில் போராடியவரை சொர்க்கத்தில் அனுப்புவதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான்; அல்லது அவர் அடைந்து கொண்ட நன்மையுடன் அல்லது (அந்த நன்மையுடன் சேர்த்து) போரில் கிடைத்த செல்வத்துடன் அவரை வீட்டிற்குத் திரும்பக் கொண்டுவர அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7464

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்விடம் நீங்கள் பிரார்த்தனை புரியும்போது வலியுறுத்திக் கேளுங்கள். நீ விரும்பினால் எனக்குக் கொடு என்று கேட்காதீர்கள். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பதாகாது.) ஏனெனில், அல்லாஹ்வை நிர்பந்திப்பவர் எவருமில்லை என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7465

அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடமும் தம் புதல்வி ஃபாத்திமா(ரலி) அவர்களிடமும் ஒரு (நாள்) இரவு நேரத்தில் வந்தார்கள். எங்களிடம் ‘நீங்கள் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா?’ என்று கேட்டார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் உயிர்களெல்லாம் அல்லாஹ்வின் கரத்தில் தானே இருக்கின்றன! அவன் எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நாடினால் எங்களை எழுப்பிவிடுவான்’ என்று சொன்னேன்.

நான் இவ்வாறு சொன்னபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் சென்றார்கள். திரும்பிச் சென்ற நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையில் தட்டிக் கொண்டே ‘மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்’ என்று சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டேன்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7466

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஓர் இறைநம்பிக்கையாளர்களின் நிலையானது இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும் திசையில் அதன் இலை சாயும். காற்று (அடிப்பது) நின்றுவிட்டால் நேராக நிற்கும். இவ்வாறுதான் இறைநம்பிக்கையாளரும் சோதனைகளின்போது அலைக்கழிக்கப் படுகிறார். (எனினும், அவர் பொறுமை காப்பார்.) இறைமறுப்பாளன் நிலையானது உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதொரு மரத்தைப் போன்றதாகும். தான் நாடும்போது அதை அல்லாஹ் (ஒரேயடியாக) உடைத்து (சாய்த்து) விடுகிறான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7467

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்து உரையாற்றியபோது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்வது அஸ்ர் தொழுகைக்கும் சூரியன் மறைவதற்கும் இடையிலான (குறுகிய) கால அளவேயாகும். ‘தவ்ராத்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பட்டது. அவர்கள் ‘நண்பகல் வரை அதன்படி செயல்பட்டார்கள்; பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். (கூலியாக) ஒவ்வொருவருக்கும் ஒரு ‘கீராத்’ வழங்கப் பெற்றது. பின்னர் ‘இன்ஜீல்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் அஸ்ர் தொழுகை வரை அதன்படி செயல்பட்டுவிட்டுப் பின்னர் சக்தி இழந்து விட்டார்கள். (கூலியாக) அவர்களுக்கும் ஒவ்வொரு ‘கீராத்’ வழங்கப் பெற்றது. நீங்கள் சூரியன் மறையும் வரை அதன்படி செயல்புரிந்தீர்கள். உங்களுக்கு இரண்டிரண்டு கீராத்துகள் (கூலியாக) வழங்கப்பட்டன. (அப்போது) ‘தவ்ராத்’ வேதக்காரர்கள் ‘எங்கள் இறைவா! இவர்கள் வேலை செய்தோ குறைந்த நேரம். கூலியோ அதிகம்!’ என்றார்கள். அல்லாஹ், ‘நான் உங்களுக்குரிய கூலியில் சிறிதேனும் (குறைத்து) அநீதியிழைத்தேனா?’ என்று கேட்க, அவர்கள் ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். அல்லாஹ் ‘அ(வ்வாறு முஸ்லிம்களுக்கு அதிகமாகக் கொடுத்த)து என் அருளாகும். நான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறேன்’ என்று சொன்னான்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7468

உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் ஒரு குழுவினரோடு உறுதி மொழியளித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) எங்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள்: நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்கக் கூடாது; நீங்கள் திருடக் கூடாது; நீங்கள் விபசாரம் செய்யக் கூடாது; உங்கள் குழந்தைகளைக் கொல்லக் கூடாது; நீங்கள் எவரின் மீதும் அவதூறை இட்டுக்கட்டி உங்களிடையே பரப்பக் கூடாது; நல்ல காரியத்தில் நீங்கள் எனக்கு மாறுசெய்யக் கூடாது. உங்களில் இவற்றையெல்லாம் நிறைவேற்றுகிறவருக்குப் பிரதிபலன் அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இந்தக் குற்றங்களில் ஏதேனும் ஒன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இம்மையிலேயே தண்டிக்கப்பட்டால், அது அவருக்குப் பரிகாரமும் (அவரைத்) தூய்மைப்படுத்தக் கூடியதும் ஆகும். அல்லாஹ் எவருடைய குற்றத்தை மறைத்து விடுகிறானோ அவரின் விவகாரம் அல்லாஹ்விடமே ஒப்படைக்கப்படும். அவன் நாடினால் அவரை வேதனைப்படுத்துவான். நாடினால் அவருக்கு மன்னிப்பளிப்பான்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7469

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:) இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களுக்கு அறுபது துணைவியர் இருந்தார்கள். சுலைமான் அவர்கள் (ஒரு முறை) ‘இன்றிரவு நான் என் துணைவியர் அனைவரிடமும் தாம்பத்திய உறவு கொள்ளச் செல்வேன். ஒவ்வொரு துணைவியாரும் கர்ப்பமுற்று இறைவழியில் போரிடுகிற குதிரை வீரனைப் பெற்றெடுக்கட்டும்’ என்று சொல்லிவிட்டுத் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஆனால், அவர்களில் ஒரேயொரு மனiவிதான் குழந்தை பெற்றெடுத்தார். அவரும் பாதி (உடல் சிதைந்த) குழந்தையைத் தான் பெற்றெடுத்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுலைமான்(அலை) அவர்கள் ‘இன்ஷா அல்லாஹ்’ (இறைவன் நாடினால்) என்று (சேர்த்துக்) கூறியிருந்தால், அவர்களின் துணைவியரில் ஒவ்வொருவரும் கர்ப்பம் தரித்து, இறைவழியில் போரிடும் குதிரைவீரன் ஒருவனைப் பெற்றெடுத்திருப்பார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7470

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) கிராமவாசி ஒருவரை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். ‘கவலைப்படாதீர்கள்! (உம்முடைய நோய்) அல்லாஹ் நாடினால் (உங்கள் பாவத்தை நீக்கி உங்களைத்) தூய்மைப்படுத்தும்’ என்றார்கள். அந்தக் கிராமவாசி ‘தூய்மைப்படுத்துமா? (இல்லை.) மாறாக, வயதான கிழவனைப் பீடிக்கிற கொதிக்கும் காய்ச்சல் ஆகும். அந்தக் காய்ச்சல் இவனை மண்ணறைகளைச் சந்திக்க வைத்துவிடும்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் சரி (அவ்வாறே ஆகும்)’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7471

அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார். ஒரு முறை நாங்கள் தொழுகையைவிட்டு உறங்கி விட்டபோது நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ், தான் நாடியபோது உங்கள் உயிர்களைக் கைப்பற்றி, தான் நாடியபோது அவற்றைத் திருப்பி அனுப்புகிறான்’ என்றார்கள். பிறகு மக்கள் தங்கள் இயற்கைக் கடன்களை நிறைவு செய்து அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அதற்குள் சூரியன் உதயமாம் வெளுத்துவிட்டிருந்தது. பிறகு நபி(ஸல்) அவர்கள் எழுந்து (தவறிப் போன ஃபஜ்ர் தொழுகையை மக்களுடன்) தொழுதார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7472

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம் ‘உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்க மேன்மை அளித்தவன் மீது சத்தியமாக!’ என்று ஏதோ ஒரு விஷயத்தில் சத்தியமிட்டுப் பேசினார். அதற்கு அந்த யூதர், ‘உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மை அளித்தவன் மீது சத்தியமாக!’ என்று (பதிலுக்கு) கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்ட) அந்த முஸ்லிம் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். உடனே அந்த யூதர், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து தமக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்தவற்றைத் தெரிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (அந்த முஸ்லிமை அழைத்து வரச் சொல்லி) ‘மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது மூஸா(அலை) அவர்கள் (அல்லாஹ்வின்) அரியாசனத்தின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து விட்டிருப்பாரா? அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடைத் தேவையில்லையென்று) விதிவிலக்கு அளித்திருப்பானா? என்று எனக்குத் தெரியாது’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7473

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மதீனாவிற்கு தஜ்ஜால் வருவான். வானவர்கள் மதீனாவைக் காவல் காத்துக் கொண்டிருப்பதைக் கண்பான். எனவே, தஜ்ஜாலும் கொள்ளைநோயும் அல்லாஹ் நாடினால் மதீனாவை நெருங்க முடியாது என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7474

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தாருக்காகப் பிரார்த்திக்குக் கொள்ள அங்கீகரிக்கப்பெற்ற) ஒரு பிரார்த்தனை உண்டு. அல்லாஹ் நாடினால் என் பிரார்த்தனைய மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரைக்க பத்திரப்படுத்தி வைக்க விரும்புகிறேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7475

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை நான் ஒரு கிணற்றின் அருகே கண்டேன். (அதிலிருந்து) நான் இறைக்க வேண்டுமென அல்லாஹ் நாடிய அளவிற்கு(த் தண்ணீர்) இறைத்தேன். பிறகு அபூ குஹாஃபாவின் புதல்வர் (அபூ பக்ர்(ரலி) அவர்கள்) அதை (வாளியை) எடுத்துக் கொண்டு (அதிலிருந்து) ‘ஒரு வாளி நீரை’ அல்லது ‘இரண்டு வாளிகள் நீரை’ இறைத்தார். அவர் (சிறிது நேரம்) இறைத்தபோது சோர்வு தெரிந்தது. அல்லாஹ் (அவரின் சோர்வை) அவருக்கு மன்னிப்பானாக! பிறகு அதை உமர் எடுத்தார். அப்போது அது மிகப் பெரிய வாளியாக மாறிவிட்டிருந்தது. அவரைப் போன்று சீராகவும் உறுதியாகவும் செயல்படுகிற புத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரை மக்களில் நான் பார்த்ததில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி,) உமர் அவர்களைச் சுற்றிலும் ஒட்டகங்கள் ஓய்வெடுக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்.)

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7476

அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம்மிடம் ‘யாசகம் கேட்பவர்’ அல்லது ‘தேவையுடையவர்’ யாரேனும் வந்தால் (தம் தோழர்களை நோக்கி,) ‘(இவருக்காக என்னிடம்) பரிந்துரை செய்யுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் அளிக்கப்படும். அல்லாஹ் தன் தூதரின் நாவால் தான் நாடியதை நிறைவேற்றுகிறான்’ என்று கூறுவார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7477

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ‘இறைவா! நீ நாடினால் எனக்கு மன்னிப்பளிப்பாயாக! நீ நாடினால் எனக்குக் கருணை புரிவாயாக! நீ நாடினால் எனக்கு வாழ்வாதாரம் அளிப்பாயாக!’ என்று நீங்கள் பிரார்த்தனை செய்யாதீர்கள். கேட்பதை அவனிடம் வலியுறுத்திக் கேளுங்கள். தான் விரும்பியதையே அவன் செய்வான். அவனை நிர்ப்பந்தப்படுத்துபவர் எவருமில்லை என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7478

உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். ‘மூஸா(அலை) (அவர்கள் கல்வி கற்பதற்காக ஓர் அடியாரைத் தேடிச் சென்றதாக அல்லாஹ் குறிப்பிடுகின்ற) அவர்களின் அந்தத் தோழர் யார்? அவர் ‘களிர்’ அவர்கள் தாமா?’ என்பது தொடர்பாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் ஹுர்ரு இப்னு கைஸ் அல் ஃபஸாரிய்யு என்பாரும் கருத்து வேறுபட்டு தர்க்கித்துக் கொண்டார்கள். அப்போது உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் அவ்வழியாகச் சென்றார்கள். அன்னாரை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அழைத்து, ‘நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூஸா(அலை) அவர்கள் எவரைச் சந்திக்கச் செல்வதற்கு இறைவனிடம் வழி கேட்டார்களோ அந்தத் தோழர் யார் என்பது தொடர்பாகத் தர்க்கித்துக் கொண்டோம். அவரின் நிலைக் குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?’ என்று வினவினார்கள். உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள். ஆம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்: இஸ்ரவேலர்களில் ஒரு கூட்டத்தாரிடையே மூஸா(அலை) அவர்கள் இருந்தபோது ஒருவர் வந்து ‘உங்களைவிட அறிந்தவர் எவரும் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்க, மூஸா(அலை) அவர்கள், ‘இல்லை (என்னை விட அறிந்தவர் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை)’ என்றார்கள். உடனே மூஸா(அலை) அவர்களுக்கு ‘இருக்கிறார். அவர்தாம் நம் அடியார் ‘களிர்’ ஆவார்’ என்று வஹீ (இறைச்செய்தி) அறிவிக்கப்பட்டது. அப்போது மூஸா(அலை) அவர்கள் களிர் அவர்களைச் சந்திக்கச் செல்லும் வழியைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ் மீன் ஒன்றை அவர்களுக்கு அடையாளமாக ஆக்கினான். அவர்களிடம், ‘நீங்கள் எந்த இடத்தில் மீனைத் தொலைக்கிறீர்களோ அந்த இடத்திலிருந்து (வந்த வழியே) திரும்பிச் செல்லுங்கள். அங்கு களிர் அவர்களைச் சந்திப்பீர்கள்’ என்று கூறப்பட்டது. அவ்வாறே மூஸா(அலை) அவர்கள் கடலில் மீனின் சுவட்டைப் பின்பற்றியபடியே சென்று கொண்டிருந்தார்கள். அப்போது மூஸா(அலை) அவர்களிடம் ‘நாம் அந்தப் பாறையின் பக்கம் (ஓய்வெடுக்க) ஒதுங்கினோமே பார்த்தீர்களா? அங்கேதான் நான் மீனை மறந்துவிட்டேன். அதை (உங்களுக்குக்) கூறவிடாமல் ஷைத்தான்தான் எனக்கு மறதியைத் தந்துவிட்டான்; அது(அவ்விடத்தில் கடலில் செல்ல) விந்தையான விதத்தில் தன்னுடைய வழியை அமைத்துக் கொண்டது’ என்றார். மூஸா(அலை) அவர்கள், ‘அதுதான் நாம் தேடி வந்த இடம்’ என்று சொல்ல, இருவருமாகத் தாம் வந்த வழியை நோக்கித் திரும்பிச் சென்றார்கள். அங்கே களிர்(அலை) அவர்களைக் கண்டார்கள். (திருக்குர்ஆன் 18:63-65) பிறகு அவ்விருவர் தொடர்பாக அல்லாஹ் எடுத்துரைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7479

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்குப் பின் ஹுனைன் செல்ல (திட்டமிட்டபோது) ‘அல்லாஹ் நாடினால் நாளை நாம் பனூ கினானா பள்ளத்தாக்கின் அருகே தங்குவோம். அந்த இடத்தில் தான் குறைஷியர் ‘நாங்கள் இறைமறுப்பில் நிலைத்திருப்போம்’ என்று சூளுரைத்தார்கள்’ என்று முஹஸ்ஸப் பள்ளத்தாக்கைக் கருத்தில் கொண்டு கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7480

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தாயிஃப் நகர மக்களை முற்றுகையிட்டார்கள். ஆனால் அதை அவர்கள் வெற்றிகொள்ளவில்லை. அல்லாஹ் நாடினால் நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் சென்று விடுவோம்’ என்றார்கள். முஸ்லிம்கள், ‘நாம் (கோட்டையை) வெற்றிக்கொள்ளாமலேயே திரும்பிச் செல்வதா?’ என்று கேட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் (உங்கள் விருப்பம்). முற்பகலிலேயே போருக்குச் செல்லுங்கள்’ என்றார்கள். மக்களும் அவ்வாறே போருக்குச் செல்ல அவர்களுக்குக் காயங்கள் பல ஏற்பட்டன. நபி(ஸல்) அவர்களை (அச்சமயம்) ‘அல்லாஹ் நாடினால் நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்’ என்றார்கள். அது மக்களுக்கு மகிழ்ச்சியூட்டியது போன்றிருந்தது. உடனே நபி(ஸல்) அவர்கள் புன்முறுவல் பூத்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7481

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால் வானவர்கள் இறைக் கட்டளைக்குப் பணிந்தவர்களாகத் தம் சிறகுகளை அடித்துக்கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை,) பாறை மேல் சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போன்று (வானவர்கள் கேட்பார்கள்)

மற்றோர் அறிவிப்பில் காணப்படுவதாவது: அந்த ஒசை அவர்களைப் போய்ச் சேரும். (அப்போது வானவர்கள் பீதியடைகிறார்கள்.) பின்னர் அவர்களின் இதயங்களிலிருந்து பீதி அகற்றப்படும்போது ‘உங்களுடைய இறைவன் என்ன சொன்னான்?’ என்று வினவுகிறார்கள். ‘உண்மையே சொன்னான். அவன் உயர்ந்தவன்; பெரியவன்’ என்று கூறுவர் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. இக்ரிமா(ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில் (பின்வருமாறு) காணப்படுகிறது: மேற்கண்ட (திருக்குர்ஆன் 34:23 வது) வசனத்தின் மூலத்தில் ‘ஃபுஸ்ஸிஅ’ (அச்சம் அகற்றப்படும் போது) என்பதை ‘ஃபுர்ரிஃக’ (அகற்றப்படும் போது) என ஓதினார்கள். சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இதுவே எங்களின் ஓதல் முறையாகும்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7482

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ், தன் தூதர் இனியகுரலில் குர்ஆனை ஓதும்போது அதை செவிகொடுத்துக் கேட்பதைப் போன்று வேறு எதையும் அவன் செவிமடுத்துக் கேட்டதில்லை என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் தோழர் ஒருவர் ‘இது குரலெடுத்து (இனிமையாகக்) குர்ஆன் ஓதுவதைக் குறிக்கின்றது’ என்கிறார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7483

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ், (மறுமை நாளில் ஆதிமனிதரை நோக்கி), ‘ஆதமே!’ என்று அழைப்பான். ஆதம்(அலை) அவர்கள், ‘இதோ வந்துவிட்டேன்; கட்டளையிடு! காத்திருக்கிறேன்’ என்று சொல்வார்கள். அப்போது உரத்த குரலில் ‘உங்கள் சந்ததியினரிலிருந்து நரகத்திற்கு அனுப்பப்பட்ட இருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுமாறு அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்’ என அறிவிக்கப்படும் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7484

ஆயிஷா(ரலி) அறிவித்தார். கதீஜா(ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போன்று வேறெந்தப் பெண் மீதும் நான் ரோஷப்பட்டதில்லை. நபி(ஸல்) அவர்களின் இறைவன் கதீஜா அவர்களுக்கு சொர்க்கத்தில் (முத்து) மாளிகை ஒன்று இருப்பதாக நற்செய்தி அறிவிக்கச் சொன்னான்.

இதை உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7485

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உயர்வும் வளமும் மிக்க அல்லாஹ் ஓர் அடியாரை நேசிக்கும்போது (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்களை அழைத்து, ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள்’ என்று கூறுவான். அவ்வாறே ஜிப்ரீல்(அலை) அவர்கள் அவரை நேசிப்பார். பிறகு ஜிப்ரீல்(அலை) அவர்கள் வானத்தில் ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்’ என்று குரல் கொடுப்பார்கள். அவ்வாறே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். மண்ணகத்தாரிடையேயும் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7486

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இரவில் சில வானவர்களும் பகலில் சில வானவர்களும் உங்களிடையே அடுத்தடுத்து வருகிறார்கள். அவர்கள் அஸ்ர் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் ஒன்று சேர்கிறார்கள். பிறகு உங்களிடையே இரவு தங்கியிருந்தவர்கள் வானத்திற்கு ஏறிச் செல்வார்கள். அங்கு அவர்களிடம் அல்லாஹ், ‘என் அடியார்களை எந்த நிலையில்விட்டுவிட்டு வந்தீர்கள்,’ என்று அவர்களைப் பற்றி அவன் நன்கறித்த நிலையிலேயே – கேட்பான். அதற்கு வானவர்கள், ‘அவர்கள் தொழுது கொண்டிருந்த நிலையில் அவர்களை விட்டுவிட்டு வந்தோம். அவர்கள் தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் சென்றோம்’ என்று பதிலளிப்பார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7487

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் வந்து அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் இறந்துவிட்டவர் சொர்க்கம் செல்வார் எனும் நற்செய்தியைத் தெரிவித்தார். ‘அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?’ என்று நான் கேட்க, ஜிப்ரீல் ‘ஆம். அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலும் சரியே’ என்று பதிலளித்தார்கள் என அபூ தர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7488

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை நோக்கி, ‘இன்னாரே! நீங்கள் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ‘இறைவா! நான் என்னை உன்னிடம் ஒப்படைக்கிறேன். என் முகத்தை உன்னிடமே திருப்பினேன். என் காரியத்தை உன்னிடமே ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும் தான் (இவற்றை செய்தேன்.) உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடம் இல்லை. நீ அருளிய உன் வேதத்தையும் நீ அனுப்பி வைத்த உன் தூதரையும் நான் நம்பினேன்’ என்று பிரார்த்தியுங்கள். ஏனெனில், (இவ்விதம் பிரார்த்தித்து) அன்றைய இரவில் நீங்கள் இறந்து விட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவராவீர்கள். காலையில் (உயிருடன் விழித்து) எழுந்தால் இந்தப் பிரார்த்தனைக்கான நற்பலனைப் பெற்றுக் கொள்வீர்கள்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7489

அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். (அரபுக் குலங்கள் அனைத்தும் திரண்டு வந்த அகழ்ப் போரான) ‘அஹ்ஸாப்’ போர் நாளில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறைவா! வேதம் அருளியவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே! இந்தக் குலங்களைத் தோற்கடிப்பாயாக! அவர்களை நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!’ என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7490

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘(நபியே!) உங்கள் தொழுகையில் நீங்கள் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்’ எனும் (திருக்குர்ஆன் 17:110 வது) இறைவசனம் (பின்வரும் சூழ்நிலையில்) அருளப்பெற்றது: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு) மக்காவில் மறைவாக(த் தொழுது கொண்டு) இருந்தார்கள். (அவ்வாறு தோழர்களுடன் சேர்ந்து தொழும்போது) குரலை உயர்த்(திக் குர்ஆனை ஓ)துவார்கள். அதை இணைவைப்பாளர்கள் கேட்டுவிடும்போது குர்ஆனையும் அதை அருளிய (இறை)வனையும் அதை (மக்கள் முன்) கொண்டு வந்த (நபிய)வர்களையும் ஏசுவார்கள். எனவே, உயர்ந்தோனாகிய அல்லாஹ் ‘நீங்கள் உங்கள் தொழுகையிலும் இணைவைப்பாளர்களின் காதில் விழும் அளவிற்குக் குரலை உயர்த்தாதீர்கள். அதற்காக உடன் தொழுகின்ற) உங்கள் தோழர்களுக்கே கேட்காதவாறு (ஒரேயடியாய்) குரலைத் தாழ்த்தியும் விடாதீர்கள். அவர்களுக்குக் கேட்டால் தான் உங்களிடமிருந்து அவர்கள் குர்ஆனைக் கற்பார்கள். எனவே, இவ்விரண்டிற்கும் இடையே மிதமான போக்கைக் கையாளுங்கள்’ எனக் கட்டளையிட்டான்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7491

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ‘ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்) ஆவேன். என் கரத்திலேயே அதிகாரமனைத்தும உள்ளது. நானே இரவையும் பகலையும் மாற்றி மாற்றிக் கொண்டுவருகிறேன்’ என்று அல்லாஹ் கூறினான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7492

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ‘நோன்பு எனக்குரியது. நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளி தன் இச்சைகளையும் தன் உணவையும் பானத்தையும் எனக்காகவேவிட்டுவிடுகிறார்’ என்று அல்லாஹ் கூறினான். நோன்பு ஒரு கேடயமாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்புத் துறக்கம் வேளையில் கிடைக்கிற ஒரு மகிழ்ச்சியும், மறுமையில் தம் இறைவனை அவர் சந்திக்கும் வேளையில் கிடைக்கிற ஒரு மகிழ்ச்சியும் தான் அவை. நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை கஸ்தூரி வாசனையைவிட அல்லாஹ்விடம் மணமிக்கதாகும் என அபூ ஹுரைரரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7493

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இறைத் தூதர்) அய்யூப்(அலை) அவர்கள் திறந்த மேனியுடன் குளித்துக் கொண்டிருந்தபோது தங்கத்தாலான வெட்டுக்கிளியின் கால் அவர்களின் மீது வந்து விழுந்தது. உடனே அவர்கள் தங்களின் ஆடையில் அள்ளத் தொடங்கினார்கள். அப்போது அவர்களின் இறைவன் அவர்களை அழைத்து, ‘அய்யூப்! நீங்கள் பார்க்கிற இந்தத் தங்கக்கால் உங்களுக்குத் தேவைப்படாத அளவிற்கு உங்களை நான் செல்வராக ஆக்கியிருக்கவில்லையா?’ என்று கேட்க, அவர்கள் ‘ஆம். என் இறைவா! ஆயினும், உன் அருள்வளம் (பரக்கத்) எனக்குத் தேவைப்படுகிறதே!’ என்று பதிலளித்தார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7494

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உயர்வும் வளமும் மிக்கவனான நம் இறைவன் ஒவ்வோர் இரவிலும் இரவின் இறுதி மூன்றிலொரு பங்கு இருக்கும்போது கீழ்வானிற்கு இறங்கி வந்து, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரின் பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுகிறான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7495

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நாமே (காலத்தால்) பிந்தியவர்களும் மறுமைநாளில் (அந்தஸ்தால்) முந்தியவர்களும் ஆவோம் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7496

இதே அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ள மற்றொரு ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது: ‘(மனிதா!) நீ (நல்வழியில்) செலவு செய்! உனக்காக நான் செலவு செய்வேன்’ என அல்லாஹ் கூறினான்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7497

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல்(அலை) அவர்கள்) ‘இதோ கதீஜா உங்களிடம் ‘உணவுப் பத்திரத்தை’ அல்லது ‘பானமுள்ள பாத்திரத்தை’ கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு அவரின் இறைவனிடமிருந்து சலாம் எடுத்துரையுங்கள். கூச்சலோ களைப்போ இல்லாத முத்து மாளிகையொன்று அவருக்கு (சொர்க்கத்தில்) கிடைக்கும் என்று நற்செய்தி அளியுங்கள்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7498

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ‘என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை சொர்க்கத்தில் நான் தயார்ப்படுத்தி வைத்துள்ளேன்’ என்று அல்லாஹ் கூறினான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7499

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இரவில் ‘தஹஜ்ஜுத் தொழும்போது (பின்வருமாறு) பிரார்த்திப்பார்கள்: இறைவா! உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள் மற்றும் பூமியின் ஒளி ஆவாய். உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள் மற்றும் பூமியின் நிர்வாகி ஆவாய். உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள். பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் இறைவன் ஆவாய்! நீயே உண்மை. உன் வாக்குறுதியே உண்மை. உன் சொல்லே சத்தியம். உன் சந்திப்பே உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் அனுப்பப்பட்டதும்) உண்மை. மறுமை நாள் (நிகழப்போவது) உண்மை. இறைவா! உனக்கே கீழ்ப்படிந்தேன். உன்னையே நம்பினேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன் பக்கமே திரும்புகிறேன். உன்னிடமே என் வழக்குகளைக் கொண்டு வந்தேன். உன்னிடம் நீதி கேட்டேன். எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! நீயே என் இறைவன் வணக்கத்திற்குரியவர் உன்னைத் தவிர வேறெவருமில்லை.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7500

ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்கள் குறித்து அவதூறு கிளப்பியவர்கள் அவர்களின் மீது அவதூறு பேசியபோது, ஆயிஷா(ரலி) அவர்கள் குற்றமற்றவர்கள் என்று கூறி அவர்கள் சொன்ன அவதூறிலிருந்து அவர்களை அல்லாஹ் விடுவித்துவிட்டான். இச்செய்தி குறித்து நான் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்), ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்), அல்கமா இப்னு அபீ வக்காஸ்(ரஹ்), உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) ஆகியோரிடமிருந்து (பின்வருமாறு) செவியுற்றேன். அவர்கள் ஒவ்வொருவரும் இந்தச் சம்பவத்தின் ஒரு பகுதியை ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள்.

ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என்னைக் குற்றமற்றவள் என்று அறிவிக்க, ஓதப்படுகிற வேத அறிவிப்பை அருளுவான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. ஓதப்படுகிற வசனம் ஒன்றில் என் தொடர்பாக அல்லாஹ் பேசுகிற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்லள் என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. மாறாக, என்னைக் குற்றமற்றவள் என அறிவிக்கும் ஒரு கனவை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உறக்கத்தில் காண்பார்கள் என்றே நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால், உயர்ந்தோன் அல்லாஹ் (நான் தூய்மையானவள் என்பது குறித்து) ‘அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தாம்…’ என்று தொடங்கும் (24 வது அத்தியாயத்தின்) பத்து வசனங்களை அருளினான்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7501

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகிறான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்தால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காகவிட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7502

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து (இறை அரியாசனத்தின் கால்களைப் பற்றிக் கொண்டு) நின்றது. அல்லாஹ் ‘சற்று பொறு’ என்றான். ‘உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்’ என்றது உறவு. உடனே அல்லாஹ் ‘(உறவே!) உன்னைப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன்; உன்னைத் துண்டித்து விடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பது உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?’ என்று கேட்டான். அதற்கு ‘ஆம் (திருப்தியே) என் இறைவா!’ என்றது உறவு. ‘இது உனக்காக நடக்கும்’ என்றான் அல்லாஹ். (இந்த ஹதீஸை அறிவித்த) பிறகு அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?’ எனும் (திருக்குர்ஆன் 47:22 வது) இறைவசனத்தைக் கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7503

ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (ஒரு நாள்) மழைபொழிந்தது. அப்போது அவர்கள், ‘என் அடியார்களில் என்னை நிராகரிப்பவனும் இருக்கிறான்; என்னை நம்புகிறவனும் இருக்கிறான் என்று அல்லாஹ் கூறினான்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7504

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைச் சந்திக்க விரும்பினால் நானும் அவனைச் சந்திக்க விரும்புகிறேன். அவன் என்னைச் சந்திப்பதை வெறுத்தால் நானும் அவனைச் சந்திப்பதை வெறுக்கிறேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7505

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7506

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (முந்தைய காலத்தில்) நன்மை எதையும் அறவே செய்யாத ஒருவர் ‘நான் இறந்துவிட்டால் என்னை எரித்து, அந்தச் சாம்பலில் பாதியைக் கரையிலும் பாதியைக் கடலிலும் தூவிவிடுங்கள். ஏனெனில், இறைவன் மீதாணையாக! என் மீது இறைவனுக்கு சக்தி ஏற்பட்டால், உலக மக்களில் யாவரும் அளிக்காத வேதனையை அவன் எனக்கு அளித்துவிடுவான்’ என்று சொல்லி (விட்டு இறந்து) விட்டார். (அவ்வாறே அவர் உடல் எரிக்கப்பட்டு சாம்பல் தூவப்பட்டது.) பிறகு, அல்லாஹ் கடலுக்கு ஆணையிட்டு அதிலிருந்த அவரின் உடலை ஒன்று திரட்டினான். தரைக்கு ஆணையிட்டு அதிலிருந்தும் அவரின் உடலை ஒன்று திரட்டினான். பிறகு, ‘நீ எதற்காக இப்படிச் செய்தாய்?’ என்று கேட்டான். அதற்கு அவர், ‘உன் அச்சத்தினால் தான். நீ நன்கறிந்தவன்’ என்று சொல்ல, அவரை அல்லாஹ் மன்னித்து விட்டான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7507

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஓர் அடியார் ஒருபாவம் செய்துவிட்டார். பிறகு ‘இறைவா! நான் ஒரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக’ என்று பிரார்த்தித்தார். உடனே அவரின் இறைவன். ‘என் அடியான் என்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நன்று) நான் என் அடியானை மன்னித்து விட்டேன்’ என்று சொன்னான். பிறகு அந்த அடியார் (சிறிது காலம்) அல்லாஹ் நாடிய வரை அப்படியே இருந்தார். பிறகு மீண்டும் ஒரு பாவத்தைச் செய்தார். அப்போது அந்த மனிதர் (மீண்டும்) ‘என் இறைவா! நான் மற்றொரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக’ என்று பிரார்த்தித்தார். உடனே இறைவன் (இம் முறையும்) ‘என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நல்லது.) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்’ என்று சொன்னான். பிறகு அல்லாஹ் நாடிய வரை அந்த மனிதர் அப்படியே (சிறிது காலம்) இருந்தார். பிறகும் (மற்றொரு) பாவம் செய்தார். (இப்போதும் முன்பு போன்றே) ‘என் இறைவா! நான் இன்னொரு பாவம் செய்து விட்டேன். எனக்காக அதை மன்னித்து விடுவாயாக’ என்று பிரார்த்தித்தார். அதற்கு அல்லாஹ் ‘என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (அப்படியானால்) நான் என் அடியானை மூன்று முறையும் மன்னித்து விட்டேன். இனி அவன் நாடியதைச் செய்து கொள்ளட்டும்’ என்று சொன்னான்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7508

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘முன் சென்ற’ அல்லது ‘உங்களுக்கு முன் வாழ்ந்த’ ஒரு மனிதரைப் பற்றி ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார்கள். அல்லாஹ் அந்த மனிதருக்கு செல்வத்தையும் பிள்ளைகளையும் வழங்கியிருந்தான். அவருக்கு இறப்பு நெருங்கியபோது அவர் தம் மக்களிடம் ‘நான் உங்களுக்கு எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன்?’ என்று கேட்க, அவர்கள் ‘நல்ல தந்தையாக இருந்தீர்கள்’ என்றார்கள். ஆனால், அவரோ தம(து மறுமை)க்காக அல்லாஹ்விடம் எந்த நன்மையையும் ‘தயார் செய்திருக்கவில்லை’. அல்லது ‘சேமித்திருக்கவில்லை’. தம் மீது அல்லாஹ்வுக்கு சக்தி ஏற்பட்டால் தம்மை அவன் வேதனை செய்வான் என அவர் அஞ்சினார். எனவே, (அவர் தம் மக்களிடம்) ‘நன்றாகக் கவனியுங்கள். நான் இறந்து விட்டால் என்னைப் பொசுக்கி விடுங்கள். நான் (வெந்து) கரியாக மாறிய பின் என்னைப் பொடிப் பொடியாக்கி, சூறாவளிக் காற்று வீசும் நாளில் காற்றில் என்னைத் தூவிவிடுங்கள்’ என்றார்.

நபி(ஸல்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்: இவ்வாறு அம்மனிதர் தம் மக்களிடம் அதற்கான உறுதிமொழிகளைப் பெற்றுக்கொண்டார். என் இறைவன் மீதாணையாக! (அவர் இறந்தவுடன்) அவர்கள் அவ்வாறே செய்தார்கள். பிறகு அவரின் சாம்பலை சூறாவளிக் காற்று வீசிய ஒரு நாளில் தூவிவிட்டார்கள். அப்போது வல்லவனும் உயர்ந்தவனுமான அல்லாஹ் ‘(பழையபடி முழு மனிதராக) ஆகிவிடு’ என்று சொல்ல, அந்த மனிதர் (உயிர் பெற்று) எழுந்தார். அல்லாஹ் ‘என் அடியானே! இவ்வாறு நீ செய்யக் காரணமென்ன?’ என்று கேட்டான். அம்மனிதர் ‘உன் அச்சத்தின் காரணத்தால் தான்’ என்று பதிலளித்தார். அவரை அந்த நேரத்தில் அல்லாஹ்வின் கருணை தான் காப்பாற்றியது.

மற்றோர் அறிவிப்பில் ‘கடலில் தூவி விடுங்கள்’ என அம்மனிதர் கூறினார் என்று காணப்படுகிறது. வேறோர் அறிவிப்பில் (இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ‘லம் யப்தயிஸ்’ எனும் சொல்லுக்கு கத்தாதா(ரஹ்) அவர்கள் சேமித்து வைக்கவில்லை’ என்று விளக்கம் தருகிறார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7509

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மறுமைநாள் வரும்போது என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய எனக்கு அனுமதியளிக்கப்படும். நான் ‘என் இறைவா! எவருடைய உள்ளத்தில் கடுகளவு (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களை சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக!’ என்று கூறுவேன். அவர்கள் அவ்வாறே சொர்க்கம் செல்வார்கள். பிறகு நான் ‘எவருடைய உள்ளத்தில் சிறிதளவேனும் (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களை சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக’ என்று மீண்டும் பிரார்த்திப்பேன்.

இதை அறிவித்த அனஸ்(ரலி) அவர்கள் ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (‘சிறிதளவேனும்’ என்று கூறியபோது) விரல் நுனியைக் காட்டியதை நான் இப்போதும் பார்ப்பது போன்றுள்ளது’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7510

மஅபத் இப்னு ஹிலால் அல்அனஸீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். பஸ்ராவாசிகளில் சிலர் (ஓரிடத்தில்) ஒன்று கூடினோம். பிறகு நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்றோம். அனஸ்(ரலி) அவர்களிடம் பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியைக் கேட்பதற்காக எங்களுடன் ஸாபித் அல் புனானீ(ரஹ்) அவர்களையும் அழைத்துச் சென்றறோம். அனஸ்(ரலி) அவர்கள் தங்களின் கோட்டையில் ‘ளுஹா’ தொழுது கொண்டிருக்கையில் நாங்கள் அவர்களிடம் போய்ச்சேர்ந்தோம். பிறகு நாங்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்க, எங்களை அவர்கள் (உள்ளே நுழைய) அனுமதித்தார்கள். அப்போது அவர்கள் தங்களின் விரிப்பில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் ஸாபித்(ரஹ்) அவர்களிடம் ‘பரிந்துரை பற்றிய நபிமொழிக்கு முன்னால் வேறு எதைப் பற்றியும் கேட்காதீர்கள்’ என்று சொன்னோம். உடனே ஸாபித்(ரஹ்) அவர்கள், ‘அபூ ஹம்ஸா! (அனஸ்!) இதோ இவர்கள் பஸ்ராவாசிகளான உங்கள் சகோதரர்கள் ஆவர். பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியை உங்களிடம் கேட்பதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்’ என்றார்கள். அப்போது அனஸ்(ரலி) கூறினார்:

முஹம்மத்(ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம்(அலை) அவர்களிடம் சென்று ‘(இந்தச் சோதனையான கட்டத்திலிருந்து எங்களைக் காக்க) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள்’ என்று சொல்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், ‘அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அளவிலா அருளாள(னான இறைவ)னின் உற்ற நண்பராவார்’ என்று கூறுவார்கள். உடனே மக்கள் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது இப்ராஹீம்(அலை) அவர்களும், ‘அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் மூஸாவிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வுடன் உரையாடியவராவார்’ என்று சொல்வார்கள். உடனே, மக்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது மூஸா (அலை) அவர்களும் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் ஈசாவைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையும் ஆவார்’ என்று சொல்வார்கள்.
உடனே, மக்கள் ஈசா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது ஈசா(அலை) அவர்கள் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் முஹம்மத்(ஸல்) அவர்களைப் போய் பாருங்கள்’ என்று சொல்வார்கள்.

உடனே, மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், ‘நான் அதற்குரியவன் தான்’ என்று சொல்லிவிட்டு, (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அப்போது எனக்கு அனுமதியளிக்கப்படும். தற்போது எனக்குத் தோன்றாத புகழ்மாலைகளை எல்லாம் அப்போது நான் இறைவனைப் போற்றிப் புகழும் வகையில் எனக்கு அவன் என்னுடைய எண்ணத்தில் உதயமாக்குவான். அந்தப் புகழ்மாலைகளால் நான் அவனைப் (போற்றிப்) புகழ்வேன். அவனுக்காக (அவன் முன்) நான் சஜ்தாவில் (சிரவணக்கத்தில்) விழுவேன். அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து), ‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்களுக்காகச் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று சொல்லப்படும். அப்போது நான், ‘என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்’ என்பேன். அப்போது, ‘செல்லுங்கள்; எவருடைய உள்ளத்தில் வாற்கோதுமையின் எடையளவு இறைநம்பிக்கை இருந்தோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள்’ என்று சொல்லப்படும். எனவே, நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு திரும்பி வந்து, அதே புகழ்மாலைகளைக் கூறி (மீண்டும்) அவனை நான் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் நான் விழுவேன். அப்போதும். ‘முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும் பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று கூறப்படும். அப்போது நான், ‘என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்; என்று சொல்வேன். அப்போது ‘சொல்லுங்கள்; யாருடைய உள்ளத்தில் ‘அணுவளவு’ அல்லது ‘கடுகளவு’ இறை நம்பிக்கை இருந்தோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்’ என்று சொல்லப்படும்.

நான் சென்று, அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் திரும்பி வந்து அதே புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போதும், ‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்; சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், ‘என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்’ என்பேன். அதற்கு அவன், ‘செல்லுங்கள்: எவருடைய உள்ளத்தில் கடுகு மணியை விட மிக மிகச் சிறிய அளவில் இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்’ என்று சொல்வான். அவ்வாறே நான் சென்று அ(த்தகைய)வரை நரகத்திலிருந்து வெளியேற்றுவேன் (என்று இறைத்தூதர் (ஸல்) அவர்%E

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.