91. கனவுக்கு விளக்கமளித்தல்

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6982

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது. பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாள்கள் (தனிமையில் தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்முடன் எடுத்துச் செல்வார்கள். பிறகு (அந்த உணவு தீர்ந்ததும் தம் துணைவியாரான) கதீஜாவிடம் திரும்பி வருவார்கள். அதைப் போன்றே பல நாள்களுக்குரிய உணவை கதீஜா அவர்கள் தயார் செய்து கொடுப்பார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்குச் சத்திய(வேத)ம் திடீரென்று (ஒருநாள்) வரும்வரை நீடித்தது. (அன்று) வானவர் (ஜிப்ரீல்) அவர்கள் அந்தக் குகைக்கு வந்து நபி(ஸல்) அவர்களிடம், ‘ஓதும்’ என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நான் ஓதத் தெரிந்தவனில்லையே’ என்று அவருக்கு பதிலளித்தார்கள்.

(அப்போது நடந்த சம்பவத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள்:) அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு ‘ஓதும்’ என்றார். அப்போதும் ‘நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே’ என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து  பின்னர் என்னை விட்டுவிட்டு, ‘ஓதும்’ என்றார். அப்போதும், ‘நான் ஓதத் தெரிந்தவனில்லையே’ என்றேன். அவர் என்னை மூன்றாவது முறையும் என்னால் தாங்க இயலாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னைவிட்டுவிட்டு ‘படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதும்..’ என்று தொடங்கும் (96 வது அத்தியாயத்தின்) வசனங்களை ‘மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்’ என்பது வரை (திருக்குர்ஆன் 96:1-5) ஓதினார்.

(தொடர்ந்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு கழுத்தின் சதைகள் (அச்சத்தால்) படபடக்க அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பி வந்து, ‘எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்தி விடுங்கள்’ என்று நபியவர்கள் சொன்னார்கள். அவ்வாறே அவர்களும் போர்த்திவிட அச்சம் அவர்களை விட்டு அகன்றது. அப்போது, ‘கதீஜா! எனக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டுவிட்டு நடந்தவற்றை கதீஜா அவர்களிடம் தெரிவித்தபடி தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்று தாம் அஞ்சுவதாகவும் கூறினார்கள்.

அப்போது கதீஜா(ரலி) அவர்கள், ‘அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதல் அடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவுகிறீர்கள்’ என்றார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரரான நவ்ஃபல் என்பவரின் புதல்வர் ‘வரக்கா’விடம் கதீஜா சென்றார்கள். நவ்ஃபல், அசத் என்பவரின் புதல்வரும் அசத், அப்துல் உஸ்ஸாவின் புதல்வரும் அப்துல் உஸ்ஸா, குஸை என்பவரின் புதல்வரும் ஆவர்.

‘வரக்கா’ அறியாமைக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் அரபி மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இன்ஜீல் வேதத்தை (ஹீப்ரு மொழியிலிருந்து) அரபி மொழியில் அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுபவராகவும் கண்பார்வை இழந்த முதியவராகவும் இருந்தார்.

அவரிடம் கதீஜா அவர்கள், ‘என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மத்) கூறுவதைக் கேளுங்கள்’ என்றார்கள். அப்போது வரக்கா நபி(ஸல்) அவர்களிடம் ‘என் சகோதரர் புதல்வரே! நீர் என்ன கண்டீர்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றை அவரிடம் தெரிவித்தார்கள். (அதைக் கேட்ட) வரக்கா, நபி(ஸல்) அவர்களிடம் ‘(நீர் கண்ட) இவர்தாம் (இறைத் தூதர்) மூஸாவிடம் (இறைவனால்) அனுப்பப் பெற்ற வானவர் (ஜிப்ரீல்) ஆவார்’ என்று கூறிவிட்டு ‘உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்தால் நன்றாயிருக்குமே!’ என்று கூறினார்.

இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மக்கள் என்னை வெளியேற்றவா செய்வார்கள்?’ என்று (வியப்புடன்) கேட்டார்கள். அதற்கு வரக்கா அவர்கள் ‘ஆம். நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற எவரும் மக்களால் பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உம்முடைய (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புரிவேன்’ என்று பதிலளித்தார்.

அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். (இந்த முதலாவது வேத அறிவிப்போடு) சிறிது காலம் வேத அறிவிப்பு தடைபட்டது. அதனால் நபி(ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள். நமக்குக் கிடைத்த தகவலின்படி எந்த அளவுக்கு அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றால், மலைச் சிகரங்களிலிருந்து கீழே விழ பல முறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே விழுந்துவிடலாமென்று ஏதாவது மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் தோன்றி, ‘முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே, இறைத்தூதர்தாம்’ என்று கூறுவார்கள். இதைக் கேட்கும்போது நபி(ஸல்) அவர்களின் மனப் பதற்றம் அடங்கிவிடும். உடனே (மலை உச்சியிலிருந்து) திரும்பிவந்து விடுவார்கள். வேத அறிவிப்பு தடைபடுவது தொடர்ந்து நீண்டுசெல்லும்போது மறுபடியும் அவ்வாறே சிகரங்களை நோக்கிச் செல்வார்கள். அப்போதும் அவர்கள் முன்னிலையில் (வானவர்) ஜிப்ரீல் தோன்றி முன்போன்றே கூறுவார்கள்.

(இந்த ஹதீஸின் துவக்கத்தில் இடம் பெற்றுள்ள ‘ஃபலகுஸ் ஸுப்ஹ்’ (அதிகாலைப் பொழுதின் விடியல்) என்பதைப் போன்றே குர்ஆனில் 6:96 வது) வசனத்தில் இடம் பெற்றுள்ள) ‘ஃபாலிகுல் இஸ்பாஹ்’ (என்பதிலுள்ள ‘இஸ்பாஹ்’) எனும் சொல்லுக்குப் பகலில் சூரிய வெளிச்சம்; இரவில் நிலா வெளிச்சம்’ என்று பொருளாகும் என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6983

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6984

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும் என அபூ கத்தாதா அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6985

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து), அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும். அதை (தமக்கு விருப்பமானவர்களிடம் மட்டும்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6986

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (பொய்க்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, ஒருவர் கெட்ட கனவு கண்டால் அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) அவர் பாதுகாப்புக் கோரட்டும். தம் இடப் பக்கத்தில் துப்பட்டும். ஏனெனில், அப்போது அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது என அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6987

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6988

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாக அனஸ்(ரலி) அவர்களிடமிருந்தும் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6989

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நல்ல (உண்மையான) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6990

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நற்செய்தி கூறுகின்றவை (‘முபஷ்ஷிராத்’) தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை’ என்று கூற கேட்டேன். அப்போது மக்கள் ‘நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?’ என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள் ‘நல்ல (உண்மையான) கனவு’ என்று விடையளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6991

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (நபித் தோழர்களில்) சிலருக்கு ‘லைலத்துல் கத்ர்’ (எனும் மகத்துவமிக்க) இரவு (ரமளான் மாதத்தில்) கடைசி ஏழுநாள்களில் தேடிக் கொள்ளுங்கள்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6992

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இறைத்தூதர்) யூசுஃப்(அலை) அவர்கள் (சிறையில்) கழித்த காலம் அளவிற்கு நான் சிறையில் காலம் கழித்திருந்து, பிறகு (அவரிடம் வந்ததைப் போன்றே) என்னை (விடுதலை செய்ய) அழைப்பவர் என்னிடம் வந்திருந்தால் நான் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6993

‘கனவில் என்னை காண்கிறவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க மாட்டான். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:’நபி(ஸல்) அவர்களுக்குரிய தோற்றத்தில் (அவர்களின் அங்க லட்சணங்களுடன்) அவர்களைக் கண்டால்தான் (நபி(ஸல்) அவர்களைக் கனவு கண்டதாகக் கருதப்படும்)’ என்று இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6994

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். கனவில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க மாட்டான். மேலும், இறைநம்பிக்கையாளர் காணும் (உண்மையான) நல்ல கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6995

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, எவரேனும் தாம் விரும்பாத (தீய கனவு) ஒன்றைக் கண்டால் அவர் தம் இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பட்டும்; ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு அல்லாஹ்விடம்) அவர் பாதுகாப்புக் கோரட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அவருக்கு அது எந்தத் தீங்கும் இழைத்திட இயலாது. மேலும், ஷைத்தான் என் உருவத்தில் காட்சி தரமாட்டான் என அபூ கத்தத்தா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6996

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (கனவில்) யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் நிஜத்தையே கண்டார் என அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார். இது மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6997

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (கனவில்) யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் நிஜத்தையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் (காட்சியளிப்பவனாக) இருக்கமாட்டான் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6998

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். எனக்கு (ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட) சொற்களின் திறவுகோல்கள் வழங்கப்பட்டுள்ளன. (எதிரிகளுக்கு என்னைப் பற்றி (மதிப்பும்) அச்ச(மு)ம் ஏற்படுத்தப்பட்டு எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு நான் உறங்கிக் கொண்டிருக்கையில் (கனவில்) பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் கொண்டுவரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன.

இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். நீங்கள் அந்தக் கருவூலங்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டுசென்று (அனுபவித்துக்) கொண்டிருக்கிறீர்கள்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6999

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்றிரவு (இறையில்லம்) கஅபாவின் அருகே எனக்கு(க் கனவில்) என்னைக் காட்டப்பட்டது. அப்போது மனிதர்களில் மா நிறத்தில் நீ பார்த்ததிலேயே மிக அழகான மா நிறமுடைய மனிதர் ஒருவரைக் கண்டேன். தோள் வரை நீண்டுள்ள முடிகளில் நீ பார்த்தவற்றிலேயே மிக அழகான தலை முடி அவருக்கு இருந்தது; அந்த முடியை அவர் (படிய) வாரிவிட்டிருந்தார்; அதிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. ‘இரண்டு மனிதர்களின் மீது’ அல்லது ‘இரண்டு மனிதர்களின் தோள்களின் மீது’ சாய்ந்தபடி அவர் கஅபாவைச் சுற்றிவந்துகொண்டிருந்தார். அப்போது நான், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு, ‘(இவர் தாம்) மர்யமின் குமாரர் மஸீஹ்(ஈசா)’ என்று பதிலளிக்கப்பட்டது. அப்போது நான் நிறைய சுருள்முடி கொண்ட வலக் கண் குருடான ஒரு மனிதனையும் பார்த்தேன். அவனுடைய கண் ஒரே குலையில் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. அப்போது நான், ‘யார் இவர்?’ என்று கேட்டேன். அதற்கு ‘இவன்தான் தஜ்ஜால் எனும் மஸீஹ்’ என்று பதிலளிக்கப்பட்டது என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7000

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இன்றிரவு எனக்குக் கனவு ஒன்று காட்டப்பட்டது.’ என்று கூறினார்கள். தொடர்ந்து அறிவிப்பாளர் முழு ஹதீஸையும் அறிவித்தார்.
இதே ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

ஓர் அறிவிப்பில், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், அல்லது அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிப்பதாக வந்துள்ளது. மஅமர் இப்னு ராஷித்(ரஹ்) அவர்கள் முதலில் இந்த ஹதீஸை (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என) அறிவிக்காமல் இருந்தார்கள்; பின்புதான் அறிவிக்கலானார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7001

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள ‘குபா’வுக்குச் சென்றால் தம் பால்குடி சிற்றன்னையான) உம்மு ஹராம் பின்த் மில்ஹான்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவர் உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்களின் துணைவியாராவார். அவ்வாறே ஒரு நாள் (பகலில்) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றபோது அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவளித்த பின் அவர்களுக்கு பேன் பார்த்து விடலானார். அப்போது நபி(ஸல்) அவர்கள் உறங்கி விட்டார்கள். பிறகு சிரித்தபடி விழித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7002

தொடர்ந்து உம்மு ஹராம்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தாரில் சிலர் இறைவழியில் இந்தக் கடலின் மத்தியில் பயணம் செய்யும் புனிதப் போராளிகளாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் ‘மன்னர்களாக’ அல்லது ‘மன்னர்களைப் போன்று’ இருந்தார்கள்’ என்று கூறினார்கள். உடனே நான், ‘இறைத்தூதர் அவர்களே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று சொன்னேன். அப்போது எனக்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) தம் தலையைக் கீழே வைத்து (உறங்கி)விட்டுப் பிறகு சிரித்தபடி விழித்தெழுந்தார்கள். அப்போதும் நான், ‘ஏன் சிரிக்கிறீர்கள், இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தாரில் சிலர் இறைவழியில் புனிதப்போர் புரிபவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள்’ என்று முன்புபோன்றே பதிலளித்தார்கள். அதைக் கேட்டு நான், ‘இறைத்தூதர் அவர்களே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் (கடல் பயணம் செய்து அறப்போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்’ என்று கூறினார்கள். (நபி(ஸல்) அவர்கள் கூறியபடியே) உம்மு ஹராம்(ரலி) அவர்கள் முஆவியா இப்னு அபீ சுஃப்யான்(ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் கடல் பயணம் மேற்கொண்டார்கள். பின்பு அவர்கள் கடலிலிருந்து புறப்பட்டபோது தம் வாகனத்திலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7003

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா(ரலி) அறிவித்தார். (நாடு துறந்து மதீனா வந்தடைந்த) முஹாஜிர்களுக்காக (அவர்களில் யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதை முடிவு செய்ய) அன்சாரிகள் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அப்போது உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) அவர்கள் எங்கள் பொறுப்பில் வந்தார்கள். (அதன்படி) அவரை நாங்கள் எங்கள் வீட்டில் தங்கவைத்தோம். பிறகு அவர் நோயுற்று அந்த நோயிலேயே இறந்தும் போனார். அவரின் உடல் குளிப்பாட்டப்பட்டு அவரின் ஆடையிலேயே கஃபனிடப்பட்டதும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். அப்போது நான் உஸ்மான் அவர்களை நோக்கி), ‘சாயிபின் தந்தையே! உம்மீது இறையருள் பொழியட்டும். அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்’ என்று கூறினேன். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும், இறைத்தூதர் அவர்களே! அவ்வாறாயின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?’ என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இவர் இறந்துவிட்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! இவருக்கு நான் நன்மையையே எதிர்பார்க்கிறேன். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னிடம் (மறுமையில்) எவ்வாறு நடந்து கொள்ளப்படும் என்பது எனக்குத் தெரியாது’ என்றார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யாரையும் தூய்மையானவர் என்று ஒருபோதும் கூறுவதேயில்லை.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7004

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ள மேற்கண்ட ஹதீஸில் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் பின்வருமாறு அறிவித்தார்கள். ‘மேலும் இவரிடம் (மறுமையில்) எவ்வாறு நடந்துகொள்ளப்படும் என்பதும் எனக்குத் தெரியாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உம்முல் அலா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (இதைக்கேட்ட) நான் மிகவும் கவலைப்பட்டவாறே உறங்கி விட்டேன். அப்போது (கனவில்) உஸ்மான் அவர்களுக்காக ஓர் ஆறு ஓடிக்கொண்டிருக்கக் கண்டேன். எனவே இது குறித்து நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, ‘அது அவரின் நற்செயல்’ என்று (விளக்கம்) கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7005

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (பொய்க்) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, உங்களில் எவரேனும் தாம் விரும்பாத தீய கனவு கண்டால் உடனே அவர் தம் இடப் பக்கத்தில் துப்பட்டும். ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பும் கோரட்டும். அப்போது அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட இயலாது. இதை நபித்தோழர்களில் ஒருவரும் நபி(ஸல்) அவர்களின் குதிரைப் படை வீரர்களில் ஒருவருமான அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7006

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) ஒரு பால்கோப்பை என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் அதிலிருந்து பாலை (தாகம் தீருமளவுக்கு) அருந்தினேன். இறுதியில் அது என்னுடைய நகக்கண்கள் வழியே வெளியேறி வருவதைக் கண்டேன். பின்னர் மீதியை உமர் இப்னு அல்கத்தாபுக்குக் கொடுத்தேன்’ என்று கூறினார்கள்.

அப்போது மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அந்தப் பாலுக்கு என்ன விளக்கம் கண்டீர்கள்?’ என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள், ‘அறிவு’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7007

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) ஒரு பால் கோப்பை என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் அதிலிருந்து பாலை (தாகம் தீருமளவுக்கு) அருந்தினேன். இறுதியில், அது என் உறுப்புகள் வழியே வெளியேறி வருவதைக் கண்டேன். பின்னர் மீதியை உமர் இப்னு அல்கத்தாபுக்குக் கொடுத்தேன்’ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களைச் சுற்றிக் குழுமியிருந்த மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அந்தப் பாலுக்கு என்ன விளக்கம் கண்டீர்கள்?’ என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள், ‘அறிவு’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7008

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். (ஒரு முறை), ‘நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) மக்கள் (பலவிதமான) சட்டைகளை அணிந்தவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள். அவற்றில் (அவர்களின்) மார்பை எட்டக் கூடியவையும் இருந்தன. அவற்றில் (அவர்களின்) மார்பை எட்டாதவையும் இருந்தன. உமர் இப்னு அல்கத்தாப் (தரையில்) இழுத்துக்கொண்டே செல்லும் அளவிற்கு (முழுநீளச்) சட்டையொன்றை அணிந்தவராக என்னைக் கடந்துசென்றார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். மக்கள், ‘(இதற்கு) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்தச் சட்டைகள்) அவர்களின் மார்க்கத்தை (மார்க்க உணர்வையும் செயல்பாடுகளையும்) குறிக்கும்’ என்று விளக்கம் காண்பதாக) பதிலளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7009

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) மக்கள் (பலவிதமான) சட்டைகளை அணிந்தவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள். அவற்றில் (அவர்களின் மார்பை எட்டக்கூடியவையும் இருந்தன. அவற்றில் (அவர்களின் மார்பை எட்டாதவையும் இருந்தன. உமர் இப்னு அல்கத்தாப்(தரையில்) இழுத்துக் கொண்டே செல்லும் அளவிற்கு (நீளமான) சட்டையொன்றை அணிந்தவராக எனக்குக் காட்டப்பட்டார்’ என்றார்கள். மக்கள், ‘(இதற்கு) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்தச் சட்டைகள்) அவர்களின் மார்க்கத்தை (மார்க்க உணர்வையும் செயல்பாடுகளையும் குறிக்கும்’ என்று (விளக்கம் காண்பதாக) பதிலளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7010

கைஸ் இப்னு உபாத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் (மதீனா பள்ளிவாசலில்) ஓர் அவையில் அமர்ந்திருந்தேன். அதில் ஸஅத் இப்னு மாலிக்(ரலி) அவர்களும் இப்னு உமர்(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள் (எங்களைக்) கடந்து சென்றார்கள். (அன்னாரைக் கண்ட) மக்கள், ‘இவர் சொர்க்கவாசிகளில் ஒருவர்’ என்று கூறினர். இதைக் கேட்ட நான் அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்களிடம் ‘(தங்களைக் குறித்து) மக்கள் இப்படி இப்படிக் கூறினர்’ என்று சொன்னேன்.

(அதற்கு) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள், ‘அல்லாஹ் தூயவன். தமக்குத் தெரியாத ஒன்றைக் குறித்து அவர்கள் கூறுவது முறையல்ல. (மக்கள் இவ்வாறு பேசிக் கொள்வதற்குக் காரணம், நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) நான் கண்ட கனவுதான். (அதில்) பசுமையான பூங்கா ஒன்றில் தூண் நடப்பட்டு இருந்தது. அத்தூணின் மேற்பகுதியில் பிடியொன்று காணப்பட்டது. அதன் கீழ் பகுதியில் சிறிய பணியாள் ஒருவர் இருந்தார். அப்போது (என்னிடம்) ‘இதில் ஏறுங்கள்’ என்று சொல்லப்பட்டது. உடனே நான் (அதில்) ஏறி அந்தப் பிடிப்பை பற்றினேன். பிறகு நான் இக்கனவு குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முன்னிலையில் விவரித்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ்(பின் சலாம்), (இறை நம்பிக்கை எனும்) பலமான பிடியைப் பற்றியவராக இறப்பார்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7011

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: நான் உன்னை (மணந்து கொள்வதற்கு முன்னால்) இரண்டு முறை கனவில் கண்டுள்ளேன். அதில் ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்து வானவர்) உன்னைப் பட்டுத்துணி ஒன்றில் சுமந்து செல்கிறார். அப்போது அவர் ‘இவர் உங்கள் (வருங்கால) மனைவி’ என்றார். உடனே நான் அந்தப் பட்டுத துணியை விலக்கிப் பார்த்தேன். அது நீதான். அப்போது நான் (மனத்திற்குள்) ‘இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின், இதை அவன் நனவாக்குவான்’ என்று சொல்லிக் கொண்டேன்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7012

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: உன்னை நான் மணமுடிப்பதற்கு முன்னால் இரண்டு முறை கனவில் கண்டேன். (முதல் முறை) வானவர் பட்டுத் துணி ஒன்றில் உன்னைச் சுமந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது நான்அவரிடம், ‘(அந்தத் துணியை) விலக்குங்கள்’ என்று சொன்னேன். அவர் விலக்கினார். அது நீதான். அப்போது நான் (மனத்திற்குள்) ‘இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின் இதை அவன் நனவாக்குவான்’ என்று சொல்லிக்கொண்டேன். பிறகு (இரண்டாம் முறையாக) உன்னை வானவர் பட்டுத் துணி ஒன்றில் சுமந்து கொண்டிருப்பதைக் (கனவில்) கண்டேன். அப்போது நான் ‘(இத்துணியை) நீக்குங்கள்’ என்றேன். அவர் நீக்கினார். அது நீதான். அப்போதும் நான் (மனத்திற்குள்) ‘இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின், இதை அவன் நனவாக்குவான்’ என்று சொல்லிக் கொண்டேன்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7013

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட வார்த்தைகள் வழங்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளேன். (எதிரிகளுக்கு என்னைப் பற்றிய மதிப்பும்) அச்ச(மு)ம் ஏற்படுத்தப்பட்டு எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது. நான் (நேற்றிரவு) உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் என்னிடம் கொண்டு வரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: ‘ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட வார்த்தைகள்’ (ஜவாமிஉல் கலிம்) என்பதற்கு விளக்கமாவது: நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்னால் ஏடுகளில் (நீளமான வார்த்தைகளால்) எழுதப்பட்டு வந்த பெரும் பெரும் கருத்துக்களை(யும் தத்துவங்களையும்) ஓரிரு வார்த்தைகளில் ஒருங்கிணைத்து (இரத்தினச் சுருக்கமாக)ப் பேசுகிற ஆற்றலை நபியவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருந்தான் – என எனக்குச் செய்தி எட்டியது.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7014

அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அறிவித்தார். நான் பூங்காவொன்றில் இருப்பதைப் போன்று (கனவு) கண்டேன். அந்தப் பூங்காவின் நடுவே (இரும்புத்) தூண் இருந்தது. அந்தத் தூணின் மேற்பகுதியில் பிடி ஒன்றும் இருந்தது. அப்போது என்னிடம் ‘இதில் ஏறுங்கள்’ என்று சொல்லப்பட்டது. நான் ‘என்னால் இயலாதே’ என்று சொன்னேன். அப்போது என்னிடம் பணியாள். ஒருவர் வந்து என் ஆடையை (பின்னாலிருந்து) உயர்த்தி விட்டார். உடனே நான் (அதில்) ஏறி (அதன் மேற்பகுதியிலிருந்த) பிடியைப் பலமாகப் பற்றிக் கொண்டேன். நான் அதைப் பற்றிய நிலையில் இருக்கும்போதே (உறக்கத்திலிருந்து) விழித்துவிட்டேன். நபி(ஸல்) அவர்களிடம் இது குறித்து நான் விவரித்தபோது, ‘அந்தப் பூங்கா இஸ்லாம் எனும் பூங்காவாகும். அந்த தூண் இஸ்லாம் என்னும் (பலமான) தூணாகும். அந்தப் பிடி (இறை நம்பிக்கையெனும்) பலமான பிடியாகும். (ஆக,) நீங்கள் இறக்கும் வரை இஸ்லாத்தைப் பலமாகப் பற்றியவராகவே இருப்பீர்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் (அந்தக் கனவிற்கான விளக்கத்தைக்) கூறினார்கள். இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7015

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) நான் கண்ட கனவில், என்னுடைய கையில் ஒரு பட்டுத் துணி இருப்பதைப் போன்றும், அதை நான் சொர்க்கத்தில் ஓரிடத்தில் எறியும்போதெல்லாம் அது என்னை அந்த இடத்திற்குத் தூக்கிக் கொண்டு பறந்ததைப் போன்றும் பார்த்தேன். இது குறித்து நான் (என் சகோதரி) ஹஃப்ஸாவிடம் எடுத்துரைத்தேன்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7016

அது குறித்து ஹஃப்ஸா, நபி(ஸல்) அவர்களிடம் விவரித்தபோது நபி(ஸல்) அவர்கள், ‘உன் சகோதரர் நல்ல மனிதர்’ அல்லது ‘அப்துல்லாஹ் நல்ல மனிதர்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7017

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகக்) காலம் சுருங்கும்போது இறை நம்பிக்கையாளர் காணும் கனவு பொய்யாகப் போவதில்லை. இறை நம்பிக்கையாளர் காணும் கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். நபித்துவத்தில் அடங்கிய எந்த அம்சமும் பொய்யாகாது என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்தச் சமுதாயத்தார் காணும் கனவுகள் (எல்லாம்) உண்மை என்றே கூறுகிறேன். கனவுகள் மூன்று வகைப்படும் என்று கூறப்படுவதுண்டு. 1. மன பிரமை (விழிப்பு நிலைக் கனவுகள்) 2. ஷைத்தானின் அச்சுறுத்தல். 3. அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தி. எனவே, தாம் விரும்பாத கனவொன்றை எவரேனும் கண்டால் அதைப் பற்றி எவரிடமும் விவரிக்க வேண்டாம். மாறாக, எழுந்து அவர் (இறைவனைத்) தொழட்டும்.

தொடர்ந்து முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: கழுத்தில் மாட்டப்படும் விலங்கைக் கனவில் காண்பது வெறுக்கப்பட்டுவந்தது. (ஏனெனில், அது நரகவாசிகளின் அடையாளமாகும்.) ஆனால், (கால்) விலங்கைக் காண்பது அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது. அது மார்க்கத்தில் நிலைத்திருப்பதைக் குறிக்கும் என்று (விளக்கம்) கூறப்பட்டது.

மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதன் அறிவிப்பாளர்களில் சிலர் (இப்னு சீரீன் அறிவித்த) மேற்கண்ட தகவல்கள் அனைத்தையும் ஹதீஸுடன் சேர்த்து விட்டுள்ளனர். ஆனாலும், அவ்ஃப்(ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள (இங்கு ஆரம்பத்தில் இடம் பெற்றுள்ள) அறிவிப்பே தெளிவானதாகும்.

யூனுஸ் இப்னு உபைத்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (கால்) விலங்கு குறித்த ஹதீஸ் நபி(ஸல்) அவர்கள் கூறியது என்றே கருதுகிறேன்.

அபூ அப்தில்லாஹ் புகாரியாகிய நான் கூறுகிறேன்: கழுத்தில் பூட்டப்படும் விலங்குகளுக்கே ‘அஃக்லால்’ எனப்படும்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7018

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் அளித்திருந்த அன்சாரிப் பெண்களில் ஒருவரான உம்முல் அலா(ரலி) அறிவித்தார். (நாடு துறந்து மதீனா வந்தடைந்த) முஹாஜிர்கள் (யார் எவருடைய வீட்டில் தங்குவ(என்பதை முடிவு செய்வ)தற்காக அன்சாரிகள் சீட்டுக்குலுக்கிப் போட்டபோது உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) அவர்கள் எங்கள் பொறுப்பில் வந்தார்கள். அப்பால் அவர் நோய்வாய்ப்பட்டார். அவருக்குச் சிகிச்சை அளித்தோம். இறுதியில் அவர் இறந்தார். பிறகு நாங்கள் அவரை (நீராட்டி) அவரின் ஆடையிலேயே கஃபனிட்டோம். இந்த நேரத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நான், (உஸ்மானை நோக்கி) ‘சாயிபின் தந்தையே! உம்மீது இறையருள் பொழியட்டும்; அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தி விட்டான் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்’ என்று சொன்னேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘(அவரை அல்லாஹ் கண்ணியப் படுத்தியுள்ளான் என்பது) உனக்கெப்படித் தெரியும்?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (இது பற்றி) எனக்குத் தெரியாது’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘(உஸ்மான் இப்னு மழ்வூன்) இறந்து விட்டார். அல்லாஹ்விடமிருந்து அவருக்கு நான் நன்மையையே எதிர்பார்க்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதராயிருந்தும் என்னிடம் (மறுமையில்) எவ்வாறு நடந்து கொள்ளப்படும் என்பதோ, உங்களிடம் எவ்வாறு நடந்துகொள்ளப்படும் என்பதோ எனக்கே தெரியாது’ என்றார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூறுவதேயில்லை.

பிறகு உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) அவர்களுக்குரிய நீருற்று ஒன்று ஒடுவதை நான் (கனவில்) கண்டேன். எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிச் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் ‘அது (வாழ்நாளில் அவர் புரிந்த) நற்செயல். அது (இன்று) அவருக்காக(ப் பெருக்கெடுத்து) ஓடுகிறது’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7019

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் (கனவில்) ஒரு கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டிருந்தேன். அப்போது அபூ பக்ரும் உமரும் வந்தார்கள். (நான் நீர் இறைத்து முடித்த பின்) அபூ பக்ர் அவர்கள் வாளியை எடுத்து ‘ஒரு வாளி நீரை’ அல்லது ‘இரண்டு வாளிகள் நீரை’ இறைத்தார்கள். அவர் இறைத்தபோது (சற்று) சோர்வு தென்பட்டது. அல்லாஹ் அவருக்கு மன்னிப்பளிப்பானாக! பிறகு அபூ பக்ர் கரத்திலிருந்து உமர் அவர்கள் அதை எடுத்துக்கொள்ள, அது அவரின் கையில் பெரியதொரு வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) மக்களில் அவரைப் போன்று சீராகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய புத்திசாலியான (அபூ ர்வத்) தலைவர் ஒருவரை நான் கண்டதில்லை. மக்கள் (தாகம் தீரத் தாங்களும் அருந்தி தங்கள் ஒட்டகங்களுக்கும் நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவுக்கு அவர் நீர் இறைத்தார் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7020

அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோர் (ஆட்சிக் காலம்) தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் கண்ட கனவு குறித்து அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஒரு கிணற்றைச் சுற்றி) மக்கள் திரள்வதை நான் (கனவில்) கண்டேன். அப்போது அபூ பக்ர் அவர்கள் எழுந்து ‘ஒரு வாளி நீரை’ அல்லது ‘இரண்டு வாளிகள் நீரை’ இறைத்தார்கள். அவர் இறைத்தபோது சற்று சோர்வு தென்பட்டது. அல்லாஹ் அவருக்கு மன்னிப்பு அளிப்பானாக! பிறகு உமர் இப்னு அல்கத்தாப் எழுந்தார். (அந்த வாளியை அபூ பக்ர் அவர்களின் கையிலிருந்து எடுத்துக்கொண்டார். அவரின் கையில்) அது பெரியதொரு வாளியாக மாறியது. மனிதர்களில் அவரைப் போன்று சீராகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய (அபூ ர்வத் தலைவர்) ஒருவரை நான் கண்டதில்லை. மக்கள் (தாகம் தீரத் தாங்களும் நீரருந்தி தங்கள் ஒட்டகங்களுக்கும் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவிற்கு அவர் நீர் இறைத்தார்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7021

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை, வாளி தொங்கிக் கொண்டிருந்த ஒரு கிணற்றின் அருகே கண்டேன். அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவிற்கு(த் தண்ணீர்) இறைத்தேன். பிறகு அபூ குஹாஃபா அவர்களின் புதல்வர் (அபூ பக்ர் அவர்கள்) அதை எடுத்துக்கொண்டு அந்தக் கிணற்றிலிருந்து ‘ஒரு வாளி நீரை’ அல்லது ‘இரண்டு வாளிகள் நீரை’ இறைத்தார். அவர் (சிறிது நேரம்) இறைத்தபோது சோர்வு தென்பட்டது. அல்லாஹ் அவருக்கு மன்னிப்பளிப்பானாக! பிறகு அது மிகப்பெரிய வாளியாக மாறிவிட்டது. அப்போது அதை கத்தாபின் புதல்வர் உமர் எடுத்துக்கொண்டார் உமர் இறைத்ததைப் போன்று இறைக்கிற (வலிமை மிக்க) ஒரு புத்திசாலியான (அபூ ர்வத்) தலைவர் ஒருவரை மக்களில் நான் பார்த்ததில்லை. மக்கள் (தாகம் தீரத் தாங்களும் நீரருந்தி, தம் ஒட்டகங்களுக்கும் புகட்டி, நீர்நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவிற்கு அவர் நீர் இறைத்தார் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7022

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் உறங்கிக் கொண்டிருக்கையில் (கனவில்) ஒரு நீர்த் தடாகத்தின் அருகில் இருந்து கொண்டு மக்களுக்கு நான் நீர் புகட்டிக் கொண்டிருக்கக் கண்டேன். அப்போது அபூ பக்ர் அவர்கள் என்னிடம் வந்து எனக்கு ஓய்வளிப்பதற்காக என் கரத்திலிருந்த அந்த வாளியை வாங்கி இரண்டு வாளிகள் தண்ணீர் இறைத்தார். அவர் இறைத்தபோது (சற்று) சோர்வு தென்பட்டது. அல்லாஹ் அவருக்கு மன்னிப்பளிப்பானாக! பிறகு கத்தாபின் புதல்வர் (உமர்) வந்தார். அவர் அபூ பக்ர் அவர்களிடமிருந்து (அந்த வாளியை) எடுத்துக்கொண்டு மக்கள் (தாகம் தீரத் தாங்களும் அருந்தி தங்கள் ஒட்டகங்களுக்கும் புகட்டிவிட்டுத்) திரும்பிச் செல்லும் வரை இறைத்துக்கொண்டேயிருந்தார். அப்போதும் தடாகத்தில் நீர் பொங்கிக் கொண்டிருந்தது என அபூ ஹுரைர(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7023

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நாங்கள் (ஒருநாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்திருந்தோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் கண்டேன். அங்கு ஓர் அரண்மனைக்கு அருகில் ஒரு பெண் அங்கசுத்தி (உளூ) செய்துகொண்டிருந்தாள். நான், (வானவர்களிடம்) ‘இந்த அரண்மனை யாருக்குரியது?’ என்றேன். அதற்கவர்கள், ‘உமருக்குரியது’ என்றார்கள். அப்போது (அதனுள் நுழைந்து பார்க்க எண்ணினேன். ஆனால்,) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வரவே (அதனுள் நுழையாமல்) திரும்பி வந்து விட்டேன்’ என்றார்கள். இதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள் (ஆனந்தத்தால்) அழுதுவிட்டு ‘இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்!’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7026

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஒருநாள்) நான் தூங்கிக் கொண்டிருக்கையில் (கனவில்) நான் கஅபாவைச் சுற்றிவந்து கொண்டிருக்கக் கண்டேன். அப்போது மாநிறமான தலைமுடி படிந்து தொங்கிக் கொண்டிருந்த ஒருவர் தம் தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க இரண்டு மனிதர்களுக்கிடையே (சாய்ந்தவராக கஅபாவைச் சுற்றிக்கொண்டு) இருந்தார். அப்போது நான், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். ‘மர்யமின் மகன் (ஈசா)’ என பதிலளித்தனர். பிறகு நான் திரும்பிப் பார்த்த படியே சென்றபோது, அங்கு சிவப்பான, உடல் பருமனான, சுருட்டைத் தலை முடியுள்ள வலக் கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான். அவனுடைய கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. நான், ‘இவன் யார்?’ என்று கேட்டேன். ‘இவன்தான் தஜ்ஜால்’ என்று பதிலளித்தனர். (தோற்றத்தில்) மக்களிலேயே அவனுக்கு மிகவும் ஒப்பானவன் இப்னு கத்தன்தான். இப்னு கத்தன் குஸாஆ குலத்தின் பனுல் முஸ்தலிக் குடும்பத்திலுள்ள ஒரு மனிதன் ஆவான் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7027

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) பால்கோப்பை ஒன்று என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் அதிலிருந்த பாலை அருந்த அது (என் நகத்தின் ஊடே வெளியேறி) ஓடக் கண்டேன். பிறகு மீதியை உமருக்குக் கொடுத்தேன்

(அப்போது) மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அந்தப் பாலுக்கு என்ன விளக்கம் கண்டீர்கள்?’ என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள், ‘அறிவு’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7028

இப்னு உமர்(ரலி) அவர்களின் தோழர்களில் சிலர் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கனவு கண்டால் அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அல்லாஹ் நாடிய (விளக்கத்)தைக் (கனவுக்குக்) கூறுவார்கள். நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னல் இளம் வயது வாலிபனாய் இருந்த சமயம் பள்ளிவாசலே என் வீடாய் இருந்தது. (அங்கு தான் உறங்குவேன்.) அப்போது நான் மனத்துக்குள்ளே ‘உனக்கு ஏதேனும் நன்மை நடப்பதாயிருந்தால் இவர்களைப் போன்று நீயும் (கனவு) கண்டிருப்பாய்’ என்று சொல்லிக் கொள்வதுண்டு. ஒரு (நாள்) இரவு நான் உறங்கப்போனபோது, ‘அல்லாஹ்வே! என் விஷயத்தில் நீ ஏதேனும் நன்மையை அறிந்திருந்தால் எனக்கும் கனவைக் காட்டு’ என்று பிரார்த்தித்தேன். நான் அவ்வாறே (உறக்கத்தில்) இருந்தபோது (கனவில்) இரண்டு வானவர்கள் என்னிடம் வந்தனர். அவர்கள் ஒவ்வொருவருடைய கையிலும் முனை வளைந்த இரும்புத் தடி ஒன்று இருந்தது. அவர்கள் இருவரும் என்னை நரகத்திற்கு அழைத்துச் சென்றனர். நான் அவர்கள் இருவரிடையே இருந்து கொண்டு அல்லாஹ்விடம், ‘அல்லாஹ்வே! நரகத்தைவிட்டு உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று இறைஞ்சிக் கொண்டிருந்தேன்.

பிறகு தம் கையில் இரும்புத் தடி இருக்க இன்னொரு வானவர் என்னைச் சந்திக்கக் கண்டேன். அவர் (என்னிடம்) ‘இனி ஒருபோதும் நீங்கள் பீதியடையமாட்டீர்கள்; நீங்கள் அதிகமாகத் தொழுதால் நீங்கள் நல்ல மனிதர் தாம்’ என்றார். அப்போது அந்த வானவர்கள் (இருவரும்) என்னை நரகத்தின் விளிம்பில் கொண்டுபோய் நிறுத்தினர். கிணற்றின் சுற்றுச் சுவரைப் போன்று அதற்கு சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. கிணற்றின் இரண்டு பக்கவாட்டிலுமுள்ள கல் தூண்களைப் போன்று தூண்கள் அதற்கும் இருந்தன. ஒவ்வோர் இரண்டு தூண்களுக்கும் இடையே ஒரு வானவர் இருந்தார். அவரின் கையில் முனை வளைந்த ஓர் இரும்புத் தடி இருந்தது. அந்த நரகத்தில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு தலைகீழாகத் தொங்கவிடப் பட்டிருந்த பல மனிதர்களை கண்டேன். அதில் (எனக்கு அறிமுகமான) குறைஷியர் சிலரை நான் கண்டு கொண்டேன். பிறகு அவ்வானவர்கள் (சொர்க்கவாசிகளின் வழித்தடமான) வலப்பக்கத்தில் என்னைக் கொண்டு சென்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7029

(தொடர்ந்து) இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (நான் உறங்கி எழுந்ததும்) இதை (என் சகோதரியும் நபி(ஸல்) அவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் விவரித்துச் சொன்னேன். ஹஃப்ஸா(ரலி) அவர்கள் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ் நல்ல மனிதர்தாம் (இரவின் ஒரு பகுதியில் தொழுபவராயிருந்தால்)’ என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) நாஃபிஉ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இதைக் கேட்டபின் இப்னு உமர்(ரலி) அவர்கள் (இரவில்) அதிகமாகத் தொழுது கொண்டேயிருந்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7030

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நான் மணமாகாத இளைஞனாக இருந்தேன். அப்போது நான் பள்ளிவாசலில் தான் இரவில் தங்குவேன். (நபித்தோழர்களில்) யாரேனும் கனவு கண்டால் (காலையில்) அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். (ஒரு நாள்) நான், ‘அல்லாஹ்வே! உன்னிடம் எனக்கு நன்மை ஏதேனும் இருக்குமானால் எனக்கு ஒரு கனவைக் காட்டுவாயாக! அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு விளக்கம் கூறவேண்டும்’ என்று பிரார்த்தித்துவிட்டு உறங்கினேன். அப்போது (கனவில்) என்னிடம் இருவானவர்கள் வந்து அவர்களிருவரும் என்னை அழைத்துக்கொண்டு போவதைக் கண்டேன். அப்போது அவர்கள் இருவரையும் மற்றொரு வானவர் சந்தித்தார். அப்போது அவர் என்னிடம், ‘இனி எப்போதும் நீங்கள் பீதியடைய மாட்டீர்கள். நீங்கள் நல்ல மனிதர்’ என்றார். பிறகு அவர்கள் இருவரும் என்னை நரகத்தை நோக்கி அழைத்துச் சென்றனர். கிணற்றின் சுற்றுச்சுவர் போன்று அதற்கு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டடிருந்தது. அப்போது அதில் மனிதர்கள் பலர் இருந்தனர். அவர்களில் எனக்குத் தெரிந்த சிலரும் இருந்தார்கள். பிறகு அவர்கள் இருவரும் (சொர்க்கவாசிகளின் வழித்தடமான) வலப் பக்கத்திற்கு என்னைக் கொண்டு போனார்கள். விடிந்ததும் அதை நான் (என் சகோதரியும் நபி(ஸல்) அவர்களின் துணைவியருமான) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் சொன்னேன்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7031

ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் அதை விவரித்தபோது அவர்கள், ‘அப்துல்லாஹ் (இப்னு உமர்) நல்ல மனிதர் தாம்; இரவின் ஒரு பகுதியில் தொழுதால் (நன்றாயிருக்கும்)’ என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதைக் கேட்ட பின் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் இரவில் அதிகமாகத் தொழக் கூடியவராயிருந்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7032

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ‘நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) ஒரு பால்கோப்பை என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் அதிலிருந்த பாலை அருந்தினேன். பின்னர் அதன் மீதியை கத்தாபின் புதல்வர் உமருக்குக் கொடுத்தேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! பாலுக்கு என்ன விளக்கம் கண்டீர்கள்?’ என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள் ‘அறிவு’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7033

உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எடுத்துரைத்த அவர்களின் கனவைப் பற்றி நான் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7034

அப்போது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள் என என்னிடம் கூறப்பட்டது: நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என் கைகளில் தங்கத்தலான இரண்டு காப்புகள் வைக்கப்பட்டன. நான் அவ்விரண்டையும் கண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டதுடன் அவற்றை வெறுக்கவும் செய்தேன். உடனே (அவற்றை ஊதிவிட) எனக்கு அனுமதியளிக்கப் பட்டது. நான் அவ்விரண்டையும் ஊத, அவை பறந்து போய்விட்டன. அவ்விரண்டும் (இனி வரவிருக்கும்) இரண்டு பெரும் பொய்யர்களைக் குறிப்பதாக அதற்கு விளக்கமும் கண்டேன்.

அறிவிப்பாளர் உபைத்துல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவ்விருவரில் ஒருவன் யமன் நாட்டில் ஃபைரோஸ் என்பவரால் கொல்லப்பட்ட ‘(அஸ்வத்) அல்அன்ஸீ’ ஆவான்; மற்றொருவன் முசைலிமா ஆவான்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7035

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் மக்கா நகரைத் துறந்து அங்கிருந்து பேரீச்சந் தோட்டங்கள் நிறைந்த ஒரு பூமிக்குச் செல்வதாகக் கனவு கண்டேன். அந்த பூமி யமாமாகவோ அல்லது ஹஜராகவோ இருக்கும் என்றே நான் எண்ணினேன். ஆனால், (நான் கண்ட) அந்த நகரம் யஸ்ரிப் -மதீனா ஆகிவிட்டது. மேலும், அந்தக் கனவில் சில காளை மாடுகளைப் பார்த்தேன். (அவை அறுக்கப்பட்டன.) உஹுதுப் போர் நாளில் (கொல்லப்பட்டவர்களுக்கு) அல்லாஹ் அளித்த அந்தஸ்து (அவர்கள் இந்த உலகில் இருந்த நிலையைவிட அவர்களுக்குச்) சிறந்ததாகும். எனவே, (அந்த மாடுகள்) உஹுதுப் போரின்போது கொல்லப்பட்ட இறை நம்பிக்கையாளர்களைக் குறிப்பவையாகும். நன்மை என்பது அல்லாஹ் நமக்குக் கொணர்ந்த நன்மையும் (இரண்டாம்) பத்ருப்போருக்குப் பிறகு அல்லாஹ் நமக்களித்த நம்முடைய வாய்மைக்கான பரிசும் (கைபர், மக்கா வெற்றிகளும்) ஆகும் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7036

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாமே (காலத்தால்) பிந்தியவர்களும் மறுமை அந்தஸ்தால்) முந்தியவர்களும் ஆவோம் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7037

மேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) பூமியின் கருவூலங்கள் என்னிடம் கொண்டு வரப்பட்டன. அப்போது என் கைகளில் தங்கத்தாலான இரண்டு காப்புகள் வைக்கப்பட்டன. அவ்விரண்டும் எனக்கு சுமையாக அமைந்ததுடன் மனவேதனையும் அளித்தன. அப்போது அவற்றை ஊதிவிடுமாறு (இறைவனின் தரப்பிலிருந்து) எனக்கு அறிவிக்கப்பட்டது. அவ்வாறே நான் ஊத, அவையிரண்டும் பறந்து போய்விட்டன. அவ்விரண்டு (காப்புகளு)ம் நான் இருக்கும் போதே தோன்றியுள்ள ஸன்ஆவாசியும் யமாமாவாசியுமான இரண்டு பெரும் பொய்யர்களைக் குறிப்பதாக விளக்கம் கண்டேன்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7038

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். தலைவிரி கோலத்துடன் கறுப்பு நிறப் பெண்ணொருத்தி மதீனாவிலிருந்து வெளியேறி அங்கிருந்து ‘மஹ்யஆ’ சென்று தங்குவதைப் போன்று நான் (கனவு) கண்டேன். மதீனாவின் பெருநோய்கள் மஹ்யஆவுக்கு இடம் பெயரச் செய்யப்பட்டுவிட்டது என்று நான் (அதற்கு) விளக்கம் கண்டேன். ‘மஹ்யஆ’ என்பது ‘அல்ஜுஹ்ஃபா’ எனும் இடமாகும் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7041

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் கனவில் (என்) வாள் ஒன்றை அசைக்க அதன் முனை முறிந்துவிட்டதாகக் கண்டேன். அது உஹுதுப் போரின்போது இறை நம்பிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பைக் குறித்தது. பிறகு (அதே கனவில்) மற்றொரு முறை அந்த வாளை நான் அசைக்க, அது முன்பிருந்ததை விட மிக அழகாக மாறிவிட்டது. அது அல்லாஹ் (அதே உஹுதுப் போரில்) கொணர்ந்த உறுதிப்பாட்டையும் (சிதறி ஓடிய) முஸ்லிம்கள் மீண்டும் ஒன்று திரண்டதையும் குறித்தது என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7042

‘ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) ‘தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது ‘தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் ‘அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றோர் அறிவிப்பில் ‘தம் கனவு குறித்து பொய் சொல்கிறவர்…’ என்று வந்துள்ளது.

அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் ‘உருவப்படம் வரைகிறவர்… கனவு கண்டதாக(ப் பொய்) சொல்கிறவர்… (மக்களின் பேச்சுகளை) செவிதாழ்த்திக் கேட்பவர்…’ என்று இடம் பெற்றுள்ளது.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பில், ‘செவிதாழ்த்திக் கேட்கிறவர்… கனவு கண்டதாக(ப் பொய்) சொல்கிறவர்… (உயிரினத்தின்) உருவப்படம் வரைகிறவர்…’ என்று இடம் பெற்றுள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7043ஒய்,

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். தம் கண் காணாத ஒன்றை அது கண்டதாகக் கூறுவது மாபெரும் பொய்களில் ஒன்றாகும் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7044

அபூ ஸலமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் பல கனவுகளைக் கண்டு அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தேன். இறுதியில் அபூ கத்தாதா(ரலி) அவர்கள் (இவ்வாறு) கூற கேட்டேன்: நானும் பல கனவுகளைக் கண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுவந்தேன். இறுதியில் நபி(ஸல்) அவர்கள், ‘நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். எனவே, உங்களில் ஒருவர் தாம் விரும்புகிற கனவொன்றைக் கண்டால் தம் நேசத்துக் குரியவரைத் தவிர வேறெவரிடமும் அதைப் பற்றித் தெரிவிக்க வேண்டாம். மேலும், அவர் தாம் விரும்பாததைக் கண்டால் அந்த கனவின் தீமையிலிருந்தும் ஷைத்தானின் தீங்கிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரி (தம் இடப் பக்கத்தில்) மூன்று முறை துப்பட்டும். அந்தக் கனவைப் பற்றி எவரிடமும் தெரிவிக்க வேண்டாம். (அவ்வாறு செய்தால்) அது அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஒருபோதும் ஏற்படுத்திட முடியாது’ என்று கூறியதைக் கேட்டேன்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7045

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது (என அறிந்து), அதற்காக அல்லாஹ்வை அவர் போற்றட்டும்! அதை (தமக்கு விருப்பமானவர்களிடம் மட்டும்) தெரிவிக்கட்டும்! அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும்; அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7046

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘(இறைத்தூதர் அவர்களே!) நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு; குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு. அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம் வரைப் போய்ச் சேர்ந்தது. அப்போது (இறைத்தூதர் அவர்களே!) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக் கொண்டு மேலே சென்றார். பிறகு (நான்காவதாக) இன்னொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக்கொள்ள அந்தக் கயிறு அறுந்து (விழுந்து)விட்டது. பிறகு (மீண்டும்) அக்கயிறு (வானத்துடன்) இணைக்கப்பட்டது’ என்றார்.

அப்போது (அங்கிருந்த) அபூ பக்ர்(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தக் கனவிற்கு விளக்கம் அளிக்க என்னை அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘(சரி) இதற்கு விளக்கம் சொல்லுங்கள்’ என்றார்கள்.

அபூ பக்ர்(ரலி) அவர்கள், ‘அந்த மேகம் தான் இஸ்லாமாகும். (மேகத்திலிருந்து) சொட்டிக் கொண்டிருந்த தேனும் நெய்யும் குர்ஆனாகும். அதன் இனிமை சொட்டிக் கொண்டிருக்கிறது. குர்ஆனிலிருந்து அதிகம் பெற்றவர்களும் உள்ளனர்; குறைவாகப் பெற்றவர்களும் உள்ளனர். வானிலிருந்து பூமிவரை நீண்டு செல்லும் அந்தக் கயிறானது, நீங்கள் இருந்து வருகிற சத்திய(மார்க்க)மாகும். அதை நீங்கள் பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவிற்கு) உயர்த்திவிடுகிறான். பிறகு உங்களுக்குப் பின்னால் இன்னொரு மனிதர் அதைப் பற்றுகிறார். அதன் மூலம் அவரும் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்துவிடுகிறார். அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார். (ஆனால்) அது அவரோடு அறுந்துவிடுகிறது. பின்னர் அவருக்காக அக்கயிறு இணைக்கப்படுகிறது. அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார்’ என்று கூறிவிட்டு, ‘இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (நான் சொன்ன விளக்கம்) சரியா? அல்லது தவறா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘சிலவற்றைச் சரியாகச் சொன்னீர்கள்; சிலவற்றைத் தவறாகச் சொல்லிவிட்டீர்கள்’ என்றார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்கவேண்டும்’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘(இனி) சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் சொல்லப்போவதில்லை)’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7047

சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் ‘உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?’ என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்.

இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, ‘நடங்கள்’ என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். – அல்லது பிளந்தார் – பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆகிவிடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், ‘அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?’ என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்’ என்றனர்.

அப்படியே நாங்கள் நடந்து அடுப்பு போன்று (மேல் பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி விசாலமாகவும்) இருந்த (பொந்து) ஒன்றின் அருகில் வந்தோம். அதனுள்ளிருந்து (மனிதர்களின்) கூச்சலும் ஆரவாரமும் கேட்டது. உடனே நாங்கள் அதற்குள்ளே எட்டிப் பார்த்தோம். அங்கு ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக இருந்தார்கள். அங்கு அவர்களுக்குக் கீழேயிருந்து நெருப்பு ஜுவாலை ஒன்று (மேலே) வருகிறது. அந்த ஜுவாலை அவர்களை அடையும்போது அவர்கள் ஓலமிடுகிறார்கள். நான் (என்னுடன் வந்த) அவ்விரு(வான)வரிடம், ‘இவர்கள் யார்?’ என்று கேட்டேன். அவர்கள், ‘செல்லுங்கள், செல்லுங்கள்’ என்று என்னிடம் கூறினர்.

அப்படியே நாங்கள் நடந்து ஓர் ஆற்றின் அருகே சென்றோம். அது இரத்தத்தைப் போன்று சிவப்பாக இருந்தது. அந்த ஆற்றில் ஒருவந் நீந்திக் கொண்டிருந்தான். ஆற்றின் கரையில் தமக்கருகே நிறைய கற்களைக் குவித்துவைத்தபடி ஒருவர் இருக்கிறார். அந்த நீச்சல்காரன் நீந்தி நீந்தி, கற்களைக் குவித்துவைத்துக் கொண்டிருக்கும் மனிதரிடம் (கரைக்குச்) சென்று அவருக்கு முன்னால் தம் வாயைத் திறக்கிறான். உடனே (கரையில் நிற்பவர்) அவனுடைய வாயில் கற்களைப் போடுகிறார். உடனே அவன் நீந்தியபடி (திரும்பிச்) சென்றுவிட்டு மீண்டும் அவரை நோக்கி வருகிறான். அவரிடம் அவன் திரும்பி வரும்போதெல்லாம் தன்னுடைய வாயை அவன் திறந்து காட்ட அவர் அவன் வாயில் கற்களைக் போட்டுக் கொண்டிருக்கிறார். (அவன் திரும்பி பழைய இடத்திற்கே தள்ளப்படுகிறான். இப்படியே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.) நான் அவ்விரு(வான)வரிடமும், ‘இவ்விருவரும் யார்?’ என்று கேட்டேன். அவர்கள், என்னிடம், ‘செல்லுங்கள், செல்லுங்கள்’ என்று கூறினார்கள்.

நாங்கள் அப்படியே நடந்து ஓர் அசிங்கமான தோற்றம் கொண்ட மனிதர் ஒருவரிடம் சென்றோம். அவர் நீ காணுகிற மனிதர்களிலேயே மிகவும் அருவருப்பான தோற்றமுடையவர் போன்று காணப்பட்டார். அங்கு அவர் தமக்கு அருகே நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்துகொண்டிருந்தார். நான் அவ்விருவரிடமும், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், ‘செல்லுங்கள், செல்லுங்கள்’ என்று கூறினர்.

அப்படியே நடங்கள் அடர்ந்துயர்ந்த பசுமையான ஒரு பூங்காவிற்குச் சென்றோம். அதில் வசந்த காலத்தின் எல்லா வண்ணப் பூக்களும் காணப்பட்டன. அந்தப் பூங்காவிற்கு நடுவில் உயரமான மனிதர் ஒருவர் இருந்தார். வான் நோக்கி உயர்ந்திருந்தால் அவரின் தலையை என்னால் (எளிதில்) பார்க்க முடியவில்லை. அந்த மனிதரைச் சுற்றி நான் ஒருபோதும் கண்டிராத அளவிற்கு ஏராளமான சிறுவர்கள் இருந்தார்கள். நான் அவ்விருவரிடமும், ‘இந்த (உயரமான) மனிதர் யார்? இந்தச் சிறுவர்கள் யார்?’ என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், ‘செல்லுங்கள், செல்லுங்கள்’ எனக் கூறிவிடவே நடந்து ஒரு பெரும் பூங்காவுக்கு வந்தோம். அதைவிட பெரிய அழகான பூங்காவை நான் ஒருபோதும் கண்டதில்லை. (அதில் ஒரு பெரிய மரமும் இருந்தது.) அவ்விருவரும் என்னிடம், ‘அதில் ஏறுங்கள்’ என்றனர். அப்படியே அதில் நாங்கள் ஏறி தங்கம் மற்றும் வெள்ளி செங்கற்களால் கட்டப்பட்டிருந்த ஒரு நகரத்திற்கு வந்தோம். அந்த நகரத்தின் தலை வாயிலை அடைந்து (அதைத்) திறக்குமாறு கூறினோம். உடனே எங்களுக்காக அது திறக்கப்பட்டது. நாங்கள் அதில் நுழைந்தோம். அங்கு நீ காண்கிறவற்றிலேயே மிகவும் அழகான பாதித் தோற்றமும் நீ காணுகிறவற்றிலேயே மிகவும் அருவருப்பான (மறு) பாதித் தோற்றமும் கொண்ட சில மனிதர்கள் எங்களை எதிர்கொண்டனர். அவர்களைப் பார்த்து (என்னுடன் வந்த) அவ்விருவரும், செல்லுங்கள்; (சென்று) அந்த நதியில் குதியுங்கள்’ என்றனர். அங்கு குறுக்கே ஒரு நதி பாய்ந்து கொண்டிருந்தது. அதன் நீர் தூய வெண்ணிறத்தில் காணப்பட்டது. எனவே, அவர்கள் சென்று அதில் விழுந்து (குளித்துவிட்டு) தங்களிடமிருந்து அந்த அசூசை நீங்கி விட்டிருந்த நிலையில் மிகவும் பொலிவான வடிவத்திற்கு மாறியவர்களாக எங்களிடம் திரும்பிவந்தனர்.

அவ்விருவரும் என்னிடம், ‘இது (-இந்த நகரம்) தான் ‘அத்ன்’ எனும் (நிலையான) சொர்க்கமாகும். இதுவே உங்கள் ஓய்விடமாகும்’ என்றார். நான் பார்வையை உயர்த்தி மேலே பார்த்தபோது அங்கு வெண் மேகத்தைப் போன்ற மாளிகையொன்றைக் கண்டேன். அவ்விருவரும் என்னிடம், ‘இது உங்கள் இருப்பிடம்’ என்றனர். நான் அவர்களிடம், ‘உங்கள் இருவருக்கும் அல்லாஹ் சுபிட்சம் வழங்கட்டும்! என்னை விடுங்கள். நான் இதில் நுழைந்து கொள்கிறேன்’ என்றேன். அவ்விருவரும், ‘இப்போது முடியாது நீங்கள் (மறுமையில்) அதில் நுழையத்தான் போகிறீர்கள்’ என்றனர்.

நான் அவ்விருவரிடமும், ‘நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?’ என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், ‘(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம். கல்லால் தலை நசுக்கப்பட்டுக் கொண்டிருந்த மனிதருக்கு அருகில் முதலில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் குர்ஆனை (மனனம் செய்து) எடுத்துக் கொண்டுவிட்டுப் பிறகு அதை (மறந்து) விட்டவன் ஆவான். மேலும், அவன் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றாமல் தூங்கிவிட்டவனும் ஆவான். (அடுத்து) தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக் கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும். அடுப்பு போன்ற கட்டடம் ஒன்றில் நிர்வாணமாகக் கிடந்த ஆண்களும் பெண்களும் விபசாரம் புரிந்த ஆண்களும் விபசாரம் புரிந்த பெண்களுமாவர். ஆற்றில் நீந்திக்கொண்டும் (கரையை நெருங்கும்போது வாயில்) கல் போடப்பட்டுக் கொண்டும் இருந்த ஒரு மனிதனுக்கு அருகே நீங்கள் சென்றீர்களே! அவன் வட்டி வாங்கித் தின்றவன் ஆவான். நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்து கொண்டிருந்த அருவருப்பான தோற்றத்திலிருந்த அந்த மனிதர் நரகத்தின் காவலரான மாலிக் ஆவார். அந்தப் பூங்காவிலிருந்த உயரமான மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்களாவார். அவர்களைச் சுற்றியிருந்த சிறுவர்கள் இயற்கை மரபில் (இஸ்லாத்தில்) இறந்துவிட்ட சிறுவர்கள் ஆவர்.

இதை நபி(ஸல்) அவர்கள் கூறியபோது முஸ்லிம்களில் சிலர், ‘இறைத்தூதர் அவர்களே! இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் (அந்தப் பூங்காவில் இருந்த குழந்தைகளில் அடங்குவார்களா?)’ என்று கேட்டனர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(ஆம்) இணைவைப்பாளர்களுடைய குழந்தைகளும் தாம்’ என்று பதிலளித்தார்கள்.

(தொடர்ந்து என்னுடன் வந்த அவ்விருவரும் கூறுகையில்,) ஒரு பாதி அழகாகவும் மறுபாதி அசிங்கமாகவும் காட்சியளித்த மக்கள், நல்லறங்களுடன் தீமைகளையும் கலந்து விட்டவர்களாவர்; (பின்னர்) அவர்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் (என்று கூறினர்).

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.