95. தனிநபர் தரும் தகவல்கள்

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7246

மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். ஒத்த வயதுடைய இளைஞர்கள் பலர் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் இருபது நாள்கள் தங்கினோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மென்மையானவர்களாக இருந்தார்கள். நாங்கள் எங்கள் வீட்டாரிடம் செல்ல ஆசைப்படுவதாக அவர்கள் எண்ணியபோது நாங்கள் எங்களுக்குப் பின்னே விட்டு வந்தவர்களை (எங்கள் மனைவி மக்களை)ப் பற்றி எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களுக்கு விவரித்தோம். நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் வீட்டாரிடம் நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்; அவர்களிடையே தங்கி அவர்களுக்கு (மார்க்கத்தை)க் கற்பியுங்கள். அவர்களுக்கு (கடமைகளை நிறைவேற்றும்படியும் விலக்கப்பட்டவற்றைத் தவிர்க்கும் படியும்) கட்டளையிடுங்கள்’ என்றார்கள். மேலும், ‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்துவிட்டால்  உங்களில் ஒருவர் உங்களுக்குத் தொழுகை அறிவிப்பு (பாங்கு) கொடுக்கட்டும்; உங்களில் பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்’ என்றார்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் பல விஷயங்களைக் கூறினார்கள். அவற்றில் சிலவற்றை நான் நினைவில் வைத்துள்ளேன். சிலவற்றை நினைவில் வைக்கவில்லை.

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7247

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நீங்கள் (நோன்பின் போது) சஹ்ர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு (பாங்கு) உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில், இரவில் அவர் தொழுகை அறிவிப்புச் செய்வது’ அல்லது ‘அவர் அழைப்பது’ உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டிருப்போர் திரும்புவதற்காகவும் உறங்குவோருக்கு விழிப்பூட்டுவதற்காகவும் தான். ஃபஜ்ர் (நேரம்) என்பது இவ்வாறு (அகலவாட்டில் அடிவானில் மட்டும்) தென்படும் வெளிச்சமன்று. (நீளவாட்டில் எல்லாத் திசைகளிலும் பரவிவரும் வெளிச்சமே ஃபஜ்ருக்கு அடையாளமாகும்.)

அறிவிப்பாளர் யஹ்யா இப்னு ஸயீத் அல்கத்தான்(ரஹ்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து, இவ்வாறு வெளிப்படுத்தி, தம் இரண்டு சுட்டு விரல்களையும் நீட்டிக் காட்டினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7248

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ பிலால் (ரமளான் மாதத்தின்) இரவில் முன்னறிவிப்புக்காகப் பாங்கு) அழைப்புக் கொடுப்பார். எனவே, அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஃபஜ்ர் தொழுகைக்கு) அழைக்கிற வரை உண்ணுங்கள்; பருகுங்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7249

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையை எங்களுக்கு ஐந்து ரக்அத்களாகத் தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்களிடம், ‘தொழுகையின் (ரக்அத்) அதிகரிக்கப்பட்டு விட்டதா?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘என்ன அது?’ என்று (வியப்புடன்) கேட்டார்கள். மக்கள், ‘ஐந்து ரக்அத்கள் தொழுது விட்டீர்களே?’ என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் சலாம் கொடுத்த பின்பு (மறதிக்குரிய) சிரவணக்கங்கள் ( சஜ்தா சஹ்வு ) இரண்டு முறை செய்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7250

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (லுஹ்ர் அல்லது அஸ்ர் தொழுகையில்) இரண்டு ரக்அத்கள் தொழுதவுடன் (சலாம் கொடுத்துத்) திரும்பி விட்டார்கள். உடனே துல்யதைன்(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! தொழுகையின் ரக்அத் குறைக்கப்பட்டு விட்டதா?’ என்று கேட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), ‘துல்யதைன் கூறுவது உண்மையா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘ஆம்’ என்றார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுதுவிட்டு சலாம் கொடுத்தார்கள். பிறகு, ‘அல்லாஹு அக்பர்’ என்று சொல்லித் தம் (வழக்கமான) சஜ்தாவைப் போன்று சஜ்தாச் செய்துவிட்டு பிறகு தலையை உயர்த்தினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7251

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். மக்கள் ‘குபா’ எனுமிடத்தில் தொழுகையில் இருந்தபோது ஒருவர் வந்து, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சென்ற இரவு குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (மக்காவிலுள்ள இறையில்லம்) கஅபாவை (தொழுகையில்) முன்னோக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிடப் பட்டுள்ளது. எனவே, (மக்களே!) கஅபாவையே நீங்களும் முன்னோக்கித் தொழுங்கள்’ என்றார். அப்போது மக்களின் முகம் (மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்திருந்த) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே அவர்கள் அப்படியே சுற்றி கஅபாவை நோக்கித் திரும்பினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7252

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது பைத்துல் மக்தீஸ் (நகரிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா இறையில்லத்தை) நோக்கி பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் தொழுதார்கள். (தொழுகையில்) கஅபாவை நோக்கி முகம் திருப்புவதையே அவர்கள் விரும்பி வந்தார்கள். எனவே, அல்லாஹ் ‘(நபியே!) உம்முடைய முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம்; எனவே, நீர் விரும்பும் கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் (இதோ) உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்’ எனும் (திருக்குர்ஆன் 02:144 வது) வசனத்தை அருளினான். இவ்விதம் (தொழுகையிலிருந்த போதே) கஅபாவை நோக்கி முகம் திருப்பப்பட்டார்கள். அந்த அஸ்ர் தொழுகையில் நபி(ஸல்) அவர்களுடன் ஒருவர் தொழுதார். அவர் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறி அன்சாரிகளில் ஒரு குலத்தாரைக் கடந்து சென்றபோது, ‘நபி(ஸல்) அவர்களுடன் தாம் தொழுததாகவும், (தொழுகையிலேயே) அவர்கள் முகம் கஅபாவை நோக்கித் திருப்பப் பட்டதாகவும் தாம் சாட்சியம் அளிப்பதாகச் சொன்னார். உடனே அம்மக்கள் அஸ்ர் தொழுகையில் ருகூஉ செய்து கொண்டிருந்த நிலையில் அப்படியே கஅபாவை நோக்கித் திரும்பினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7253

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நான் அபூ தல்ஹா அல்அன்சாரி(ரலி), அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி), உபை இப்னு கஅப்(ரலி) ஆகியோருககு பேரீச்சங்காய்களால் தயாரித்த மதுவை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அது பேரீச்சங்கனியாலும் தயாரிக்கப்பட்டு வந்தது. அப்போது ஒருவர் வந்து, ‘மது தடை செய்யப்பட்டு விட்டது’ என்றார். உடனே அபூ தல்ஹா(ரலி) அவர்கள், ‘அனஸே! எழுந்து சென்று இந்த மண் பாத்திரங்கள் உடைத்தெறியும்’ என்றார்கள். நான் எழுந்து சென்று (மது ஊற்றி வைக்கும்) எங்களுடைய சாடியொன்றை எடுத்து அதன் அடிப்பாகத்தில் அடித்தேன். அது உடைந்தது.

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7254

ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நஜ்ரான்வாசிகளிடம் ‘நம்பகத்தன்மையில் முறையோடு நடந்து கொள்ளும் நம்பிக்கையாளர் ஒருவரை நிச்சயம் நான் உங்களுடன் அனுப்புவேன்’ என்றார்கள். இதைக் கேட்ட நபித்தோழர்கள் (ஒவ்வொருவரும்) நபியவர்களின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ உபைதா(ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7255

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அவர்களின்) சம்பிக்கைக்குப் பாத்திரமானவர் ஒருவர் உண்டு. (என்னுடைய) இந்தச் சமுதாயத்தாரின் நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா ஆவார் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7256

உமர்(ரலி) அறிவித்தார். அன்சாரிகளில் (எனக்கு) ஒருவர் (நண்பராக) இருந்தார். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இல்லாதபோது, நான் அங்கு செல்வேன்; இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கிடைக்கும் செய்திகளை(ச் சேகரித்து) அவரிடம் கொண்டு செல்வேன். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இல்லாதபோது அவர் (அங்கு) செல்வார்; இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கிடைக்கும் செய்திகளை அவர் என்னிடம் கொண்டு வருவார்.

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7257

அலீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி அவர்களுக்கு (அன்சாரிகளில்) ஒருவரைத் தளபதியாக்கினார்கள். அவர் (ஒரு கட்டத்தில் படைவீரர்களின் மீது கோபம் கொண்டு) நெருப்பை மூட்டி, ‘இதில் நுழையுங்கள்’ என்றார். அவர்கள் அதில் நுழைய முனைந்தார்கள். (படையிலிருந்த) மற்றவர்கள், ‘நாம் இந்த (நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே (இஸ்லாத்திற்கு) வந்தோம்’ என்று கூறினர். எனவே, இதை அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நெருப்பில் புக முனைந்தோர் குறித்து, ‘அவர்கள் அதில் புகுந்திருந்தால் மறுமைநாள் வரை அதிலேயே இருந்திருப்பார்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். மற்றவர்களிடம், ‘அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் கீழ்ப்படிதல் கிடையாது; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7258-7259

உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் இப்னி உத்பா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் இரண்டு பேர் ஒரு வழக்கைக் கொண்டு வந்தததாக அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் ஸைத் இப்னு காலித்(ரலி) அவர்களும் என்னிடம் தெரிவித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7260

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இருந்தபோது கிராமவாசிகளில் ஒருவர் எழுந்து நின்று, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படி எனக்குத் தீர்ப்பளியுங்கள்’ என்றார். உடனே அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து, ‘இவர் சொல்வது உண்மையே; இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படியே அவருக்குத் தீர்ப்பளியுங்கள். எனக்கு (என் தரப்பு நியாயத்தை எடுத்துச்சொல்ல) அனுமதியளியுங்கள்’ என்றார். உடனே அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து, ‘இவர் சொல்வது உண்மையே; இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படியே அவருக்குத் தீர்ப்பளியுங்கள். எனக்கு (என் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்ல) அனுமதியளியுங்கள்’ என்றார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘சரி சொல்’ என்றார்கள். (இதற்கிடையில் அந்தக் கிரமாவாசி,) ‘என் மகன் இவரிடம் கூலிக்கு வேலை செய்து வந்தான். இவருடைய மனைவியுடன் அவன் விபசாரம் புரிந்து விட்டான். அப்போது மக்கள் என் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு என என்னிடம் தெரிவித்தனர். எனவே, நான் அதற்கு பதிலாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் ஈடாக வழங்கினேன். பிறகு அறிஞர்களிடம் கேட்டேன். அவர்கள், இவருடைய மனைவியைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்றும், என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டு நாடு கடத்தலும் தான் (தண்டனை) என்றும் தெரிவித்தார்கள்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நான் உங்கள் இருவரிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளிக்கிறேன்:

‘அடிமைப் பெண்ணையும் ஆடுகளையும் திருப்பிக் கொடுத்து விடுங்கள். உம் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு நாடு கடத்தும் தண்டனையும் வழங்கப்பட வேண்டும்’ என்று கூறிவிட்டு, அஸ்லம் குலத்து மனிதர் ஒருவரை நோக்கி ‘உனைஸே! நீங்கள் இவருடைய மனைவியிடம் செல்லுங்கள். அவள் (விபசாரம் புரிந்தது உண்மைதான் என) ஒப்புக்கொண்டால் அவளைக் கல்லெறிந்து கொன்று விடுங்கள்’ என்றார்கள். அவ்வாறே உனைஸ்(ரலி) அவர்கள் அவளிடம் சென்றார்கள். அவள் (குற்றத்தை) ஒப்புக் கொள்ளவே அவளைக் கல்லெறிந்து கொன்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7261

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அகழ்ப்போர் நாளில் (எதிரிகளை வேவு பார்க்கச் செல்வதற்காக) மக்களை அழைத்தார்கள். ஸுபைர் இப்னு அல்அவ்வாம்(ரலி) அவர்கள் முன்வந்தார்கள். பிறகும் மக்களை அழைத்தார்கள். ஸுபைர்(ரலி) அவர்களே மீண்டும் முன்வந்தார்கள். பிறகு மீண்டும் மக்களை அழைத்தார்கள். ஸுபைர்(ரலி) அவர்களே (மறுபடியும்) முன் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இறைத்தூதர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு உதவியாளர் ஒருவர் உண்டு. என்னுடைய சிறப்பு உதவியாளர் ஸுபைராவார்’ என்றார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இந்த ஹதீஸை இப்னுல் முன்கதிர்(ரஹ்) அவர்களிடமிருந்து மனனம் செய்தேன். அன்னாரிடம் அய்யூப்(ரஹ்) அவர்கள் ‘அபூ பக்ரே! இவர்களுக்கு ஜாபிர்(ரலி) அவர்களின் ஹதீஸ்களை அறிவியுங்கள்; ஏனெனில் ஜாபிரிடமிருந்து நீங்கள் ஹதீஸ் அறிவிப்பது இவர்களைப் பரவசப்படுத்தும்’ என்று கூறினார்கள். உடனே அதே இடத்தில் ‘நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம் செவியேற்றேன்; ஜாபிர்(ரலி) அவர்களிடம் செவியேற்றேன்’ என்று கூறி தொடர்ந்து பல ஹதீஸ்களை அன்னார் அறிவித்தார்கள்.

(மற்றோர் அறிவிப்பாளரான) அலீ இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சுப்யான்(ரஹ்) அவர்களிடம் ‘ஸவ்ரீ(ரஹ்) அவர்கள் ‘குறைழா போர் நாளில்’ என்று கூறினார்களே!’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘நீங்கள் அமர்ந்திருந்தபோது அன்னார் ‘அகழ்ப்போர் நாளில்’ என்று கூறியதை நான் (நன்கு) நினைவில் வைத்துள்ளேன்’ என்றார்கள். மேலும், சுஃப்யான்(ரஹ்) அவர்கள் ‘இரண்டும் ஒரே நாள்தானே!’ என்று கூறிவிட்டுப் புன்னகை செய்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7262

அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தினுள் சென்றார்கள். (அதன்) வாயிற்கதவைப் பாதுகாக்கும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது ஒருவர் அனுமதி கேட்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்கு அனுமதி அளியுங்கள். அவருக்கு சொர்க்கம் உண்டு என்று நற்செய்தி கூறுங்கள்’ என்றார்கள். அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்கள் தாம். பிறகு உமர்(ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்கு அனுமதி அளியுங்கள்; அவருக்கு சொர்க்கம் உண்டு என நற்செய்தியும் கூறுங்கள்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7263

உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மாடியறை ஒன்றில் இருந்து கொண்டிருந்தபோது நான் (அவர்களிடம்) சென்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கறுப்பு நிற அடிமை ஒருவர் ஏணியின் மேற்படியில் இருந்தார். நான் ‘இதோ உமர் இப்னு அல்கத்தாப் வந்திருக்கிறார் என்று சொல்’ என்றேன். (அவ்வாறே அவர் சொல்ல) எனக்கு அனுமதியளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7264

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பாரசீக மன்னர் குஸ்ரூ எனும்) கிஸ்ராவுக்குத் தாம் எழுதிய கடிதத்தை (அப்துல்லாஹ் இப்னு ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் கொடுத்து) பஹ்ரைன் அதிபரிடம் சேர்த்திடுமாறும், பஹ்ரைன் அதிபர் அதைக் கிஸ்ராவிடம் ஒப்படைப்பார் என்றும் கட்டளையிட்டு அனுப்பினார்கள். கிஸ்ரா அதைப் படித்தபோது (கோபம் கொண்டு அதைத் துண்டுத் துண்டாகக் கிழித்து விட்டார்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘கிஸ்ரா’ ஆட்சியாளர்கள் முற்றாகச் சிதறடிக்கப்பட வேண்டுமென அவர்களுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்’ என ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அவர்கள் கூறினார்கள் என எண்ணுகிறேன்.

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7265

ஸலமா இப்னு அல்அக்வஃ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அஸ்லம் குலத்தாரில் ஒருவரிடம், ‘உம்முடைய குலத்தாரிடையே’ அல்லது ‘மக்களிடையே’ முஹர்ரம் பத்தாம் நாள் (ஆஷுரா) அன்று, ‘(காலையில்) சாப்பிட்டு விட்டவர் தன்னுடைய நாளில் எஞ்சியிருப்பதை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்; சாப்பிடாமலிருப்பவர் (அப்படியே) நோன்பு நோற்கட்டும் என்று அறிவிப்புச் செய்க’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7266

அபூ ஜம்ரா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் என்னைக் கட்டிலின் மீது (தம்முடன்) அமரச் செய்து (தாம் கூறும் ஹதீஸ்களை மக்களுக்கு மொழிபெயர்த்துக் கூறுமாறு சொல்லி வந்தார்கள். (ஒரு முறை பின்வருமாறு) கூறினார்கள்: அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தபோது ‘தூதுக் குழுவினர் யார்?’ என்று நபியவர்கள் கேட்க, ‘(நாங்கள்) ‘ரபீஆ’ குலத்தார்’ என்று தூதுக் குழுவினர் பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘இழிவுக்குள்ளாகாமலும் மன வருத்தத்திற்குள்ளாகாமலும் வருகை புரிந்த ‘தூதுக் குழுவினரே!’ அல்லது ‘சமூகத்தாரே!’ வருக’ என்று (வாழ்த்துக்) கூறினார்கள். அப்போது அக்குழுவினர் ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையே ‘முளர்’ குலத்து இறைமறுப்பாளர்கள் (தடையாக) உள்ளனர். எனவே, எந்தக் கட்டளைகளைச் செயல்படுத்தினால் நாங்கள் சொர்க்கம் செல்லவும் எங்களுக்குப் பின்னால் உள்ள (இங்கு வர முடியாமல் போன)வர்களுக்குத் தெரிவிக்கவும் ஏதுவாக இருக்குமோ அத்தகைய கட்டளைகளில் (முக்கியமான) சிலவற்றை எங்களுக்குச் சொல்லுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்கள். அப்போது அவர்கள் குடிபானங்கள் பற்றியும் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்.

எனவே, அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் நான்கு விஷயங்களைத் தடை செய்தார்கள். நான்கு விஷயங்களைக் கட்டளையிட்டார்கள். 1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு விட்டு, ‘இறைநம்பிக்கை என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்க, அத்தூதுக் குழுவினர், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையேதுமில்லை என்றும், முஹம்மத் இறைத்தூதராவார்கள் என்றும் உறுதி கூறுவதுதான் (இறை நம்பிக்கை என்பது)’ என்று கூறினார்கள். 2. தொழுகையை நிலை நிறுத்துவது. 3. ஸகாத் வழங்குவது – ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது என்றும் அவர்கள் கூறினார்கள் எனவே கருதுகிறேன். 4. போர்ச் செல்வங்களில் ஐந்திலொரு பங்கை நீங்கள் (அரசு கருவூலத்திற்குச்) செலுத்துவது.

(மது ஊற்றிவைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய் குடுவை, மண் சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம், (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப் பீப்பாய் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை விதித்தார்கள். மேலும் ‘இவற்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்; உங்களுக்குப் பின்னால் இருப்போரிடம் இதைத் தெரிவித்து விடுங்கள்’ என்றும் கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7267

தவ்பா இப்னு கைசான் அல் அம்பரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். என்னிடம் ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (பிறர் சொல்லக்கேட்டு நிறைய) ஹதீஸ்களை அறிவிப்பதைப் பார்த்தீர்களா? நான் இப்னு உமர்(ரலி) அவர்களுடன் ஏறத்தாழ இரண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகள் அமர்ந்து ஹதீஸ்களைக் கற்றுள்ளேன். ஆனால், அவர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அதைத் தவிர வேறெதையும் அறிவித்து நான் கேட்டதில்லை.

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் உள்ளிட்ட நபித்தோழர்களில் சிலர் ஓர் இறைச்சியை உண்ணச் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர், அது உடும்பு இறைச்சி என்று அவர்களை அழைத்துச் சொன்னார்கள். உடனே அவர்கள் (அதை உண்ணுவதை) நிறுத்தி விட்டார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘சாப்பிடுங்கள்’ அல்லது ‘உண்ணுங்கள்’. ஏனெனில், அது, ‘அனுமதிக்கப்பட்டதாகும்’ அல்லது, ‘அதனால் குற்றமில்லை’ – அறிவிப்பாளர் தவ்பா(ரஹ்) அவர்கள் இந்த இடத்தில் ஐயப்பாட்டுடன் அறிவித்தார்கள் – ஆயினும், அது என் (பரிச்சியமான) உணவு அல்ல’ என்றார்கள்.

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.