87. இழப்பீடுகள்

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6861

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஒருவர் (நபியவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகவும் பெரியது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பதாகும்’ என்று கூறினார்கள். அந்த மனிதர், ‘பிறகு எது (மிகப் பெரும் பாவம்)?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அடுத்து உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன்னுடைய உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொலை செய்வதாகும்’ என்றார்கள். அந்த மனிதர், ‘பிறகு எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்’ என்று கூறினார்கள். அப்போது இதை மெய்ப்பிக்கும் வகையில் வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், ‘அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்த தெய்வத்தையும் அழைக்க மாட்டார்கள்; மேலும், அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்யமாட்டார்கள்; விபசாரமும் செய்யமாட்டார்கள். யாரேனும் இச்செயல்களைப் புரிந்தால் அவன் (தன் பாவத்திற்கான) தண்டனையை அடைந்தே தீருவான்’ எனும் (திருக்குர்ஆன் 25:68 வது) வசனத்தை அருளினான்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6862

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படும் (மனித) உயிர் எதனையும் கொலை செய்யாமல் இருக்கும் வரை ஓர் இறை நம்பிக்கையாளர் தம் மார்க்கத்தின் தாராள குணத்தைக் கண்டவண்ணமிருப்பார் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6863

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புனிதமிக்கதாகக் கருதப்படும் (மனித) உயிரை (மார்க்க ரீதியான) அனுமதியின்றி கொலை செய்வதானது, விழுந்தால் வெளிவர முடியாத நாசப் படுகுழிகளில் ஒன்றாகும் என ஸயீத் இப்னு அம்ர்(ரஹ்) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6864

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும் என அப்துல்லாஹ் இப்னுமஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6865

உபைதுல்லாஹ் இப்னு அதீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். பனூ ஸுஹ்ரா குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் நபி(ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் பங்கெடுத்தவருமான மிக்தாத் இப்னு அம்ர் அல்கிந்தீ(ரலி) அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்,) ‘இறைத்தூதர் அவர்களே! இறைமறுப்பாளன் ஒருவனை நான் சந்தித்து நாங்கள் இருவரும் சண்டையிட்டோம். அப்போது அவன் என்னுடைய கை ஒன்றை வாளால் வெட்டித் துண்டித்து விட்டான். பிறகு அவன் (என்னைவிட்டுப்போய்) ஒரு மரத்தில் அபயம் தேடி (ஒளிந்து) கொண்டு அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன்’ என்று சொன்னான். அவன் இதைச் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா?’ என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (வேண்டாம்) அவனைக் கொல்லலாம் அல்லவா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அவனை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவனைக் கொன்றுவிட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவன் வந்துவிடுவான். இந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன்பு அவனிருந்த (குற்றவாளி எனும்) நிலைக்கு நீ சென்றுவிடுவாய்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6866

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மிக்தாத்(ரலி) அவர்களிடம், ‘இறைமறுப்பாளர்களான சமூகத்தாரிடையே தம் இறைநம்பிக்கையை (மனத்திற்குள்) மறைத்து வைத்துக் கொண்டிருந்த ஒருவர் தம் இறை நம்பிக்கையை வெளிப்படுத்தும் தருவாயில் அவரை நீர் கொன்றுவிட்டீரே! அவ்வாறாயின், இதற்கு முன்னர் நீரும் இவ்வாறுதானே மக்காவில் உம்முடைய இறை நம்பிக்கையை (மனத்தில்) மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர்?’ என்று கேட்டார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6867

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உலகில் அநியாயமாக ஒரு கொலை நடைபெறும்போது அந்தக் கொலையின் பாவத்தில் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களின் முதலாவது மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6868

(‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) ‘ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக் கொள்ளும் இறை மறுப்பாளர்களாக மாறி விடாதீர்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6869

ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றுகையில்) என்னிடம், ‘மக்களை மெளனமாக இருக்கச் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். (அமைதி திரும்பிய பின்னர்) ‘எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள் (ஒற்றுமையுடன் இருங்கள்)’ என்றார்கள். இந்த ஹதீஸை, நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ பக்ரா(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோரும் அறிவித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6870

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைவனுக்கு இணைகற்பிப்பதும் ‘தாய் தந்தையரைப் புண்படுத்துவதும்’ அல்லது பொய்ச் சத்தியம் செய்வதும்’ பெரும் பாவங்களாகும்.

மற்றோர் அறிவிப்பில், ‘இறைவனுக்கு இணைகற்பிப்பதும் பொய்ச் சத்தியம் செய்வதும் ‘தாய் தந்தையரைப் புண்படுத்துவதும்’ அல்லது ‘மனிதனைக் கொலை செய்வதும்’ பெரும் பாவங்களாகும்’ என்று வந்துள்ளது.

இந்த ஹதீஸை அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (மேற்காணும் இரண்டு அறிவிப்புகளில் இவற்றின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா(ரஹ்) அவர்களே ஐயப்பாட்டுடன் அறிவித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6871

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைவனுக்கு இணை கற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், ‘பொய் கூறுவதும்’ அல்லது ‘பொய்ச் சாட்சியம் சொல்வதும்’ பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும்.

இதன் அறிவிப்பாளரான அனஸ்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் ‘பெரும் பாவங்கள்’ என்று வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6872

உசாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘ஜுஹைனா’ குலத்தைச் சேர்ந்த ‘ஹுரக்கா’ எனும் கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். அதிகாலைப் பொழுதில் அவர்களிடம் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களை நாங்கள் தோற்கடித்தோம். அப்போது நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு மனிதரிடம் போய்ச் சேர்ந்து அவரை நாங்கள் சுற்றி வளைத்துக் கொண்டோம். அப்போது அவர் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்றார். எனவே, அவரைவிட்டு அந்த அன்சாரி (நண்பர்) ஒதுங்கி கொண்டார். ஆனால், நான் என் ஈட்டியை அவரின் மீது பாய்ச்சி அவரைக் கொன்று விட்டேன். நாங்கள் (மதீனா) வந்து சேர்ந்தபோது இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘உசாமா! ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று அவர் சொன்னதற்குப் பிறகுமா அவரை நீங்கள் கொன்றீர்கள்?’ என்று கேட்டார்கள். நான் ‘அவர் உயிரைப் காத்துக் கொள்ளவே (அவ்வாறு கூறினார்)’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அவர் சொன்னதற்குப் பிறகுமா அவரை நீங்கள் கொன்றீர்கள்?’ என்று திரும்பத் திரும்ப (அதிருப்தியுடன்) என்னிடம் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அதற்கு முன்னால் நான் இஸ்லாத்தைத் தழுவாமல் (இந்நிகழ்ச்சி) நடந்த பின்னால் இஸ்லாத்தைத் தழுவி) இருந்தால் நன்றாயிருக்குமே! என்று ஆசைப்பட்டேன்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6873

உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ்விற்கு நாங்கள் எதனையும் இணை கற்பிக்கமாட்டோம்: திருடமாட்டோம்; விபசாரம் செய்யமாட்டோம்; அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ள எந்த உயிரையும் கொலை செய்யமாட்டோம்; கொள்ளையடிக்க மாட்டோம்; (எந்த நற்செயலிலும் உங்களுக்கு) மாறு செய்யமாட்டோம்; (இவற்றை நாங்கள் செய்யாமல் விட்டுவிட்டால்) எங்களுக்கு சொர்க்கம் உண்டு. இவற்றில் ஏதேனும் ஒன்றை நாங்கள் செய்தால் அதன் முடிவு அல்லாஹ்விடம் உள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் செய்துகொடுத்த தலைவர்களில் நானும் ஒருவனாவேன்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6874

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நமக்கெதிராக எவன் ஆயுதம் ஏந்துகிறானோ அவன் நம்மைச் சார்ந்தவனல்லன் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ மூஸா(ரலி) அவர்களும் இதை அறிவித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6875

அஹ்னஃப் இப்னு கைஸ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் (ஜமல் போரில்) இந்த மனிதருக்கு (அலீ(ரலி) அவர்களுக்கு) உதவுவதற்காக (காலதாமதமாக)ப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது அபூ பக்ரா(ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, ‘எங்கே செல்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். ‘நான் இந்த மனிதருக்கு உதவச் சொல்கிறேன்’ என்றேன்.

அதற்கு அவர்கள் கூறினார்கள்: ‘நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள். ஏனெனில், (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், ‘இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் ஆகிய இருவருமே நரகத்திற்கே செல்வார்கள்’ என்றார்கள். அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! இவரோ கொலை செய்தவர். (நரகத்திற்குச் செல்வது சரி!) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்?)’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அவரைக் கொல்ல வேண்டுமென்று இவர் பேராசை கொண்டிருந்தாரே!’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6876

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஒரு யூதன் ஒரு சிறுமியின் தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கி விட்டான். அச்சிறுமியிடம், ‘உன்னை இப்படிச் செய்தவர் யார்? இன்னாரா? இன்னாரா?’ என்று (ஒவ்வொரு பெயராகச் சொல்லிக்) கேட்கப்பட்டது. இறுதியில் அந்த யூதனுடைய பெயர் சொல்லப்பட்டது. (அச்சிறுமி ‘ஆம்’ என்று ஒப்புக் கொண்டாள்.) எனவே, அந்த யூதன் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டான். அவன் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொள்ளும்வரை அவனிடம் விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். (அவன் ஒப்புக் கொண்டவுடன்) அவனுடைய தலை கல்லால் நசுக்கப்பட்டது.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6877

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். மதீனாவில் வெள்ளி நகை அணிந்து கொண்டு ஒரு சிறுமி (வீட்டிலிருந்து) புறப்பட்டாள். அப்போது அவளின் மீது யூதன் ஒருவன் கல் எறிந்தான். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுமி நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டாள். அவளிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இன்னார் உன்னைத் தாக்கினாரா?’ என்று கேட்டார்கள். அவள் (இல்லை என்று) தலையால் சைகை செய்தாள். மீண்டும் அவர்கள், ‘இன்னார் உன்னைத் தாக்கினாரா?’ என்று கேட்டார்கள். அவள் அப்போதும் (இல்லை என்று) சைகை செய்தாள். தொடர்ந்து (மூன்றாம் முறையாக) அவளிடம் அவர்கள் ‘இன்னாரா உன்னைத் தாக்கினார்?’ என்று கேட்டபோது அவள் (ஆம் என்று கூறும் விதமாக) தலையை கீழ் நோக்கித் தாழ்த்தி சைகை செய்தாள். எனவே, அந்த யூதனை அழைத்து வருமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அவனை அழைத்துவந்து விசாரித்தபோது அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டான்.) எனவே, இரண்டு கற்களுக்கிடையில் வைத்து அவ(னது தலையி)னை நசுக்கிக் கொல்லுமாறு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6878

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்’ என உறுதி மொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை. (அவை:) 1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது. 2. திருமணமானவன் விபசாரம் செய்வது. 3. ‘ஜமாஅத்’ எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத்திலிருந்தே வெளியேறி விடுவது.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6879

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஒரு யூதன் ஒரு சிறுமியின் வெள்ளி நகைக்காக அந்தச் சிறுமியைக் கல்லால் (நசுக்கிக்) தாக்கினான். அவளுடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த நிலையில் நபி(ஸல்) அவர்களிடம் அச்சிறுமி கொண்டு வரப்பட்டாள். அப்போது (அவளிடம்) நபி(ஸல்) அவர்கள், ‘இன்னாரா உன்னைத் தாக்கினார்?’ என்று கேட்டார்கள். அவள் ‘இல்லை’ என்று தலையால் சைகை செய்தாள். பிறகு இரண்டாவது முறை (வேறொரு நபர் குறித்து) நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது அப்போதும் ‘இல்லை’ என்று தலையால் சைகை செய்தாள். மூன்றாம் முறை நபி(ஸல்) அவர்கள் (கொலையாளியின் பெயர் கூறி) அவளிடம் கேட்டபோது அவள் ‘ஆம்’ என்று தலையால் சைகை செய்தாள். எனவே, இரண்டு கற்களுக்கிடையில் (அவன் தலையை வைத்து நசுக்கி) அவனைக் கொல்லுமாறு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6880

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் தங்கள் குலத்தாரில் ஒருவரைக் கொலை செய்தததற்கு பதிலாக மக்கா வெற்றி ஆண்டில் ‘பனூ லைஸ்’ குலத்தாரில் ஒருவரை குஸாஆ குலத்தார் கொலை செய்தனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து (உரையாற்றுகையில் பின்வருமாறு) கூறினார்கள்.

இந்த(ப் புனித) மக்கா நகரைவிட்டு யானைப் படையை அல்லாஹ் தடுத்து நிறுத்தினான். மேலும், மக்காவாசிகளின் மீது அல்லாஹ் தன் தூதருக்கும் நம்பிக்கையாளருக்கும் ஆதிக்கம் அளித்தான். எச்சரிக்கை! மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை. எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதில்லை. நினைவில் கொள்க! எனக்குக்கூட பகலில் சிறிது நேரம் யுத்தம் புரியவே அனுமதிக்கப்பட்டிருந்தது. எச்சரிக்கை! சந்தேகத்திகிடமின்றி (இங்கு) போரிடுதல் இந்த நிமிடத்திலிருந்து (முற்றாகத்) தடை செய்யப்பட்டு விட்டது. எனவே, இந்நகரின் முட்செடி பிடுங்கப்படக் கூடாது. இதன் மரம் வெட்டப்படக் கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை (அவற்றைப் பற்றி) மக்களுக்கு அறிவிப்புச் செய்பவரைத் தவிர (பொருளுக்கு உரிமையற்றவர் யாரும்) எடுக்கக் கூடாது. ஒருவர் கொலை செய்யப்பட்டால் அவரின் உறவினர்கள் இழப்பீடு பெறுதல், அல்லது பழிவாங்குதல் ஆகிய இரண்டு யோசனைகளில் சிறந்ததை அவர்கள் தேர்வு செய்யலாம்’ என்று கூறினார்கள்.

அப்போது யமன்வாசிகளில் ‘அபூ ஷாத்து’ என்றழைக்கப்பட்ட ஒருவர் எழுந்து, இறைத்தூதர் அவர்களே! (இந்த உரையை) எனக்கு எழுதித் தரச்சொல்லுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இவருக்கு (என் உரையை) எழுதிக் கொடுங்கள்’ என்றார்கள். அப்போது குறைஷியரில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! (மக்காவின் செடிகொடிகளை வெட்டக்கூடாது என்பதிலிருந்து வாசனைத் தாவரமானது) ‘இத்கிர்’ புல்லிற்கு விலக்கு அளியுங்கள். ஏனென்றால், நாங்கள் அதை எங்கள் வீடுகளி(ன் கூரைகளி)லும் எங்கள் மண்ணறைகளிலும் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்’ என்றார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘இத்கிர் புல்லைத் தவிர!’ என்றார்கள்
.
அபூ நுஐம்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘யானைப்படை என்பதற்கு பதிலாக, ‘கொலை செய்வதை’ என்று இடம் பெற்றுள்ளது எனச் சிலர் அறிவித்துள்ளனர்.

உபைதுல்லாஹ் இப்னு மூஸா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘கொலையுண்டவரின் குடும்பத்தார் (சார்பாக) பழிவாங்கல்’ என்று இடம் பெற்றுள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6881

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். பனூ இஸ்ராயீல்களிடையே (கொலை நடந்துவிட்டால்) பழிக்குப்பழி (கிஸாஸ்) வாங்குதல் (நடைமுறையில்) இருந்தது; ஆனால், இழப்பீடு (பெற்றுக் கொண்டு கொலையாளியை மன்னித்துவிடும் சட்டம் நடைமுறையில்) இருக்கவில்லை. எனவேதான், அல்லாஹ் (தன்னுடைய வேதத்தில்) இந்தச் சமுதாயத்தை நோக்கி ‘இறைநம்பிக்கை கொண்டோரே! கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர மனிதன் சுதந்திர மனிதனுக்கு பதிலாகவும், அடிமை அடிமைக்கு பதிலாகவும், பெண் பெண்ணுக்கு பதிலாகவுமே (பழிவாங்கப்படுபவர் கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால், நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (இழப்பீட்டுத் தொகையை) நிறைவேற்றிட வேண்டும். இது, உங்களுடைய இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் கருணையுமாகும். இதன் பின்னரும் எவரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்பமிகு வேதனை உண்டு’ (திருக்குர்ஆன் 02:178) என்று கூறுகிறான்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘மன்னிப்பு அளித்தல்’ (‘அஃப்வ்’) என்பது, வேண்டுமென்றே செய்த கொலைக்கு உயிரீட்டுத் தொகையை ஏற்பதைக் குறிக்கும். நியதியைப் பேணி நல்ல முறையில் அதைக் கொலையாளி செலுத்திட வேண்டும்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6882

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகிறவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகிறவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகிறவன் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6883

ஆயிஷா(ரலி) அறிவித்தார். உஹுதுப் போரின் (தொடக்கத்தின்)போது இணை வைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். பின்னர் மக்களிடையே இப்லீஸ் புகுந்து), ‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்’ என்று கூறினான். எனவே, முஸ்லிம்களில் முன் அணியினர் பின் அணியினரை நோக்கித் திரும்பி (அவர்களைத் தாக்கத் தொடங்கி)னர். அப்போது முஸ்லிம்கள் அல்யமான்(ரலி) அவர்களைக் கொன்றுவிட்டனர். உடனே (அவரின் புதல்வர்) ஹுதைஃபா(ரலி) அவர்கள் ‘என் தந்தை என் தந்தை’ என்று கூறினார். (ஆயினும் எதிரி என்று நினைத்து) அவரின் தந்தையை மக்கள் கொன்றுவிட்டனர். அப்போது ஹுதைஃபா(ரலி) அவர்கள், ‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!’ என்று (கொலை செய்தவர்களை நோக்கிக்) கூறினார்கள். தோல்வியுற்றவர்(களான இணைவைப்பாளர்)களில் சிலர் தாயிஃப் நகருக்குச் சென்றுவிட்டனர். இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6884

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஒரு யூதன் ஒரு சிறுமியின் தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அச்சிறுமியிடம், ‘உன்னை இப்படிச் செய்தவர் யார்? இன்னாரா? இன்னாரா?’ என்று (ஒவ்வொரு பெயராகச் சொல்லிக்) கேட்கப்பட்டது. இறுதியில் அந்த யூதனுடைய பெயர் சொல்லப்பட்டவுடன் அச்சிறுமி ஆம்; அவன்தான்’ என்று) தலையால் சைகை செய்தாள். எனவே, அந்த யூதன் (நபி(ஸல்) அவர்களிடம்) கொண்டுவரப்பட்டான். (அவனிடம் விசாரிக்கப்பட்டபோது) அவன் (குற்றத்தை) ஒப்புக் கொண்டான். எனவே, நபி(ஸல்) அவர்கள் அவனுடைய தலையைக் கல்லால் நசுக்கும்படி உத்தரவிட அவ்வாறே அவனுடைய தலை கல்லால் நசுக்கப்பட்டது.

ஹம்மாம் இப்னு யஹ்யா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘இரண்டு கற்களால் (நசுக்கப்பட்டது)’ என இடம் பெற்றுள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6885

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஒரு சிறுமியை, அவளுடைய வெள்ளி நகைக்காக கொலை செய்த (ஆண்) யூதன் ஒருவனைக் கொலை செய்திடுமாறு நபி(ஸல்) அவர்கள் ஆணையிட்டார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6886

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்யப்பட்டிருந்தபோது (மயக்கமடைந்தார்கள். அப்போது) அவர்களின் வாய் ஓரத்தில் நாங்கள் மருந்தூற்றினோம். உடனே அவர்கள், ‘என்னுடைய வாயில் மருந்தூற்றாதீர்கள்’ என்று (சைகையால்) கூறினார்கள். அப்போது நாங்கள் ‘நோயாளி மருந்தை வெறுப்பதைப் போன்றுதான் (நபியவர்களும் வெறுக்கிறார்கள். ஊற்ற வேண்டாமெனத் தடை செய்யவில்லை)’ என்று சொல்லிக் கொண்டோம். அவர்களின் மயக்கம் (முழுமையாகத்) தெளிந்தபோது ‘(என் வாயில் மருந்தூற்றவேண்டாம் என்று நான் தடுத்தும் நீங்கள் கேட்காததற்குப் பகரமாக) உங்களில் ஒருவர் பாக்கியில்லாமல் (இந்த வீட்டிலுள்ள) அனைவர் வாயிலும் மருந்தூற்றப்பட வேண்டும்’ என்று கூறிவிட்டு, ‘ஆனால் அப்பாஸ் அவர்களைத் தவிர! ஏனெனில், மருந்தூற்றும்போது உங்களுடன் அவர் கலந்து கொள்ளவில்லை’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6887

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாமே (காலத்தால்) பிந்தியவர்களும் மறுமை நாளில் (அந்தஸ்தால்) முந்தியவர்களும் ஆவோம் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6888

மேற்சொன்ன அதே அறிவிப்பாளர் தொடரில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபோது அவரின் மீது நீங்கள் சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரின் கண்ணைப் பறித்துவிட்டால் உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6889

யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். ‘ஒருவர் நபி(ஸல்) அவர்களின் இல்லத்திற்குள் (ஒரு துவாரம் வழியாக) எட்டிப் பார்த்தார். அப்போது அவரை நோக்கி நபி(ஸல்) அவர்கள் நீளமான அம்பின் கூர்மையான பகுதியை நேராகக் கொண்டு சென்றார்கள்’ என்று ஹுமைத்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் ‘இதை உங்களுக்கு அறிவித்தவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு ஹுமைத்(ரஹ்) அவர்கள், ‘அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் தாம் ( அறிவித்தார்கள்)’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6890

ஆயிஷா(ரலி) அறிவித்தார். உஹுதுப் போர் நாளில் (ஆரமபத்தில்) இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அப்போது இப்லீஸ், ‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்!’ என்று கத்தினான். உடனே முஸ்லிம்களில் முன் அணிப் படையினர் திரும்பிச் சென்று (எதிரிகள் தாம் பின்னால் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு) பின் அணிப்படையினருடன் மோதினார்கள். அப்போது அங்கு (தமக்கு அருகேயிருந்த) தம் தந்தை அல்யமான்(ரலி) அவர்கள் (முன்னணிப் படையினரிடம்) சிக்கிக் கொண்டதை ஹுதைஃபா(ரலி) அவர்கள் பார்த்துவிட்டு, ‘அல்லாஹ்வின் அடியார்களே! (அவர்) என் தந்தை! என் தந்தை’ என்று (உரத்த குரலில்) கூறினார்கள். ஆனால், அல்லாஹ்வீன் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்பே (அவரைவிட்டு) அவர்கள் விலகினார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்கள் ‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!’ என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்கள் மன்னித்தால் அவர்கள் இறைவனை அடையும் வரை (அவர்களின் வாழ்க்கையில் நல்ல பலன் இருந்து கொண்டேயிருந்தது.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6891

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கிப் (போருக்காகப்) புறப்பட்டோம். அப்போது மக்களில் ஒருவர் (என் தந்தையின் சகோதரிடம்) ‘ஆமிரே! உங்கள் கவிதைகளில் சிலவற்றை(ப் பாடி) எங்களைச் செவியுறச் செய்யமாட்டீர்களா?’ என்று கூறினார். எனவே, ஆமிர்(ரலி) அவர்கள் (சில கவிதைகளைப் பாடி) மக்களின் ஒட்டகங்களை விரைந்தோடச் செய்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இந்த ஒட்டகவோட்டி யார்?’ என்று கேட்டார்கள். ‘ஆமிர் இப்னு அக்வஃ’ என்று மக்கள் பதிலளித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!’ என்று கூறினார்கள். (அந்தப் பிரார்த்தனையின் பொருளைப் புரிந்து கொண்ட) மக்கள், ‘அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக் கூடாதா (இறைத்தூதர் அவர்களே!)?’ என்று கேட்டார்கள். அவர் அன்றைய இரவின் காலையில் (தம் முழங்காலில் தம் வாளாலேயே) தாக்கப்பட்டு இறந்தார். அப்போது மக்கள், ‘ஆமிரின் நற்செயல்கள் அழிந்துவிட்டன அவர் (தம் வாளால் தம்மைத் தாமே குத்திக் கொண்டு) தற்கொலை செய்துகொண்டார்’ என்று பேசினார். (கைபரிலிருந்து) நான் திரும்பியபோது ‘ஆமிரின் நற்செயல்கள் அழிந்துபோயின’ என்று மக்கள் பேசிக்கொண்டனர். எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! (என் தந்தையின் சகோதரர்) ஆமிர்(ரலி) அவர்களின் (நற்செயல்கள் புரிந்த நன்மை, அறப்போர் புரிந்த நன்மை ஆகிய) இரண்டு நன்மைகள் உண்டு. அவர் துன்பங்களைத் தாங்கினார்; (இறை வழியில்) அறப்போரும் புரிந்தார். அவர் பெற்ற நற்பலனை விட அதிகமான நற்பலனைப் பெற்றுத்தரும் (வீர) மரணம் எது?’ என்று கேட்டார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6892

இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். ஒருவர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்தார். அப்போது (கடிபட்டவர்) தம் கையை அவரின் வாயிலிருந்து இழுத்தார். இதனால் கடித்தவரின் முன் பற்கள் இரண்டு விழுந்துவிட்டன. இதையொட்டி அவர்கள் இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் ஒருவர் தம் சகோதரனின் கையைக் கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிப்பாரா? (அவர் கடித்துக் கொண்டிருக்கும் வரை அவன் தன்னுடைய கையை அப்படியே வைத்துக் கொண்டிருப்பானா? பல்லிழந்த) உமக்கு இழப்பீட்டுத் தொகை கிடையாது’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6893

யஃலா இப்னு உமய்யா(ரலி) அறிவித்தார். நான் (தபூக்) போருக்குப் புறப்பட்டுச் சென்றேன். அப்போது ஒருவர் (இன்னொருவரைக்) கடித்தார். கடிபட்ட மனிதர் (தம் கையை விடுவிக்கும் போது) கடித்தவரின் முன்பல்லைக் கழற்றிவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் இதற்கு இழப்பீடு தரத் தேவையில்லை என்று தீர்ப்பளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6894

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (என் பாட்டனார்) நள்ர் அவர்களின் புதல்வி (ருபய்யிஉ பின்த் நள்ர்) ஓர் இளம் பெண்ணின் கன்னத்தில் அறைந்து அவளுடைய முன்பல்லை உடைத்துவிட்டார். எனவே, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (வழக்கைக் கொண்டு) வந்தார்கள். அப்போது நபியவர்கள் பழிவாங்கிடுமாறு உத்தரவிட்டார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6895

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதோ இந்த மோதிர விரலும் கட்டை விரலும் (இழப்பீட்டில்) சமமானவையே என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இதைப் போன்றே நபி(ஸல்) அவர்களிடம் தாம் செவியேற்றதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஒரு ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6896

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஒரு சிறுவன் வஞ்சித்துக் கொல்லப்பட்டான். அப்போது உமர்(ரலி) அவர்கள், ‘இந்தக் கொலையில் (யமனிலுள்ள) ஸன்ஆ வாசிகள் அனைவரும் பங்கெடுத்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் அனைவரையும் நான் (பதிலுக்குக்) கொல்வேன்’ என்றார்கள்.

ஹகீம் அஸ்ஸன்ஆனி(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘நான்கு பேர் (சேர்ந்து) ஒரு சிறுவனைக் கொன்று விட்டனர். அப்போது உமர்(ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்’ என்று வந்துள்ளது.

கன்னத்தில் ஓர் அறைவிட்ட குற்றத்திற்காக அபூ பக்ர்(ரலி) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அலீ(ரலி), சுவைத் இப்னு முகர்ரின்(ரலி) ஆகீயோர் பழிவாங்கும்படி தீர்ப்பளித்தனர்.

சாட்டையால் ஓர் அடி அடித்த குற்றத்திற்காக உமர்(ரலி) அவர்கள் பழிவாங்கிடச் செய்தார்கள். மூன்று சாட்டையடிகளுக்காக அலீ(ரலி) அவர்கள் பழிவாங்கிடச் செய்தார்கள்.

(நீதிபதி) ஷுரைஹ்(ரஹ்) அவர்கள் சாட்டையடிக்கும் பிறாண்டி காயப்படுத்தியதற்கும் பழிக்குப்பழி தண்டனை வழங்குமாறு  தீர்ப்பளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6897

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (கடைசிக் காலத்தில்) நோய் வாய்ப்பட்டிருந்தபோது (அரை மயக்கத்தில் இருந்தார்கள். அப்போது) நாங்கள் அவர்களின் வாய் ஓரத்தில் மருந்தூற்றினோம். என் வாயில் மருந்தூற்றாதீர்கள் என்று அவர்கள் சைகை செய்யலானார்கள். ‘நோயாளி மருந்தை வெறுப்பதைப் போன்றுதான் (நபியவர்களும் வெறுக்கிறார்கள். ஊற்றவேண்டாம் என்று தடை செய்யவில்லை)’ என்று நாங்கள் கூறிக்கொண்டோம் அவர்களின் மயக்கம் (முழுமையாகத்) தெளிந்தபோது’ என் வாயில் மருந்தூற்ற வேண்டாம் என்று உங்களை நான் தடுக்கவில்லையா?’ என்று கேட்டார்கள். நாங்கள் ‘மருந்து உட்கொள்ளப் பிடிக்காமலேயே (அவ்வாறு சைகை செய்தீர்கள்)’ என்று சொன்னோம்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘(நான் தடுத்தும் கேட்காததற்கு பதிலாக) உங்களில் ஒருவர் பாக்கியில்லாமல் அனைவர் வாயிலும் நான் பார்த்துக் கொண்டிருக்க மருந்தூற்றப்பட வேண்டும்’ என்று கூறிவிட்டு, ‘ஆனால், அப்பாஸ் அவர்களைத் தவிர! ஏனெனில் (மருந்தூற்றும் போது) அவர் உங்களுடன் கலந்து கொள்ளவில்லை’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6898

ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) அறிவித்தார். என் குலத்தாரில் சிலர் கைபர் நோக்கிச் சென்றார்கள். அங்கே அவர்கள் தனித் தனியாகப் பிரிந்துவிட்டார்கள். அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடக்கக் கண்டனர். அவர் கிடந்த இடத்தில் இருந்த (யூத) மக்களிடம் அவர்கள், ‘எங்கள் நண்பரை நீங்கள் (அநியாயமாகக்) கொன்றுவிட்டீர்கள்’ என்று கூறினர். (அந்த யூத) மக்கள் ‘நாங்கள் (அவரைக்) கொல்லவுமில்லை. (அவரைக்) கொலை செய்தவர் யார் என எங்களுக்குத் தெரியவுமில்லை’ என்று கூறினர். எனவே (கைபர் சென்ற) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் கைபருக்குச் சென்றோம். அங்கு எங்களில் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடக்கக் கண்டோம்’ என்று கூறினர்.

அப்போது (பேச்சைத் துவங்கிய அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களை நோக்கி (நபி(ஸல்) அவர்கள், ‘பெரியவர்களைப் பேசவிடு!  என்று கூறினார்கள். பிறகு (கொல்லப்பட்டவர்களின் நண்பர்களைப் பார்த்து) நபி(ஸல்) அவர்கள், ‘அவரைக் கொலை செய்தவர் யார் என்பதற்குச் சாட்சி கொண்டுவாருங்கள்!’ என்று கூறினார்கள். அவர்கள், ‘எங்களிடம் சாட்சியில்லை’ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின் (யூதர்களான) அவர்கள் சத்தியம் செய்யட்டும்’ என்றார்கள். அதற்கு (கொல்லப்பட்டவரின் நண்பர்களான) அவர்கள், ‘யூதர்களின் சத்தியத்தை நம்பி) ஏற்றுக் கொள்ளமாட்டோம்’ என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கொலையுண்டவரின் உயிரிழப்பை வீணாக்க விரும்பாமல் தாமே நூறு தர்ம ஒட்டகங்களை இழப்பீட்டுத் தொகையாக வழங்கினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6899

அபூ கிலாபா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். (கலீஃபா) உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்கள் ஒரு நாள் மக்களிடம் பேசுவதற்காகத் தம் ஆசனத்தை எடுத்து வெளியே வைத்தார்கள். பிறகு மக்களுக்கு அனுமதி அளித்திட மக்கள் உள்ளே வந்தனர். பின்னர் (அவர்களிடம்) ‘அல்கஸாமா சத்தியம் குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘அல்கஸாமா மூலம் பழிவாங்கிடல் உண்டு என்றே கருதுகிறோம். கலீஃபாக்கள் அதைக் கொண்டு பழிவாங்கியுள்ளனர்’ என்று கூறினர். உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்கள் மக்களின் பார்வையில் நான் படும் வகையில் என்னை நிறுத்தி வைத்து என்னிடம், ‘அபூ கிலாபா அவர்களே! (இது குறித்து) நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?’ என்று கேட்டார்கள். உடனே நான், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களிடம் படைத் தளபதி (களான ஆளுநர்)களும் அரபுத் தலைவர்களும் உள்ளனர். இவர்களில் ஐம்பது பேர் திமஷ்க் (டமாஸ்கஸ்) நகரிலுள்ள திருமணமான ஒருவர் குறித்து அவரைப் பார்க்காமலேயே அவர் விபசாரம் புரிந்துவிட்டதாகச் சாட்சியம் அளித்தால் அவருக்கு நீங்கள் கல்லெறி தண்டனை வழங்கிவிடுவீர்களா, சொல்லுங்கள்?’ என்று கேட்டேன். உமர்(ரஹ்) அவர்கள் ‘இல்லை’ என்றார்கள். நான், ‘இவர்களில் ஐம்பது பேர் ஹிம்ஸ் (சிரியா) நாட்டிலுள்ள ஒருவர் திருடிவிட்டார் என்று அவரைப் பார்க்காமலேயே அவருக்கெதிராகச் சாட்சியம் அளித்தால் அவரின் கையை நீங்கள் துண்டித்துவிடுவீர்களா, சொல்லுங்கள்!’ என்று கேட்டேன். உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்கள், ‘இல்லை’ என்றார்கள். நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல) அவர்கள் மூன்று காரணங்களில் ஒன்றுக்காகவே தவிர எவரையும் கொல்லுமாறு உத்தரவிட்டதில்லை’ என்று கூறினேன். (அந்த மூன்று காரணங்கள் வருமாறு:)

1. மன இச்சையின் பேரில் (அநியாயமாகப் படு) கொலை செய்தவர். 2. திருமணமான பின்னர் விபசாரம் புரிந்த மனிதர். 3. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகப் போர் புரியத் துணிந்து இஸ்லாத்திலிருந்து (வெளியேறி இறை மறுப்பிற்குத்) திரும்பிச் சென்றுவிட்ட மனிதர்

அப்போது மக்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சில திருடர்க(ளின் கை கால்க)ளைத் துண்டித்துக் கண்களில் சூடிட்டுப் பிறகு அவர்களை வெயிலில் தூக்கி எறிந்தார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் அறிவிக்கவில்லையா?’ என்று கேட்டார்கள். உடனே நான், ‘உங்களுக்கு அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களின் அறிவிப்பைக் கூறுகிறேன்’ என்று சொல்லிவிட்டு அனஸ்(ரலி) அவர்கள் கூறியதை(ப் பின்வருமாறு) தெரிவித்தேன்.

‘உக்ல்’ எனும் குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்று உறுதிமொழி வழங்கினர். அப்போது (மதீனா) பூமியின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனவே, அவர்களின் உடல்நலம் பாதித்தது. எனவே, இது குறித்து அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் முறையிட்டனர். அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் நம் மேய்ப்பாளர் உடன் சென்று அவரிடமுள்ள (முஸ்லிம்களுக்குச் சொந்தமான) ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் அருந்தலாமே!’ என்று (யோசனை) கூறினார்கள். உக்ல் குலத்தார், ‘சரி’ என்று சொல்லிவிட்டு அங்கு சென்றனர். அந்த ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் அருந்தி உடல் நலம் தேறினர். பிறகு அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அறிவிப்பாளரைக் கொலை செய்துவிட்டு அந்த ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். இச்செய்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே (அவர்களைப் பிடித்துவருமாறு) அவர்களைப் பின்தொடர்ந்து ஆட்களை அனுப்பி வைத்தார்கள். எனவே, அவர்கள் பிடிக்கப்பட்டு (இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டனர். அப்போது அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டுமாறும் அவர்களின் கண்களில் சூடிடுமாறும் உத்தரவிட்டார்கள். பிறகு அவர்கள் இறக்கும் வரை அவர்களை வெயிலில் தூக்கி எறிந்தார்கள்.

நான், ‘இந்த உக்ல் குலத்தார் செய்ததை விடக் கொடிய செயல் வேறேது? அவர்கள் இஸ்லாத்திற்கு (இறை மறுப்பிற்கு) திரும்பிச் சென்றார்கள்; கொலை செய்தார்கள்; கொள்ளையடித்தார்கள்’ என்று சொன்னேன். அப்போது அன்பஸா இப்னு ஸயீத்(ரஹ்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று (உம்மிடம் இதைச் செவியேற்றது) போல் ஒருபோதும் நான் செவியேற்றதில்லை’ என்று கூறினார்கள். உடனே நான், ‘அன்பஸா! என் செய்தியை நீங்கள் மறுக்கின்றீர்களா?’ என்று கேட்டேன். அவர், ‘இல்லை (நான் மறுக்கவில்லை). மாறாக, இச்செய்தியை நீங்கள் உள்ளபடி கூறினீர்கள்’ என்று கூறிவிட்டு, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (ஷாம்) மாகாணத்தாரிடையே இந்த மூதறிஞர் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை மக்கள் நன்மையில் நீடிப்பர்’ என்று (என்னைக் குறித்துக்) கூறினார்கள்.

நான், ‘இந்த (கஸாமா) விஷயம் தொடர்பாக இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து முன்மாதிரி கிடைத்துள்ளது’ என்றேன். (அதாவது) அன்சாரிகளில் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் (மட்டும் முன்பே கைபர் செல்வதற்காக) வெளியேறினார். (அங்கு) அவர் கொல்லப்பட்டார். பிறகு அவருக்குப் பின்னால் மற்றவர்களும் புறப்பட்டுச் சென்றனர். அங்கு அவர்கள் தம் தோழர் இரத்த (வெள்ள)த்தில் மிதப்பதைக் கண்டனர். உடனே அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுடன் பேசிக்கொண்டிருந்த எங்கள் நண்பர் எங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றார். நாங்கள் சென்று பார்த்தபோது அவர் இரத்த(வெள்ள)த்தில் மிதக்கிறார்’ என்று கூறினர். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெளியேறிச் சென்று, ‘இவரை யார் கொலை செய்திருப்பார் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘யூதர்கள்தாம் இவரைக் கொலை செய்தீர்கள்?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் (வாதிகளான அன்சாரிகளை நோக்கி) ‘யூதர்களில் ஐம்பது பேர் ‘நாங்கள் அவரைக் கொலை செய்வதை நீங்கள் விரும்புகின்றீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘எங்கள் அனைவரையும் கொலை செய்துவிட்டு (தாங்கள் கொலை செய்யவில்லையென) சத்தியம் செய்யக்கூட யூதர்கள் தயங்க மாட்டார்கள்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் (முஸ்லிம்களைப் பார்த்து), ‘உங்களில் ஐம்பது பேர் (யூதர்களே! கொலையாளிகள் என்ற) சத்தியம் செய்வதன் மூலம் இழப்பீட்டுத் தொகைக்கு உரிமை பெறுகிறீர்களா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘நாங்கள் சத்தியம் செய்வதற்கு தயாராக) இல்லை’ என்று பதிலளித்தனர். எனவே, கொல்லப்பட்டவருக்காக நபி(ஸல்) அவர்களே தம் தரப்பிலிருந்து இழப்பீட்டுத் தொகை வழங்கினார்கள்.

(அறிவிப்பாளர் அபூ கிலாபா(ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்:) மேலும், நான் (பின்வருமாறும்) கூறினேன்: ஹுதைல் குலத்தார் அறியாமைக் காலத்தில் தாம் நட்புறவு ஒப்பந்தம் செய்திருந்த ஒருவனிடம் ஒப்பந்த முறிவுப் பிரகடனத்தை வெளியிட்டனர். எனவே, அந்த ஒப்பந்த முறிவுக்குள்ளானவன் (மக்காவிலுள்ள) ‘பத்ஹா’ எனுமிடத்திலிருந்த யமன் நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை இரவு நேரத்தில் தாக்கிக் கொள்ளையடிக்க முற்பட்டான். அப்போது அவர்களில் ஒருவர் அவனைக் கண்டு விழித்துக்கொண்டு அவனை நோக்கி வாளை வீசி அவனைக் கொன்றுவிட்டார். உடனே ஹுதைல் குலத்தார் வந்து அந்த யமன்வாசியைப் பிடித்துக் கொண்டனர். பின்னர் ஹஜ் காலத்தில் அவரை (கலீஃபா) உமர்(ரலி) அவர்களிடம் கொண்டு வந்து நிறுத்தி ‘இவர் எங்கள் (ஒப்பந்த) நண்பரைக் கொன்றுவிட்டார்’ என்று கூறினர். அதற்கு அந்த யமன்வாசி, ‘(நான் திருடனைத்தான் கொலை செய்தேன்.) ஹுதைல் குலத்தார் அவனுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டுவிட்டனர்’ என்று கூறினார். உடனே உமர்(ரலி) அவர்கள், ‘ஹுதைல் குலத்தாரில் ஐம்பது பேர் ‘(நாங்கள்) அவருடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளவில்லை’ எனச் சத்தியம் செய்யட்டும்’ என்றார்கள். எனவே, அவர்களில் நாற்பத்தொன்பது பேர், (நாங்கள் அந்த மனிதருடனான ஒப்பந்தத்தை முறிக்கவில்லை என்று பொய்ச்) சத்தியம் செய்தனர். அப்போது ஹுதைல் குலத்தாரில் ஒருவர் ஷாம் நாட்டிலிருந்து வந்தார். (ஐம்பதாவது நபராக) அவரையும் சத்தியம் செய்திடுமாறு ஹுதைல் குலத்தார் கோரினர். ஆனால், அவர் தம் சத்தியத்திற்கு பதிலாக ஆயிரம் திர்ஹங்களை அவர்களிடம் வழங்கினார். (சத்தியம் செய்வதிலிருந்து விலகிக் கொண்டார்.) இதையடுத்து அவரின் இடத்தில் மற்றொருவரை அவர்கள் சேர்த்துக் கொண்டதுடன், அந்த (ஐம்பதாவது) நபரைக் கொலையுண்டவரின் சகோதரரிடம் ஒப்படைத்து விட்டனர். அவரின் கை இவரின் கையுடன் பிணைக்கப்பட்டது. பின்னர் அவர்களிருவரும் சத்தியம் செய்த ஐம்பது  பேரும் புறப்பட்டார்கள். அவர்கள் (மக்காவிற்கு அருகிலுள்ள) ‘நக்லா’ எனுமிடத்தை அடைந்தபோது மழை பிடித்துக் கொண்டது. எனவே, அவர்கள் அங்கிருந்த ஒரு மலையின் குகைக்குள் நுழைந்து கொண்டார்கள். அப்போது அந்தக் குகை (பொய்ச் சத்தியம் செய்த) அந்த ஐம்பது பேர் மீது இடிந்து விழுந்து அவர்கள் அனைவரும் மாண்டு போயினர். (கைகோத்து விடப்பட்ட) அந்த இரண்டு நண்பர்களும் தப்பித்துக் கொண்டனர். அப்போது அவர்களை ஒரு கல் தொடர்ந்து வந்து கொலையுண்டவருடைய சகோதரரின் காலை முறித்துவிட்டது. பிறகு அவர் ஓராண்டு காலம் வாழ்ந்து பிறது மரணித்தார்.

(தொடர்ந்து அபூ கிலாபா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) அப்துல் மலிக் இப்னு மர்வான் அல்கஸாமை’வைக் கொண்டு ஒருவரை பழிவாங்கிடுமாறு ஆணையிட்டார். பிறகு தம் செயல் குறித்து அவர் வருந்தினார். எனவே, சத்தியம் செய்த ஐம்பது பேரின் பெயர்களை (படை வீரர்களின்) பெயர் பதிவேட்டிலிருந்து நீக்கியதுடன் அவர்களை ஷாம் நாட்டிற்கு நாடு கடத்தவும் செய்தார்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6900

அனஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள் நீளமான அம்பின் ‘கூர்முனையால்’ அல்லது ‘கூர்முனைகளால்’ அவருக்குத் தெரியாமல் அவரைக் குத்துவதற்காகச் சென்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6901

ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார். ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (அறையின்) கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (இரும்பாலான) ஈர்வலிச் சீப்பொன்று இருந்தது; அதனால் தம் தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தபோது ‘என்னை நீ பார்க்கிறாய் என்று நான் (முன்பே) அறிந்திருந்தால், இந்தச் சீப்பினால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்ட மாக்கப்பட்டது’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6902

அபுல் காசிம் (முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உன் அனுமதியின்றி ஒருவர் உன்னை எட்டிப் பார்த்தபோது அவரின் மீது நீ சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரின் கண்ணைப் பறித்துவிட்டால் உன் மீது எந்தக் குற்றமுமில்லை என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6903

அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார். நான் அலீ(ரலி) அவர்களிடம் (நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினராகிய) உங்களிடம் குர்ஆனில் இல்லாத ஏதேனும் (செய்தி) உள்ளதா?’ என்று கேட்டேன்.

-அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் சில வேளைகளில் ‘மக்களிடம் இல்லாத ஏதேனும் ஒன்று உங்களிடம் உள்ளதா?’ என்று அபூ ஜுஹைஃபா(ரலி) அவர்கள் கேட்டார்கள் என அறிவித்தார்கள். அதற்கு அலீ(ரலி) அவர்கள், ‘வித்துக்களைப் பிளந்தவனும் உயிரினங்களை உருவாக்கியவனுமான அல்லாஹ்வின் மீது சத்தியமாக! குர்ஆனில் இருப்பதைத் தவிர வேறெதுவும் (நபியின் குடும்பத்தாராகிய) எங்களிடம் இல்லை; இறைவேதத்தில் ஒரு மனிதருக்கு வழங்கப்படும் விளக்கத்தையும் இந்த ஏட்டில் உள்ளவற்றையும் தவிர’ என்று கூறினார்கள். நான், ‘இந்த ஏட்டில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இழப்பீடு (தொடர்பான விளக்கங்கள்), போர்க் கைதியை விடுவித்தல், இறைமறுப்பாளனுக்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக்கூடாது ஆகிய விஷயங்கள் இதிலுள்ளன’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6904

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஹுதைல் குலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருத்தி மற்றொருத்தியின் மீது (வயிற்றில்) கல்லை எறிய, (வயிற்றிலிருந்த) சிசு இறந்து பிறந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்த சிசுவுக்காக ஓர் ஆண் அடிமையை அல்லது ஓர் அடிமைப் பெண்ணை (இழப்பீடாக) வழங்கிடுமாறு தீர்ப்பளித்தார்கள். இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6905

முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். ஒரு (கர்ப்பிணிப்) பெண்ணை (அடித்துக்) குறைப் பிரசவம் ஏற்படவைத்தால் (அதற்குப் பரிகாரம்) என்ன என்பது குறித்து உமர்(ரலி) அவர்கள் மக்களிடம் ஆலோசனை கேட்டார்கள். அப்போது நான், ‘நபி(ஸல்) அவர்கள் ஓர் ஆண் அடிமையை அல்லது ஓர் அடிமைப் பெண்ணை அந்த சிசுவுக்காக (இழப்பீடாக) வழங்கிடுமாறு தீர்ப்பளித்தார்கள்’ என்றேன்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6906

உமர்(ரலி) அவர்கள், ‘(நீங்கள் கூறிய) இதற்கு உம்முடன் சாட்சியம் அளிப்பவரை அழைத்து வாருங்கள்’ என்றார்கள். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) அவர்கள், அவ்வாறு நபி(ஸல) அவர்கள் தீர்ப்பளித்தபோது தாம் அங்கு இருந்ததாக சாட்சியம் அளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6907

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். உமர்(ரலி) அவர்கள், (வயிற்றிலேயே கொல்லப்பட்டு) விழுந்த கரு தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பைச் செவியேற்ற மக்களைச் சாட்சியம் அளிக்குமாறு கூறினார்கள். அப்போது முஃகீரா(ரலி) அவர்கள், ‘இத்தகையை சிசுவிற்காக ஓர் ஆண் அடிமையை அல்லது ஓர் அடிமைப் பெண்ணை (இழப்பீடாக) வழங்குமாறு நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளிக்க கேட்டுள்ளேன்’ என்றார்கள். உமர்(ரலி) அவர்கள் ‘இதற்கு உங்களுடன் சாட்சியம் அளிப்பவரை அழைத்து வாருங்கள்’ என்றார்கள். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தீர்ப்பளித்ததற்கு நான் சாட்சி’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6908

முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். ஒரு (கர்ப்பிணிப்) பெண்ணை (அடித்துக்) குறைப் பிரசவம் ஏற்படுத்துவது குறித்து உமர்(ரலி) அவர்கள் மக்களிடம் ஆலோசனை கேட்டார்கள். தொடர்ந்து மேற்கண்ட (6905 வது) ஹதீஸைப் போன்று அறிவித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6909

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘பனூ லிஹ்யான்’ குலத்தைச் சேர்ந்த (கர்ப்பிணி) பெண் ஒருத்தியின் சிசு (மற்றொரு பெண் அடித்ததால் இறந்து பிறந்தது. அது) தொடர்பாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை (நஷ்ட ஈடாக) வழங்க வேண்டுமென்று தீர்ப்பளித்தார்கள். பின்னர் நஷ்ட ஈடு வழங்கும்படி நபியவர்கள் தீர்ப்பளித்த அந்த(க் குற்றவாளி)ப் பெண் இறந்துவிட்டாள். எனவே, (அவள் சார்பாக) அவளுடைய தந்தைவழி உறவினர்கள் (அஸபா) நஷ்ட ஈடு வழங்கிட வேண்டுமென்றும், அவளுடைய சொத்து அவளுடைய ஆண் மக்களுக்கும் கணவருக்கும் உரியதென்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6910

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஹுதைல் குலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சண்டையிட்டுக்கொண்டனர். அவர்களில் ஒருத்தி மற்றொருத்தி மீது கல் எறிந்து அவளையும் அவளுடைய வயிற்றிலிருந்து சிசுவையும் கொன்றுவிட்டாள். எனவே, மக்கள் நபி(ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் அவளுடைய சிசுவிற்கான இழப்பீடாக ஓர் ஆண் அடிமை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை வழங்கிட வேண்டும் என்றும், (கொல்லப்பட்ட) அந்தப் பெண்ணிற்கான இழப்பீட்டுத் தொகை கொலை செய்த பெண்ணின் தந்தை வழி உறவினர்களின் மீது கடமையாகுமென்றும் தீர்ப்பளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6911

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஹுதைல் குலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சண்டையிட்டுக் கொண்டனர். அவர்களில் ஒருத்தி மற்றொருத்தி மீது கல் எறிந்து அவளையும் அவளுடைய வயிற்றிலிருந்து சிசுவையும் கொன்றுவிட்டாள். எனவே, மக்கள் நபி(ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் அவளுடைய சிசுவிற்கான இழப்பீடாக ஒர் ஆண் அடிமை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை வழங்கிட வேண்டும் என்றும், (கொல்லப்பட்ட) அந்தப் பெண்ணிற்கான இழப்பீட்டுத் தொகை கொலை செய்த பெண்ணின் தந்தை வழி உறவினர்களின் மீது கடமையாகுமென்றும் தீர்ப்பளித்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அபூ தல்ஹா(ரலி) அவர்கள் என்னுடைய கையைப் பிடித்து அழைத்துச் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! அனஸ் புத்திசாலிப் பையன். அவன் தங்களுக்குப் பணிவிடை செய்யட்டும்’ என்றார்கள். அதன்படி நான் நபி(ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும்போதும் பயணத்தில் இருக்கும்போது அவர்களுக்குப் பணிவிடை செய்துவந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் செய்த எதைப் பற்றியும் ‘இதை ஏன் நீ இப்படிச் செய்தாய்?’ என்றோ, நான் செய்யாத எதைப் பற்றியும் ‘இதை ஏன் நீ இப்படிச் செய்யவில்லை?’ என்றோ நபியவர்கள் என்னிடம் கேட்டதில்லை.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6912

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். வாயில்லாப் பிராணிகளால் சேதம் ஏற்பட்டால் இழப்பீடு கிடையாது. கிணற்று(விபத்து)க்கும் இழப்பீடு கிடையாது. சுரங்க(விப)த்திற்கும் இழப்பீடு கிடையாது. புதையலில் ஐந்தில் ஒரு பங்கு (ஸகாத்தாக) வசூலிக்கப்படும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6913

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். வாயில்லாப் பிராணிகளால் சேதம் நேர்ந்தால் இழப்பீடு இல்லை. கிணற்று (விபத்து)க்கும் இழப்பீடு இல்லை. சுரங்க (விப)த்துக்கும் இழப்பீடு இல்லை. புதையலில் ஐந்தில் ஒரு பங்கு (ஸகாத்தாக) வசூலிக்கப்படும்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6914

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இஸ்லாமிய அரசுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அதன் கீழ் வாழ்ந்துவரும்) ஓர் ஒப்பந்தக் குடிமகனை (அநியாயமாக)க் கொலை செய்பவன் சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டான். சொர்க்கத்தின் நறுமணமோ நாற்பதாண்டுப் பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6915

அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார். நான் அலீ(ரலி) அவர்களிடம், ‘(நபிகளாரின் குடும்பத்தாராகிய) உங்களிடம் குர்ஆனில் இல்லாத ஏதேனும் (செய்தி) உள்ளதா?’ என்று கேட்டேன்.

அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் சில வேளைகளில் ‘மக்களிடம் இல்லாத ஏதேனும் ஒன்று உங்களிடம் உள்ளதா?’ என்று அபூ ஜுஹைஃபா(ரலி) அவர்கள் கேட்டார்கள் என அறிவித்தார்கள்.

அதற்கு அலீ(ரலி) அவர்கள், ‘வித்துக்களைப் பிளந்தவனும் உயிரினங்களை உருவாக்கியவனுமான அல்லாஹ்வின் மீதாணையாக! குர்ஆனில் உள்ளதைத் தவிர வேறெதுவும் (நபிகளாரின் குடும்பத்தாராகிய) எங்களிடம் இல்லை; இறைவேதத்தில் ஒருவருக்கு அளிக்கப்படும் விளக்கத்தையும் இந்த ஏட்டில் உள்ளவற்றையும் தவிர’ என்று பதிலளித்தார்கள். நான் ‘இந்த ஏட்டில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டேன். அலீ(ரலி) அவர்கள், ‘இழப்பீடு (தொடர்பான விளக்கங்கள்), போர்க் கைதியை விடுவித்தல், இறைமறுப்பாளனுக்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக்கூடாது ஆகிய விஷயங்கள் இதிலுள்ளது’ என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6916

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர்களில் சிலர் சிலரைவிட உயர்ந்தவர்கள் என்று சொல்லாதீர்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6917

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். யூதர்களில் ஒருவர் முகத்தில் அடி வாங்கிக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவர், ‘முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘அவரைக் கூப்பிடுங்கள்’ என்றார்கள். அவ்வாறே அவரை அழைத்(து வந்)தார்கள். (அவரிடம்) ‘இவரை முகத்தில் அறைந்தீரா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ‘இறைத்தூதர் அவர்களே! நான் யூதர்களைக் கடந்துசென்றேன். அப்போது இவர் ‘மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தேடுத்தவன் மீது சத்தியமாக’ என்று கூறக் கேட்டேன். உடனே நான், ‘முஹம்மத்(ஸல்) அவர்களை விடவுமா? என வினவினேன். அப்போது எனக்குக் கோபம் ஏற்பட்டு இவரை அறைந்து விட்டேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘இறைத்தூதர்களிடையே என்னைச் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள். ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையடைந்து விடுவார்கள். மூர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூஸா(அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் இறை அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பிடித்தபடி (நின்றுகொண்டு) இருப்பார்கள். அவர்கள் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து) விட்டார்களா? அல்லது ‘தூர்’ (சினாய்) மலையில் (இறைவனைச் சந்தித்த போது) அவர்கள் அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப் படாமல்) விட்டு விடப்பட்டார்களா? என்று எனக்குத் தெரியாது’ என்று கூறினார்கள்.

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.