86. குற்றவியல் தண்டனைகள்

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6675

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இறைவனுக்கு இணைகற்பிப்பது, தாய் தந்தையரை புண்படுத்துவதும், கொலை செய்வது, பொய்ச் சத்தியம் செய்வது ஆகியன பெரும் பாவங்களாகும் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6676

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தைப் பறித்துக் கொள்வதற்காக திட்டமிட்டு, (பொய்ச்) சத்தியம் செய்கிறவரின் மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையிலேயே அவனை (மறுமையில்) அவர் சந்திப்பார்’ என்று கூறினார்கள். அப்போது அ(ந்தக் கருத்)தை உறுதிப்படுத்தும் விதமாக அல்லாஹ், ‘அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை’ எனும் (திருக்குர்ஆன் 03:77 வது) வசனத்தை அருளினான். 

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6677

(மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் அபூ வாயில்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். பின்னர் அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) அவர்கள் அங்கு வந்து, ‘அபூ அப்திர்ரஹ்மான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்) உங்களுக்கு என்ன அறிவித்தார்?’ என்று கேட்டார்கள். ‘இப்படி இப்படி’ என மக்கள் கூறினார்கள். அப்போது அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) கூறினார்: (அவர் அறிவித்தது உண்மைதான்.) இந்த வசனம் என் தொடர்பாகவே அருளப்பெற்றது. என் தந்தையின் சகோதரர் மகன் ஒருவரின் நிலத்தில் எனக்கொரு கிணறு இருந்தது. (அக்கிணறு தொடர்பாக எனக்கும் ஒரு யூதருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.) எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்(து விஷயத்தைத் தெரிவித்)தேன். அப்போது அவர்கள் ‘(ஒன்று) உன்னுடைய சாட்சி; அல்லது (பிரதிவாதியான) அவரின் சத்தியம்’ என்று கூறினார்கள். (உடனே) நான் ‘அப்படியானால், அந்த யூதர் (தயங்காமல்) அது தொடர்பாக(ப் பொய்)ச் சத்தியம் செய்துவிடுவாரே, இறைத்தூதர் அவர்களே!’ என்றேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘ஒரு முஸ்லிமான மனிதரின் சொத்தை (அநியாயமாக)ப் பறித்துக் கொள்வதற்காக பொய்ச் சத்தியம் செய்கிறவரின் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தான் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6678

அபூ மூஸா(ரலி) அறிவித்தார். என் (அஷ்அரீ குலத்துத்) தோழர்கள் எங்களை ஏற்றியனுப்ப வாகன ஒட்டகம் கேட்கும்படி நபி(ஸல்) அவர்களிடம் என்னை அனுப்பி வைத்தனர். (நான் சென்று அவர்களிடம் ஒட்டகம் கேட்டேன்) அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை நான் எதன் மீதும் ஏற்றியனுப்ப இயலாது’ என்று கூறினார்கள். அந்த நேரம் அவர்கள் கோபமாய் இருந்தார்கள். பிறகு நான் அவர்களிடம் சென்றபோது, நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சென்று, ‘அல்லாஹ்’ அல்லது ‘இறைத்தூதர்’ உங்களை ஏற்றியனுப்ப வாகனம் வழங்குவார்கள் என்று சொல்லுங்கள் என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6679

இப்னு ஷிஹாப் (முஹம்மத் இப்னு முஸ்லிம்) அஸ்ஸ¤ஹ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். உர்வா இப்னு ஸ¤பைர், ஸயீத் இப்னு முஸய்யப், அல்கமா இப்னு வக்காஸ், உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் இப்னி உத்பா (ரஹ் – அலைஹிம்) ஆகியோர், நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷா(ரலி) அவர்கள் தூய்மையானவர்கள் என இறைவன் (தன்னுடைய வேதத்தில்) அறிவித்தது பற்றியும் கூற கேட்டேன். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொரு வரும் இச்சம்பவம் பற்றி ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். (அதில் பின்வருமாறு உள்ளது:)

அப்போது அல்லாஹ், ‘(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தாம்’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11-20) பத்து வசனங்களை அருளினான். (ஆயிஷா(ரலி) கூறினார்:) என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளினான். (என் தந்தை) அபூ பக்ர் அஸ்ஸித்தீக்(ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிடமாட்டேன்’ என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். -மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூ பக்ர்(ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள். -அப்போது அல்லாஹ், ‘உங்களில் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்’ எனும் (திருக்குர்ஆன் 24:22 வது) வசனத்தை அருளினான்.

அபூ பக்ர்(ரலி) அவர்கள், ‘ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்’ என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்’ என்றும் கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6680

ஸஹதம் இப்னு முளர்ரிப்(ரஹ்) அறிவித்தார். நாங்கள் அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் சென்றேன். அப்போது அவர்கள் (ஏதோ) கோபத்தில் இருந்தார்கள். அன்னாரிடம் நாங்கள் (எங்கள் பயணத்திற்குத் தேவையான) வாகனங்களைக் கோரினோம். அப்போது அவர்கள், எங்களுக்கு வாகனங்கள் தரமாட்டேன் என்று சத்தியமிட்டுச் சொன்னார்கள். பிறகு (எங்களுக்கு வாகன ஒட்டகங்களைத் தந்துவிட்டு) ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனி எந்த ஒன்றுக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில், சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்ததற்காகப் பரிகாரமும் செய்வேன்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6681

முஸய்யப் இப்னு ஹஸ்ன்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் பெரிய தந்தை) அபூ தாலிப் அவர்களுக்கு மரண வேளை நெருங்கியபோது அவரிடம் வந்து, ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லுங்கள். இச்சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6682

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை ஆகும்; (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும்; அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை ஆகும். (அவை:) சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி; சுப்ஹானல்லாஹில் அழீம்.

(பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கிறேன்; கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்.) என அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6683

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவராக மரணிக்கிறவர் நரகத்தில் நுழைவிக்கப்படுவார்’ என்றார்கள். நான் மற்றொரு வார்த்தையில், அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதவராக மரணிக்கிறவர் சொர்க்கத்தில் புகுத்தப்படுவார்’ என்று சொன்னேன்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6684

அனஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் துணைவியரை (ஒரு மாத காலம்) நெருங்க மாட்டேன் எனச் சத்தியம் செய்திருந்தார்கள். அவர்களின் காலில் சுளுக்கு ஏற்பட்டிருந்தது. அப்போது அவர்கள் மாடியறை ஒன்றில் இருபத்தொன்பது நாள்கள் தங்கியிருந்தார்கள். பின்னர் அவர்கள் இறங்கி வந்தபோது மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஒரு மாத காலம் (தங்கள் துணைவியரை) நெருங்க மாட்டேன் எனச் சத்தியம் செய்திருந்தீர்களே? (ஆனால், இருபத்தொன்பதாம் நாளில் வந்து விட்டீர்களே?)’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6685

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். நபித்தோழர் அபூ உசைத் அஸ்ஸாஇதீ(ரலி) அவர்கள் தங்களின் திருமணத்திற்கு நபி(ஸல்) அவர்களை அழைத்தார்கள். அப்போது மணப்பெண்ணே (விருந்துக்கு வந்த) மக்களுக்குப் பணிவிடை செய்பவராக இருந்தார். மக்களே! மணப்பெண் நபி(ஸல்) அவர்களுக்கு என்ன புகட்டினார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் கல் (அல்லது மரப்) பாத்திரத்தில் நபி(ஸல்) அவர்களுக்காகப் பேரீச்சம் பழங்களை இரவிலேயே ஊறவைத்திருந்தார். காலையில் நபி அவர்களுக்கு அதை அவர் புகட்டினார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6686

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் சவ்தா(ரலி) அறிவித்தார். எங்களுக்குரிய ஆடு ஒன்று இறந்துவிட்டது. அதன் தோலை நாங்கள் பதனிட்டோம். பிறகு அதில் நாங்கள் பழரசத்தை ஊற்றி வைத்து வந்தோம். இறுதியில் அது (இற்றுப்போன) துருத்தியாக மாறிவிட்டது.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6687

ஆயிஷா(ரலி) அறிவித்தார். முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை அவர்களின் குடும்பத்தார் மூன்று நாள்கள் தொடர்ச்சியாகக் குழம்புடன் வெள்ளைக் கோதுமை ரொட்டியை வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை.

இதன் அறிவிப்பாளரான ஆபிஸ் இப்னு ரபீஆ(ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், தாம் ஆயிஷா(ரலி) அவர்களிடம் இது குறித்துக் கேட்டபோது அவர்கள் இதைத் தெரிவித்ததாக இடம் பெற்றுள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6688

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். அபூ தல்ஹா(ரலி) அவர்கள் (தம் துணைவியார்) உம்மு சுலைம்(ரலி) அவர்களிடம், ‘நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் குரலை பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கிருக்கும்) பசியையைப் புரிந்து கொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதாவது இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம்(ரலி) அவர்கள், ‘ஆம் (இருக்கிறது)’ என்று கூறிவிட்டு, வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்தார்கள். பிறகு அவர்கள் தங்களின் முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியில் அந்த ரொட்டியைச் சுருட்டி (என்னிடம் கொடுத்து) என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். நான் (அதையெடுத்துக் கொண்டு) சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அன்னாருடன் மக்களும் இருந்தனர். நான் அவர்களுக்கு முன் நின்றேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உன்னை அபூ தல்ஹா அனுப்பினாரா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘ஆம்’ என்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடனிருந்தவர்களிடம், ‘எழுந்திருங்கள்!’ என்றார்கள். மக்கள் (எழுந்து) நடந்தார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன்.

இறுதியில் அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம் வந்து (நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் வந்து கொண்டிருக்கும்) விவரத்தைத் தெரிவித்தேன். உடனே அபூ தல்ஹா(ரலி) அவர்கள் (என் தாயாரிடம்) ‘உம்மு சுலைமே! இறைத்தூதர்(ஸல்) அவர்களும் மக்களும் வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வேண்டிய உணவு நம்மிடம் இல்லையே!’ என்றார்கள். உம்மு சுலைம்(ரலி) அவர்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள்’ என்று கூறினார்கள். உடனே அபூ தல்ஹா(ரலி) அவர்கள் (தாமே நபி(ஸல்) அவர்களை முன் சென்று வரவேற்பதற்காக) நடந்து சென்று இறைத்தூதர்(ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடன் அபூ தல்ஹா(ரலி) அவர்கள் இருக்க வீட்டுக்குள் நுழைந்தார்கள். பிறகு ‘உம்மு சுலைமே! உம்மிடம் இருப்பதைக் கொண்டு வா!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். உடனே உம்மு சுலைம்(ரலி) அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி) உத்தரவிட, அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. உம்மு சுலைம்(ரலி) அவர்கள், தம்மிடமிருந்த தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறைவன் நாடிய (பிஸ்மில்லாஹ் மற்றும் இதர பிரார்த்தனை வரிகள் சில)வற்றைச் சொன்னார்கள்.

பிறகு, ‘பத்துப் பேருக்கு (உள்ளேவர) அனுமதியளியுங்கள்’ என்று (அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம்) சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா(ரலி) அவர்கள் அனுமதியளித்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு ‘பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதியளியுங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே அபூ தல்ஹா(ரலி) அவர்கள் அனுமதியளித்தார்கள். அவர்களும் வயிறு நிரம்ப உண்டுவிட்டு வெளியேறினார்கள். பின்னர், இன்னும் பத்துப் பேருக்கு அனுமதியளியுங்கள் என்றார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் அனுமதியளித்தார்கள். (இவ்வாறு வந்திருந்த) மக்கள் அனைவரும் வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். அப்படி உண்ட மக்கள் எழுபது அல்லது எண்பது பேர் ஆவர்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6689

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்திப்படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகத்தான் இருக்கும் என உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6690

கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (தபூக் போருக்குச் செல்லாமல் பின் தங்கிவிட்ட மூவரான எங்களைக் குறித்து) அல்லாஹ் ‘போருக்குச் செல்லாமல் பின்தங்கிவிட்ட மூவர்’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 09:118 வது) வசனத்தை அருளினான். நான் ‘(இறைத்தூதர் அவர்களே!) என்னுடைய பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வமனைத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (அவர்கள் விரும்பும் வழியில் செலவிட்டுக் கொள்வதற்காக) தர்மமாகத் தந்துவிடுகிறேன்’ என்று சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் செல்வத்தில் ஒரு பகுதியை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது’ என்று கூறினார்கள். இதை, கஅப்(ரலி) அவர்கள் (தம் இறுதிக் காலத்தில்) கண் பார்வை இழந்துவிட்டபோது அன்னாரைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவராயிருந்த அன்னாரின் புதல்வர் அப்துல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6691

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் (நீண்ட நேரம்) தங்கியிருந்து அவர் வீட்டில் தேன் அருந்துவது வழக்கம். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள், நபி(ஸல்) அவர்கள் (ஸைனபின் வீட்டிற்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் ‘தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா?’ என்று கூற வேண்டும் எனக் கூடிப் பேசி முடிவு செய்துகொண்டோம். எங்கள் இருவரில் ஒருவரிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இல்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரின் வீட்டில்) தேன் அருந்தினேன். ஆனால், இனி ஒருபோதும் நான் இவ்வாறு செய்ய மாட்டேன்’ என்று கூறிவிட்டார்கள். அப்போது, ‘நபியே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்?’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 66:1 வது) வசனம் அருளப்பெற்றது. (திருக்குர்ஆன் 66:4 வது வசனத்தில்) ‘நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால்…’ என்பது ஆயிஷா(ரலி) அவர்களையும் ஹஃப்ஸா(ரலி) அவர்களையும் குறிக்கிறது. (திருக்குர்ஆன் 66:3 வது வசனத்தில்) ‘நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார்’ என்பது, ‘இல்லை; நான் தேன்தான் அருந்தினேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதைக் குறிக்கிறது.

ஹிஷாம் இப்னு யூசுஃப்(ரஹ்) அவர்களிடமிருந்து இப்ராஹீம் இப்னு மூஸா(ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில், ‘நபி(ஸல்) அவர்கள், இனிமேல் நான் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டேன். இதை யாரிடமும் தெரிவித்து விடாதே!’ என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6692

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமென அவர்களுக்குத் தடை விதிக்கப்படவில்லையா? நபி(ஸல்) அவர்கள் ‘நேர்த்திக்கடன், (விதியில்) எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்தவும் செய்யாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம் ஏழைக்கு) வெளிக்கொணரப்படுகிறது’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6693

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமெனத் தடை விதித்தார்கள். மேலும், ‘நேர்த்திக்கடன் (விதியில்) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான்)’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6694

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நேர்த்திக்கடனானது, விதியில் எழுதப்படாத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்துவிடாது. மாறாக, அவனுக்கு எழுதப்பட்ட விதியின் பக்கமே நேர்த்திக்கடன் அவனைக் கொண்டு செல்கிறது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து இறைவன் (செல்வத்தை) வெளிக்கொணர்கிறான். இதற்கு முன் எந்தக் காரணத்திற்காக (ஏழைக்கு) அவன் வழங்காமல் இருந்தானோ அதே காரணத்திற்காக (இப்போது) வழங்கத் தொடங்கி விடுகிறான் என அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6695

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். -இதன் அறிவிப்பாளரான இம்ரான் இப்னு ஹ¤ஸைன்(ரலி) அவர்கள் ‘நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலைமுறையினரைக் குறிப்பிட்ட பின்னர் இரண்டு தலைமுறையினரைக் கூறினார்களா? மூன்று தலைமுறையினரைக் கூறினார்களா? என்று எனக்குத் தெரியாது. என்று கூறினார்கள். (தொடர்ந்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:) பிறகு ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்கள் நேர்ந்து கொள்வார்கள். ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள்; நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களை நம்பி எதையும் ஒப்படைக்கப்படாது. அவர்கள் தாமாகவே சாட்சியமளிக்க முன்வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கேட்கமாடடீர்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும் என இம்ரான் இப்னு ஹ¤ஸைன்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6696

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை நிறைவேற்றும் (முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6697

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (என் தந்தை) உமர்(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! மஸ்ஜிதுல் ஹராம் (புனிதப்) பள்ளிவாசலில் ஓர் இரவு ‘இஃதிகாஃப்’ இருப்பதாக அறியாமைக் காலத்தில் நேர்ந்து கொண்டேன். (இப்போது அதை நிறைவேற்ற வேண்டுமா?)’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘உங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றுங்கள்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6698

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஸஅத் இப்னு உபாதா அல் அன்சாரி(ரலி) அவர்கள், நேர்ந்துகொண்டு அதை நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்துவிட்ட தம் தாயின் நேர்த்திக்கடன் குறித்து நபி(ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அவர் தம் தாயாருக்காக நேர்த்திக்கடனை நிறைவேற்றிடுமாறு தீர்ப்பளித்தார்கள். அதுவே பின்னர் வழிமுறையாக ஆகிவிட்டது.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6699

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (உக்பா இப்னு ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘(இறைத்தூதர் அவர்களே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார்’ என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய்?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (நானே நிறைவேற்றுவேன்)’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6700

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றும் முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6701

அனஸ்(ரலி) அறிவித்தார். ‘இ(ந்த முதிய)வர் தம்மை (இவ்விதம்) வேதனை செய்து கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அ(ந்த முதிய)வர் தம் இரண்டு புதல்வர்களுக்கிடையே (தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட) நடந்துவந்ததை நபி(ஸல்) அவக்hள் பார்(த்துவிட்டு, விவரம் கேட்க, ‘நேர்த்திக்கடன்’ என்று மக்கள் கூறியபோது தான் மேற்கண்டவாறு தெரிவி)த்தார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6702

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் (ஒட்டகத்தின்) ‘மூக்கணாங்கயிறை’ அல்லது ‘வேறொரு பொருளைத்’ தம் கையில் கட்டிக்கொண்டு (புனித) கஅபாவைச் சுற்றிக் கொண்டிருந்ததை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அதைத் துண்டித்துவிட்டார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6703

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: நபி(ஸல்) அவர்கள் (புனித) கஅபாவைச் சுற்றி வந்து கொண்டிருந்தபோது ஒரு மனிதரைக் கடந்து சென்றார்கள். அவர் இன்னொரு மனிதரை மூக்கணாங்கயிறிட்டு இழுத்துச் சென்றுகொண்டிருந்தார். உடனே தம் கரத்தால் அக்கயிற்றைத் துண்டித்து விட்ட நபி(ஸல்) அவர்கள், இவரைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்க என உத்தரவிட்டார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6704

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழத்திக்கொண்டிருந்தபோது ஒருவர் (வெயிலில்) நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், ‘(இவர் பெயர்) அபூ இஸ்ராயீல். இவர், நின்று கொண்டே இருப்பேன்; உட்காரமாட்டேன் என்றும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிலில் தான் இருப்பேன்) என்றும், (யாரிடமும்) பேசமாட்டேன்; நோன்பு நோற்பேன் என்றும் நேர்ந்துகொண்டுள்ளார்’ என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்கு உத்தரவிடுங்கள்: அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும் நோன்பை (மட்டும்) நிறைவு செய்யட்டும்’ என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6705

ஹகீம் இப்னு அபீ ஹ¤ர்ரா அல் அஸ்லமீ(ரஹ்) அறிவித்தார். ஒருவர் ‘வருகிற எல்லா நாள்களிலும் நோன்பு நோற்பேன்’ என நேர்ந்திருக்க, ஏதேச்சையாக அது ஹஜ்ஜுப் பெரு நாளாகவோ அல்லது நோன்புப் பெருநாளாகவோ அமைந்துவிட்டால் (என்ன செய்வது?) என்று இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி உள்ளது’ என்று கூறிவிட்டு, ‘நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளில்கி நோன்புப் பெருநாளில்கி நோன்பு நோற்பவர்களாக இருக்கவுமில்லை; இரண்டு பெருநாள்களில் நோன்பு நோற்பதை (அனுமதிக்கப்பட்டதாக) அவர்கள் கருதவுமில்லை’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6706

ஸியாத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். நான் இப்னு உமர்(ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர், ‘நான் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு ‘செவ்வாய் கிழமையும்’ அல்லது ‘புதன் கிழமையும்’ நோன்பு நோற்க நேர்ந்து கொண்டுள்ளேன். ஆனால், ஏதேச்சையாக இந்த நாள் ஹஜ்ஜுப் பெருநாளாக அமைந்து விட்டது (நான் என்ன செய்வது?)’ என்று கேட்டதற்கு இப்னு உமர்(ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வோ நேர்த்திக்கடனை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டுள்ளான். (அதே நேரத்தில்) ஹஜ்ஜுப் பெருநாளில் நோன்பு நோற்கக் கூடாதென (இறைத்தூதர் மூலம்) நமக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர் திரும்பவும் (அதே கேள்வியைக்) கேட்டதற்கு இப்னு உமர்(ரலி) அவர்கள் முன்பு போன்றே பதிலளித்தார்கள்; கூடுதலாக எதுவும் கூறவில்லை.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6707

அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார். நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ‘கைபர்’ தினத்தன்று (வெற்றி கண்டு) புறப்பட்டோம். நாங்கள் (அந்தப் போரில்) பொன்னையோ வெள்ளியையோ போர்ச் செல்வமாகப் பெறவில்லை. (அவையல்லா கால்நடைச்) செல்வங்கள், ஆடைகள், உபயோகப் பொருள்கள் ஆகியவற்றையே பெற்றோம். ‘பனுள்ளுபைப்’ எனும் குலத்தாரில் ரிஃபாஆ இப்னு ஸைத் என்ற ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ‘மித்அம்’ எனப்படும் ஓர் அடிமையை அன்பளிப்பாக வழங்கினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘வாதில் குரா’ எனும் இடத்தை நோக்கிச் சென்று, அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தபோது ‘மித்அம்’ என்ற அந்த அடிமை இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சிவிகையை (ஒட்டகத்திலிருந்து) இறக்கிக்கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று மித்அமை(த் தாக்கி)க் கொன்றுவிட்டது. இதைக் கண்ட மக்கள் ‘அவருக்குச் சொர்க்கம் கிடைத்துவிட்டது; வாழ்த்துக்கள்’ என்றனர். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அப்படிச் சொல்லாதீர்கள். என்னுயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே அவற்றிலிருந்து கைபர் அன்று அவர் எடுத்துக் கொண்டுவிட்ட போர்வை அவரின் மீது நரக நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது’ என்று கூறினார்கள். இதை மக்கள் செவியேற்றபோது, ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ‘ஒரு செருப்பு வாரை’ அல்லது ‘இரண்டு வார்களைக்’ கொண்டு வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘(இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இது சாதாரண செருப்பு வாராக இருந்திராது. மாறாக,) ‘நெருப்பு வாராக’ அல்லது ‘இரண்டு நெருப்பு வார்களாக’ மாறியிருக்கும்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6708

கஅப் இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார். நான் (ஹஜ்ஜின்போது) நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் ‘அருகில் வா!’ என்று அழைத்தார்கள். எனவே, நான் அவர்கள் அருகில் சென்றேன். அப்போது அவர்கள் ‘உம்முடைய (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். அவர்கள் ‘நோன்பு நோற்றல், அல்லது தர்மம் செய்தல், அல்லது பலியிடல் பரிகாரமாகும்’ (திருக்குர்ஆன் 02:196) என்றார்கள்.

அய்யூப்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு என்பது மூன்று நாள்கள் நோன்பு நோற்பதையும், பலியிடல் என்பது ஓர் ஆட்டைக் குர்பானி கொடுப்பதையும், தர்மம் என்பது ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பதையும் குறிக்கும்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6709

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழிந்து விட்டேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘உமக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘நான் ரமளானில் (நோன்பு வைத்துக்கொண்டே) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்’ என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள் ‘ஓர் அடிமையை விடுதலை செய்ய உம்மால் முடியுமா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை’ என்றார். ‘தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க உம்மால் முடியுமா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ‘இல்லை’ என்றார். ‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உம்மால் முடியுமா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, அதற்கும் அவர் ‘இல்லை’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘அமர்வீராக!’ என்றார்கள். அவரும் அமர்ந்தார்.

பின்னர் நபி(ஸல்) அதவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த ‘அரக்’ ஒன்று கொண்டு வரப்பட்டது. -‘அரக்’ என்பது பெரிய கூடை ஆகும். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இதைப் பெற்று தர்மம் செய்வீராக!’ என்று கூறினார்கள். அம்மனிதர் ‘(இறைத்தூதர் அவர்களே!) என்னைவிட ஏழையாக இருப்போருக்காக (நான் தர்மம் செய்ய வேண்டும்)?’ என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள். பிறகு ‘இதை உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6710

அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து ‘(இறைத்தூதர் அவர்களே!) நான் அழிந்து விட்டேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘என்ன அது?’ என்று கேட்டார்கள். ‘நான் ரமளானில் (நோன்பு வைத்துக் கொண்டே) என் மனைவியைப் புணர்ந்து விட்டேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘(விடுதலை செய்வதற்கு) ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை’ என்றார். ‘தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ‘இல்லை’ என்றார். ‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் ‘இல்லை’ என்றார். பின்னர் அன்சாரிகளில் ஒருவர் ‘அரக்’ ஒன்றைக் கொண்டு வந்தார். -‘அரக்’ என்பது பேரீச்சம் பழம் உள்ள கூடை ஆகும். -அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இதைக் கொண்டு சென்று தர்மம் செய்வீராக!’ என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர் ‘இறைத்தூதர் அவர்களே! எங்களை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (பாறைகள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் எங்களைவிடப் பரம ஏழை வீட்டார் யாருமில்லை!’ என்று கூறினார். பிறகு ‘நீ போய் இதை உம் குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுப்பீராக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6711

அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து ‘(இறைத்தூதர் அவர்களே!) நான் அழிந்துவிட்டேன்!’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘உமக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘நான் ரமளானில் (நோன்பு வைத்துக் கொண்டே) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்’ என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள் ‘ஓர் அடிமையை விடுதலை செய்யும் வசதியைப் பெற்றுள்ளீரா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை’ என்றார். ‘தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ‘இல்லை’ என்றார். ‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் ‘என்னால் இயலாது’ என்றார். பின்னர் நபி(ஸல்) அவர்களிடம் பேழீச்சம் பழம் உள்ள கூடை ஒன்று கொண்டு வரப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இதை எடுத்துச் சென்று தர்மம் செய்வீராக!’ என்று கூறினார்கள். அப்போது அம்மனிதர். ‘என்னை விட ஏழையாக இருக்போருக்கா (நான் தர்மம் செய்யவேண்டும்)? மதீனாவின் (பாறைகள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் எங்களை விடப் பரம ஏழைகள் யாருமில்லை’ என்று கூறினார். பிறகு நபி(ஸல்) அவர்கள் ‘இதை எடுத்துச் சென்று உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்துவிடுவீராக!’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6712

சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ‘ஸாஉ’ என்பது, இன்றைக்கு (நடைமுறையிலிருக்கும்) உங்களின் ‘முத்’தில் ஒரு ‘முத்’தும் மூன்றில் ஒரு பாகமும் (1 1ஃ3) கொண்டதாக இருந்தது. பின்னர் உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்களின் காலத்தில் இதன் அளவு அதிகமாக்கப்பட்டது.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6713

நாஃபிஉ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் ரமளான் மாத (ஸதகத்துல் ஃபித்ர்) தர்மத்தை ஆரம்ப(க் கால) ‘முத்’தான நபி(ஸல்) அவர்களின் ‘முத்’தைக் கொண்டே வழங்கி வந்தார்கள். மேலும், சத்திய (முறிவுக்கான) பரிகாரத்தையும் நபி(ஸல்) அவர்களின் ‘முத்’தைக் கொண்டே வழங்கிவந்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ குதைபா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மாலிக் இப்னு அனஸ்(ரஹ்) அவர்கள், ‘(மதீனாவில் வழக்கிலுள்ள) எங்களின் ‘முத்’தே (ஹிஷாம் உருவாக்கிய) உங்களின் ‘முத்’தை விட (அளவில் சிறியதானாலும் வளத்தில்) பெரியதாகும். நபி(ஸல்) அவர்களின் (காலத்தில் இருந்த மதீனா) ‘முத்’தில் தவிர வேறொன்றில் சிறப்பு இருப்பதாக நாங்கள் கருதவில்லை’ என்று கூறினார்கள். மேலும், அவர்கள் என்னிடம் ‘ஓர் ஆட்சியாளர் உங்களிடம் வந்து நபி(ஸல) அவர்களின் ‘முத’ தைவிட (அளவில்) சிறியதொரு ‘முத்’தை நிர்ணயித்தால், நீங்கள் எந்த அளவையைக் கொண்டு (ரமளான் தர்மம், பரிகாரம் ஆகியவற்றை) வழங்குவீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு நான் ‘நபி(ஸல்) அவர்களின் ‘முத்’தைக் கொண்டே வழங்குவோம்’ என்று கூறினேன். அவர்கள் ‘பார்த்தீர்களா? (இறுதியில்) விஷயம் நபி(ஸல்) அவர்களின் ‘முத்’துக்கே வந்து சேர்கிறது’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6714

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘இறைவா! (மதீனாவாசிகளான) இவர்களுக்கு இவர்களின் அளவைகளான ‘ஸாஉ’ மற்றும் ‘முத்’ ஆகியவற்றில் வளம் சேர்ப்பாயாக’ என்று பிரார்த்தித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6715

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஸ்லிமான அடிமையை எவர் விடுதலை செய்கிறாரோ (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வொரு உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) ஓர் உறுப்பை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்வான். அவருடைய மர்ம உறுப்புக்கு பதிலாக இவருடைய மர்ம உறுப்பையும் விடுதலை செய்வான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6716

ஜாபிர்(ரலி) அறிவித்தார். அன்சாரிகளில் ஒருவர் தம் அடிமை ஒருவனைத் தம் இறப்புக்குப் பின் விடுதலை பெற்றவனாவான் என்று அறிவித்திருந்தார். ஆனால், அவரிடம் அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவுமிருக்கவில்லை. இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது ‘என்னிடமிருந்து இவனை (விலைக்கு) வாங்குபவர் யார்?’ என்று கேட்டார்கள். அப்போது அவனை நுஐம் இப்னு நஹ்ஹராம்(ரலி) அவர்கள் எண்ணூறு திர்ஹங்களுக்கு (வெள்ளிக் காசுகளுக்கு) வாங்கினார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் ‘அவன் (எகிப்து நாட்டு) கிப்தீ அடிமையாவான். அவன் (விற்கப்பட்ட) முதல் ஆண்டிலேயே இறந்து விட்டான்’ என்றும் கூறக் கேட்டேன்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6717

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (அடிமையாயிருந்த) பரீராவை நான் விலைக்கு வாங்க விரும்பினேன். ஆனால், அவருக்கு வாரிசாகும் உரிமை தங்களுக்கே இருக்க வேண்டுமென அவரின் எசமான்கள் முன் நிபந்தனை விதித்தார்கள். எனவே, இது தொடர்பாக நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள் ‘பரீராவை விலைக்கு வாங்கி (விடுதலை செய்து) விடு! ஏனெனில், விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை சொந்தம்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6718

அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார். நான் (என்) அஷ்அரீ குலத்தாரில் ஒரு குழுவினருடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று (எங்களையும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை’ என்றார்கள். பிறகு அல்லாஹ் நாடிய நேரம் வரை நாங்கள் (அங்கேயே) இருந்தோம். பின்பு சில ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் மூன்று ஒட்டக மந்தைகளை எங்களுக்கு வழங்கும்படி ஆணையிட்டார்கள். (அவற்றில் ஏறி) நாங்கள் சென்றபோது, எங்களில் சிலர் சிலரிடம், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (நபி(ஸல்) அவர்கள் தரமாட்டேனென்று சத்தியம் செய்த பிறகு இவற்றை நாம் வாங்கிச் சென்றால் இவற்றில்) நமக்கு வளம் (பரக்கத்) ஏற்படாதே! நபி(ஸல்) அவர்களிடம் நம்மைச் சுமந்து செல்ல ஒட்டகங்கள் ஏற்பாடு செய்யும்படி கேட்டோம். அவ்வாறு நம்மை ஏற்றியனுப்பத் தம்மால் இயலாது என நபியவர்கள் சத்தியம் செய்து கூறினார்கள். பிறகு, நாம் ஏறிச் செல்ல ஒட்டகங்கள் வழங்கினார்கள்’ என்று கூறினார்கள். எனவே, நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் (திரும்பவும்) சென்று, அவர்களுக்கு அதை நினைவுபடுத்தினோம். அப்போது அவர்கள், ‘நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பவில்லை; மாறாக, அல்லாஹ்தான் உங்களை (அதில்) ஏற்றி அனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனிமேல் ஏதேனும் ஒரு சத்தியம் செய்து, பிறகு அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்ததற்காகப் பரிகாரம் செய்து விடுவேன்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6719

(மேற்கண்ட ஹதீஸில்) ‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இனிமேல் நான் ஏதேனும் ஒரு சத்தியம் செய்து, அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில், ‘சத்திய முறிவுக்காகப் பரிகாரம் செய்துவிட்டு அந்தச் சிறந்ததையே செய்வேன்’ அல்லது ‘சிறந்ததையே செய்துவிட்டுப் பரிகாரம் செய்துவிடுவேன்’ இதை ஹம்மாத் இப்னு ஸைத்(ரஹ்) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6720

அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார். (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:) (இறைத்தூதர்) சுலைமான் (அலை) அவர்கள் (ஒரு முறை), ‘நான் இன்றிரவு (என்னுடைய) தொண்ணூறு துணைவியரிடமும் சென்று (தாம்பத்திய உறவு கொண்டு) வருவேன். அவர்களில் ஒவ்வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பார்கள்’ என்று கூறினார்கள். அப்போது அவர்களின் தோழர் ஒருவர், அவர் ஒரு வானவர் என அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ‘இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்று சொல்லுங்கள்’ எனக் கூறினார். சுலைமான்(அலை) அவர்கள் இன்ஷா அல்லாஹ்’ என்று கூற மறந்துவிட்டார்கள்; தம் துணைவியரிடம் சென்று வந்தார்கள். ஆனால், அவர்களின் துணைவியரில் ஒரே ஒருவரைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அந்த ஒருவரும் ஒரு புஜமுடைய அரை மனிதரையே பெற்றெடுததார். (நபி) சுலைமான் (அலை) அவர்கள் ‘இன்ஷா அல்லாஹ்’ (அல்லாஹ் நாடினால்) என்று கூறியிருந்தால் சத்தியத்தை அடையாமல் இருந்திருக்க மாட்டார்கள். தம் தேவையைப் பூர்த்தி செய்திருப்பார்கள்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6721

ஸஹதம் இப்னு முளர்ரிப் அல்ஜர்மீ(ரஹ்) அறிவித்தார்.நாங்கள் அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்களிடம் இருந்தோம். ஜர்ம் குலத்தாரான எங்களுக்கும் இந்த (அஷ்அரீ) குலத்தாருக்கும் இடையே நட்புறவும் ஒத்துழைப்பும் இருந்தது. அப்போது (அபூ மூஸா அவர்களுக்கு) உணவு கொண்டு வரப்பட்டது. அந்த உணவில் கோழி இறைச்சி இருந்தது. அங்கு பன} தைமுல்லாஹ் குலத்தைச் சேர்ந்த சிவப்பு மனிதர் ஒருவர் இருந்தார். அவர் ஓர் அடிமையைப் போன்று காணப்பட்டார். அவர் (உணவின் பக்கம்) நெருங்கவில்லை. எனவே, அவரிடம் அபூ மூஸா ‘அருகில் வாருங்கள். ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கோழி இறைச்சி உண்பதை பார்த்திருக்கிறேன்’ என்றார்கள். அதற்கு அவர் ‘இந்தக் கோழி (இனம்) நான் அருவருப்பாகக் கருதும் ஒன்றைத் தின்னப் பார்த்தேன். உடனே ஒருபோதும் இதை உண்ணமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டேன்’ என்றார். அப்போது அபூ மூஸா(ரலி) அவர்கள் ‘அருகில் வாருங்கள். அது குறித்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு(ப் பின்வருமாறு) கூறலானார்கள்.

நாங்கள் அஷ்அரீ குலத்தார் சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள் தர்ம ஒட்டகங்களில் சிலவற்றை பங்கிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் (எங்களைச்) சுமந்து செல்ல ஒட்டகங்கள் தருமாறு அவர்களிடம் கேட்டேன். அப்போது நபியவர்கள் கோபமாக இருந்தார்கள் என்று அறிவிப்பாளர் கூறினார்கள் எனவே கருதுகிறேன் என அய்யூப்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை’ என்றார்கள். எனவே, நாங்கள் சென்று விட்டோம். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. உடனே ‘இந்த அஷ்அரீகள் எங்கே? இந்த அஷ்அரீகள் எங்கே?’ என்று வினவப்பட்டது. இதையடுத்து நாங்கள் (நபியவர்களிடம்) சென்றோம். அப்போது வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து ஒட்டக மந்தைகளை எங்களுக்கு வழங்கும்படி உத்தரவிட்டார்கள். (அவற்றைப் பெற்றுக்கொண்டு) விரைவாக நாங்கள் புறப்பட்டோம்.

அப்போது நான் என் தோழர்களிடம் ‘நாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று நாம் ஏறிச்செல்ல வாகனம் கேட்டோம். அவ்வாறு நம்மை ஏற்றியனுப்ப இயலாது என அவர்கள் சத்தியம் செய்தார்கள். பிறகு நம்மை அழைத்து ஏற்றியனுப்பினார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் செய்த சத்தியத்தை மறந்துவிட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் செய்த சத்தியத்தை மறக்கும்படி நாம் செய்திருந்தால் ஒருபோதும் நாம் வெற்றியடையமாட்டோம். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் திரும்பச் சென்று, அவர்கள் செய்த சத்தியத்தை அவர்களுக்கு நாம் நினைவுபடுத்துவோம்’ என்று கூறினேன். எனவே, நாங்கள் திரும்பச் சென்று, இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஒட்டகம் கேட்டுத் தங்களிடம் வந்தோம். எங்களுக்குத் தரமுடியாது எனத் தாங்கள் சத்தியம் செய்தீர்கள். பிறகு எங்களை (அழைத்து) ஒட்டகங்களில் ஏற்றியனுப்பினீர்கள். எனவே, தாங்கள் செய்த சத்தியத்தை மறந்துவிட்டீர்களென நாங்கள் ‘எண்ணுகிறோம்’ அல்லது ‘அறிகிறோம்’ என்று கூறினோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘செல்லுங்கள். நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றியனுப்பவில்லை. மாறாக, அல்லாஹ்தான் உங்களை அதில் ஏற்றியனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் நாடினால், இனிமேல் நான் எந்த ஒன்றுக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் அந்தச் சிறந்ததையே செய்வேன். சத்திய முறிவுக்காகப் பரிகாரம் செய்துவிடுவேன்’ என்று கூறினார்கள்.

இதே ஹதீஸ் வேறு பல அறிவிப்பாளர் தொடர்களிலும் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6722

அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) ‘ஆட்சிப் பொறுப்பை நீயாக (விரும்பிக்) கேட்காதே! ஏனெனில், நீ கேட்காமல் அது உனக்கு வழங்கப்பட்டால், அது தொடர்பாக உனக்கு (இறைவனது) உதவி அளிக்கப்படும். (நீ) கேட்டதால் அது உனக்கு வழங்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவனது உதவி கிட்டாது.) நீ ஒரு சத்தியம் செய்து, அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் செய்துவிட்டு, உன்னுடைய சத்தியத்(தை முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்து விடு’ என்று கூறினார்கள்.

இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6723

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார். நான் (ஒரு முறை) நோய்வாய்ப்பட்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் என்னை உடல் நலம் விசாரிக்க நடந்தே வந்தனர். என்னிடம் அவர்கள் வந்தபோது நான் மயக்கமுற்றிருந்தேன். பின்னர் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அங்கசுத்தி (உ@) செய்தார்கள். பிறகு அந்தத் தண்ணீரை என் மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கம் தெளிந்(து கண்விழித்)தேன். அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் செல்வத்தை நான் என்ன செய்ய வேண்டும்? என் செல்வத்தின் விஷயத்தில் நான் என்ன முடிவு செய்ய வேண்டும்?’ என்று கேட்டேன். அப்போது அவர்கள் எனக்கு பதிலேதும் கூறவில்லை. முடிவில் வாரிசுரிமை தொடர்பான (மேற்கண்ட வசனம்) இறங்கிற்று

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6724

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அடிப்படையில்லாமல் பிறர் மீது சந்தேகம் கொள்வது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், இவ்வாறு சந்தேகம் கொள்வது மாபெரும் பொய்யாகும். (மற்றவர்களின் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரின் மீது ஒருவர் கோபம் கொள்ளாதீர்கள்; பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள் என அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6725

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்) ஃபாத்திமா(ரலி) அவர்களும் அப்பாஸ்(ரலி) அவர்களும் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தைக் கேட்டனர். அப்போது அவர்களிருவரும் ‘ஃபதக்’ பகுதியிலிருந்து தம் நிலத்தையும் கைபரில் தமக்குக் கிடைத்த பங்கையுமே அவ்வாறு கோரினர்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6726

அவர்கள் இருவரிடமும் அபூ பக்ர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(இறைத்தூதர்களாகிய) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவையாகும். இச்செல்வத்திலிருந்து தான் முஹம்மதின் குடும்பத்தினர் உண்பார்கள் என்று சொல்லக் கேட்டுள்ளேன்’ என்று கூறிவிட்டு, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இச்செல்வத்தின் விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எவ்வாறு செயல்படக் கண்டேனோ அதில் எதையும் கைவிடாமல் நானும் அவ்வாறே செயல்படுவேன்’ என்று பதிலளித்தார்கள். இதனால் கோபித்துக் கொண்டு ஃபாத்திமா(ரலி) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் தாம் இறக்கும் வரை பேசவில்லை.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6727

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6728

முஹம்மத் இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அவர்கள் கூறினார்: நான் மாலிக் இப்னு அவ்ஸ் இப்னி அல் ஹதஸான்(ரலி) அவர்களிடம் சென்று (ஃபதக் தொடர்பான நிகழ்ச்சி குறித்துக்) கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: நான் உமர்(ரலி) அவர்களிடம் சென்று அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அப்போது உமர்(ரலி) அவர்களின் மெய்க்காவலர் ‘யர்ஃபஉ’ என்பவர் அவர்களிடம் வந்து, ‘உஸ்மான்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸ¤பைர் இப்னு அவ்வாம்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஆகியோர் தங்களைச் சந்திக்கத் தங்களுக்கு இசைவு உண்டா?’ என்று கேட்டார். உமர்(ரலி) அவர்கள், ‘ஆம்’ என்று கூறி, அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். (சற்று நேரத்திற்குப்) பிறகு யர்ஃபஉ (வந்து), ‘அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் சந்திப்பதில் தங்களுக்கு இசைவு உண்டா?’ என்று கேட்டார். ‘ஆம்’ என்றார்கள். (அனுமதிக்குப் பின் அவர்கள் இருவரும் உள்ளே வந்தனர்).

அப்பாஸ்(ரலி) அவர்கள், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் இவருக்கும் (-அலீக்கும்) இடையே (இச்சொத்துத் தொடர்பாகத்) தீர்ப்பளியுங்கள்’ என்றார்கள். உமர்(ரலி) அவர்கள், ‘வானமும் பூமியும் எந்த அல்லாஹ்வின் கட்டளையால் நிலை பெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் கேட்கிறேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(இறைத்தூதர்களான) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாகமாட்டார். நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே’ என்று தம்மைக் குறித்துக் கூறியதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு (அங்கிருந்த) அந்தக் குழுவினர், ‘நபியவர்கள் அவ்வாறு சொல்லத்தான் செய்தார்கள்’ என்று பதிலளித்தனர். உமர்(ரலி) அவர்கள், அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் நோக்கி, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அவ்விருவரும், ‘(ஆம்) அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்’ என்று பதிலளித்தனர்.

உமர்(ரலி) அவர்கள், ‘அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயம் குறித்துப் பேசுகிறேன்: (போரிடாமல் கிடைத்த) இந்த (ஃபய்உ)ச் செல்வத்திலிருந்து சிறிதைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கினான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதை வழங்கவில்லை’ என்று கூறிவிட்டு, ‘அல்லாஹ் எச்செல்வத்தை (எதிரிகளான) அவர்களின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பிக் கொடுத்தானோ அச்செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போரிடுவதற்காக) நீங்கள் ஒட்டிச் சென்றதால் கிடைத்ததன்று. மாறாக அல்லாஹ், தான் நாடுகிறவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகிறான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கிறான்’ எனும் (திருக்குர்ஆன் 59:6 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.

தொடர்ந்து, ‘எனவே, இது இறைத் தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட்டுவிட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக் கொள்ளவில்லை; அதை உங்களை விடப் பெரிதாகக் கருதவுமில்லை. உங்களுக்கு அதைக் கொடுத்தார்கள்; உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள். இறுதியில் அதிலிருந்து இச்செல்வம் மட்டுமே எஞ்சியது. நபி(ஸல்) அவர்கள் இச்செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் வருடாந்திர செலவை அவர்களுக்குக் கொடுத்து வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு எஞ்சியதை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள். இவ்வாறே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் வாழ்நாளில் செயல்பட்டுவந்தார்கள்.’ (இவ்வளவும் சொல்லிவிட்டு, அக்குழுவினரை நோக்கி) ‘அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை கேட்கிறேன்: இதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘ஆம்’ (அறிவோம்) என்று பதிலளித்தனர். பிறகு, அலீ(ரலி) அவர்களிடமும் அப்பாஸ்(ரலி) அவர்களிடமும்? ‘உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கிறேன்: நீங்கள் இதை அறிவீர்களா?’ என்று வினவினார்கள். அவர்கள் இருவரும், ‘ஆம்’ (அறிவோம்) என்று பதிலளித்தனர்.

(தொடர்ந்து), ‘பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத்துக் கொண்டான். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள், ‘நான் அல்லாஹ்வின் தூதருடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்’ என்று கூறி, அ(ந்தச் செல்வத்)தைத் தம் கைவசம் எடுத்தார்கள். அது விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போன்றே தாமும் செயல்பட்டார்கள். பிறகு அபூ பக்ர்(ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக் கொண்டான். அப்போது நான், ‘நான் அல்லாஹ்வின் தூதருடைய பிரதிநிதியின் பிரதிநிதியாவேன்’ என்று கூறி, அதை (என் ஆட்சிக் காலத்தில்) இரண்டு ஆண்டுகளுக்கு என் கைவசம் எடுத்துக் கொண்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் நடந்துகொண்ட முறைப்படி செயல்பட்டு வந்தேன். பிறகு நீங்கள் இருவரும் என்னிடம் வந்தீர்கள் (பேசினீர்கள்). உங்கள் இருவரின் கோரிக்கையும் ஒன்றாகவே இருந்தது; உங்கள் இருவரின் விஷயமும் ஒன்றாகவே இருந்தது.

(அப்பாஸ்(ரலி) அவர்களே!) நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரரின் புதல்வர் (-நபி) இடமிருந்து உங்களுக்குச் சேர வேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்டபடி வந்தீர்கள். அவரும் (-அலீயும்) தம் துணைவியாருக்கு அவரின் தந்தையிடமிருந்து கிடைக்க வேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்டபடி என்னிடம் வந்தார். அப்போது நான் (உங்கள் இருவரிடமும்,) ‘(நபிகளார் செயல்பட்டபடி செயல்படவேண்டும் எனும் நிபந்தனையின் பேரில்) நீங்கள் இருவரும் விரும்பினால் உங்கள் இருவரிடமும் அதைக் கொடுத்து விடுகிறேன்’ என்று சொன்னேன். (இப்போது) அதன்றி வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடமிருந்து கோருகின்றீர்களா? எவனுடைய அனுமதியுடன் வானமும் பூமியும் நிலை பெற்றுள்ளனவோ அவன் மீது சத்தியமாக! நான் அச்செல்வம் தொடர்பாக இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் இறுதிநாள் வரை அளிக்கமாட்டேன். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதை ஒப்படைத்துவிடுங்கள். அதை உங்களுக்கு பதிலாக நானே பராமரித்துக் கொள்வேன்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6729

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என் வாரிசுகள் ஒரு தீனாரைக் கூட (வாரிசுப்) பங்காகப் பெறமாட்டார்கள். என் துணைவியருக்கான வாழ்க்கைச் செலவும் என் (பிரதிநிதி மற்றும்) ஊழியரின் ஊதியமும் போக நான்விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமேயாகும் என அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6730

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் துணைவியர் உஸ்மான்(ரலி) அவர்களை (என் தந்தை கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்து, (அல்லாஹ்வின் தூதரிடமிருந்து) தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தை அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் கேட்க விரும்பினர். அப்போது நான் (அவர்களைப் பார்த்து), ‘(இறைத்தூதர்களான) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்லவில்லையா?’ என்று கேட்டேன்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6731

இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களை விட நானே நெருக்கமான (உரிமையுடைய)வனாவேன். எனவே, தம் மீது கடன் இருக்கும் நிலையில் அதனை அடைப்பதற்கான ஒன்றையும்விட்டுச் செல்லாமல் இறந்துவிடுபவரின் கடனை அடைப்பது என்னுடைய பொறுப்பாகும். (இறக்கும் போது) ஒரு செல்வத்தைவிட்டுச் ஒருவர் விட்டுச் செல்வாராயின் அது அவரின் வாரிசுகளுக்குரியதாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6732

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (பாகப் பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்றுள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது (இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6733

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். (‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) மக்காவில் நான் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியிருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. என் ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுகள் யாரும் எனக்கில்லை. எனவே, என்னுடைய செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்துவிடட்டுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘வேண்டாம்’ என்றார்கள். ‘அவ்வாறாயின் பாதியை தர்மம் செய்யட்டுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், வேண்டாம் என்றார்கள். ‘அவ்வாறாயின் பாதியை தர்மம் செய்யட்டுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘வேண்டாம்’ என்றார்கள். ‘மூன்றிலொரு பங்கை தர்மம் செய்யட்டுமா?)’ என்று கேட்டேன். நபியவர்கள், ‘மூன்றிலொரு பங்கு கூட அதிகம்தான். நீங்கள் உங்கள் பிள்ளைகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாகவிட்டுச் செல்வதைவிடத் தன்னிறைவு உடையவர்களாகவிட்டுச் செல்வதே சாலச்சிறந்ததாகும். (நல்ல நோக்கத்தில்) நீங்கள் செய்கிற ஒவ்வொரு செலவுக்கும் உங்களுக்கு நிச்சயம் நற்பலன் வழங்கப்படும்; நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் ஊட்டுகிற ஒரு கவளம் உணவாயினும் சரி! (அதற்கும் நற்பலன் உண்டு)’ என்றார்கள். உடனே நான், ‘இறைத்தூதர் அவர்களே! (ஹஜ் முடிந்து என் தோழர்கள் அனைவரும் மதீனா செல்வார்கள்.) நான் மட்டும் என் ஹிஜ்ரத் பூமி(யான மதீனாவு)க்குச் செல்லாமல் (மக்காவிலேயே) தங்கிவிடுவேனா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான் (மதீனா) சென்ற பிறகு நீங்கள் இங்கேயே தங்கியிருந்து, அல்லாஹ்வின் திருப்தியை நாடி எந்த நல்லறம் புரிந்தாலும் அதன் மூலம் உங்கள் உயர்வும் அந்தஸ்தும் அதிகமாகவே செய்யும். நான் (மதீனா) சென்ற பிறகு, உங்களின் மூலம் சிலர் நன்மையடைவதற்காகவும் மற்ற சிலர் துன்பம் அடைவதற்காகவும் நீங்கள் இங்கேயே தங்கவைக்கப்படலாம். ஆனால், பாவம், ஸஅத் இப்னு கவ்லா! (அவரின் ஆசை நிறைவேறவில்லை)’ என்று மக்காவிலேயே இறந்துவிட்ட ஸஅத் இப்னு கவ்லா(ரலி) அவர்களுக்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்கள்.

இதன் அறிவிப்பார்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஸஅத் இப்னு கவ்லா(ரலி) அவர்கள் ஆமிர் இப்னு லுஅய் குலத்தைச் சேர்ந்தவராவார்.14

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6734

அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் யமன் நாட்டுக்கு எங்களின் போதகராகவும் ஆட்சியாளராகவும் வந்தார்கள். அன்னாரிடம் நாங்கள், தம் மகளையும் சகோதரியையும்விட்டுவிட்டு இறந்த ஒருவரைக் குறித்து (பாகப் பிரிவினை தொடர்பாக)க் கேட்டோம். அப்போது அவர்கள் (மொத்தச் சொத்தில்) மகளுக்குப் பாதியும் சகோதரிக்கு (மீதி)ப் பாதியும் அளிக்கும்படி கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6735

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (பாகப்பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்றுள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6736

ஹுஸைல் இப்னு ஷுரஹ்பீல்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அபூ மூஸா(ரலி) அவர்களிடம், (இறந்த ஒருவருக்கு) மகள், மகனுடைய மகள், சகோதரி ஆகியோர் (இருந்தால், அவர்களுக்குக் கிடைக்கும் சொத்துரிமை) குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘மகளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதியும் சகோதரிக்கு (மீதி)ப் பாதியும் கிடையாது)’ என்று கூறிவிட்டு, ‘(வேண்டுமானால்,) இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்று (கேட்டுப்) பாருங்கள். அன்னாரும் என் (கருத்தி)னையே பிரதிபலிப்பார்கள்’ என்றார்கள். எனவே, இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் (சென்று) அபூ மூஸா(ரலி) அவர்களின் கூற்றைத் தெரிவித்து (இது குறித்து விளக்கம்) கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘இவ்வாறு (மகனின் மகளுக்கு சொத்தில் பங்கு இல்லை என்று) நானும் சொன்னால் நிச்சயம் நான் வழிதவறியவனாம்விடுவேன்; நான் நேர்வழியடைந்தவர்களில் ஒருவனாக இருக்கமாட்டேன். இந்த விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பையே நானும் அளிக்கிறேன்: மகளுக்குப் பாதியும் மகனின் மகளுக்கு ஆறில் ஒரு பாகமும் வழங்கப்படவேண்டும். அப்போதுதான் மூன்றில் இரண்டு பாகங்கள் நிறைவாகும். எஞ்சியிருப்பது சகோதரிக்கு உரியதாகும்’ என்றார்கள். பின்னர் அபூ மூஸா(ரலி) அவர்களிடம் சென்று இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தோம். அப்போது, ‘இந்தப் பேரறிஞர் (இப்னு மஸ்வூத்(ரலி) உங்களிடையே இருக்கும் வரை என்னிடம் (விளக்கம்) கேட்காதீர்கள்’ என்று (புகழ்ந்து) சொன்னார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6737

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (பாகப் பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்றுள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது (இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6738

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், இந்தச் சமுதாயத்தில் யாரையேனும் நான் உற்ற நண்பராக ஆக்கிக்கொள்வதாயிருந்தால் அவரையே ஆக்கிக் கொண்டிருப்பேன். என்றாலும், இஸ்லாமிய சகோதரத்துவமே (எல்லா உறவுகளையும் விடச்) ‘சிறந்தது’ அல்லது ‘நல்லது’ என்று யார் விஷயத்தில் கூறினார்களோ (அந்த அபூ பக்ர்(ரலி) அவர்கள் தாம், (சொத்துரிமை பெறுவதில்) பாட்டனாரை ‘தந்தையின் இடத்தில் வைத்தார்கள்’ அல்லது ‘தந்தை’ எனத் தீர்ப்பளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6739

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (இறந்தவர் விட்டுச் சென்ற) செல்வம் (அவருடைய) குழந்தைகளுக்கு (மட்டுமே) உரியதாக இருந்தது. பெற்றோருக்கு(ப் பங்கு கிடைக்க வேண்டுமெனில் இறந்தவர்) மரண சாசனம் செய்திருக்க வேண்டும் என்றிருந்தது. இதில் அல்லாஹ் தான் நாடியதை மாற்றியமைத்து, ‘ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களின் பங்கு’ என்ற விகிதத்தை ஏற்படுத்தினான். பெற்றோரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் என்று நிர்ணயித்தான். (குழந்தை இருக்கும்போது) மனைவிக்கு எட்டில் ஒரு பாகமும் (குழந்தை இல்லாதபோது) நான்கில் ஒரு பாகமும் நிர்ணயித்தான். (குழந்தை இல்லாதபோது) கணவனுக்குச் சரிபாதியும் (குழந்தை இருக்கும்போது) நான்கில் ஒரு பாகமும் நிர்ணயித்தான்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6740

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘பனூ லிஹ்யான்’ குலத்தைச் சேர்ந்த (கர்ப்பிணி) பெண் ஒருத்தியின் (வயிற்றிலிருந்த) சிசு, (மற்றொரு பெண் அடித்ததால்) இறந்து பிறந்தது. அதற்கு நஷ்ட ஈடாக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை வழங்கிட வேண்டுமென இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். பின்னர், நஷ்டஈடு வழங்கும்படி நபியவர்கள் தீர்ப்பளித்த அந்த(க் குற்றவாளி)ப் பெண் இறந்துவிட்டார். எனவே, (அவர் சார்பாக) அவரின் தந்தைவழி உறவினர்கள் (அஸபாக்கள்) நஷ்ட ஈடு வழங்கிட வேண்டுமென்றும், அவரின் சொத்து அவரின் ஆண் மக்களுக்கும் கணவருக்கும் உரியதென்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6741

அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் (யமன் நாட்டுக்கு வந்த) முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள், ‘(சொத்தில்) பாதி இறந்தவரின்) மகளுக்கும் (மீதிப்) பாதி சகோதரிக்கும் உரியது’ என்று தீர்ப்பளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் இப்னு மிஹ்ரான் அல்அஃமஷ்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் எங்களிடையே (மேற்கண்டவாறு) தீர்ப்பளித்தார்கள்’ என்று காணப்படுகின்றது. ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில்’ என்ற குறிப்பு இடம் பெறவில்லை.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6742

ஹுஸைல் இப்னு ஷுரஹ்பீல்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் ‘(மகனின் மகளுக்குக் கிடைக்க வேண்டிய) இச்சொத்து விஷயத்தில் ‘நபி(ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பையே அளிக்கிறேன்’ அல்லது ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்று சொல்லிவிட்டு ‘(இறந்தவரின் சொத்தில்) மகளுக்குப் பாதியும் மகனின் மகளுக்கு ஆறில் ஒரு பாகமும் கிடைக்கும்; எஞ்சியது சகோதரிக்கு உரியதாகும்’ என்று (தீர்ப்புக்) கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6743

ஜாபிர்(ரலி) அறிவித்தார். நான் நோய்வாய்ப்பட்டிருந்தபோது (என்னை நலம் விசாரிப்பதற்காக) நபி(ஸல்) அவர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள். அங்கசுத்தி (உளூ) செய்வதற்காகத் தண்ணீர் கேட்டு வாங்கி அங்கசுத்தி செய்தார்கள். பிறகு தாம் அங்கசுத்தி செய்த தண்ணீரை என் மீது தெளிந்துவிட்டது. அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குச் சகோதரிகள் மட்டுமே இருக்கின்றனர். (என் சொத்துகள் யாருக்குச் சேர வேண்டும்?)’ என்று கேட்டேன். அப்போதுதான் பாகப் பிரிவினை தொடர்பான வசனம் அருளப்பெற்றது.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6744

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்களுக்கு) இறுதியாக அருளப்பெற்ற (பாகப்பிரிவினை தொடர்பான) வசனம், ‘அந்நிஸா’ அத்தியாயத்தின் இறுதி வசனமான ‘(நபியே!) ‘கலாலா’ குறித்து உம்மிடம் அவர்கள் தீர்ப்புக் கேட்கிறார்கள்’ என்று தொடங்கும் வசனமாகும்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6745

இறை நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரைவிட நானே நெருக்கமான (உரிமையுடைய)வனாவேன். எனவே, செல்வத்தைவிட்டுவிட்டு இறந்தவரின் செல்வம் (அவருடைய) தந்தை வழியிலுள்ள நெருங்கிய உறவினர்களுக்குரியதாகும். (குடும்பம் மற்றும் கடன் போன்ற) சுமைகள், சொத்தில்லா குழந்தைகள் ஆகியவற்றைவிட்டுச் செல்கிறவருக்கு நான் பொறுப்பாளியாவேன். அவருக்காக என்னை அழைக்கலாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6746

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (பாகப் பிரிவினை தொடர்பாகக் குர்ஆன் நிர்ணயித்துள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்து விடுங்கள். பாகம் நிர்ணயிக்கப்பட்டவர்கள் எடுத்தது போக எஞ்சியிருப்பது (இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6747

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும்விட்டுச் சென்ற(சொத்)திலிருந்து (பங்கு பெறுகின்ற) வாரிசுக்காரர்களை நாம் ஒவ்வொருவருக்கும் நிர்ணயித்துள்ளோம். நீங்கள் யாருடன் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ அவர்களுக்கும் அவர்களின் பங்கை அளித்துவிடுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 04:33 வது) வசனத்தின் விளக்கமாவது: முஹாஜிர்கள் மதீனாவுக்கு வந்தபோது, அன்சாரி (ஒருவர் இறந்துவிட்டால் அவரு)க்கு அவரின் உறவினர்கள் (-தவுல் அர்ஹாம்) அன்றி (அவருடைய) முஹாஜிர் (நண்பரே) வாரிசாம்வந்தார். நபி(ஸல்) அவர்கள் முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் இடையே (இஸ்லாமிய) சகோதரத்துவத்தை ஏற்படுத்தியிருந்ததே இதற்குக் காரணம். (பின்னர்) இந்த வசனத்தின் முதல் தொடர் இறங்கியபோது, அது இரண்டாவது தொடரை மாறிவிட்டது.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6748

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் தம் மனைவிக்கு எதிராக சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தார். மேலும், அவர் அவளுடைய குழந்தையைத் தம்தல்ல என்றார். எனவே, அவ்விருவரையும் நபி(ஸல்) அவர்கள் பிரித்து வைத்தார்கள்; குழந்தையை மனைவியிடம் சேர்த்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6749

ஆயிஷா(ரலி) அறிவித்தார். உத்பா இப்னு அபீ வக்காஸ் தம் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் ‘ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். எனவே, அவனை நீ பிடித்து வைத்துக் கொள்’ என்று உறுதிமொழி வாங்கியிருந்தார். மக்கா வெற்றி ஆண்டின்போது ஸஅத்(ரலி) அவர்கள் அவனைப் பிடித்தார்கள். மேலும், அவர்கள், ‘இவன் என் சகோதரரின் மகன். என் சகோதரர் இவனைக் கைப்பற்றும்படி என்னிடம் உறுதிமொழி வாங்கியுள்ளார்’ என்றார்கள். அப்போது ஸம்ஆவின் புதல்வர் அப்து(ரலி) அவர்கள் எழுந்து, இவன் என் சகோதரன் என் தந்தையின் அடிமைப் பெண்ணுடைய மகன். அவரின் படுக்கையில் (அதாவது அவரின் அதிகாரத்தில் இவனுடைய தாய் இருந்தபோது) பிறந்தவன்’ என்று கூறினார்கள். எனவே, இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டு) சென்றனர். ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரருடைய மகன். அவர் இவனைக் கைப்பற்றிக் கொள்ளும்படி என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்’ என்று கூற, ஸம்ஆவின் புதல்வர் அப்து(ரலி) அவர்கள், ‘(இவன்) என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன். அவரின் படுக்கையில் (அவரின் அதிகாரத்தில் இவனுடைய தாய் இருந்தபோது) பிறந்தவன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அப்து இப்னு ஸம்ஆவே! இவன் உனக்கே உரியவன். ஏனெனில், (சட்டப்படி) தாய் யாருடைய அதிகாரத்தில் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். விபசாரம் செய்தவனுக்கு இழப்பே உரியது’ என்று கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியும்) ஸம்ஆவின் புதல்வி(யுமான) சவ்தா(ரலி) அவர்களிடம், ‘இவனிடமிருந்து நீ உன்னைத் திரையிட்டு மறைத்துக்கொள்!’ என்றார்கள். சாயலில் அவன் உத்பாவைப் போன்று இருந்ததை நபியவர்கள் பார்த்ததே இதற்குக் காரணம். அதன் பிறகு அந்த மனிதர் இறக்கும்வரை அவரை சவ்தா(ரலி) அவர்கள் பார்க்கவில்லை.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6750

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ தாய் (பெண்) யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6751

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (அடிமைப் பெண்ணாயிருந்த) பரீராவை நான் விலைக்கு வாங்க விரும்பினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அவளை விலைக்கு வாங்கிக் கொள். ஏனெனில், (அடிமையை) விடுதலை செய்தவருக்கே (அந்த அடிமையின் சொத்தில்) வாரிசுரிமை உண்டு’ என்றார்கள். மேலும், பரீராவுக்கு ஓர் ஆடு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அந்த ஆடு பரீராவுக்கு தர்மமாகும். (பரீராவிடமிருந்து நமக்கு அது அன்பளிப்பாகும்’ என்றார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹகம் இப்னு உதைபா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பரீராவின் கணவர் (முஃகீஸ்) சுதந்திரம் பெற்றவராக இருந்தார்.

ஹகம் அவர்களின் இந்த அறிவிப்பு ‘முர்சல்’ (அறிவிப்பாளர்தொடரில் நபித் தோழர் விடுபட்டது) ஆகும். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், ‘முஃகீஸை நான் அடிமையாகவே கண்டேன்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6752

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அடிமையாயிருந்த ஒருவருக்கு) வாரிசாகும் தகுதி (அவரை) விடுதலை செய்தவருக்கே உண்டு என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6753

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘உன் மீது யாருக்கும் வாரிசுரிமை கிடையாது’ என்ற நிபந்தனையின் பேரில் அடிமைகளை முஸ்லிம்கள் விடுதலை செய்வதில்லை. அறியாமைக் காலத்தவர்தாம் அவ்வாறு விடுதலை செய்துவந்தனர்.

\பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6754

அஸ்வத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். ஆயிஷா(ரலி) அவர்கள் (அடிமைப் பெண்ணாயிருந்த) பரீராவை விடுதலை செய்வதற்காக விலைக்கு வாங்க விரும்பினார்கள். பரீராவின் எசமானார்கள் ‘பரீராவின் வாரிசுரிமை தங்களுக்கே இருக்கவேண்டும்’ என நிபந்தனையிட்டார்கள். எனவே, ஆயிஷா(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! விடுதலை செய்வதற்காக நான் பரீராவை விலைக்கு வாங்க விரும்பினேன். பரீராவின் எசமானர்களோ அவளுடைய வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனையிடுகிறார்கள்’ என்றார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(பரீராவை) விலைக்கு வாங்கி) விடுதலை செய்! ஏனெனில், (பொதுவாக) விடுதலை செய்தவருக்கே (அடிமையின் சொத்தில்) வாரிசுரிமை உண்டு’ அல்லது ‘விலையைக் கொடுத்துவிடு’ என்றார்கள். எனவே, ஆயிஷா(ரலி) அவர்கள் பரீராவை விலைக்கு வாங்கி விடுதலை செய்தார்கள். (தொடர்ந்து கணவர் முஃகீஸுடன் சேர்ந்து வாழ, அல்லது திருமண உறவை முறித்துக்கொள்ள) பரீராவிற்கு விருப்ப உரிமை அளிக்கப்பட்டது. அப்போது பரீரா தன்னுடைய விருப்பத்திற்கேற்ப தனித்து) வாழ்வதையே தேர்ந்தெடுத்துக் கொண்டதுடன், ‘இவ்வளவு இவ்வளவு செல்வம்) எனக்குக் கொடுக்கப்பட்டாலும் நான் அவருடன் இருக்கமாட்டேன்’ என்று சொல்லிவிட்டார்.

அறிவிப்பாளர் அஸ்வத்(ரஹ்) அவர்கள் ‘பரீராவின் கணவர் (முஃகீஸ்) சுதந்திர மனிதராக இருந்தார்’ என்றார்கள். (அபூ அப்தில்லாஹ் புகாரியாகிய நான் கூறுகிறேன்:) அஸ்வத்(ரஹ்) அவர்களின் இந்த அறிவிப்பு ‘முன்கதிஃ’ (அறிவிப்பாளர் தொடரில் தொடர்பு அறுந்தது) ஆகும். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் ‘முஃகீஸை நான் அடிமையாகவே கண்டேன்’ என்று கூறியதே சரியானதாகும்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6755

யஸீத் இப்னு ஷரீக் அத்தைமீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அலீ(ரலி) அவர்கள், ‘நாங்கள் ஓதி வருகிற அல்லாஹ்வின் வேதத்தையும் (நபியவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற) இந்த ஏட்டையும் தவிர (எழுத்து வடிவிலான மார்க்கச் சட்டம்) வேறெதுவும் (நபியின் குடும்பத்தாரான) எங்களிடம் இல்லை’ என்று கூறிவிட்டு, அந்த ஏட்டை வெளியே எடுத்தார்கள். அதில் காயங்களுக்கான தண்டனை குறித்தும் (உயிரீட்டிற்காகவும் ஸகாத்தாகவும் வழங்கப்படும்) ஒட்டகங்களின் வயது குறித்தும் எழுதப்பட்டிருந்தன. மேலும், அதில் (பின்வருமாறு குறிப்பிடப்பட்டு) இருந்தது: மதீனா நகரம் ‘அய்ர்’ எனும் மலையிலிருந்து ‘ஸவ்ர்’ மலை வரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை உருவாக்குகிறானே, (அவ்வாறு) புதிதாக ஒன்றை உருவாக்குகிறவனுக்கு அடைக்கலம் அளிக்கிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் புரிந்த கடமையான வழிபாடோ கூடுதலான வழிபாடோ எதுவுமே அவனிடமிருந்து ஏற்கப்படாது. தன்னை விடுதலை செய்த எசமானர்களின் அனுமதியின்றி வேறு யாரையேனும் வாரிசுகளாக ஆக்கிக் கொள்ளும் அடிமை மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் புரிந்த கடமையான மற்றும் கூடுதலான வழிபாடுகள் எதுவும் அவனிடமிருந்து ஏற்கப்படாது. முஸ்லிம்களின் எவர் அடைக்கலம் கொடுத்தாலும் அது ஒன்றேயாகும். (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும்.) அவர்களில் கீழ்நிலையில் உள்ளவர்கள் கூட அடைக்கலம் தர முன்வரலாம் ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவரேனும் முறித்தால் அவன் முது அல்லாஹ்வின் சாபமும் வானர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் செய்த கடமையான வழிபாடு உபரியான வழிபாடு மற்றும் எதுவுமே மறுமை நாளில் ஏற்றுக் கொள்ளப்படக்கூடாது.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6756

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘(முன்னாள் அடிமையின் சொத்திற்கு) வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அதை அன்பளிப்புச் செய்வதற்கும் தடை விதித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6757

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (பரீரா எனும்) ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். பரீராவின் எசமானர்களோ ‘பரீராவின் வாரிசுரிமை எங்களுக்கே வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் அவளை நாங்கள் உங்களுக்கு விற்கிறோம்’ என்று கூறினார். எனவே, ஆயிஷா(ரலி) அவர்கள் இதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(அதற்காக) நீ விடுதலை செய்யாமல் இருந்து விடாதே! விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6758

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான் பரீராவை விலைக்கு வாங்க விரும்பினேன். அப்போது பரீராவின் எசமானர்கள் அவளுடைய வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனை விதித்தார்கள். நான் இது குறித்து நபி(ஸல்) அவர்களிடன் சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அவளை நீ விடுதலை செய்! ஏனெனில், வெள்ளியைக் கொடுத்(து விலைக்கு வாங்கி விடுதலை செய்)தவருக்கே வாரிசுரிமை உரியது’ என்றார்கள். எனவே, நான் பரீராவை (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து, அவள் தன்னுடைய கணவரிடமிருந்து (பிரிந்துவிட) விருப்ப உரிமையளித்தார்கள். அப்போது பரீரா, ‘அவர் எனக்கு இவ்வளவு இவ்வளவு (செல்வம்) தந்தாலும் நான் அவருடன் சேர்ந்து வாழமாட்டேன்’ என்று கூறி தனித்து வாழ்வதையே தேர்ந்தெடுத்தார் என அஸ்வத்(ரஹ்) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6759

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (அடிமைப் பெண்ணாயிருந்த) பரீராவை விலைக்கு வாங்க ஆயிஷா(ரலி) அவர்கள் விரும்பினார்கள். அப்போது அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் ‘பரீராவின் எசமானர்கள் வாரிசுரிமை தங்களுக்கே இருக்க வேண்டும் என்று நிபத்னையிடுகின்றனர்’ என்றார்கள். அதற்கு நபி(ஸல்)அவர்கள்’அவளை வாங்கி (விடுதலை செய்து) விடு! ஏனென்றால், விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6760

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ வெள்ளியை(க் கிரயமாக)க் கொடுத்து (விலைக்கு வாங்கி, விடுதலை எனும்) பேருபகாரம் செய்தவருக்கே (அடிமைக்கு) வாரிசாகும் உரிமை உண்டு என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6761-6762

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ‘ஒரு கூட்டத்தாரால் விடுதலை செய்யப் பட்ட அடிமை அவர்களில் உள்ளவனே’ என்றோ, ‘இதைப் போன்றோ ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6763

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறந்துவிட்ட) ஒருவர் ஒரு செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவரின் வாரிசுகளுக்குரியதாகும். ஒருவர் (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) தம் மனைவி மற்றும் மக்களைவிட்டுச்சென்றால் அவர்களைப் பராமரிப்பது (மக்கள் தலைவரான) எம்முடைய பொறுப்பாகும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6764

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளருக்கு வாரிசாக மாட்டார். ஓர் இறைமறுப்பாளர் முஸ்லிமுக்கு வாரிசாக மாட்டார் என உசாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6765

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஸஅத் இப்னு அபீ வாக்கஸ்(ரலி) அவர்களும் அப்து இப்னு ஸம்ஆ(ரலி) அவர்களும் ஒரு சிறுவன் (யாருடைய மகன் என்பது) ஸஅத்(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரர் உத்பா இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களின் மகன், இவன் தம் மகன் (எனவே இவனைப் பிடித்து வர வேண்டும்) என்று அவர் என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார். இவனுடைய சாயலை (நீங்களே) பாருங்கள்!’ என்று கூறினார்கள். அப்து இப்னு ஸம்ஆ(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரன், என் தந்தையின் படுக்கையில் அவரின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன்’எ ன்று சொன்னார். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிறுவனின் சாயலைப் பார்த்தார்கள். உத்பாவின் சாயல் வெளிப்படையாக அமைந்திருககக் கண்டார்கள். இருப்பினும், ‘அப்து இப்னு ஸம்ஆவே! இவன் உனக்கே உரியவன். ஏனெனில், (சட்டப்படி) தாய் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். விபசாரம் செய்தவனுக்கு இழப்பே உரியது’ என்று கூறிவிட்டு(த் தம் துணைவியரிடம்), ‘சவ்தா பின்த் ஸம்ஆவே! இவனிடமிருந்து உன்னைத் திரையிட்டு மறைத்துக் கொள்!’ என்றார்கள். அதற்குப் பிறகு அந்த மனிதர் சவ்தா(ரலி) அவர்களை நேரடியாகப் பார்க்கவில்லை.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6766

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். ‘தம் தந்தை அல்லாத ஒருவரை அவர் தம் தந்தை அல்ல என்று தெரிந்து கொண்டே – தந்தை என்று வாதிடுகிறவரின் மீது சொர்க்கம் தடை செய்யப்பட்டதாகி விடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6767

(மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்) உபூஉஸ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நான் அபூ பக்ரா(ரலி) அவர்களிடம் குறிப்பிட்டேன். அப்போது அவர்கள் ‘இதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து என் காதுகள் செவியேற்றன. என் இதயம் மனனமிட்டுக் கொண்டது’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6768

‘உங்கள் தந்தையரை நீங்கள் வெறுக்காதீர்கள். தம் தந்தையை வெறுத்து (வேறு யாரோ ஒருவரை தம் தந்தை என்று கூறி) விடுகிறவர் நன்றி கொன்றவராவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6769

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (தாவூத்(அலை) அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் வாழ்ந்தார்கள். அவர்களுடன் அவர்களின் புதல்வர்களும் இருந்தனர். (ஒருநாள்) ஓநாய் ஒன்று அவ்விருவரின் புதல்வர்களில் ஒருவனைக் கொண்டு சென்றுவிட்டது. அவர்களில் ஒருத்தி தன் தோழியிடம், ‘உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்றுவிட்டது’ என்று கூற, அதற்கு மற்றவள், ‘உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்றுவிட்டது’ என்று சொன்னாள். எனவே, இருவரும் தாவூத்(அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டுச் சென்றார்கள். தாவூத்(அலை) அவர்கள் அவ்விரு பெண்களில் மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். (இந்தத் தீர்ப்பின் மீது கருத்து வேறுபட்ட) அப்பெண்கள் இருவரும் தாவூத்(அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்க) புறப்பட்டுச் சென்றார்கள். அன்னாரிடம் விஷயத்தைத் தெரிவித்தார்கள். அப்போது சுலைமான் (அலை) அவர்கள், ‘என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (மீதமுள்ள ஒரு மகனை ஆளுக்குப் பாதியாக) பிளந்து (பங்கிட்டு) விடுகிறேன்’ என்று கூறினார்கள். உடனே இளையவள் ‘அவ்வாறு செய்துவிடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். இவன் என் மகன்’ என்று (பதறிப்போய்) கூறினாள். எனவே, சுலைமான்(அலை) அவர்கள் ‘அந்தக் குழந்தை இளையவளுக்கே உரியது’ என்று தீர்ப்பளித்தார்கள்.

இதை அறிவித்த அபூ ஹுரைரா(ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அன்றுதான் (கத்திக்கு) ‘சிக்கீன்’ எனும் சொல்லை. (நபியவர்களின் வாயிலாக)ச் செவியுற்றேன். (கத்தியைக் குறிக்க) ‘முத்யா’ என்னும் சொல்லைத் தான் நாங்கள் பயன்படுத்தி வந்தோம்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6770

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் நெற்றிக் கோடுகள் மின்னும் வண்ணம் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்து, ‘உனக்குத் தெரியுமா? சற்றுமுன (அங்க அடையாளங்களைக் கொண்டு தந்தை – பிள்ளையைக் கண்டறியும்) முஜஸ்ஸிஸ், (என் வளர்ப்பு மகன்) ஸைத் இப்னு ஹாரிஸாவையும் (அவரின் புதல்வர்) உஸாமா இப்னு ஸைதையும் (அவர்கள் படுத்திருந்தபோது அவர்களின் பாதங்களைப்) பார்த்துவிட்டு ‘இந்தப் பாதங்களில் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானது’ என்றார்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6771

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஒரு நாள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்து, ‘ஆயிஷா! முஜஸ்ஸிஸ் அல்முத்லிஜீ என்னிடம் வந்தார். அப்போது உசாமாவும் (அவரின் தந்தை) ஜைத்கி ஒரு துணியைப் போர்த்தி(க் கொண்டு படுத்து) இருப்பதைக் கண்டார். அவர்களிருவரும் தம் தலையை மூடியிருந்தனர்; (ஆனால்,) அவர்களின் பாதங்கள் வெளியே தெரிந்தன. அப்போது முஜஸ்ஸிஸ் ‘இந்தப் பாதங்கள் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானவை’ என்றார்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6772

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான். (மது அருந்துகிறவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடமாட்டான். (மக்களின் மதிப்புமிக்க) செல்வத்தை, மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கக் கொளளையடிப்பவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிக்கமாட்டான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆனால், அதில் கொள்ளையடிப்பது பற்றிக் கூறப்படவில்லை.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6773

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாகப் பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அடித்திடும்படி நபி(ஸல) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் வழங்க உத்தரவிட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6774

உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். குடி போதையிலிருந்து ‘நுஐமான்’ என்பவர், அல்லது ‘அவரின் புதல்வர்’ நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது அவரை அடிக்கும்படி வீட்டிலிருந்தவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர்களும் (காலணியாலும் பேரீச்ச மட்டையாலும்) அவரை அடித்தார்கள். அவரைக் காலணியால் அடித்தவர்களில் நானும் ஒருவனாவேன்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6775

உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். போதையிலிருந்து ‘நுஐமான்’ என்பவர், அல்லது ‘அவரின் புதல்வர்’ நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது அவர்கள் (மிகவும்) வேதனைப்பட்டார்கள். மேலும், அவரை அடிக்கும்படி வீட்டிலிருந்தவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனவே, அவர்கள் பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அவரை அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6776

அனஸ்(ரலி) அறிவித்தார். மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அடித்திடும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் கொடுத்(திட உத்தரவு பிறப்பித்)தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6777

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். மது அருந்திய ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது அவர்கள் ‘இவரை அடியுங்கள்’ என்றார்கள். எங்களில் சிலர் கையால் அடித்தனர். சிலர் காலணியால் அடித்தனர். இன்னும் சிலர் (முறுக்கப்பட்ட) தம் துணியால் அடித்தனர். (தண்டனை முடிந்து அவர்) திரும்பியபோது மக்களில் சிலர், அல்லாஹ் உம்மைக் கேவலப்படுத்துவானாக!’ என்று கூறி (சாபமிட்ட)னர். நபி(ஸல்) அவர்கள், ‘இவ்வாறு கூறி, இவருக்கெதிராக ஷைத்தானுக்கு ஒத்தாசை செய்யாதீர்கள்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6778

அலீபின் அபீ தாலிப்(ரலி) அறிவித்தார். நான் தண்டனை நிறைவேற்றியதால் எவரேனும் இறந்தால் (அதற்காக) நான் கவலை அடையப் போவதில்லை; குடிகாரரைத் தவிர! ஏனெனில், (தண்டனை வழங்கப்பட்டதால்) குடிகாரர் இறந்தால் அவருக்காக நான் உயிரீட்டுத் தொகை வழங்கிடுவேன். இதற்குக் காரணம், (மது அருந்தியவனுக்குத் தண்டனையாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (குறிப்பிட்ட எதையும்) வழிமுறையாக்கவில்லை.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6779

சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்திலும், அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சியிலும், உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் தொடக்கத்திலும் எங்களிடம் மது அருந்தியவர் கொண்டுவரப்பட்டால் அவரை நாங்கள் கையாலும் காலணியாலும் மேலங்கியாலும் அடிப்போம். உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் (குடிகாரருக்கு) நாற்பது சாட்டையடி வழங்கிடுமாறு அன்னார் உத்தரவிட்டார்கள். (மது அருந்தும் விஷயத்தில்) மக்கள் அத்துமீறி நடந்துகொண்டு கட்டுப்பட மறுத்தபோது (குடிகாரருக்கு) அன்னார் எண்பது சாட்டையடி வழங்கினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6780

உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் ‘அப்துல்லாஹ்’ என்றொருவர் இருந்தார். அவர் ‘ஹிமார்’ (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களை சிரிக்கவைப்பார். மது அருந்தியதற்காக அவரை நபி(ஸல்) அவர்கள் அடித்துள்ளார்கள். (போதையிலிருந்த) அவர் ஒரு நாள் (நபி(ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரை அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார். அப்போது (அங்கிருந்த) மக்களில் ஒருவர், ‘இறைவா! இவர் மீது உன் சாபம் ஏற்படட்டும்! இவர் (குடித்ததற்காக) எத்தனை முறை கொண்டு வரப்பட்டுள்ளார்!’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இவரை சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6781

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். போதையிலிருந்த ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். அப்போது அவர்கள் அவரை அடிக்குமாறு உத்தரவிட்டார்கள். எனவே, எங்களில் சிலர் அவரைக் கையால் அடித்தார்கள். இன்னும் சிலர் காலணியால் அடித்தார்கள். மற்றும் சிலர் (முறுக்கேற்றப்பட்ட) துணியால் அடித்தார்கள். (தண்டனை முடிந்து) அவர் திரும்பியபோது ஒருவர் (அவரைப் பார்த்து), ‘அவருக்கென்ன நேர்ந்தது? அல்லாஹ் அவரைக் கேவலப்படுத்தட்டும்’ என்றார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உங்கள் சகோதருக்கு எதிராக ஷைத்தானுக்கு ஒத்துழைப்புச் செய்து விடாதீர்கள்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6782

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரிகிறபோது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடமாட்டான் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6783

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது ஏற்படட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக்கவசத்தைத் திருடுகிறான்; அதனால் அவனுடைய கை வெட்டப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்; அதனாலும் அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘தலைக்கவசம்’ என்பது இரும்பாலான தலைக்கவசத்தையும் ‘கயிறு’ என்பது ஒரு சில திர்ஹம்கள் (வெள்ளிக்காசுகள்) பெறுமானமுள்ள கயிற்றையும் குறிக்கும் என்று (இதன் அறிவிப்பாளர்கள்) கருதுகிறார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6784

உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார். நாங்கள் (ஒரு நாள்) நபி(ஸல்) அவர்களுடன் ஓர் அவையில் இருந்தோம். அப்போது அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிப்பதில்லை; திருடுவதில்லை; விபசாரம் செய்வதில்லை என்று என்னிடம் உறுதிமொழி கூறுங்கள்’ என்று கூறி, இது தொடர்பான (திருக்குர்ஆன் 60:12 வது) வசனத்தை முழுவதும் ஓதினார்கள். மேலும், இந்த உறுதிமொழியை உங்களில் நிறைவேற்றுகிறவருக்குரிய பிரதிபலன் இறைவனிடம் உண்டு. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையேனும் ஒருவர் செய்து அதற்காக அவர் இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாம்விடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையேனும் ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் (அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார்.) அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6785

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது (ஆற்றிய உரையில்), ‘மிகவும் புனிதம் வாய்ந்த மாதம் எதுவென்று உங்களுக்குத் தெரியும்?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘இதோ இந்த (துல்ஹஜ்) மாதம்தான்’ என்று பதிலளித்தார்கள். (தொடர்ந்து) நபி(ஸல்) அவர்கள், ‘மிகவும் புனிதம் வாய்ந்த நகரம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘இதோ இந்த ஊர் ‘(மக்கா’) தான்’ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், ‘மிகவும் புனிதம் வாய்ந்த நாள் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘இதோ இந்த (துல்ஹஜ் பத்தாம்) நாள் தான்’ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், ‘உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அதைப் போன்றே அல்லாஹ் உங்கள் உயிர், உடைமை, மானம் ஆகியவற்றைப் புனிதமாக்கியுள்ளான்’ என்று கூறிவிட்டு, ‘நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?’ என்று மூன்று முறை கேட்டார்கள். ஒவ்வொரு முறையும் மக்கள், ‘ஆம்’ என்று நபி(ஸல்) அவர்களுக்கு பதிலளித்தனர். பிறகு, ‘உங்களுக்கு அழிவுதான்’ அல்லது ‘உங்களுக்குக் கேடுதான்’! எனக்குப் பின்னால் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் இறைமறுப்பாளர்கள் நீங்கள் மாறிவிடவேண்டாம்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6786

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (பொதுவாக) இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் படி நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பெற்றால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே -அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் எப்போதும் தேர்வு செய்வார்கள். அது பாவமான விஷயமாயிருந்தால் அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! தமக்கிழைக்கப்பட்ட (கொடுமைகளில்) எதற்காகவும் தமக்கென என்று எவரையும் எப்போதும் அவர்கள் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ங்கள் சீர்குலைக்கப்பட்டு, (அதற்காக) அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று இருந்தால் தவிர.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6787

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (‘மக்ஸூமி’ குலத்தைச் சேர்ந்த) ஒரு பெண் (திருடியபோது) தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பது) தொடர்பாக உசாமா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் தாழ்ந்தவர்களின் மீது தண்டனையை நிறைவேற்றுவார்கள். உயர்ந்தவர்களைவிட்டு விடுவார்கள். எனவேதான் அவர்கள் அழிந்துபோயினர். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! (என் புதல்வி) ஃபாத்திமாவே இ(ந்தக் குற்றத்)தைச் செய்திருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6788

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘மக்ஸூமி’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் என்ற செய்தி குறைஷியருக்குக் கவலையளித்தது. அப்போது அவர்கள் ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமாவைத் தவிர வேறு யார் துணிந்து (அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து) பேச முடியும்?’ என்றார்கள். அவ்வாறே உசாமா(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல்விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்?’ என்று கேட்டுவிட்டுப் பிறகு எழுந்து நின்று (பின்வருமாறு) உரையாற்றினார்கள்:

மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல்) மக்கள் வழிகெட்டுப் போனதற்குக் காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால் அவர்கள் அவரை (தண்டிக்காமல்)விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்களின் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் முஹம்மத் அவரின் கையைத் துண்டித்தே இருப்பார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6789

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ கால் தீனார்(பொற் காசு), அல்லது அதற்கு மேல் திருடியதற்காகக் கை வெட்டப்படும் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6790

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ கால் தீனாரை (பொற் காசு) திருடியவரின் கை வெட்டப்படும் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6791

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ கால் தீனாருக்காக (பொற் காசுக்காக அதைத் திருடியவரின்) கை வெட்டப்படும் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6792

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ‘தோல் கேடயம்’ அல்லது ‘தோல் கவசத்தின்’ விலை (மதிப்புள்ள பொருளு)க்காகவே தவிர, திருடனின் கை துண்டிக்கப்பட்டதில்லை.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6793

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) ‘தோல் கேடயம்’ அல்லது ‘தோல் கவசத்தை ‘விடத் தாழ்ந்த பொருளுக்காகத் திருடனின் கரம் துண்டிக்கப்பட்டிருக்கவில்லை. இவை ஒவ்வொன்றும் விலை மதிப்புள்ளதாகும்.

இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் முர்சலாக (தொடர் முறிந்ததாக) வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6794

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ‘தோல் கவசம்’ அல்லது ‘தோல் கேடயத்தின்’ விலையை விடத் தாழ்ந்த (விலையுள்ள) பொருளுக்காகத் திருடனின் கரம் துண்டிக்கப்பட்டதில்லை. இவை ஒவ்வொன்றும் விலை மதிப்புடையதாகும்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6795

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலைமதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. (அறிவிப்பாளர்களில் ஒருவரான) நாஃபிஉ(ரஹ்) அவர்கள் (ஸமனுஹு என்பதற்கு பதில்) ‘கீமத்துஹு’ என அறிவித்தார்கள் என்று லைஸ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். (இரண்டுக்கும் பொருள்: விலை)

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6796

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக்காசுகள்) விலைமதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6797

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலை மதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6798

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலை மதிப்புள்ள தோல் கேடயத்திற்காகத் திருடனின் கையைத் துண்டித்தார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அறிவிப்பாளர் நாஃபிஉ(ரஹ்) அவர்கள் (ஸமனுஹு என்பதற்கு பதிலாக) ‘கீமத்துஹு’ (அதன் விலை) என அறிவித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6799

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது உண்டாகட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக் கவசத்தைக் திருடுகிறான்; அதற்காக அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்; அதற்காகவும் அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6800

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (திருட்டுக் குற்றம் புரிந்துவிட்ட ‘மக்ஸூமி’ குலத்தைச் சேர்ந்த ஃபாத்திமா பின்த் அஸ்வத் என்ற) ஒரு பெண்ணின் கையை நபி(ஸல்) அவர்கள் வெட்டச் செய்தார்கள். அதன் பிறகு, அவள் (எங்களிடம்) வந்து கொண்டிருந்தாள். அப்போது நான் அவளுடைய தேவையை நபி(ஸல்) அவர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்வேன். அவள் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி(த் திருந்தி)யிருந்தாள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6801

உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார். நான் (பத்துப் பேருக்கும் குறைவான) ஒரு குழுவினருடன் (சென்று) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை கற்பிப்பதில்லை; திருடுவதில்லை; குழந்தைகளைக் கொல்வதில்லை; உங்களிடையே அவதூறு கற்பித்து அதைப் பரப்புவதில்லை; எந்த நற்செயலிலும் எனக்கு மாறு செய்வதில்லை’ என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்குகிறேன். உங்களில் (இவற்றை) நிறைவேற்றுகிறவரின் பிரதிபலன் அல்லாஹ்விடம் உள்ளது. மேற்கூறப்பட்ட (குற்றங்களான இ)வற்றில் எதையேனும் ஒருவர் செய்து, (அதற்காக) அவர் இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அதுவே அவருக்குப் பரிகாரமாகவும் அவரைத் தூய்மையாக்கக் கூடியதாகவும் ஆகிவிடும். (அவற்றில் எதையேனும் ஒருவர் செய்து பின்னர்) அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுவார்; அல்லாஹ் நாடினால் அவரைத் தண்டிப்பான்: அவன் நாடினால் அவரை மன்னிப்பான் என்று கூறினார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: கை வெட்டப்பட்டதற்குப் பின் திருடன் பாவமன்னிப்புக்கோரி மனம் திருந்திவிட்டால் அவனுடைய சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படும். அவ்வாறே குற்றவியல் தண்டனைகள் பெற்ற அனைவரும்; அதைச் செய்தவர்கள் பாவமன்னிப்புக் கோரி திருந்திவிட்டால் அவர்களின் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6802

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ‘உக்ல்’ குலத்தைச் சேர்ந்த சிலர் நபி(ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்து, இஸ்லாத்தைத் தழுவினர். மதீனாவின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின் பொதுச் சொத்தான) தர்ம ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் செய்து உடல் நலமும் பெற்றனர். பிறகு அவர்கள் மதம் மாறியதோடல்லாமல், அந்த ஒட்டகங்களின் மேய்யபரை கொலையும் செய்துவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். எனவே, (அவர்களைப் பிடித்துவருமாறு) அவர்களுக்குப் பின்னால் நபி(ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அவர்கள் பிடித்துவரப்பட்டு, அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டி, (மேய்ப்பவரின் கண்களைத் தோண்டி எடுத்த) அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்கும்படி உத்தரவிட்டார்கள். பிறகு, அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அந்த நிலையிலேயே சாகும்வரை விட்டுவிடச் செய்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6803

அனஸ்(ரலி) அறிவித்தார். உரைனா குலத்தாரின் கை கால்களை நபி(ஸல்) அவர்கள் வெட்டச் செய்தார்கள். அவர்கள் இறக்கம் வரை அவர்களின் காயங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் மருந்திடவில்லை.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6804

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு) உக்ல் குலத்தாரில் (பத்துக்கும் குறைவான) சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் ஏழைகள் மற்றும் அகதிகளின் சாவடியாக அமைந்திருந்த) திண்ணையில் தங்கி இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு மதீனாவின் தட்பவெப்பநிலை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே, அவர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கூறினார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரின் (பொறுப்பிலிருக்கும்) ஒட்டகங்களை நீங்கள் சென்றடைவதைத் தவிர (வேறு வழி இருப்பதாக) நான் காணவில்லை’ என்று கூறினார்கள். எனவே, அவர்கள் அந்த ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்தி நலமும் உடல் வளமும் பெற்றனர். பிறகு (அந்த ஒட்டகங்களின்) மேய்ப்பரைக் கொலை செய்துவிட்டு ஒட்டக மந்தையை ஓட்டிச் சென்றுவிட்டனர். அப்போது இரைந்து சப்தமிட்டபடி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்(து நடந்ததைத் தெரிவித்)தார். உடனே நபி(ஸல்) அவர்கள் ‘உக்ல்’ குலத்தாரைப் பின்தொடர்ந்து சென்று அவர்களைப் பிடித்து வருவதற்காகச் சிலரை அனுப்பி வைத்தார்கள். பகல் பொழுது உச்சிக்கு வருவதற்குள் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் பிடித்துக் கொண்டு வரப்பட்டார்கள். அப்போது ஆணிகளை பழுக்கக் காய்ச்சி கண் இமைகளின் ஓரங்களில் சூடிடுமாறு பணித்தார்கள். அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டச் செய்து அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அப்படியே விட்டுவிடச் செய்தார்கள். பிறகு, மதீனாவின் புறநகரிலிருந்த ‘ஹர்ரா’ப் பகுதியில் அவர்கள் போடப்பட்டார்கள். அவர்கள் குடிப்பதற்கு நீர் கேட்டுக் கொண்டிருந்தனர். இறக்கும்வரை அவர்களுக்குக் குடிப்பதற்கு நீர் தரப்படவில்லை.

(அறிவிப்பாளர்) அபூ கிலாபா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் திருடினார்கள்; கொலை செய்தார்கள்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராக வன்முறையில் ஈடுபட்டார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6805

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ‘உக்ல்’ அல்லது ‘உரைனா’ (குலத்தாரில் பத்துப்பேருக்கும் குறைவான) சிலர் மதீனா வந்தனர். அப்போது (அவர்கள் வயிற்று உபாதையால் பாதிக்கப்பட்டனர். எனவே) நபி(ஸல்) அவர்கள் பால் தரும் ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர்கள் (சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும்) அருந்தி நிவாரணம் பெற்றனர். பிறகு அவர்கள் மேய்ப்பரைக் கொலை செய்துவிட்டு அந்த ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். அதிகாலையில் இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களைத் தேடி ஆட்களை அனுப்பிவைத்தார்கள். சூரியன் உச்சியை அடைவதற்குள் அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) கொண்டுவரப்பட்டார்கள். அப்போது அவர்களின் கை கால்களைத் தரித்து அவர்களின் கண்களில் சூடிடுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பிறகு, அவர்கள் ஹர்ராப் பகுதியில் எறியப்பட்டனர். அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டும் வழங்கப்படவில்லை.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ கிலாபா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த (உக்ல்) குலத்தார் திருடினார்கள்; கொலை செய்தார்கள்; இறைநம்பிக்கை கொண்ட பின் நிராகரித்துவிட்டார்கள். அல்லாஹ்வுக்கம் அவனுடைய தூதருக்கும் எதிராக வன்செயல்களில் ஈடுபட்டார்கள். (எனவேதான் கொடுஞ் செயல் புரிந்த அவர்களுக்கு இத்தகைய தண்டனை வழங்கப்பட்டது.)

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6806

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் தன்னுடைய (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்: 1. நீதிமிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனுடைய அச்சத்தில்) கண்ணீர் சிந்திய மனிதன். 4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர். 5. இறைவழியில் நட்புகொண்ட இருவர். 6. அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோது ‘நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்’ என்று கூறியவர். 7. தம் இடக் கரம் செய்த தர்மத்தை வலக் கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6807

‘தம் இரண்டு கால்களுக்கிடையே உள்ளத(ான மர்ம உறுப்பி)ற்கும், தம் இரண்டு தாடைகளுக்கிடையே உள்ளத(ான நாவி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருக்காக நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6808

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்: கல்வி அகற்றப்படுவதும் அறியாமை வெளிப்படுவதும் மது (அதிகமாக) அருந்தப்படுவதும் விபசாரம் பகிரங்கமாக நடைபெறுவதும் ஐம்பது பெண்களுக்கு ஒரே ஆண் நிர்வாகியாக இருப்பான் எனும் அளவுக்கு ஆண்கள் (எண்ணிக்கை) குறைந்து பெண்கள் (எண்ணிக்கையில்) அதிகமாவதும் ‘மறுமை நாளில் அடையாளங்களில் உள்ளதாகும்; அல்லது ‘இவை ஏற்படாத வரை மறுமை ஏற்படாது’.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6809

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அடியான் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு விபசாரம் புரியமாட்டான். அவன் திருடுகிறபோது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு திருடமாட்டான். மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு மது அருந்தமாட்டான். மேலும் அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு கொலை செய்யமாட்டான் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இக்ரிமா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘இத்தகைய அடியானிடமிருந்து எவ்வாறு இறைநம்பிக்கை கழற்றப்படும்?’ என்று நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இவ்வாறுதான்’ என்று தம் விரல்களை ஒன்றோடொன்று கோத்துக் காட்டிவிட்டு அவற்றை(ப் பிரித்து) வெளியிலெடுத்தார்கள். ‘அவன் மனம் திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டால் அந்த இறைநம்பிக்கை அவனிடம் திரும்பவும் வந்து விடுகிறது’ என்று கூறியவாறு தம் விரல்களை மீண்டும் கோத்துக் காட்டினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6810-6811

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி விபசாரம் புரிவதில்லை. (திருடன்) திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடுவதில்லை. (மது அருந்துபவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்துவதில்லை. மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோருதல் பின்னர்தான் ஏற்படுகிறது என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நான், ‘இறைத்தூதர் அவர்களே! மிகப் பெரிய பாவம் எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கே நீ இணை கற்பிப்பதாகும்’ என்று சொன்னார்கள். ‘பிறகு, எது (பெரிய பாவம்)?’ என்று கேட்டேன். அவர்கள், ‘உன் குழந்தை உன்னுடன் அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என்பதற்காக அதை நீயே கொலை செய்வதாகும்’ என்றார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்’ என்றார்கள்.

இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அறிவிப்பாளர் அம்ர் இப்னு அலீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தீ(ரஹ்) அவர்களிடம் குறிப்பிட்டேன். அன்னார் (அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுக்கும் அபூ வாயில்(ரஹ்) அவர்களுக்கும் இடையே அபூ மைசரா(ரஹ்) அவர்கள் இடம்பெறாத) அறிவிப்பாளர் தொடரை விட்டுவிடுக! விட்டுவிடுக! என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6812

ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார். (விபசாரம் புரிந்துவிட்ட ஒரு பெண்ணுக்கு மக்கள் கூடும்) வெள்ளிக் கிழமை (ஜுமுஆ) அன்று கல்லெறி தண்டனையை நிறைவேற்றியபோது அலீ(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறைப்படியே நான் இவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினேன்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6813

அபூ இஸ்ஹாக் சுலைமான் அஷ்ஷைபானீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம் ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை வழங்கினார்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஆம்’ (வழங்கினார்கள்) என்று பதிலளித்தார்கள். நான், ‘(குர்ஆனின் 24 வது அத்தியாயமான) ‘அந்நூர்’ அத்தியாயம் அருளப்படுவதற்கு முன்பா அல்லது அதற்குப் பின்பா (எப்போது கல்லெறி தண்டனை வழங்கினார்கள்)?’ என்று கேட்டேன். அவர்கள் ‘எனக்குத் தெரியாது’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6814

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ‘பனூ அஸ்லம்’ குலத்தைச் சேர்ந்த (மாஇஸ் இப்னு மாலிக் என்றழைக்கப்பட்ட) ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் விபசாரம் புரிந்து விட்டேன்’ என்றார். மேலும், நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம் (ஒப்புதல் வாக்குமூலம்) அளித்தார். எனவே, அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றும்படி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்கள். அவர் திருமணமானவராக இருந்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6815

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது ஒருவர் வந்து அவர்களை அழைத்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் விபசாரம் புரிந்துவிட்டேன்’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அவர் திரும்பத் திரும்ப அதையே நான்கு முறை சொல்லித் தமக்கெதிராகத் தாமே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோது அவரை அழைத்து நபி(ஸல்) அவர்கள், ‘உமக்குப் பைத்தியமா?’ என்று கேட்டார்கள். அவர், ‘(எனக்குப் பைத்தியம்) இல்லை’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘உமக்குத் திருமணமாகி விட்டதா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (திருமணமாகி விட்டது)’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இவரைக் கொண்டு சென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுங்கள்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6816

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கியவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன். அப்போது அவரை (மதீனாவில் பெருநாள்) தொழுகைத் திடலில் வைத்து நாங்கள் கல்லெறிந்தோம். கற்கள் அவரின் மீது விழுந்தபோது (வலி தாங்க முடியாமல்) அவர் வெருண்டோட ஆரம்பித்தார். அவரை நாங்கள் (விரட்டிச் சென்று பாறைகள் நிறைந்த) அல்ஹர்ராப் பகுதியில் பிடித்து அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றினோம்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6817

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களும் ஸம்ஆவின் புதல்வரும் (ஓர் அடிமைப் பெண்ணின் மகன் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாகச்) சர்ச்சையிட்டுக் கொண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அப்து இப்னு ஸம்ஆவே! அவன் உனக்கே உரியவன். தாய் யாருடைய அதிகாரத்தில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத்தாளோ அவருக்கே குழந்தை சொந்தமாகும்’ என்று கூறிவிட்டு, (தம் துணைவியாரான சவ்தா அவர்களிடம்) ‘சவ்தா! ஸம்ஆவின் அடிமைப் பெண்ணின் மகனைவிட்டு நீ உன்னைத் திரையிட்டு மறைத்துக்கொள்!’ என்றார்கள்.

(அபூ அப்தில்லாஹ் புகாரியாகிய நான் கூறுகிறேன்:) லைஸ் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்களிடமிருந்து குதைபா(ரஹ்) அவர்கள், ‘விபசாரம் புரிந்தவனுக்கு இழப்பு (தண்டனை)தான்’ என்பதையும் அதிகப்படியாக எமக்கு அறிவித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6818

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு தாய் எவருடைய அதிகாரத்தில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத்தாளோ அவருக்கே குழந்தை உரியது. விபசாரம் புரிந்தவனுக்கு இழப்பு (தண்டனை)தான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6819

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஒரு யூத ஆணும் ஒரு யூதப் பெண்ணும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் இருவரும் மானக்கேடான செயல் (விபசாரம்) புரிந்து விட்டிருந்தனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உங்களுடைய வேதத்தில் (இவர்களுக்கு) என்ன (தண்டனை) காணப்படுகிறது?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்த (இடத்திலிருந்த) யூதர்கள், ‘எங்கள் (மத) அறிஞர்கள், (விபசாரம் புரிந்தவர்களை) முகத்தில் கரி பூசி, முழங் கால்களைப் பிடித்தபடி குனிந்து நிற்கச் செய்யவேண்டும் என்ற தண்டனையை உருவாக்கியுள்ளனர்’ என்றார்கள். (அப்போது அருகில் இருந்த முன்னாள் யூத அறிஞரான) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள், ‘தவ்ராத்தைக் கொண்டுவரும்படி அவர்களிடம் கூறுங்கள், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள். அவ்வாறே ‘தவ்ராத்’ கொண்டு வரப்பட்டபோது, யூதர்களில் ஒருவர் (அதில் பதிவாயிருந்த) கல்லெறி தண்டனை (‘ரஜ்கி’) பற்றிய வசனத்தின் மீது தம் கையை வைத்(து அந்த வசனத்தை ‘யாருக்கும் தெரியாதபடி மறைத்)தார். மேலும், அதற்கு முன் பின்னிருந்த வசனங்களை வாசித்துக் காட்டலானார்.

அப்போது அவரிடம் அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள், ‘உன் கையை எடு!’ என்றார்கள். அவர் தம் கையை எடுத்தபோது, அதில் கல்லெறி தண்டனை பற்றிய வசனம் அவரின் கைக்குக் கீழே இருந்தது. எனவே, (அவர்கள் இருவருக்கும் தவ்ராத் வேதத்தில் உள்ளபடி) கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்போது அவர்கள் இருவருக்கம் ‘பலாத்’ எனும் இடத்தில் வைத்து கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. (அவர்களின் மீது கல் விழுந்தபோது) அந்த யூதர் அவளின் மீது (கல்படாமல் தடுப்பதற்காகக்) கவிழ்ந்து படுத்துக் கொண்டதை பார்த்தேன்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6820

ஜாபிர்(ரலி) அறிவித்தார். பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (மாஇஸ் இப்னு மாலிக்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து தாம் விபசாரம் புரிந்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அப்போது நபி(ஸல) அவர்கள் அவரை வட்டுத் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். இறுதியாக அவர் நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம் அளித்தார். அப்போது அவரிடம் நபி(ஸல) அவர்கள், ‘உமக்குப் பைத்தியமாக?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். எனவே நபி(ஸல்) அவர்கள், அவருக்கத் தண்டனை வழங்குமாறு உத்தரவிட பெருநாள் தொழுகைத் திடல் (முஸல்லா) அருகில் அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரைக் குறித்து நல்லதைக் கூறியதோடு அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழவைத்தார்கள்.

அறிவிப்பாளர்களான யூனுஸ் இப்னு யஸீத்(ரஹ்), இப்னு ஜுரைஜ்(ரஹ்) ஆகியோர் ‘அவருக்கு (ஜனாஸா) தொழவைத்தார்கள்’ என்பதைக் கூறவில்லை.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய என்) இடம் ‘நபி(ஸல்) அவர்கள் அவருக்குத் தொழவைத்தார்கள் என்ற தகவல் சரியானதா?’ என வினவப்பட்டது. ‘(ஆம்) அறிவிப்பாளர் மஅமர்(ரஹ்) அவர்கள் அவ்வாறே அறிவித்தார்கள்’ என்று பதிலளித்தேன். ‘மஅமர் அல்லாதோர் அவ்வாறு அறிவித்துள்ளனரா?’ என்று கேட்கப்பட்டது. ‘இல்லை’ என்று கூறினேன்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6821

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் ஒருவர் ரமளான் மாதத்தில் (நோன்பு வைத்துக்கொண்டு) தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டு (இது குறித்து) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்புக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இதற்குப் பரிகாரமாக விடுதலை செய்ய உன்னிடம் ஓர்அடிமை உண்டா?’ என்று கேட்டார்கள். அவர், ‘இல்லை’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இரண்டு மாதங்கள் உம்மால் நோன்பு நோற்க முடியுமா?’ என்று கேட்டார்கள். அவர், ‘இல்லை (இயலாது)’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின் அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக!’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6822

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ரமளான் மாதத்தில் மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் இருந்துகொண்டிருந்த நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘நான் கரிந்து போனேன்’ என்றார். நபி(ஸல) அவர்கள், ‘எதனால் அப்படி?’ என்று கேட்டார்கள். அவர், ‘நான் ரமளான் மாதத்தில் (நோன்பு வைத்துக்கொண்டு) என் மனைவியைப் புணந்துவிட்டேன்’ என்றார். அவரை நோக்கி நபி(ஸல்) அவர்கள், ‘தர்மம் செய்!’ என்றார்கள். அவர், ‘(தர்மம் செய்ய) என்னிடம் ஏதுமில்லை’ என்று கூறிவிட்டு, (அப்படியே) அமர்ந்துகொண்டார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் தம் கழுதையை ஓட்டிக்கொண்டு வந்தார். அவரிடம் உணவு இருந்தது.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துர் ரஹ்மான் இப்னு காசிம்(ரஹ்) அவர்கள் ‘நபி(ஸல்) அவர்களிடம் அவர் கொண்டு வந்த உணவு என்ன? என்பது எனக்குத் தெரியாது’ என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘கரிந்து போனவர் எங்கே?’ என்று கேட்டார்கள். அவர், ‘இதோ நான் இங்குதான் இருக்கிறேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இதை வாங்கிக் கொண்டுபோய் தர்மம் செய்!’ என்றார்கள். அவர், ‘என்னைவிடத் தேவையானவருக்கா? என் குடும்பத்தாருக்கு உணவே இல்லை’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியானால், அவர்களுக்கே உண்ணக்கொடு’ என்றார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: முந்தைய ஹதீஸ் இதைவிடத் தெளிவாக உள்ளது. (அதில்) ‘உம் வீட்டாருக்கே உண்ணக்கொடு’ என்றே நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6823

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒருமனிதர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றை செய்து விட்டேன். எனவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்’ என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி(ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்தபோது அவர் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தபோது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். எனவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (தொழுதேன்)’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின் அல்லாஹ் ‘உம்முடைய பாவத்தை’ அல்லது உமக்குரிய தண்டனையை’ மன்னித்து விட்டான்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6824

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். மாஇஸ் இப்னு மாலிக் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்(து தாம் விபசாரம் புரிந்து விட்டதாக வாக்குமூலம் அளித்)தபோது, அவரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘(அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண்ணாலோ கையாலோ) சைகை செய்திரக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!’ என்றார்கள். அவர், ‘(அவ்வாறெல்லாம்) இல்லை; இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், சாடைமாடையாகக் கேட்காமல் ‘அவளுடன் நீர் உடலுறவு கொண்டீரா?’ என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்று கூறினார். அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6825

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது ஒருவர் வந்து அவர்களை அழைத்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் விபசாரம் புரிந்துவிட்டேன்’ என்று தம்மைக் குறித்தே கூறினார். உடனே அவர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தைத் திருப்பிக்கொண்டிருந்த பகுதிக்கு வந்து ‘இறைத்தூதர் அவர்களே! நான் விபசாரம் புரிந்துவிட்டேன்’ என்றார். (மீண்டும்) அவரைவிட்டு நபி(ஸல்) அவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அவர் (திரும்பவும்) நபி(ஸல்) அவர்கள் முகத்தைத் திருப்பிக்கொண்ட பக்கம் வந்தார். (இவ்வாறு) அவர் (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) தமக்கெதிராகத் தாமே நான்கு முறை சாட்சியம் அளித்தபோது அவரை நபி(ஸல்) அவர்கள் அழைத்து, ‘உமக்குப் பைத்தியமா?’ என்று கேட்டார்கள். அவர், ‘இல்லை, இறைத்தூதர் அவர்களே!’ என்றார். தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள், ‘உமக்குத் திருமணம் ஆகிவிட்டதா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இவரைக் கொண்டுசென்று, இவருக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6826

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். ஜாபிர்(ரலி) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒருவர் (ஜாபிர் கூறினார்கள் எனக்) தெரிவித்தார். அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கியவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன். அப்போது அவரை (பெருநாள்) தொழுகைத் திடலில் வைத்து நாங்கள் கல்லெறிந்தோம். அவரின் மீது கல் விழத் தொடங்கியதும். (வலி தாங்காமல்) அவர் வேகமாக குதித்தோடினார். அவரை நாங்கள் (பாறைகள் நிறைந்த) அல்ஹர்ராப் பகுதியில் பிடித்து கல்லெறி தண்டனை நிறைவேற்றினோம்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6827-6828

அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்: நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (மஸ்ஜிந் நபவீ பள்ளிவாசலில்) இருந்தோம். அப்போது (கிராமவாசி) ஒருவர் எழுந்து, ‘அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன்: தாங்கள் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே எங்களிடையே தீர்ப்பளிக்க வேண்டும்’ என்றார். அப்போது அவரைவிட விளக்கமுடையவராக இருந்த அவரின் எதிரி எழுந்து, ‘(ஆம்) எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்!’ என்று கூறினார். (பின்னர் அந்தக் கிராமவாசி) ‘என்னைப் பேச அனுமதியுங்கள்’ என்று கேட்டுக்கொள்ள நபி(ஸல்) அவர்கள், ‘பேசு!’ என்றார்கள். அவர், ‘என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். (என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்றுவிட வேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.) எனவே, நான் (இந்தத் தண்டனையிலிருந்து என் மகனைக் காப்பாற்றுவதற்காக) அதற்கு பதில் நூறு ஆடுகளையும் ஓர் அடிமையையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் சில அறிஞர்களிடம் விசாரித்தபோது என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்படவேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) வழங்கப்படவேண்டும் என்றும் என்னிடம் அவர்கள் தெரிவித்தார்கள்’ என்று கூறினார். இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்கிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: நூறு ஆடுகளும் அடிமையும் உன்னிடமே திருப்பித் தரப்படவேண்டும். உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் வழங்கப்படவேண்டும்’ என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ்(ரலி) அவர்களை நோக்கி, ‘உனைஸ்! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று அவள் (விபசாரக் குற்றத்தை) ஒப்புக் கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்!’ என்றார்கள். அவ்வாறே உனைஸ் அவர்கள் அவளிடம் செல்ல, அவளும் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டாள். எனவே, அவளுக்கு உனைஸ் கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள்.

அறிவிப்பாளர் அலீ இப்னு அப்தில்லாஹ் அல்மதீனி(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்களிடம் என் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு என அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள் என்று அவர் கூறவில்லையா?’ எனக் கேட்டேன். அவர்கள் ‘இது தொடர்பாக எனக்குச் சந்தேகம் உள்ளது. எனவே, சில வேளைகளில் அதை அறிவிக்கிறேன். சில வேளைகளில் மெளனமாகி விடுகிறேன்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6829

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) கூறினார்: காலப் போக்கில் மக்களில் சிலர் ‘இறை வேதத்தில் கல்லெறி (ரஜ்ம்) தண்டனை காணப்படவில்லையே?’ என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழிதவறி விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். அறிந்து கொள்ளுங்கள்: திருமணமான ஒருவர் விபசாரம் புரிந்து, அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது நிச்சயமாகும்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘அறிந்து கொள்ளுங்கள்! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள். அவர்களுக்குப் பின் நாங்களும் அதனை நிறைவேற்றினோம்’ (என்றும் உமர்(ரலி) கூறினார்). இவ்வாறுதான் நான் மனனமிட்டுள்ளேன்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6830

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் முஹாஜிர்களில் சிலருக்குக் குர்ஆனை ஓதிக் கொடுத்து வந்தேன். அவர்களில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களும் ஒருவராவார். (இந்நிலையில் ஒரு நாள்) நான் ‘மினா’ பெருவெளியில் அவரின் முகாமில் இருந்து கொண்டிருந்தபோது அவர் உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்களிடம் இருந்துவிட்டு என்னிடம் திரும்பி வந்தார். இது உமர்(ரலி) அவர்கள் செய்த இறுதி ஹஜ்ஜின்போது (ஹிஜ்ரி 23ஆம் ஆண்டு) நடந்தது.

(திரும்பி வந்த) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: உங்களுக்குத் தெரியுமா? இன்று ஒருவர் இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் (கலீஃபா உமர்(ரலி) அவர்களிடம் சென்று, ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! உமர் அவர்கள் இறந்து விட்டிருந்தால் இன்னாருக்கு நான் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்திருப்பேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (முதல் கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களின் வாக்களிப்புப் பிரமாணம் அவசரக் கோலமாக நடைபெற்று முடிந்தது என்று கூறிய இன்னாரைப் பற்றி நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார். இதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள் கோபப்பட்டார்கள். பிறகு, ‘இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) இன்று மாலை நான் மக்கள் முன் நின்று, தங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையீடு செய்ய நினைக்கும் இவர்களை எச்சரிக்கை செய்யப் போகிறேன்’ என்றார்கள். உடனே நான், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! அவ்வாறு செய்யாதீர்கள். ஏனெனில், ஹஜ் பருவ காலத்தில் (நல்லவர்களுடன்) விவரமற்ற மக்களும் தரம் தாழ்ந்தோறும் குழுமுகின்றனர். நீங்கள் (உரையாற்றுவதற்காக) மக்கள் முன் நிற்கும்போது அவர்கள்தாம் உங்களுக்கருகே மிகுதியாக இருப்பர். நீங்கள் எழுந்து நின்று ஏதோ ஒன்றைச் சொல்ல, அதற்கு உரிய பொருள் தந்து முறையாக விளங்காமல் அவரவர் (மனம்போன போக்கில்) தவறாகப் புரிந்துகொள்வார்களோ என நான் அஞ்சுகிறேன். எனவே, நீங்கள் மதீனா சென்று சேரும் வரை பொறுமையாயிருங்கள். ஏனெனில், மதீனாதான் ஹிஜ்ரத் மற்றும் நபிவழி பூமியாகும். நீங்கள் (அங்கு சென்று) மார்க்க ஞானம் உடையவர்களையும் பிரமுகர்களையும் தனியாகச் சந்தித்து நீங்கள் சொல்ல வேண்டியதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னால், அறிவுபடைத்தோர் உங்கள் கூற்றை அறிந்து அதற்கு உரிய இடமளிப்பார்’ என்று சொன்னேன். அதற்கு உமர்(ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) நான் மதீனா சென்ற பின் முதலாவது கூட்டத்திலேயே இதைப் பற்றிப் பேசப் போகிறேன்’ என்றார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவ்வாறே நாங்கள் துல்ஹஜ் மாதத்தின் பிந்திய பகுதியில் மதீனா வந்து சேர்ந்தோம். வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாள்) அன்று சூரியன் நடுவானிலிருந்து சாய்ந்தபோது (பள்ளிவாசலை நோக்கி) நான் விரைந்தேன். அப்போது ‘ஸயீத் இப்னு ஸைத் இப்னி அம்ர் இப்னி நுஃபைல்'(ரலி) அவர்களை சொற்பொழிவு மேடையின் (மிம்பர்) ஓர் ஓரத்தில் சாய்ந்து அமர்ந்திருக்கக் கண்டேன். உடனே நான் அவர் அருகில் என் முட்டுக்கால் அவரின் முட்டுக்காலைத் தொட்டுக் கொண்டிருக்கும் வண்ணம் அமர்ந்துகொண்டேன். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும்; அதற்கும் உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் (சொற்பொழிவு மேடையை நோக்கி) வந்தார்கள். அவர்கள் வருவதைக் கண்ட நான் ‘ஸயீத் இப்னு ஸைத் இப்னி அம்ர் இப்னி நுஃபைல்'(ரலி) அவர்களிடம், ‘உமர்(ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்ட நாளிலிருந்து (இந்த நேரம் வரை எப்போதுமே) சொல்லியிராத ஒன்றை இன்று மாலை சொல்ல இருக்கிறார்கள்’ என்று கூறினேன். அதற்கு ஸயீத் அவர்கள் ‘அப்படியெல்லாம் எதையும் உமர் கூறுவதற்கில்லை’ என்று கூறி என்னிடம் மறுத்தார்கள்.

அப்போது உமர்(ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள். பாங்கு சொல்பவர் பாங்கு சொல்லி மெளனமானதும் உமர்(ரலி) அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான பண்புகளைக் கூறி புகழ்ந்தார்கள். பிறகு, ‘நான் (இன்று) எதைச் சொல்ல வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டுள்ளதோ அதை நான் உங்களுக்குச் சொல்லவிருக்கிறேன். இது என் இறப்புக்கு சமீபத்திய பேச்சாக இருக்கக்கூடும்; (உறுதியாக) எனக்குத் தெரியாது. இதை (கேட்டு) விளங்கி நினைவில் நிறுத்திக் கொள்கிறவர் தம் வாகனம் செல்லும் இடங்களிலெல்லாம் இதை எடுத்துரைக்கட்டும்! இதை(ச் சரியாக) விளங்க முடியாது என அஞ்சுகிற (அவர் மட்டுமல்ல் வேறு) யாரும் என் மீது பொய்யுரைப்பதை நான் அனுமதிக்க மாட்டேன்’ (என்று கூறிவிட்டுப் பின்வருமாறு பேசினார்கள்:)

நிச்சயமாக அல்லாஹ், முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தீல் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மண முடித்தவர் விபச்சாரம் புரிந்தால் அவருக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்ம்) நிறைவேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாங்களும் அந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளோம். காலப்போக்கில் மக்களில் சிலர் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை’ என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி தவறி விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபசாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறை வேதத்தில் உள்ளதாகும். பிறகு, நாங்கள் ஓதிவந்த இறைவேதத்தில் இதையும் ஓதி வந்தோம்: உங்களுடைய (உண்மையான) தந்தையரைப் புறக்கணித்து(விட்டு வேறொரு வரை தந்தையாக்கி விடவேண்டாம். அவ்வாறு உங்கள் தந்தையரைப் புறக்கணிப்பது நன்றி சொல்லலாகும்.

அறிந்துகொள்ளுங்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மர்யமின் புதல்வர் ஈசா எல்லை மீறிப் புகழப்பட்டதைப் போன்று என்னை நீங்கள் எல்லை மீறிப் புகழாதீர்கள். மாறாக, (என்னைக் குறித்து நான்) அல்லாஹ்வின் அடிமை என்றும் அவனுடைய தூதர் என்றும் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள்.

மேலும், உங்களில் ஒருவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உமர் இறந்துவிட்டிருந்தால் இன்னாருக்கு நான் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்திருப்பேன்’ என்று கூறுவதாக எனக்குச் செய்தி எட்டியது. ‘(கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களின் வாக்களிப்புப் பிரமாணம் அவசரக் கோலமாகத்தான் நடைபெற்று முடிந்தது’ என்று கூறி எந்த மனிதரும் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். ஆம்! அது எப்படி (அனைவரிடமும் ஆலோசிக்காமல் அவசரமாக)த்தான் நடந்தது. ஆனால், அதன் தீமைகளிலிருந்து அல்லாஹ் (நம்மைப்) பாதுக்காத்து விட்டான். உங்களில் ஒட்டகங்களில் அதிகமாகப் பயணிக்கும் (-அரபுகள்) எவரும் (மூப்பிலும் மேன்மையிலும்) அபூ பக்ர்(ரலி) அவர்களைப் போன்று இல்லை. முஸ்லிம்களின் (சம்மதம் மற்றும்) ஆலோசனையின் ஒரு மனிதருக்கு வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுக்கிறவரும் அவர் யாருக்கு வாக்களித்தாரோ அவரும் ஏற்கப்பட மாட்டார்கள். எச்சரிக்கை! அவ்விருவரும் கொல்லப்படவும் செய்யலாம்.

மேலும், அல்லாஹ் தன் தூதரை இறக்கச் செய்தபோது நம்மிடையே நடந்த சம்பவங்களில் ஒன்று: அன்சாரிகள் நமக்கு மாறாக பனூ சாஇதா சமுதாயக் கூடத்தில் அனைவரும் ஒன்று திரண்டனர். (ஆனால், முஹாஜிர்களான) அலீ(ரலி), ஸுபைர்(ரலி) ஆகியோரும் அவர்களுடன் வேறு சிலரும் நமக்கு மாறுபட்ட நிலையை மேற்கொண்டனர். (நம்முடன் அந்த அரங்கிற்கு அவர்கள் வரவில்லை.) முஹாஜிர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் போய் ஒன்று கூடினர். நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், ‘அபூ பக்ர் அவர்களே! நம் சகோதரர்களான அன்சாரிகளிடம் நாம் செல்வோம்’ என்று கூறிவிட்டு, அவர்களை நாடிச் சென்றோம்.

அன்சாரிகளை நாங்கள் நெருங்கியபோது அவர்களில் இரண்டு நல்ல மனிதர்கள் எங்களைச் சந்தித்தனர். அவர்களிருவரும் (அன்சாரி) மக்கள் (தங்களில் ஒருவரான ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களுக்கு வாக்களிப்பதென) ஒரு மனதாக முடிவு செய்திருப்பது குறித்து தெரிவித்துவிட்டு, ‘முஹாஜிர்களே! நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?’ என்று கேட்டனர். அதற்கு நாங்கள், ‘எங்கள் சகோதரர்களான அன்சாரிகளை நோக்கிச் செல்கிறோம்’ என்றோம். அதற்கு அவர்கள் இருவரும், ‘அவர்களை நீங்கள் நெருங்க வேண்டாம். உங்கள் நிலையை நீங்கள் (இங்கேயே) தீர்மானித்துக் கொள்ளுங்கள். (அதுவரை பொறுமையைக் கடைபிடியுங்கள்)’ என்றார்கள். உடனே நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! கட்டாயம் நாங்கள் அவர்களிடம் செல்லத்தான் போகிறோம்’ என்று கூறிவிட்டு நடந்தோம். பனூ சாஇதா சமுதாயக் கூடத்திலிருந்த அன்சாரிகளிடம் சென்றோம்.

அங்கு அவர்களின் நடுவே போர்வை போர்த்திய மனிதர் ஒருவர் இருந்தார். நான், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். மக்கள், ‘இவர் தாம் ஸஅத் இப்னு உபாதா?’ என்று பதிலளித்தனர். ‘அவருக்கென்ன நேர்ந்துள்ளது?’ என்று கேட்டேன். மக்கள், ‘அவருக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது’ என்று கூறினர். நாங்கள் சிறிது நேரம் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளின் பேச்சாளர் ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனுக்குத் தகுதியான பண்புகளைச் சொல்லிப் புகழ்ந்துவிட்டு, ‘பின்னர், நாங்கள் (-அன்சாரிகள்) இறைவனுடைய (மார்க்கத்தின்) உதவியாளர்கள்; இஸ்லாத்தின் துருப்புகள். (அன்சாரிகளை ஒப்பிடும்போது) முஹாஜிர்களே! நீங்கள் சொற்பமானோர் தாம். உங்கள் கூட்டத்திலிருந்து சிலர் இரவோடிரவாக (மதீனா) வந்து சேர்ந்தார்கள். (இன்றோ) அவர்கள் எங்கள் பூர்வீகத்தை விட்டுமே எங்களைப் பிரித்துவிடவும், ஆட்சியதிகாரத்திலிருந்து எங்களை வெளியேற்றி விடவும் எண்ணுகின்றனர்’ என்று கூறினார்.

(உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) அன்சாரிகளின் பேச்சாளர் பேசி முடித்து அமைதியானபோது நான் பேச நினைத்தேன். மேலும், நான் எனக்குப் பிடித்த ஓர் உரையை அழகாகத் தயாரித்து வைத்திருந்தேன். அதனை அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு முன்பே எடுத்துரைத்து விடவேண்டும் என்றும், (அன்சாரிகளின் பேச்சால்) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு ஏற்பட்டிருந்த உஷ்ணத்தில் சிறிதளவையேனும் தணித்திடவேண்டும் என்றும் விரும்பினேன். நான் பேச முற்பட்டபோது அபூ பக்ர்(ரலி) அவர்கள், ‘நிதானத்தைக் கையாளுங்கள்’ என்றார்கள். எனவே, நான் (அபூ பக்ர் அவர்களுக்கு மாறுசெய்து) அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்க விரும்பவில்லை.

இதையடுத்து அபூ பக்ர்(ரலி) அவர்கள் பேசினார்கள். அன்னார் என்னைவிடப் பொறுமைசாலியாகவும் நிதானமிக்கவராகவும் இருந்தார்கள். நான் எனக்குப் பிடித்த வகையில் அழகுபடத் தயாரித்து வைத்திருந்த உரையில் எதையும் விட்டுவிடாமல் அதைப் போன்று அல்லது அதைவிடவும் சிறப்பாகத் தயக்கமின்றி (தங்குதடையின்றி) அன்னார் பேசி முடித்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் உரையில்) குறிப்பிட்டார்கள். (அன்சாரிகளே!) உங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்ட (குண) நலன்களுக்கு நீங்கள் உரியவர்களே. (ஆனால்,) இந்த ஆட்சியதிகாரம் என்பது (காலங்காலமாக) இந்தக் குறைஷிக் குலத்தாருக்கே அறியப்பட்டு வருகிறது. அவர்கள்தாம் அரபுகளிலேயே சிறந்த பாரம்பரியத்தையும் சிறந்த ஊரையும் (மக்கா) சேர்ந்தவர்கள். நான் உங்களுக்காக இந்த இருவரில் ஒருவரை திருப்திப்படுகிறேன். இவர்களில் நீங்கள் விரும்பிய ஒருவருக்கு வாக்களி(த்து ஆட்சித் தலைவராகத் தேர்வு செய்)யுங்கள். இவ்வாறு கூறிவிட்டு, என் கையையும், அங்கு அமர்ந்திருந்த அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களின் கையையும் பற்றினார்கள். (இறுதியாக அவர்கள் கூறிய) இந்த வார்த்தையைத் தவிர அபூ பக்ர்(ரலி) அவர்கள் கூறிய வேறெதையும் நான் வெறுக்கவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அபூ பக்ர்(ரலி) அவர்கள் போன்ற தகுதியுள்ளவர்) இருக்கும் ஒரு சமுதாயத்திற்கு நான் ஆட்சித் தலைவராக ஆவதைவிட, நான் எந்தப் பாவமும் செய்யாமலேயே (மக்கள்) முன் கொண்டு வரப்பட்டு என் கழுத்து வெட்டப்படுவதையே விரும்பினேன். (இன்று வரை இதுவே என் நிலையாகும். இதற்கு மாற்றமாக) தற்போது எனக்கு ஏற்படாத ஓர் எண்ணத்தை மரணிக்கும்போது என் மனம் எனக்கு ஊட்டினால் அது வேறு விஷயம்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர் ‘நான் சிரங்கு பிடித்த ஒட்டகம் சொறிந்து கொள்வதற்கான மரக்கொம்பு ஆவேன்; முட்டுக் கொடுக்கப்பட்ட பேரீச்சமரம் ஆவேன். (அதாவது பிரச்சினையைத் தீர்ப்பவன் ஆவேன். நான் ஒரு நல்ல யோசனை கூறுகிறேன்: அன்சாரிகளான) எங்களில் ஒரு தலைவர்; குறைஷி குலத்தாரே! உங்களில் ஒரு தலைவர்’ என்றார்.

அப்போது கூச்சல் அதிகரித்தது. குரல்கள் உயர்ந்தன. பிளவு ஏற்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சினேன். எனவே, ‘அபூ பக்ர் அவர்களே! உங்கள் கையை நீட்டுங்கள். (உங்களிடம் வாக்களிப்புப் பிரமாணம் செய்கிறேன்)’ என்று நான் சொன்னேன். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் தங்களின் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் அவர்களுக்கு (நீங்கள் தாம் ஆட்சித் தலைவர். உங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போமென) வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தேன். (அவ்வாறே) முஹாஜிர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்குப் பிரமாணம் செய்தனர். பிறகு, அவர்களுக்கு அன்சாரிகளும் வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தனர். நாங்கள் ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம் (அன்னாரைச் சமாதானப்படுத்துவதற்காக) விரைந்து சென்றோம். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘நீங்கள் ஸஅத் இப்னு உபாதா அவர்களை (நம்ப வைத்து)க் கொன்று விட்டீர்கள்’ என்றார். உடனே நான், ‘அல்லாஹ்தான் ஸஅத் இப்னு உபாதவைக் கொன்றான் (நாங்களல்ல)’ என்று கூறினேன்.

மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது) நாங்கள் சந்தித்த பிரச்சினைகளில் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்ததை விட மிகவும் சிக்கலான பிரச்சினை வேறெதையும் நாங்கள் கண்டதில்லை. வாக்களிப்புப் பிரமாணம் நடைபெறாத நிலையில் நாங்கள் அந்த மக்களிடமிருந்து வெளியேறிச் சென்றால் நாங்கள் சென்றதற்குப் பிறகு, தங்களில் ஒருவருக்கு அவர்கள் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்து விடுவார்கள். அப்போது ஒன்று, நாங்கள் திருப்தியில்லாமலேயே அவர்களுக்கு வாக்களிப்புப் பிராமணம் செய்து கொடுக்க வேண்டி வரும். அல்லது அவர்களுக்கு மாறாக நாங்கள் செயல்பட நேரும். அப்போது குழப்பம் உருவாகும் என்று நாங்கள் அஞ்சினோம். ஆக, முஸ்லிம்களின் (சம்மதம் மற்றும்) ஆலோசனையின்றி ஒருவருக்கு வாக்களிக்கிறவரும், அவர் யாருக்கு வாக்களித்தாரோ அவரும் ஏற்கப்படமாட்டார்கள் எச்சரிக்கை! அவ்விருவரும் கொல்லப்படவும் செய்யலாம்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6831

ஸைத் இப்னு காலித் அல்ஜுஹைனீ(ரலி) அறிவித்தார். மணமுடிக்காத நிலையில் விபசாரம் புரிந்துவிட்டவருக்கு நூறு கசையடிகள் கொடுத்து, அவரை ஓராண்டு காலம் நாடு கடத்தவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட கேட்டுள்ளேன்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6832

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்களும் நாடு கடத்தும் தண்டனையை நடைமுறைப் படுத்தினார்கள். பிறகு, அதுவே வழிமுறையாக நீடித்தது.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6833

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். மணமுடிக்காத நிலையில் விபசாரம் புரிந்து விட்டவருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நூறு சாட்டையடி) தண்டனை கொடுத்து அவரை ஓராண்டுக் காலம் நாடு கடத்துமாறு தீர்ப்பளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6834

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், ‘அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்!’ என்றும் சொன்னார்கள். அவ்வாறே நபியவர்கள் இன்னாரை வெறியேற்றினார்கள்; உமர்(ரலி) அவர்களும் இன்னாரை வெளியேற்றினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6835

அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்: கிராமவாசிகளில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில்) அமர்ந்திருந்தார்கள். அவர், ‘இறைத்தூதர் அவர்களே! (எங்கள் விவகாரத்தில்) அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்’ என்று கூறினார். அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து, ‘அவர் சொல்வது உண்மைதான், இறைத்தூதர் அவர்களே! அவருக்கு அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளியுங்கள்’ என்றார். (பின்னர் கிராமவாசி,) ‘என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தபோது இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். (அதற்குத் தண்டனையாக) என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்றுவிடவேண்டும் என்று என்னிடம் மக்கள் தெரிவித்தார்கள். எனவே, நான் (இந்தத் தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றும் நோக்கில்) அதற்கு பதிலாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாக வழங்கப்படவேண்டும் என்று என்னிடம் கூறினர்’ என்றார். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: ஆடுகளும் அடிமைப் பெண்ணும் உம்மிடமே திருப்பித் தரப்படவேண்டும். உம்முடைய மகனுக்கு (திருமணமாகாததால்) நூறு கசையடிகளும் ஓராண்டுக்கு காலம் நாடு கடத்தும் தண்டனையும் தரப்படவேண்டும்’ என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ்(ரலி) அவர்களை நோக்கி, ‘உனைஸ்! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று (அவள் விபசாரக் குற்றத்தை ஒப்புக் கொண்டால்) அவளுக்கு (அங்கேயே) கல்லெறி தண்டனை வழங்குங்கள்’ என்று தீர்ப்புக் கூறினார்கள். அவ்வாறே உனைஸ்(ரலி) அவர்கள் சென்று (குற்றத்தை ஒப்புக்கொண்ட) அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6837-6838

அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்: ‘ஓர் அடிமைப் பெண் கற்பைக் காக்காமல் விபசாரம் செய்தால்… (அவளுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும்)?’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அவள் விபசாரம் செய்தால் அவளை சாட்டையால் அடியுங்கள். அதற்குப் பிறகும் விபசாரம் செய்தால் (திரும்பவும்) சாட்டையால் அடியுங்கள். மறுபடியும் அவள் விபசாரம் செய்தால் (மறுபடியும்) சாட்டையால் அடியுங்கள். அவள் மீண்டும் விபசாரம் செய்தால் அவளை ஒரு முடிக்கற்றைக்காவது விற்றுவிடுங்கள்’ என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள், ‘(அவளை விற்றுவிட வேண்டும் என்பது) மூன்றாவது முறைக்குப் பிறகா? அல்லது நான்காவது முறைக்குப் பிறகா?’ என்று எனக்குத் தெரியாது எனக் கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6839

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஓர் அடிமைப் பெண் விபசாரம் செய்து அது வெளிப்பட்டால், அவளுக்கு (எசமான்) கசையடி வழங்கட்டும்; (அதற்கு மேல் அவளிடம்) கடுமை காட்ட வேண்டாம். பிறகு, (மறுபடியும்) அவள் விபசாரம் செய்தால் அவளுக்குக் கசையடி கொடுக்கட்டும்; (அவளிடம்) கடுமை காட்ட வேண்டாம். மூன்றாம் முறையும் அவள் விபசாரம் செய்தால் அவளை ஒரு முடிக்கற்றைக்காவது விற்றுவிடட்டும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6840

அபூ இஸ்ஹாக் சுலைமான் அஷ்ஷைபானீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை வழங்கினார்கள் என்றார்கள். நான் (குர்ஆனின் 24 வது அத்தியாயமான) ‘அந்நூர்’ அத்தியாயம் அருளப்படுவதற்கு முன்பா? அல்லது அதற்கு பின்பா (எப்போது கல்லெறி தண்டனை வழங்கினார்கள்)?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘எனக்குத் தெரியாது’ என்று பதிலளித்தார்கள்.

இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. சிலருடைய அறிவிப்பில் (‘அந்நூர் அத்தியாயம்’ என்பதற்கு பதிலாக) ‘அல்மாயிதா அத்தியாயம்’ என்று இடம் பெற்றுள்ளது. (அந்நூர் அத்தியாயம் எனும்) முதல் அறிவிப்பே சரியானதாகும்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6841

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் யூதர்கள் வந்து யூதர்களில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) குறித்து ‘தவ்ராத்’ வேதத்தில் என்ன காண்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், விபசாரம் செய்தவர்களை நாங்கள் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்களுக்குச் சாட்டையடி வழங்கப்படவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்கள்.

(அப்போது யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தை தழுவிய) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள், ‘நீங்கள் பொய் கூறுகிறீர்கள். கல்லெறி தண்டனை (ரஜ்ம்) உண்டு என்று தவ்ராத்தில் கூறப்பட்டுள்ளது’ என்றார்கள். அப்போது அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் கல்லெறி தண்டனை பற்றிக் கூறும் வசனத்தின் மீது தன்னுடைய கையை வைத்து (மறைத்து)க் கொண்டு அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை வாசித்தார். அவரிடம் அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள், ‘உன் கையை எடு!’ என்று சொல்ல, அவர் தன்னுடைய கையை எடுத்தார். அப்போது அங்கே கல்லெறி தண்டனை குறித்த வசனம் இருந்தது.

யூதர்கள், ‘இவர் (-அப்துல்லாஹ் இப்னு சலாம்) உண்மையே சொன்னார், முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனம் இருக்கிறது’ என்றார்கள். உடனே (விபசாரம் புரிந்த) அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கிடுமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண் அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து காப்பதற்காக அவளின் மீது கவிழ்ந்து மறைத்துக் கொள்வதை பார்த்தேன்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6842-6843

அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்: இரண்டு பேர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர், ‘(நபியே!) அல்லாஹ்வின் சட்டப்படி எங்களிடையே தீர்ப்பளியுங்கள்’ என்றார். அவரைவிட விளக்கமுடையவராயிருந்த மற்றவர், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்’ என்று கூறினார். (பின்னர் கிராமவாசியான முதல் நபர்) ‘என்னைப் பேச அனுமதியுங்கள்’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘பேசு’ என்றார்கள். அவர், ‘என் மகன், இதோ இவரிடம் கூலிக்காரனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்றுவிட வேண்டும் என்று என்னிடம் மக்கள் கூறினர். நான் (இந்த தண்டனையிலிருந்து என் மகனைக் காப்பாற்றுவதற்காக) அதற்கு பதில் நூற ஆடுகளையும் என்னுடைய அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையை வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் விசாரித்தபோது என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்படவேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் என்னிடம் அவர்கள் தெரிவித்தனர்’ என்றார்.

இதைக்கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: உம்முடைய ஆடுகளும் உம்முடைய அடிமைப் பெண்ணும் உம்மிடமே திருப்பித் தரப்படவேண்டும்’ என்று கூறிவிட்டு, அவரின் மகனுக்கு (திருமணமாகாததால்) நூறு கசையடிகள் வழங்கினார்கள். ஓராண்டுக் காலத்திற்கு அவரின் மகனை நாடு கடத்தினார்கள். (அருகிலிருந்த) உனைஸ் அல்அஸ்லமீ(ரலி) அவர்களிடம், ‘அந்த மற்றொரு மனிதரின் மனைவியிடம் சென்று அவள் (தன் குற்றத்தை) ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்!’ என்று கூறினார்கள். அவ்வாறே உனைஸ்(ரலி) அவர்கள் அவளிடம் சென்று விசாரணை செய்தபோது அவளும் (தன்னுடைய குற்றத்தை) ஒப்புக்கொண்டாள். எனவே அவளுக்கு உனைஸ்(ரலி) அவர்கள் கல்லெறி தண்டனை வழங்கினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6844

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பனூ முஸ்தலிக் போரிலிருந்து திரும்பும் வழியில்) தம் தலையை என் மடி மீது வைத்துக் கொண்டிருந்தபோது (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்கள் (எனக்கருகில் வந்து), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களையும் மக்களையும் தண்ணீரில்லாத இடத்தில் தடுத்து (தங்கவைத்து) விட்டாயே!’ எனக் கடிந்து கொண்டார்கள். அப்போது அவர்கள் தங்களின் கையால் என் இடுப்பில் குத்த ஆரம்பித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தலை என் மடிமீது இருந்த காரணத்தாலேயே நான் அசையாது இருந்தேன். அப்போது அல்லாஹ் ‘தயம்மும்’ உடைய வசனத்தை அருளினான்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6845

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (என் கழுத்தாணியை நான் தொலைத்து விட்டதால் அந்தப் பயணத்தைத் தொடர முடியாமல் நீர் நிலைகள் இல்லாத ஓரிடத்தில் நாங்கள் தங்க நேரிட்டபோது என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்கள் வந்து என்னை வேகமாக ஓர் அடி அடித்தார்கள். மேலும், ‘ஒரு கழுத்தணிக்காக மக்களை (செல்ல விடாமல்) தடுத்து விட்டாயே!’ என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் மடிமீது தலைவைத்துக் கொண்டிருந்தால் நான் அசையாதிருந்தேன். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (என்னை அடித்த அடியில்) எனக்கு ஏற்பட்ட வலியினால் எனக்கு மரணம் வந்துவிட்டதைப் போன்று இருந்தது… (தொடர்ந்து) முந்தைய ஹதீஸைப் போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6846

முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்கள், ‘என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், என் வாளின் கூர்மையான பகுதியாலேயே நிச்சயம் நான் அவனை வெட்டுவேன்’ என்று கூறினார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘ஸஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா? நான் சஅதைவிட ரோஷக்காரன்; அல்லாஹ் என்னைவிட ரோஷக்காரன்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6847

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! (வெள்ளை நிறமுடைய எனக்கு) என் மனைவி கறுப்பான ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளாள். (அவன் எப்படி எனக்குப் பிறந்தவனாக இருக்க முடியும்?)’ என்று (சாடையாகக்) கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் உள்ளதா?’ என்று கேட்டார்கள். அதற்கவர், ‘ஆம்’ என்றார். ‘அவற்றின் நிறம் என்ன?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ‘சிவப்பு’ என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘உன் ஒட்டகங்களுக்கிடையே சாம்பல் நிற ஒட்டகம் இருக்கின்றதா?’ என்று கேட்டார்கள். அவர் ‘ஆம்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘(தன்னுடைய தாயிடம் இல்லாத) அந்த நிறம் அதற்கு மட்டும் எவ்வாறு வந்தது?’ என்று கேட்டார்கள். அவர், ‘அதன் (தந்தையான) ஆண் ஒட்டகத்தின் பரம்பரையிலிருந்து வந்திருக்கலாம் என கருதுகிறேன்’ என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘உன்னுடைய இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தினைக் கொண்டிருக்கக்கூடும்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6848

அபூ புர்தா(ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கு மேல் வழங்கப்படலாகாது’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6849

அப்துர் ரஹ்மான் இப்னு ஜாபிர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்ற (நபித்தோழர்) ஒருவர் கூறினார்:

‘அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எந்த (சாதரண) குற்றத்திற்காகவும் பத்து அடிகளுக்கு மேலான தண்டனை கிடையாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6850

அபூ புர்தா அல்அன்சாரி(ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கும் மேல் வழங்காதீர்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6851

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (சூரியன் மறைந்தபின் துறக்காமல்) தொடர் நோன்பு நோற்க வேண்டாமென்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். அப்போது முஸ்லிம்களில் சிலர் ‘அவ்வாறாயின், நீங்கள் தொடர் நோன்பு நோற்கின்றீர்களே, இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? எனக்கு என் இறைவன் உணவும் பானமும் அளிக்கிற நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்’ என்றார்கள். தொடர் நோன்பிலிருந்து விலம்க் கொள்ள மக்கள் மறுத்தபோது ஒரு நாள் தொடர் நோன்பு நோற்க அவர்களை அனுமதித்தார்கள். பிறகு, அடுத்த நாளும் (தொடர் நோன்பு நோற்க) அனுமதித்தார்கள். பின்னர் (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இம்மாதம் இன்னும் தாமதமாக முடிந்திருந்தால் (உங்களால் இயலாத அளவுக்குத் தொடர் நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தியிருப்பேன்’ என்று மக்கள் தொடர் நோன்பிலிருந்து விலம்க் கொள்ள மக்கள் மறுத்தபோது ஒரு நாள் தொடர் நோன்பு நோற்க அவர்களை அனுமதித்தார்கள். பிறகு, அடுத்த நாளும் (தொடர் நோன்பு நோற்க) அனுமதித்தார்கள். பின்னர் (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இம்மாதம் இன்னும் தாமதமாக முடிந்திருந்தால் (உங்களால் இயலாத அளவுக்குத் தொடர் நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தியிருப்பேன்’ என்று மக்கள் தொடர் நோன்பிலிருந்து விலகிக்கொள்ள மறுத்ததைக் கண்டிக்கும் விதத்தில் கூறினார்கள்.

இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6852

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் (நிறுக்கப்படாமல், அளக்கப்படாமல்) குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த மக்கள், அவற்றை(க் கைப்பற்றி) தம் இருப்பிடங்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்காமல் அதே இடத்தில் விற்றதற்காக அடிக்கப்பட்டனர்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6853

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தமக்கிழைக்கப்பட்ட (கொடுமைகளில்) எதற்காகவும் தமக்கென ஒருபோதும் எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ங்கள் சீர்குலைக்கப்பட்டு, (அதற்காக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று இருந்தால் தவிர!

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6854

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். அந்தத் தம்பதியர் இருவரும் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த இடத்தில் நானும் இருந்தேன். -அப்போது எனக்குப் பதினைந்து வயது நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் பிரிந்து கொள்ள உத்தரவிட்டார்கள். அப்போது அந்தப் பெண்ணின் கணவர், ‘இவளை நான் என்னிடமே (மனைவியாக) வைத்துக் கொண்டிருந்தால் நான் இவள் மீது சொன்ன குற்றச்சாட்டு பொய்யாகிவிடும்’ என்று கூறி (மணவிலக்கு அளித்து)விட்டார்.

சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:) ‘அவள் இப்படி இப்படி (உருவம் கொண்ட) குழந்தையைப் பெற்றெடுத்தால் அவளுடைய கணவன் சொன்னது உண்மை. அவள் இப்படி இப்படி அரணையைப் போன்ற குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள் கணவன் சொன்னது பொய்’ என்று ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடமிருந்து நான் மனனமிட்டுள்ளேன். பிறகு, ‘அந்தப் பெண் அருவருக்கப்பட்ட தோற்றத்தில் குழந்தையைப் பெற்றெடுத்தாள்’ என்றும் அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6855

காசிம் இப்னு முஹம்மத்(ஸல்) அவர்கள் அறிவித்தார். பரஸ்பரம் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொண்ட அந்தத் தம்பதியர் குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். அப்போது அப்துல்லாஹ் இப்னு ஷத்தாத்(ரஹ்) அவர்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘நான் சாட்சியில்லாமல் (ஒருவருக்குக்) கல்லெறி தண்டனை நிறைவேற்றுபவனாயிருந்தால் இதோ இவளுக்கு நிறைவேற்றியிருப்பேன்’ என்று கூறியது இந்தப் பெண் தொடர்பாகத்தானா?’ என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், ‘இல்லை; அவள் தகாத உறவில் ஈடுபட்டாள் எனப் பகிரங்கமாகப் பேசப்பட்டு வந்த பெண் ஆவாள்’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6856

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். சாப அழைப்புப் பிரமாணம் (நடை முறையில் வருவதற்கு முன் ஒரு நாள் மனைவி மீது கணவன் விபசாரக் குற்றம் சாட்டுவது) தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஆஸிம் இப்னு அதீ(ரலி) அவர்கள் அது தொடர்பாக ஏதோ (ஆக்ரோஷமாகப்) பேசிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். (சிறிது நேரத்தில்) ஆஸிம்(ரலி) அவர்களின் குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களிடம் சென்று, தம் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்டு) இருந்ததைத் தாம் கண்டதாகச் சொன்னார். அதற்கு ஆஸிம்(ரலி) அவர்கள், ‘நான் (ஆக்ரோஷமாகப்) பேசியதாலேயே இப்படி (என் குலத்தாரிடையே நடந்து) நானே சோதிக்கப்பட்டுள்ளேன்’ என்றார்கள். எனவே, ஆஸிம்(ரலி) அவர்கள் அவரை அழைத்துக்கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்று அவரின் மனைவியின் நடத்தை குறித்துத் தெரிவித்தார்கள்.

(உவைமிர் என்ற) அந்த மனிதர் நல்ல மஞ்சள் நிறம் உடையவராகவும், சதைப் பிடிப்புக் குறைவானவராகவும், நீண்ட முடிகளைக் கொண்டவராகவும் இருந்தார். தம் மனைவியுடன் இருக்கக் கண்டதாக அவர் வாதிட்ட அந்த அந்நிய மனிதரோ, மாநிறம் உடையவராகவும் உடல் பருத்து அதிக சதைப்பிடிப்பு உள்ளவராகவும் இருந்தார். (இந்தக் குற்றச்சாட்டைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! (இந்தப் பிரச்சினையில் ஒரு) தெளிவைத் தருவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். பிறகு, தம் மனைவியுடன் கண்டதாக அவர் குறிப்பிட்ட அந்த (அந்நிய) ஆடவரின் சாயலில் அவள் குழந்தை பெற்றெடுத்தாள். (அதற்கு முன்பே) இந்தத் தம்பதியரை நபி(ஸல்) அவக்ள் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்ய வைத்தார்கள்.

(இந்த ஹதீஸ் கூறப்பட்ட) அவையில் இருந்த ஒருவர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘சாட்சி இல்லாமலேயே ஒருவருக்கு நான் கல்லெறி தண்டனை அளிப்பவனாயிருந்தால் இவளுக்கு அளித்திருப்பேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னது (உவைமிருடைய மனைவியான) இந்தப் பெண் குறித்தா? என்று கேட்டதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், ‘இல்லை; (அவன் வேறொரு பெண்ணாவாள்.) அந்தப் பெண் இஸ்லாத்தில் இருந்துகொண்டே தகாத உறவுகொண்டுவந்தாள் எனப் பரவலாகப் பேசப்பட்டவள். (ஆனால், அவள் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை; தகுந்த சாட்சியும் இல்லை. அவள் குறித்தே நபியவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.)’ என்று பதிலளித்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6857

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)’ என்று கூறினார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6858

‘நிராபராதியான தம் அடிமையின் மீது (விபசார) அவதூறு கூறியவருக்கு மறுமை நாளில் சாட்டையடி வழங்கப்படும். அவர் சொன்னதைப் போன்று அந்த அடிமை இருந்தால் தவிர!’ என்று அபுல் காசிம் (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6859-6860

அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்: (கிராமவாசி) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன்: நீங்கள் அல்லாஹ்வின் சட்டப்படியே எங்களிடையே தீர்ப்பளிக்கவேண்டும்’ என்றார். அப்போது அவரைவிட விளக்கமுடையவராக இருந்த அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து ‘அவர் சொல்வது உண்மைதான்; எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்’ என்று கூறினார். (பின்னர் அக்கிராமவாசி) ‘என்னைப் பேச அனுமதியுங்கள் இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘பேசு!’ என்று கூறினார்கள். அவர், ‘என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். (என் மகனுக்குக் கல்லெறி தண்டனை வழங்கிட வேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.) எனவே, நான் (இந்தத் தண்டனையிலிருந்து என் மகனைக் காப்பாற்றுவதற்காக) அதற்கு பதில் நூறு ஆடுகளையும் ஓர் அடிமையையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு அறிஞர்கள் சிலரிடம் நான் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனை என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) வழங்கப்பட வேண்டும் என்றும் என்னிடம் தெரிவித்தார்கள்’ என்று கூறினார்.

இதைக்கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்கிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: நூறு ஆடுகளும் அடிமையும் உம்மிடமே திருப்பித் தரப்பட வேண்டும். உம்முடைய மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் வழங்கப்பட வேண்டும்’ என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ்(ரலி) அவர்களை நோக்கி ‘உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று கேளுங்கள். அவள் (விபசாரக் குற்றத்தை) ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுங்கள்’ என்றார்கள். அவ்வாறே (உனைஸ்(ரலி) அவர்கள் அவளிடம் சென்று விசாரிக்க) அவளும் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டாள். எனவே, உனைஸ் அவர்கள் அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினார்கள்.

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.