குர்ஆன் எளிதாக்கப்பட்டுள்ளது: இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டோ?

கேள்வி எண்: 112. குர்ஆன் எளிதாக்கப்பட்டுள்ளது: இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டோ? என்று குர்ஆன் குறிப்பிடும் வசனம் எது? இந்த வசனத்தின் பொருள் என்ன?

பதில்: “குர்ஆன் எளிதாக்கப்படடுள்ளது: இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டோ?” இது குறித்து குர்ஆன் அத்தியாயம் அல்கமர் வசனங்கள் (54:17, 54:22, 54:32, 54:40)-ல் வருகிறது.

இந்த வசனத்திற்கான சிறு விளக்கம் : –

அல்லாஹ் தன் திருமறை அத்தியாயம் 2 வசனம் 185 -ல் கூறுகிறான்:

“ரமளான் மாதம் எத்தகையதென்றால், அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழியிலிருந்து(ள்ள) தெளிவுகளாகவும், (சத்திய, அசத்தியத்தைப்) பிரித்துக்காட்டக் கூடியதாகவும் உள்ள இந்தக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது”

அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 44 வசனம் 58 -ல் கூறுகிறான்: –

“அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.”

அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 16 வசனம் 89 -ல் கூறுகிறான்: –

“மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.”

அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 41 வசனங்கள் 2-4 -ல் கூறுகிறான்: –

“அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளன. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது) ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர் அவர்கள் செவியேற்பதும் இல்லை.”

அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 18 வசனங்கள் 1-3 -ல் கூறுகிறான்: –

“தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு – நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்). அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.”

அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 18 வசனங்கள் 1-3 -ல் கூறுகிறான்: –

“(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர். நிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் (கீர்த்தியளிக்கும்) உபதேசமாக இருக்கிறது (இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்”

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இறை வசனங்களில் இருந்து நாம் பெறும் படிப்பினைகள் என்னவெனில், குர்ஆன்:-

மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும்
நேர்வழியிலிருந்து(ள்ள) தெளிவுகளாகவும்
சத்திய, அசத்தியத்தைப் பிரித்துக்காட்டக் கூடியதாகவும்
அறிந்து நல்லுபதேசம் அளிப்பதாகவும்
ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும்
நேர்வழி காட்டியதாகவும்
ரஹ்மத்தாகவும்
முஸ்லிம்களுக்கு நன்மாராயம் கூறுவதாகவும்
அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாகவும்
அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும்
இது கீர்த்தியளிக்கும் உபதேசமாகவும் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் “(இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்” என அல்லாஹ் கூறுகிறான். எனவே சகோதர சகோதரிகளே, நாம் திருக்குர்ஆனை ஓதும் போது சடங்கு சம்பிரதாயங்களுக்காக ஓதிக்கொண்டிருக்காமல் அதனுடைய பொருள் அறிந்து ஓதுவதற்கு முயற்சிக்க வேண்டும். அப்பொழுது தான் திருமறை நமக்கு கற்றுத்தரும் வழிமுறைகளையும் உபதேசங்களையும் நாம் பின்பற்றி நடக்க முடியும்.

நபி (ஸல்} அவர்கள் கூறினார்கள்: –

‘குர்ஆனை பொருளுணர்ந்து ஓதுங்கள்; அது மறுமையில் பரிந்துரை செய்யும்”

“உங்களுக்கு இரண்டை விட்டுச் செல்கிறேன். ஓன்று அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்), மற்றொன்று என்னுடைய வழிமுறை (சுன்னத்-ஹதீஸ்). இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் படித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறவே மாட்டீகள்”.

மேற்கண்ட ஹதீஸின் இறுதியில் நபி (ஸல்) அவாகள் கூறியதை நாம் சற்று சிந்தித்துப் பாக்க வேண்டும். “இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் வழிதவறவே மாட்டீர்கள்” என்று கூறியிருக்கிறாகள். இன்று நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகிய இவ்விரண்டையும் தவிர்த்து மற்றவைகளையெல்லாம் பற்றிப் படித்துக் கொண்டிருக்கின்றோம். திருக்குர்ஆனை சடங்கு சம்பிரதாயங்களுக்காவும், ஹத்தம், பாத்திஹா ஓதுவதற்காகவும் தான் பயன்படுத்துகிறமே தவிர குர்ஆன் என்பது நாம் எப்படி வாழவேண்டும் என்று அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட வாழ்க்கை நெறிமுறைகள் அடங்கிய சட்டதிட்டங்கள் என்பதை உணர்வதில்லை.

This entry was posted in கேள்வி பதில் and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.