இறை தூதர்கள் இப்ராஹீம் & லூத்.

11:69. நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமுக்கு நற்செய்தி கொண்டு வந்து ‘ஸலாம்’ (சொன்னார்கள்; இப்ராஹீமும் “ஸலாம்” (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை.

11:70. ஆனால் அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார், அவர்கள் மீது அவருக்குப் பயமும் ஏற்பட்டு விட்டது; (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) “பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.

11:71. அப்போது, அவருடைய மனைவியும் (அங்கு) நின்று கொண்டிருந்தார்; இன்னும் அவர் சிரித்தார். அவருக்கு நாம் இஸ்ஹாஃக்கைப் பற்றியும், இஸ்ஹாஃக்குப் பின் யஃகூபை பற்றியும் நன்மாராயங் கூறினோம்.

11:72. அதற்கு அவர் கூறினார்:”ஆ கைசேதமே! நான் முதியவளாகவும், இதோ என் கணவர் முதியவராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா? நிச்சயமாக இது ஆச்சர்யமான விஷயம்தான்!”

11:73. (அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி ஆச்சர்யப்படுகிறீரா? அல்லாஹ்வின் ரஹ்மத்தும், அவனுடைய பரக்கத்தும் (அருளும், பாக்கியமும்) இவ்வீட்டிலுள்ள உங்கள் மீது உண்டாவதாக! நிச்சயமாக அவன் புகழுடையவனாகவும், மகிமை வாய்ந்தவனாகவும் இருக்கின்றான்” என்று பதிலளித்தார்கள்.

11:74. (இது கேட்டு) இப்ராஹீமை விட்டுப் பயம் நீங்கி ,நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.

11:75. நிச்சயமாக இப்ராஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனம் கொண்டவராகவும், (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார்.

11:76. “இப்ராஹீமே! (அம்மக்கள் மீது கொண்ட இரக்கத்தால் இதைப் பற்றி வாதிடாது) இ(வ்விஷயத்)தை நீர் புறக்கணியும்; ஏனெனில் உம் இறைவனின் கட்டளை நிச்சயமாக வந்து விட்டது – மேலும், அவர்களுக்குத் தவிர்க்க முடியாத வேதனை நிச்சயமாக வரக் கூடியதேயாகும்.

11:77. நம் தூதர்கள் (வானவர்கள்) லூத்திடம் (இறைத்தூதர்) வந்த போது, (தம்) மக்களுக்காக அவர் பெரிதும் விசனமடைந்தார் (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக “இது நெருக்கடி மிக்க நாளாகும்” என்று கூறினார்.

11:78. அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள். இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) “என் சமூகத்தார்களே இதோ இவர்கள் என் புதல்விகள். இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசுத்தமானவர்கள். எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள். நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?” என்று கூறினார்.

11:79. (அதற்கு) அவர்கள் “உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர். நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்” என்று கூறினார்கள்.

11:80. அதற்கு அவர் “உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்க வேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்க வேண்டுமே” என்று (விசனத்துடன்) கூறினார்.

11:81. (விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள் “மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம். நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது. எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும் போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்று விடும்! உம்முடைய மனைவியை தவிர, உங்களில் யாரும் திரும்பி பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்து கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும். விடியற்காலை சமீபித்து விடவில்லையா?”

11:82. எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம். இன்னும் அதன் மீது சுடப்பட்ட செங்கற்களை மழைப்போல் பொழியவைத்தோம்.

11:83. அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன. (அவ்வூர்) இந்த அநியாயகாரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை.

அல் குர்ஆன்: சூரா – ஹூது.

This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.